Sunday 16 July 2017

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி- உத்தரப்பிரதேசம்.


*சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ; முத்தித் தரும் தலங்கள் ஏழனுள் ஒன்று ; அம்மனின் சக்தி பீடம் ; ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவஸ்தலம்..*

Ⓜ®🅱💲 *BRS* Ⓜ®🅱💲


மூலவர் : *காசி விஸ்வநாதர்*

அம்மன்/தாயார் : *விசாலாட்சி*

தீர்த்தம் : *கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.*

பழமை : *5000 வருடங்களுக்கு முன்*

புராண பெயர் : *வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்*

ஊர் : *காசி*

🅱 *திருவிழா:*🅱

🍁 தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.

🅱 *தல சிறப்பு:*🅱

🎭 மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆன சுயம்புநாநர்.

🎭 இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது.

🎭 அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும்.

🎭 மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டி போட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர்.

🎭 விசுவநாதருக்குத் தங்க விமானம் – சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம்.

🎭 லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

🎭 காசி மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றும் அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன் பிறகே சூட்டப்பட்டது.

🎭 அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள்.

🎭 காசி விசாலாட்சி அம்பாள் சக்தி பீடங்களில் பெரும் பெருமை கொண்ட பீடம்.

🎭 அன்னபூரணி, விசாலாட்சி கோயில்கள் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோயில் தென்னாட்டுப் பாணியில் உள்ளது.

🎭 இங்கே நவக்கிரகங்களும் உள்ளன.

🎭 அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

🎭 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

🎭 கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இது தான் ஆதி நந்தி. அந்த நந்தியின் அருகே ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது.

🎭 சப்த மோட்ச புரிகளில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி(அவந்தி), துவாரகை.

🎭 காசிக்கு ஐந்து அதிசயங்கள் : காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்பதில்லை; எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை.

🎭 *"ஆரூரில் பிறந்தால் முக்த, தில்லையை தரிசிக்க முக்தி, அண்ணாமலையை நினைக்க முக்தி, காசியில் மரித்தால் முக்தி"* என்பது சைவ மரபில் தொன்று தொட்டு இருந்துவரும் ஐதீகம்.

🎭 காசியில் இறப்பவருக்கு மரணத்தறுவாயில் காசி விஸ்வநாதரே தாரக பிரம்மத்தை உபதேசித்து நற்கதி அடையச் செய்கிறார்.

🎭 புனித காசி மாநகரைப் பற்றி இராமாயணம், பகவத்கீதை ஆகியவற்றில் பல குறிப்புகள் உள்ளன.

🎭 மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவன், தேவர்களான இந்திரன், சூரியன், அக்னி ஆகியோர் தவம் செய்த இடம் இது.

🎭 தவசீலர்களான வியாசர், ஆதிசங்கரர் ஆகியோர் வசித்த இடமும் இதுதான்.

🎭 இன்றைக்கும் எத்தனையோ சாதுக்கள், சந்நியாசிகள், சித்தர்கள் தொடர்ந்து இங்கு தவமிருந்து வருகிறார்கள்.

🎭 சமயக் குரவரான திருஞானசம்பந்தர் பெருமான் தமது தேவாரப் பாடலில் (02:39:07)

*"மாட்டூர் மடப் பாச்சிலாச்சிரமம்*

*மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி*

*காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும்..."* - என வாரணாசியைப் பாடியுள்ளார்.

🎭 அதே போன்று அப்பர் பெருமான் தமது தேவாரப் பாடலில் (06:70:06)

*"மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்*

*வக்கரை மந்தாரம் வாரணாசி*

*வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி*

*விளமர் விராடபுரம் வேட்களத்தும்*

*பெண்ணை* *அருள்துறை தண் பெண்ணாகடம்,*

*பிரம்பில் பெரும்புலியூர் பெரு வேளூரும்*

*கண்ணை களர்க்* *காறை கழிப்பாலையும்*

*கயிலாய நாதனையே காணலாமே..."* - எனப் பாடியுள்ளார்.

🎭 ரிக் வேதம் காசியை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்று குறிப்பிடுகிறது.

🎭 ஸ்கந்த புராணம் மூவுலகிலும் காசி இணையான நகரம் கிடையாது என்று சிவபெருமான் கூறுவதாகச் சொல்கிறது.

🎭 சமண சமயத்தின் 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதர் பிறந்தது காசியில்தான்.

🎭 கௌதம புத்தர் கடும் தவம் இருந்து கயையில் ஞானம் அடைந்த பின், காசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் தான் தன் சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.

