Saturday, 5 August 2017

குடிமல்லூர் (வேலூர்)



'கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்' என்பார்கள். சொந்த வீடு ஒரு சந்தோஷம் என்றால், அந்த வீடு எந்த வில்லங்கமும் இல்லாமல், நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரவேண்டும் என்பதும் முக்கியம், இல்லையா? குடிமல்லூர் ஸ்ரீசௌந்தரவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூமீஸ்வரரைத் தரிசித்தால், மண்ணைப் பொன்னாக்கி அருளுவார்; தரிசு நிலத்தையும் விளைச்சல் பூமியாக்கி செழிக்கச் செய்வார் என்கின்றனர் பக்தர்கள்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது குடிமல்லூர். இங்கே, சுமார் 2,000 வருடங்கள் பழைமையான ஆலயத்தில் குடியிருந்தபடி, தன்னைத் தேடி வரும் பக்தர்கள், வீடு-வாசலுடன் நிம்மதியாக வாழ, அருள்கிறார் பூமீஸ்வரர்.
சொந்த வீடு எனும் கனவுடன் இடம் வாங்கி, வருடங்கள் பல ஓடியும், வீடு கட்ட முடியாமல் தடங்கல் மேல் தடங்கலாக வந்து முட்டுக்கட்டை போடுகிறதே எனப் புலம்பித் தவிப்பவர்களா நீங்கள்? கவலையை விடுங்கள்! வீடு கட்டும் இடத்தில் இருந்து, மண்ணை எடுத்து வந்து, பூமீஸ்வரரைத் தரிசித்து வணங்குங்கள்; மண்ணைப் பூஜித்துத் தருவதுடன், ஸ்வாமிக்கு அபிஷேகித்த நீரையும் தருவார்கள். பிறகு, வீடு கட்டும் இடத்தில் அந்தப் பிரசாத மண்ணைக் கலந்து, அபிஷேகத் தீர்த்தத்தைத் தெளிக்க... வீடு கட்டுவதில் அதன்பின் எந்தப் பிரச்னையும் இருக்காது என்கின்றனர் பக்தர்கள்.
வீடு, கடை, தொழிற்சாலை என எந்தக் கட்டடம் கட்டுவதாக இருந்தாலும், வேலூர் மட்டுமின்றி பெங்களூருவில் இருந்தும்கூட பக்தர்கள் இங்கு மண் எடுத்து வந்து, பூமீஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர். அதேபோல், கோயிலில் இருந்து பூஜித்து எடுத்துச் செல்லப்படும் மண்ணை நிலத்தில் தூவிவிட, அமோக விளைச்சல் உறுதி எனச் சொல்லிப் பூரிக்கின்றனர் விவசாயிகள்.
மேலும், வாஸ்துக்கு உரிய சிறப்பு நாட்களில், இங்கே பூமீஸ்வரருக்கு கலச ஸ்தாபனம், விசேஷ ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறு கின்றன. இந்த நாளில் ஸ்ரீசௌந்தரவல்லியையும் ஸ்ரீபூமீஸ்வரரையும் தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்! பூமீஸ்வரரைத் தரிசித்து வழிபடுங்கள்; அவர் உங்கள் மண்ணைப் பொன்னாக்குவார்; மனசை பூ ஆக்குவார்!

No comments:

Post a Comment