த்ரிகோணமான 5-ஆம் (விருச்சிகம்) ராசிக்கும், கேந்திரமான 10-ஆம் (மேஷம்) ராசிக்கும் அதிபதியாக இருக்கும் செவ்வாய், இந்த லக்னத்துக்கு யோககாரகனாக மாறி நல்ல பலனை அளிப்பான். லக்னாதிபதி 5-ல் (விருச்சிகம்) நீசம் பெற்றும், 5-க்கு உடைய செவ்வாய் கடகத்தில்... அதாவது, லக்னத்தில் நீசம்பெற்றும் இருப்பதால், இவ்விருவரின் செயல்பாடு மனத்துக்குப் பிடித்த அளவில் பெருமை அளிக் காது. யோககாரகனான செவ்வாய், மகரத்தில் உச்சனாகவும்; சந்திரன் ரிஷபத்தில் உச்சனாகவும் மாறுவதால், 7-லும் 11-லும் அவ்விருவரும் அமர்ந்தால், அமர்க்களமான வாழ்க்கைச் செழிப்பும் பலரது பாராட்டும் உண்டாகும். கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்று, சனியோடு இணைந்து இருக்கும் மகர லக்னத்துக்கு (சௌராரயோ: மதகயோ:..) தாம்பத்தியத்தில் செழிப்பு ஏற்பட்டு, வாழ்க்கைத் தரம் உயரும்.
கர்க்கடகத்தில் சுக்கிரன் அமர்ந்து, மகர ராசி லக்னமானால், பெண் ஆசையில் திருப்தி வராமல் தவிப்பதும் உண்டு. அதிபதி சந்திரன் மனத்துக்குக் காரகன்.
சஞ்சலமான மனம் உலகவியல் சுகத்தை அளிக்கும் 11 (வ்ருஷபம்), 4-க்கு (துலாம்) உடைய சுக்கிரன் அனுகூலமின்றி இருப்பதால், பெண்ணாசையில் முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல் தொடர்ந்து ஈடுபட்டு கலக்கமுறும். வயது, காலம் ஆகியவற்றைப் பற்றி ஆராயாமல், பெண்ணினத்தின் பற்றுதலால் தராதரம் அறியாமல் எல்லோரையும் ஏற்கத் துணியும்!
தடுமாற்றம் தரும் இயல்புடைய சந்திரனுடன் அந்த ராசியில் இணைந்த சுக்கிரன், கடமையை மறந்து பெண்ணாசையில் ஈடுபட வழிவகுக்கும். சிறுமிகள் கற்பழிப்பிலும் சிலநேரம் ஈடுபட வைத்துவிடும்! பெண்ணாசை சுற்றுச்சூழலை மறக்கச் செய்வதால், அறிஞனும் அசட்டுத்தனத்தில் இறங்கிட வாய்ப்புண்டு.
9(மீனம்)-க்கு உடைய குரு இங்கு உச்சம் பெற்றிருந்தால், வாழ்க்கையில் தடையில்லாத முன்னேற்றம் உண்டு. புனர்பூசம் கடைசி பாதம், பூசம், ஆயில்யம் இந்த நட்சத்திரத்துடன் இணைந்த சந்திரன், மாறுபட்ட பலனை அளிப்பான்.
முதல் நவாம்சத்தில் நட்சத்திர (பு.பூசம்) நாதன் குருவோடு இணைவதால்... 6-க்கு (தனுசு) உடையவனாக இருந்தாலும் 9-க்கும் (மீனம்) உடையவனாக இருப்பதால், பாக்கியாதிபதி என்ற நோக்கில், ஏறக்குறைய பிறந்து 4 வருடங்கள் வரையிலும் நல்ல பலன் அனுபவத்துக்கு வரும். பிறகு வரும் 4 நவாம்சங்களில், நவாம்சாதிபதிகளுடன் இணைந்த பூச நட்சத்திரநாதன் சனி, உடல் உபாதைகளைத் தோற்றுவித்து அலைக்கழிக்க வாய்ப்பு உண்டு. கடைசி நான்கு நவாம்சங்கள் ராசிநாதன் புதனோடு இணைந்து, பலன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவான்.
சனி - 19, புதன் - 17... ஆக 36 வருடங்கள், அவனது சிறுமை - இளமை சந்தியில் செழிப்பை ஏற்படுத்துவர். விரயத்துக்கும் (மிதுனம்) 3-க்கும்(கன்னி) உடைய புதன் பலவானாக இருந்து, கல்வியின் எல்லையை எட்ட வைப்பான்.
7-க்கும் 8-க்கும் (மகரம், கும்பம்) உடைய சனி பலம் பொருந்தியிருந்தால், தொழில் கல்வியில் சிறப்புறச் செய்து, செல்வச் செழிப்புடன் வாழ வைப்பான்.