🎭 ஆதிசங்கரர் வாரணாசியில் சிவ வழிபாட்டை நிலைநாட்டினார். காசி காண்டத்தில் காசி விஸ்வநாதர் கோவில் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

🅱 *திறக்கும் நேரம்:*🅱

🗝 காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.🗝

🎸 *அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.*

🅱 *பொது தகவல்:*🅱

🦋 ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி.

🦋 இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன.

🦋 காசி மிகவும் பழமை வாய்ந்த நகரம்.

🦋 வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள்.

🦋 கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

🦋 காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள்.

🦋 காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

🦋 இந்த கோயிலை முதன்முதலில் கட்டியவர் முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார்.

🦋 காசி கோயில் ஒரு புண்ணிய ஷேத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம்.

🦋 இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

🦋 விசுவநாதர் கோயில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது.

🦋 ஆதி விசுவநாதர் கோயிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது.

🦋 இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார்.

🦋 இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.

🦋 வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம்.

🦋 காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.

🦋 கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது.

🦋 இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வரவேண்டும். டவுசர், கை பகுதி இல்லாத மேல் சட்டை அணிந்து கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது.

🅱 *பிரார்த்தனை:*🅱

🍄 காசி விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது.

🍄 காசி விசுவநாதரைத் வேண்டினால் கல்வியும் ஞானமும் தருவார் என்பது நம்பிக்கை.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

🅱 *தலபெருமை:*🅱

🔥 இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர்.

🔥 சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்ற போது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது.

🔥 விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது.

🔥 கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது.

🔥 காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் *உத்தர வாகினி* என்று அழைக்கின்றனர்.

🅱 *தீர்த்தக் கட்டங்கள்:*🅱

🥀 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு *பஞ்சதீர்த்த யாத்திரை* என்று பெயராகும்.

🥀 அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் *அஸ்சங்கமேஸ்வரர்* எனப்படுகிறார்.

🥀 முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும்.

🥀 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

🥀 இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் *சூலடங்கேஸ்வரர்* என்ற சிவலிங்கம் உள்ளது.

🥀 இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள *ஆதிகேஸ்வரரை* வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள *பிந்துமாதவர்* மற்றும் *கங்கேஸ்வரரை* வணங்க வேண்டும்.

🥀 பஞ்ச தீர்த்தக் கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள *மணிகர்ணிகேஸ்வரர்* மற்றும் அம்பாளையும் வழிபட வேண்டும்.

🥀 காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

🥀 பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.

🥀 பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.

🥀 பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.

🥀 சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.

🥀 கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

🥀 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

🥀 சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.

🥀 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.

🥀 நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும்.

🥀 காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.

🥀 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

🥀 காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், *காசியில் காவாசி அவினாசி* என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.

🥀 தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

🥀 மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

🥀 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.

🥀 கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.

🥀 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.

🥀 சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.

🥀 காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

🅱 *ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் பூஜை:*🅱

🌷 அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்தரிஷிகள் எனப்படுவர்.

🌷 வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் வாழும் இவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரைத் தரிசிக்க காசிக்கு வருவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை சப்தரிஷி பூஜை நடக்கிறது. ஏழு பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜையை நடத்துவர்.

🌷 ராம நாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சித்த படியே சிவனுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கத்துடன் ராகமாகப் பாடுவர். பண்டாக்கள் கோரஸாக மந்திரம் ஜெபிப்பதைக் கேட்கும் போது பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்து விடுவர்.

🌺 சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும் போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும் போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.

🌺 இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது.

🌺 இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்குப் பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.

🅱 *வியாசர் கோவில் :*🅱

Ⓜ ஒரு சமயம் வியாசருக்கு காசியில் பிச்சை கிடைக்காமல் போனதால், அவர் அந்த நகரத்தைச் சபித்து விடுவார். எனவே உமையாளும் சிவ பெருமானும் மனித வடிவெடுத்து வியாசரை உணவருந்த அழைக்கவே, வியாசரும் தன்னை மறந்து உணவை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தனது சாபத்தை மறந்து விடுவார். இருப்பினும், வியாசரின் முன் கோபத்தைக் கண்டிக்கும் வகையில் சிவன் பெருமான் வியாசர் காசியினுள் நுழையக் கூடாது என்று தடை விதித்து விட்டார். எனவே, காசிக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஆவலினால் கங்கை நதியின் மறுகரையில் உள்ள ஓரிடத்தில் வியாசர் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். ராம்நகரில் அவரது கோவிலை இன்றும் காணலாம்.

