Saturday 1 July 2017

அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி - நாகப்பட்டினம்.


பிரம்மா , சிவபெருமானை வணங்கி படைப்புத் தொழிலை ஆரம்பித்த ஸ்தலம் ; ஊழிக் காலத்தில் அழியாமல் இருந்த மூல க்ஷேத்திரம் ; திருஞானசம்பந்தரின் அவதாரப்பதி ; ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம் ; தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் அதிகமான பதிகங்கள் பெற்ற தலம்..

🗼🎡🗼🎡 BRS🗼🎡🗼🎡🗼

மூலவர் : சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன் : பெரியநாயகி, திருநிலைநாயகி

தல விருட்சம் : பாரிஜாதம், பவளமல்லி

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை : பஞ்சரத்திர ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பிரம்மபுரம், சீர்காழி

ஊர் : சீர்காழி

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

தோடுடைய செவியன்விடை யேறியோர்

தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப்பொடி பூசியென்

உள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து

ஏத்தஅருள் செய்த

பீடுடைய பிரமாபுரமேவிய

பெம்மான்இவன் அன்றே. - திருஞானசம்பந்தர்

🐴 தெளிவுரை:🐴

🐲 தோடு என்னும் அணியை அணிந்துள்ள, உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !

🌼 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம். 🌼

🅱 திருவிழா:🅱

🍁 சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் தொடங்கும். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

🍁 மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமா-மகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப் பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும்.

🍁 ஆடிப்பூரம், நவராத்திரி. தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

🅱 தல சிறப்பு:🅱

🦋 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🦋 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

🦋 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும்.

🦋 முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

🦋 இத்தலத்திற்குப் பன்னிரண்டு பெயர்களுண்டு.

1. பிரமன் வழிபட்டதால் - பிரமபுரம்.

2. இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் - வேணுபுரம்.

3. சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் - புகலி.

4. குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் - வெங்குரு.

5. பிரளய காலத்தில் இறைவன் உமையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டுவந்து தங்கியிருந்ததால் தோணிபுரம்.

6. பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்றவராக மூர்த்தி வழிபட்டதால் - பூந்தராய்.

7. தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் - சிரபுரம்.

8. புறா வடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் நற்கதியடைந்தமையால் - புறவம்.

9. சண்பைப் புல்லால்மாய்ந்த தம்குலத்தோரால் வந்தபழி தன்னைப் பற்றாதிருக்க, கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால் - சண்பை.

10. தில்லைப் பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால் - ஸ்ரீகாளி (சீகாழி) .

11. மச்சகந்தியைக் கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால் - கொச்சை வயம்.

12. மலத்தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்டதால் - கழுமலம் எனவும் பெயர் பெற்றது.

🦋 கோயில் ஊர் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அழகுற விளங்குகிறது.

🦋 கணநாத நாயனார் தொண்டுசெய்து வாழ்ந்த தலம்.

🅱 திறக்கும் நேரம்:🅱

🔑 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱

🌺 இக்கோயிலுக் குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சம்பந்தர் மூலவராக உள்ளார்.

🌺 அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர்.

🌺 சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது. இதனை சோமாஸ்கந்த அமைப்பு என்று கூறுவார்கள்.

🌺 இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.

🌺 இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது.

🌺 மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

🌺 இத்தல விநாயகர் ரொணம் தீர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🅱 பிரார்த்தனை:🅱

🌿 வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

🌿 குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்

🅱 நேர்த்திக்கடன்:🅱

☀ சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🌸 ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, "ஓம்' என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேஸ்வரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார்.

🌸 இதுவே எல்லாவற் றிற்கும் மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத் தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள்.

🌸 இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும், ஆணவங்களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார்.

🌸 இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார்.

🌸 மகாபலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு, தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை, சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால், விஷ் ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால், வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

🌸 பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம்.

🌸 பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.

🌸 இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும்.

🌸 பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான்.

🌸 காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.

🌸 இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர்.

🌸 இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.

🌸 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார்.

🌸 சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும்.

🌸 வெள்ளிக் கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.

🐲 குன்றுக்கோயில் உருவான வரலாறு : 🐲

🌸 உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை நோக்கி தவம் செய்து, "இறைவா! பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்,'' என வேண்டினார்.

🌸 ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அகை கூட முடியவில்லை.

🌸 தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன.

🌸 காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான்.

🐲 மூன்றடுக்கு சன்னதி : 🐲

🔥 இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது.

🔥 படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

🔥 நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . "தோணிமலை' என்கின்றனர்.

🦋 கோவிலின் அமைப்பு :🦋

🎠 சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்துள்ளது.

🎠 கிழக்கு திசையிலுள்ள ராஜகோபுரம் தான் ஆலயத்தின் பிரதான வாயில்.

🎠 இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன.

🎠 கோவிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது.

🎠 இவருக்கு வலப்பக்க்ம் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது.

🎠 கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன.

🎠 இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார்.

🎠 கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார்.

🎠 தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை.

🎠 இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது.

🎠 குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும். ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டு ஏறிச்சென்று தரிசித்துப் பின்னர் வந்து போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறே, பெண்கள் தலையிலுள்ள பூவையெடுத்து வைத்துக் கொண்டு, சென்று தரிசித்து விட்டுப் பின்பு தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

🎠 அம்பாள் சந்நிதி தனிக்கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் கருவறை தோஷ்டத்தில் ஸ்ரீசாமளாதேவி, ஸ்ரீஇச்சாசக்தி, ஸ்ரீஞானசக்தி, ஸ்ரீகிரியாசக்தி ஆகியோர் உள்ளனர். 64 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

🎠 அம்பாள் கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. நான்கு புறமும் நன்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. பிரம்ம் தீர்த்த குளக்கரை முன்னால் வளைவு போடப்பட்டு, அதன் இருபுறங்களிலும், பிரமன் வழிபடுவது, தந்தையாகிய சிவபாத இருதயருக்கு ஞானசம்பந்தர் தோணியப்பரைச் சுட்டிக் காட்டுவது, அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிப்பது முதலியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளன.

🅱 தல வரலாறு:🅱

🌤 சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.

🌤 இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார்.

🌤 தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அப்பா!' என அழுதார்.

🌤 இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார்.

🌤 குளித்து விட்டு வந்த தந்தை, "பால் கொடுத்தது யார் ? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா ? அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

🌤 அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே'' என்று பாடினார். தந்தை அசந்து போனார்.

🌤 தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

🅱 சிறப்பம்சம்:🅱

🌿 அதிசயத்தின் அடிப்படையில்:

👉🏽 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 திருஞானசம்பந்தர் அவதரித்த இந்த சீர்காழியில் உள்ள இறைவனை பிரம்மா, முருகன், காளி, குரு, இந்திரன், சந்திரன், சூரியன், வியாச முனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

👉🏽 தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் அதிகமான பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை சீர்காழி தலத்திற்குண்டு.

👉🏽 இத்தலத்திலுள்ள அஷ்டபைரவர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது.

👉🏽 ஆதிசங்கரர், தமது ‘சௌந்தர்யலஹரி’ என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.

👉🏽 திருநாவுக்கரசரை ‘அப்பர்’ என ஞானசம்பந்தபிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில்.

🅱 இருப்பிடம்:🅱

🚗 மயிலாடுதுறையில் இருந்து வடக்கே 20 கி.மீ தொலைவிலும், சிதம்பரத்திற்கு தெற்கே 19 கி.மீ தொலைவிலும் சீர்காழி உள்ளது.

🚗 மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🌿 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿

No comments:

Post a Comment