கடகத்துக்கு ஏற்பட்ட குரு, சனி, புதன் ஆகியோரது ஆரம்ப கால தசைகள், விருச்சிகம் மற்றும் மீன லக்னங்களுக்கும் பொருந்தும். அவரவர் ராசிநாதனின் சேர்க்கையின் பலனில் சிறு மாறுதல் இருக்குமே தவிர, தசையின் பட்டியலில் மாற்றம் இருக்காது. சரம், ஸ்திரம், உபயம், சரம் என்ற முதல் 4 ராசிகளில், முதல் 9 நட்சத்திரங்கள் அடங்கிவிடும். அவர்களின் தசைகளும் அதோடு இணைந்து, வாழ்க்கை முழுவதுக்குமான சுக- துக்கங்களை கோடிட்டு காட்டிவிடும்.
ஜோதிட சக்கரத்தில், நான்கு ராசிகளை உள்ளடக்கிய 3 துண்டுகளில், முதல் துண்டா னது கர்க்கடக ராசியுடன் முடியும். இந்த 4 ராசிகளில், 9 நட்சத்திரங்களும் 9 தசைகளும் அடங்கும்.
மூன்று கண்டத்துடன் (துண்டுகளுடன்) இணைந்தது ராசி சக்கரம் என்கிறது வேதம் (த்ரினாபிசக்கிரம்....). முதல் கண்டத்தில், அதாவது முதல் நான்கு ராசிகளில், 120 பாகைகளில், 36 நவாம்சகங்களில் 9 கிரகங்களின் தசையும் அடங்கிவிடும்.
2-வது கண்டம் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்), 3-வது கண்டம் (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகியவற்றில், முதல் கண்ட நவாம்சகங்களின் தசைகள் தொடர்ந்து செயல்படும். சுருங்கச் சொன்னால், முதல் கண்டமே நட்சத்திரங்களின் தசைகள் பட்டி யலைச் சுட்டிக்காட்டிவிட்டது.
முதல் பர்யாயத்தில், அதாவது அச்வினி முதல் ஆயில்யம் வரை 9 நட்சத்திரங்களின் தசா வரிசைகள், மீதமிருக்கும் நக்ஷத்திரங்கள் இரண்டு ஒன்பதாக இரண்டு கண்டங்களில் பரவியிருக்கும். முதல் கண்டத்தில் முடிவடைந்த தசைகள், 2-வது மற்றும் 3-வது கண்டத்திலும், அதன் நவாம்சகங்களிலும் தொடர்ந்து வரும். முதல் கண்டத்தில் கேதுவில் ஆரம்பித்து புதனில் முடிவடையும்.
மகம் முதல் கேட்டை வரையிலான நட்சத்திரங்களை உள்ளடக்கிய நான்கு ராசிகளில் பிறந்தவர்கள், கேது முதல்...வரிசையாகத் தொடர்ந்து, புதன் தசையில் முற்றுப்பெறுவர்.
மூலம் முதல் ரேவதி வரையிலான 9 நட்சத்திரங்களை உள்ளடக்கிய 3-வது கண்டத்தில் பிறந்தவர்களும், கேது முதல் புதன் வரை கிரமமாக தசைகளைச் சந்திப்பர்.
கடகத்தில் முதல் அம்சகமும், விருச்சி கத்தில் 5-வது அம்சகமும், மீனத்தில் 9-வது அம்சகமும் 'வர்கோத்தமம்’ பெற்று இருப்பது மட்டுமே, சந்திரனின் அம்சக பலமாக விளங்கும் (சுபம் வர்கோத்தமே ஜன்ம). கடகத்தில் முதல் அம்சகத்தில், சந்திரன்... அதாவது கடகராசி அதிபதி வர்கோத்தம பலம் பெற்றிருப்பான். நட்சத்திராதிபதி குருவின் இணைப்பும், அத்துடன் ஐந்துக்கு ஐந்தான பாவாத் பாவமான 9-க்கு உடையவனாகவும் திகழும் குருவின் சிறப்பும்... முதல் அம்சகத்தில் நீசம்பெற்ற செவ்வாய் வர்கோத் தமம் பெற்று உயர்ந்து இருப்பதாலும், 5-க்கும் 10-க்கும் உடைய செவ்வாய் யோககாரகனாக மாறி சிறப்புப் பெற்று இருப்பதாலும்... முதல் அம்சகத்தில் பிறந்தவனின் வாழ்வில் இன்னல்கள் தென்பட்டாலும் அதையும் தாண்டி, வளமான வாழ்க்கையை சந்திப்பான். 2-வது அம்சகத்தில் சூரியனின் தொடர்பு வலுவிழந்து காணப்படும். நட்சத்திராதிபன் (பகையான) சனியின் சேர்க்கையும் துயரத்தை இரட்டிப்பாக்க உதவும். 3-வதில் புதன், 4-ல் சுக்கிரன், 5-ல் செவ்வாய், 6-ல் குரு, 7-ல் சனி, 8-லும் சனி, 9-ல் குரு - இப்படி ராசிநாதன் இவர்களது சேர்க்கையில், அவர்களின் பலாபலத்தை ஒட்டி விகிதாசாரப்படி பலனளிப்பதால், இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையே மனித இனத்துக்கு உண்டு என்பதை உறுதி செய்யும். உண்மையில்... துன்பத்தைச் சந்திக்காத இன்பமானது, தனது தனித்தன்மையை உணரவைக்காது. துன்பமும் வேண்டும். அப்போதுதான் இன்பத்தின் முழுச் சுவையும் நிறைவுபெறும்.
மனதுக்குக் காரகனாகவும் அமைந்த சந்திரன், இன்ப- துன்பங்களில் பங்குபெற நிர்பந்திக்கும். சந்திரனும், செவ்வாயும், குருவும் பலம் பெற்றவர்களாக அமைந்தால், நெருடல் இல்லாத வாழ்க்கை அமையும். அப்படியே நெருடல் தென்பட்டாலும், மனம் நெருடலை ஏற்கத் தயங்காது.
ராமருடைய அவதார காலத்தை சுட்டிக் காட்டும் தறுவாயில் கர்க்கடக லக்னம், முதல் அம்சகத்தில் சந்திரன், சூரியன் மேஷத்தில் உச்சன், ஐந்துக்கு ஐந்து 9-க்கு உடைய குரு உச்சன் என்று அந்த வேளையின் பெருமையை விளக்கியுள்ளனர் (லக்னேகர்க கடகே புனவசுயுதே மேஷம்கதே பூஷணி). அவர் வாழ்க்கையில் இன்னலை சந்தித்தாலும் அதை மனம் ஏற்றுக்கொண்டு உணர்ந்து அனுபவித்தது; துவண்டுபோகவில்லை. இங்கு சந்திரன் ஸ்வக்ஷேத்ர-வர்கோத்தம பலவான். 9-க்கு உடைய குரு உச்சம் பெற்ற பலவான். நட்சத்திரநாதன் குருவின் இணைப்பு, மனத்துக்குக் காரகனான சந்திரனுக்கு பலம் தந்து துவண்டுவிடாமல் பார்த்துக்கொண்டது பொருந்தும். 'சீதையை ராவணன் கவர்ந்தான் என்ற தகவல் கேட்டவுடன், ஒரு நொடி சந்தோ ஷத்தை சந்தித்தது அவர் மனம்; அடுத்த கணம், லோக ஸம்ஹ்ரஹார்த்தம் துயரத்தைத் தழுவிக்கொண்டது’ என்று ஸ்ரீராமனின் மனோ வலிமையை நாராயணபட்டதிரி விளக்குகிறார். இது, இன்னலிலும் மனம் துயரத்தை உணராது என்பதற்குச் சான்று.
இந்த லக்னத்துக்கு யோககாரகனான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றோ, விருச்சிகம், மேஷம் ஆகியவற்றின் ஸ்வக்ஷேத்திர பலவானாகவோ இருப்பதைவிட, கடகத்தில் முதல் நவாம்சகத்தில் நீசம் பெற்று, வர்க்கோத்த மத்தில் உயர்ந்து... மனத்துக்குக் காரகனான வர்க்கோத்தமம் பெற்ற சந்திரனுடனும் உச்சனான குருவோடும் இணைந்து தரும் பலமானது, மனிதனை தெய்வீகத்தன்மைக்கு உயர்த்தும் என்ற விளக்கங்கள் ஜோதிடத்தின் பெருமைக்குச் சான்று. சந்திரனும் குருவும் சேர்ந்து, செவ்வாய் சேர்க்கையில் ஏற்படும் அஹங்காரத்தை அடக்கிப் பணிய வைத்து, பக்குவப்பட்ட மனம் குருவின் துணையில் மனித இனத்தின் ஆசானாக உயர்த்தும் என்ற தகவலும் ஏற்கும்படியாக இருப்பதை உணரலாம்.
தேய்ந்தும் வளர்ந்தும் செயல்படும் சந்திரன், வாழ்விலும் இன்ப- துன்பங்களைச் சந்திக்க வைப்பான். மனதுக்குக் காரகனாகவே இருக்கும் சந்திரன் ராசிநாதனாக மாறுவதால், செயல்பாட்டில் தெளிவை ஏற்படுத்துவான். அசட்டுத்தனத்தில் வசமிழந்து அல்லல்படாமல், துயரத்தை எதிர்கொண்டு வெற்றிபெறும் மனோ வலிமையைப் பெற்றிருப்பான். ஐந்திலோ, ஒன்பதிலோ சந்திரன் வர்கோத்தம பலம் பெற்றிருந்தால், தளராத மனத்துடன் சங்கடங்களை ஏற்று, துன்பத்தை இன்பமாக்க விழைவான். அத்தனை படை - பலத்தையும் இழந்து போர்க்களத்தில் தனிமரமாகக் காட்சியளித்த ராவணனின் மனம், ராமனோடு போர் புரியத் தயங்கவில்லை. அவன் பிறக்கும்வேளையில் சந்திரன் வர்க்கோத்தமம் பெற்று பலவானாக இருந்ததை ஜோதிடம் சுட்டிக்காட்டும்.
சந்திரன் ஜலமயன்; நண்டு -ஜலத்துடன் இணைந்தது. பல கால்களைப் பெற்று ஓரிடத்தில் நிற்காமல் அசைந்துகொண்டிருக்கும். கடக ராசியும் சர ராசி இப்படி, அசைந்துகொண்டே இருக்கும் இயல்பில் முழுமை பெற்றுத் தென்படுவதால், எந்த விஷயத்திலும் தடுமாற்றத்துடன் செயல்படும் பாங்கு, இந்த ராசிக்காரர்களிடம் இருக்கத்தான் செய்யும். திறமை இருந்தும், இடையூறுகளை விலக்கும் ஒத்துழைப்பு உறுதியாக இருந்தும், வெற்றியை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலை அவர்களைவிட்டு அகலாது.
இப்படியும் சொல்லலாம்... வெற்றி உறுதி என்று தெரிந்தாலும், அதை எட்டும்வரை மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். பலம் பொருந்திய சுக்கிரனோடு ராசிநாதன் சந்திரன் இணைந்தால், இன்றைய பகுத்தறிவாளனாகத் தென்படுவான். உயர்ந்த பதவியை எட்டிப்பிடிக்க இயலாமல் மனம் தடுமாறும்போது, தோல்வியை மறைக்க உயர்ந்த மனிதர்களைத் தூற்றுவதைப் போர்வையாகப் பயன்படுத்தும் அந்த மனம் (அசமர்த்த: பதம்ப்ராப்தும்பரநிந்தாம் ப்ரகுர்வதெ). பலமிழந்த சுக்கிரனோடு இணைந்தால், லோகாயத வாழ்வில் தன்னிறைவு பெறுவதற்கு, தரம்தாழ்ந்த செயலிலும் இறங்கத் தயங்காது. மகான்களை மக்கள் ஆதரித்தால்... அதைப் பொறுக்காத மனம், அவர்களது பெருமைகளைச் சிறுமை களாக விளக்கி, ஆத்திரத்தின் வடிகாலாகப் பயன்படுத்தும்.
அஷ்டமாதிபதி சனியாக இருப்பதால், நீண்ட ஆயுளைப் பெற்று மகிழும். துக்ககாரகன் 8-ல் இருந்தால் ஆயுளை நீட்டிப்பான் என்கிறது ஜோதிடம் (விபரீதம் சனே:ஸ்ம்ருதம்). இடையூறை விலக்கவும், தேவைகளைப் பெறவும் சந்திரனின் வழிபாடு கை கொடுக்கும். 'சம் சந்திராயநம:’ என்ற மந்திரத்தை அவன் ஆராதனைக்குப் பயன்படுத்தலாம். செவ்வாயும், குருவும் எந்த வகையிலும் நன்மையைச் செய்வதால், பணிவிடையில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். 'கும்குஜாய நம: கும் குரவே நம:’ என்ற மந்திரத்தை ஓதி வழிபடலாம். விரிவாகப் பணிவிடை செய்ய காலம் இல்லை என்றாலும், அந்த மந்திரங்களை மனதில் அசைபோட்டு வணங்கலாம்.
சந்திரனையும் செவ்வாயையும், குருவையும் ஒரு நொடியாவது நினைத்தால் போதும்; அவர்கள் சாந்நித்தியம் மனதில் தோன்றினால், மனத்தில் இருந்து விருப்பமான ஆணைகள் மட்டுமே வெளிவரும். அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும். பிறந்ததும் பொறுப்பும், கடமையும், உரிமையும் நம்மைப் பற்றிக்கொண்டு விடும். அதை உதறுவது அசட்டுத்தனம்; அழிவைச் சந்திக்க வைக்கும். அவற்றை ஏற்பதே புத்திசாலித்தனம். அது, ஆக்கத்தை அளிக்கும். அதற்கு ஒத்துழைப்பவர்கள் சந்திரனும், செவ்வாயும், குருவும். செவ்வாய் சுறுசுறுப்புடன் இயங்கவைப்பான்; குரு அமைதி காப்பான். நம்பிக்கைக்கு உகந்தது ஜோதிடம்.
No comments:
Post a Comment