🅱 *பிந்து மாதவர் ஆலயம்:*🅱

🍄 ‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். இராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு, காசியில் பிந்து மாதவராகக் காட்சி தருகிறார். இவரது ஆலயம் பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர். சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்திக் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே விஷ்ணு பாதம் இருக்கின்றது. அதற்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி மக்கள் வழிபடுகின்றனர்.

🅱 *டுண்டி கணபதி:*🅱

🍁 ‘டுண்டி’ கணபதி காசியின் முக்கியமான தெய்வங்களுள் ஒன்று. காசியின் சிறிய சந்துகளில் பல கடைகளுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருக்கும் இவரை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும். காசிக்குச் செல்பவர்கள் மணிகர்ணிகையில் நீராடிவிட்டு தேவ, ரிஷி, பித்ரு கடன்களை முடித்து விட்டு பின்னர் டுண்டி கணபதியை வணங்க வேண்டும். டுண்டி விநாயகரைக் காலையில் வணங்கினால் ஒருவருடைய அனைத்து இடையூறுகளும் நீங்கி வாழ்க்கையில் வளமுண்டாகும். “சகல சித்திகளையும் அளிக்கும் டுண்டி விநாயகரை ஒருவன் அனுதினமும் தொழுது வந்தால் அளவற்ற நன்மைகளை அடைகிறான்” என்கிறது ஸ்காந்த புராணம்.

🅱 *தண்டபாணி ஆலயம்:*🅱

🌺 ‘தண்டபாணி’ ஆலயம் கால பைரவர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. காசியின் தண்டல் நாயகர் இவர் அதனால்தான் இப்பெயர். கால பைரவரின் தளபதியான இவர், காசியில் உள்ள கணங்களுக்கெல்லாம் அதிபதியும் கூட. சலவைக் கல்லால் ஆன ஆலயத்தில் இரு கைகளிலும் ஒரு தண்டத்தைப் பிடித்துக்கொண்டு குத்திட்டு அமர்ந்துள்ளார் தண்டபாணி. கழுத்திலும், தலையைச் சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு செய்கின்றன. கால பைரவரின் ஆக்ஞைக்கு உட்பட்டு தண்டனைகளை நிறைவேற்றுபவர் இவர்தான். ‘தண்டுபாணி’என்று சொல்லி வட நாட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர்.

🅱 *கால பைரவர் ஆலயம்:*🅱

🌷 காசி நகரத்தின் காவல் தெய்வமும், க்ஷேத்திர பாலகரும் ‘கால பைரவர்’தான். இவர் கட்டுப்பாட்டில் தான் காசி மாநகரே உள்ளது. இவர் கண்ணசைவின்றி காசியில் ஏதும் நிகழாது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள், அடர்ந்த மீசை என கம்பீரமாக இவர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும் ஆலயத்தில் உள்ள பண்டா மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார். அதனைத் தொடர்ந்து ‘தண்டம்’ வழங்கப்படுகிறது. தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். அதைப் பக்தர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிக்கிறார்கள். கோயில் வாயிலில் ’காசிக்கயிறு’என்னும் கறுப்புக் கயிறு விற்கிறார்கள். காசிக்கு வந்து சென்றதற்கும், கால பைரவரைத் தரிசித்து அவர் அருள் பெற்றதற்கும் அதுவே அடையாளம். அந்தக் கயிறுகளை வாங்கி, அதனை பைரவரின் திருவடியில் வைத்து வணங்கி தாங்களும் கட்டிக் கொள்வதுடன் காசி யாத்திரை நிறைவேறியதும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு அளிக்கலாம். ஆதிசங்கரர் காசி பைரவர் மீது “கால பைரவாஷ்டகம்.” என்றொரு அற்புதத் துதியை இயற்றியுள்ளார்.

🅱 *காசியின் சிறப்புகள்:*🅱

*காசியை நினைக்க முத்தி;* *காசியென்றுரைக்க முத்தி*

*காசியைக் காண முத்தி; காசியைச் சூழ முத்தி*

*காசியில் வசிக்க முத்தி; காசியைக் கேட்க முத்தி*

*காசியில் வசிப்போர் தம்மைக் கண்டுதாழ்ந் திடுதின் முத்தி*

என்று காசியின் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறது *‘காசி ரகசியம்’* என்னும் நூல்.

🅱 *கங்கா ஆரத்தி:*🅱

🌹 காசியில் மற்றொரு சிறப்பம்சம் கங்கை நதியை வணங்கும் வகையில் தினந்தோறும் கங்கா ஆரத்தி எடுக்கப்படும்.

காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று கங்கா ஆரத்தி. தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. மாலை சுமார் 6.30க்கு ஆரம்பித்து 7.30க்கு முடியும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ எனப்படுகிறது. முதலில் புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை ஆரம்பிக்கின்றனர். அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி நடைபெறுகிறது. பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இது இருக்கும்.

🌹 தசா அஸ்வமேதா படித்துறையை சிவனை வரவேற்பதற்காக பிரம்ம தேவன் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

🌹 இன்னொறு தகவலின் படி, இங்கு நடைபெற்ற அஸ்வமேத யாகத்தில் 10 குதிரைகளை பிரம்ம தேவன் பலி கொடுத்ததாகவும் கதைகள் கூறப்படுகின்றன.

🅱 *தல வரலாறு:*🅱

⛱ இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த தங்கள் யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார்.

⛱ இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின் பாகங்களைத் துணித்தார். ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார்.

⛱ மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார். சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். அப்போது அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார்.

⛱ சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.

⛱ திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார். திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

⛱ திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது. அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின் படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார்.

⛱ காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன. ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு பெற்றுள்ளார்கள். சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். சனிதேவன் சிவபெருமான் அருளால் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.

⛱ பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின் மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும் ?

⛱ சப்தரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள் தான் தாபித்தார்களோ என ஓர் எண்ணம் உண்டாகிறது.

⛱ இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார். இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம். மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப் பற்றியுள்ளன.

⛱ புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன் என்பான் அரசாண்டு வந்தான். அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். இன்பத்தில் மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை. இதனைச் சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர். விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால் தன் மனைவியையே கொன்றுவிட்டான். அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது, இரண்டு சிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான். அப்படி அவன் ஓடும் போது அவன் எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான். அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள் அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி தெளிந்தது.

⛱ பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள் கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான். பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். காட்டில் அலைந்து சாகல்யா என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். அந்த முனிவர் ஐந்து கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார். காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும் என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். அவன் காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது. கங்கையில் மூழ்கி எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று ஆடைகளுடன் கரையேறினான்.

*இரண்டாவது அதிசயம் !*

Ⓜ இவனால் கொல்லப்பட்ட நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும் வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரையும் மணிகர்ணிகா கட்டத்தில் அவர்கள் மூழ்கச் செய்தனர்.

⛱ நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. பின்பு விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. அவனது பாவங்கள் எல்லாம் நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும் அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர். நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். எனவே கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். எனவே தான் காசிக்கு வரும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும் என்கின்றனர். கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர்.

🅱 *சிறப்பம்சம்:*🅱

Ⓜ *அதிசயத்தின் அடிப்படையில்:*

♻ வாரணாசியில் மரணம் சம்பவித்தால், அதன் பிறகு அந்த ஆன்மா ஒரு நல்ல நிலையை அடைவதாக நம்பப்படுகிறது.

♻ மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

♻ முக்தித் சிவ-தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி–இராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்பு மிக்க தலம் காசி ஆகும்.

♻ பூலோகக் கைலாசம் என்று போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை. ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும்.

♻ காசியில் ஸ்ரீ கால பைரவர் ஆலயம் காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

♻ ஸ்ரீ ஆதிசங்கரர் இவ்வாலயத்திற்கு வருகை தந்தபோது "கால பைரவாஷ்டகம்" எனும் கால பைரவர் துதியை இயற்றினார்.

♻ நமது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்திருப்போம். அவற்றை எல்லாம் தீர்க்க புனித கங்கையில் நீராடி இதுவரை செய்த பாவங்களை அழித்துவிட்டு, இனி வாழும் நாட்களில் எந்தவித பாவங்களையும் செய்யாமலிருக்க காசி விஸ்வநாதர் அருள் புரியட்டும் என வேண்டிக்கொள்வோம்.

*"கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம்*

*கௌரீ நிரந்த* *விபூஷித வாமபாகம்*

*நாராயண ப்ரியமநங்க* *மகாபஹாரம்*

*வாரணாஸீபுர பதிம் பஜ விஸ்வநாதம்."*

🅱 *இருப்பிடம்:*🅱

✈ உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்ட ஊர்.

✈ இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தொடர்வண்டி மூலம் காசியை சென்று அடையலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🏹 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🏹

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment