Friday 7 July 2017

அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில் நந்ததேவி மலை, கேதார்நாத், கவுரி குண்ட் - உத்ரகாண்ட்



சிவபெருமான் விரும்பியிருக்கும் புனித தலம் ; ஆறு மாதங்கள் தேவர்களாலும், ஆறு மாதங்கள் மனிதர்களாலும் வழிபடப்படும் மிக இரம்மியமான சிவஸ்தலம் ; இந்துக்களின் புனித யாத்திரைத் தலம்.

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵


மூலவர்: கேதாரீஸ்வரர்

அம்மன்/தாயார்: கேதார கவுரி

தீர்த்தம்: உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்..

பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர்: கேதார்நாத்

மாவட்டம்:  ருத்ரப்ரயாக்

 மாநிலம்:  உத்ரகாண்ட்

பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்

🅱 தேவாரப்பாடல் : 🅱

கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்
இடுக்கண்உய்ப்பார் அவர்எய்த வொண்ணா இடம்என்பரால்
அடுக்கநின்றவ் அறவுரைகள் கேட்டாங்கு அவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. -- சம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று. 🌱

🅱 திருவிழாக்கள் :🅱
 
🎸  மஹா சங்கராந்தி, வசந்த பஞ்சமி, சிவராத்திரி,. நந்த அஷ்டமி, ஹோலி, பைசாகி, ரக்ஷ‘பந்தன், தீபாவளி

🅱 தல சிறப்பு:🅱
 
  🎭 இங்குள்ள கேதாரீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றிய ஜோதிர் லிங்கம். பிரமிட் வடிவில் சேவை சாதிக்கின்றார் எம்பெருமான்.

🎭 திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்தம் பாடல்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்துக்கு 2 பதிகங்கள் இருக்கின்றன.

🎭 பிருங்கி முனிவர் வண்டு உருவம் தாங்கி,ஈசனை மட்டும் வலம் வந்து போற்றிய நெறிகண்டு, கேதார விரதம் அனுட்டித்து, உமையம்மை இடப்பகம் பெற்ற திருத்தலம்.

🎭 அன்னை கௌரியே ஐயனை கேதாரீஸ்வரராக வழிபட்டு கேதார கௌரி விரதம் அனுஷ்டித்த தலம்.

🎭 இன்றும் கேதார விரதம் ஐப்பசி மாத அமாவாசை நாளில் அனுட்டிக்கப்படுகிறது.

🎭 இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று.

🎭 கேதார்நாத் யாத்திரை புனிதமாகக் கருதப்படுகிறது.

🎭 கேதாரம் என்ற சொல்லுக்கு பனி, மயில், வயல்வெளி , நீர் நிலை என்று பல பொருட்கள் உண்டு.

🎭 கேதம் என்றால் வடமொழியில் துன்பம் என்று பொருள். கேத + ஹர + ஈஸ்வரர் என்றால் நம் துன்பங்களை நீக்குவதில் தலைவர் என்பது பொருள்.

🎭 கேதார முனிவர் வழிபட்டதால் கேதாரீஸ்வரர் என்ற நாமம் என்பதும் ஐதீகம்.

🎭 21 தலைமுறை சத்திரியர்களை சாய்த்த பரசுராமர் வழிபட்ட ஈசர் கேதாரீஸ்வரர்.

🎭 கௌதமர் அகலிகைக்கு சாபம் கொடுத்தபின் இமயமலை வந்து கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தார்.

🎭 நரநாரயணர்கள் இருவரும் வழிபட்ட ஈசர். அவர்கள் இருவரும் செம்மையான ஜீவகாருண்ய ஆட்சி புரிந்தனர், அவர்கள் மீது அழுக்காறு கொண்ட மாற்று நாட்டரசன் படையெடுத்து வந்த போது அவனுடன் போர் புரியாது தங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை மேற்கொண்டு கேதாரீஸ்வரரை ஸ்தாபிதம் வழிபட்டு தவம் செய்தனர். அவர்களின் தவத்தின் கடுமையைக் கண்ட இந்திரன் எங்கே தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று அவர்கள் தவத்தை கலைக்க தேவ கன்னியை அனுப்பினான், அவர்கள் தங்கள் தொடையிலிருந்து அவளை விட அழகான ஊர்வசியைப் படைத்து அவளுக்கு நல்லுரை கூறி அனுப்பினர்.

🎭 சிவனடியார்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தினர். பின் இருவரும் இறைவனுடன் கலந்தனர், கேதார மலையை பின் பக்கம் மலைச் சிகரமாக இருவரும் இன்றும் விளங்குகின்றனர்.

🎭 மஹாபாரதப் போருக்குப் பின் கண்ணபிரான் வந்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது.

🎭 துர்வாச முனிவரின் சாபம் பெற்ற விஷ்ணு பூமிக்கு வந்து இமயமலையில் கேதாரநாதரை நோக்கி தவம் செய்த போது மஹாலக்ஷ்மி துணையாக பத்ராட்சை மரமாக காவல் இருந்தாள் எனவே அத்தலம் பத்ரிநாத் எனப்பட்டது.

🎭 ஆதி கேதாரீஸ்வரரின் ஆலயம் பத்ரி நாதர் தலத்திற்கு எதிரே உள்ளது.

🎭 பாண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு இத்தலத்திற்கு உண்டு. பாசுபதாஸ்திரம் பெற அர்ச்சுனன் வந்து தவம் செய்த தலம்.

🎭 தெய்வீகக் கல்யாண தாமரை மலரைக் கண்டு பீமனை அதைக் கொய்து வர கூறுகின்றாள் திரௌபதி, அவ்வாறு வந்த போது தான் அனுமனை பீமன் சந்தித்ததாக ஐதீகம்.

🎭 ஆவணி மாதத்தில் பிரம்ம கமல் என்று அழைக்கப்படும் பெரிய தாமரை மலர்கள் இப்பகுதியில் மலர்கின்றன. அம்மலர்களை கேதாரீசருக்கு சமர்ப்பணம் செய்யும் பக்தர்கள் அநேகம்.

🎭 வட இந்தியர்களின் சிரவண் மாத பௌர்ணமியன்று கேதாரீஸ்வரருக்கு பிரம்ம கமல் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது.

🎭 அதற்கு முதல் நாள் சதுர்த்தசியன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.

🎭 தற்போது உள்ள கோவில் 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களால் கட்டப்பட்டது அதற்கு அருகிலே பாண்டவர்கள் கட்டிய கோவில் உள்ளது.

🎭 திருக்கேதார ஜோதிர் லிங்கத்தின் மேற்குப்பகுதி சிவபெருமான், வடக்கு நோக்கி தும்பிக்கையுடன் கணேசர், மற்றும் ஸ்ரீசக்ர வடிவில் கௌரியன்னை பார்வதி ஆகிய மூவரும் ஒன்றாக காட்சி தருகின்றனர். ஸ்ரீ சக்கரத்தின் மேல் தலை வைத்து வணங்கலாம்...

🎭 கோவிலின் தெற்குப் பக்கம் இருக்கும் அகண்ட தீபத்தில் நெய் இடவேண்டும். இந்த தீபம்தான் திருக்கோவில் பனிக்காலத்திற்காக மூடப்பட்டு ஆலயம் பின் அக்ஷய த்ரிதியையன்று திறக்கப்படும் போது எரிந்து கொண்டு இருக்குமாம்.

🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 4.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும்..🗝

🅱 பொது தகவல்:🅱

🦋 பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர் விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர்.

✈ யாத்திரைக்கு ஏற்ற காலம்: ✈

🦋 இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது (அதாவது புத்தாண்டு தினத்தன்று) பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள்.

🦋 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். எனவே, பொதுவாக கேதார் யாத்திரை புறப்படும் முன்னர் அங்குள்ள சீதோஷ்ணம், கோயில் திறப்பு போன்ற விபரங்களை நன்கு தெரிந்த பின்னர் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

🦋 கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி, கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அற்புதக் காட்சிகளை காண ஏராளமான அளவில் பக்தர்கள் கேதார்நாத் நோக்கி வருவது வழக்கம்.

🦋 இக்கோயில் சம்பிரதாயப்படி ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களுக்காகவும், பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுவதாகவும் ஐதீகம்.

🅱 பிரார்த்தனை:🅱

🌻 ஈஸ்வனை உள்ளன்போடு வழிபட திருமணம் கூடுகிறது. ஒழுக்கமான வாழ்வு கிடைக்கின்றது மனக்கவலை நீங்குகின்றது, ஐயனை தரிசித்தவர்களுக்கு கனவில் கூட துன்பம் வாராது என்பது ஐதீகம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 
🅱 தலபெருமை:🅱

🔥 சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத்.

🔥 கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும்.

🔥 திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச்
செய்தாராம். இது அத்தகைய புனித தலம்.

🔥 ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச் செய்துள்ளார்.

🔥 ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது.

🔥 அது போல இங்கு தான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர்.

🔥 இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும்.

🔥 இமயமலை - கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது.

🔥 புனித கங்கா என்ற  பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.

🔥 இத்தலத்தில் சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பூஜைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தரிசனம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை.

🔥 இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக் கொள்கின்றனர்.

🔥 இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

🔥 இமயமலையில் யாத்திரை செய்யும் போது மக்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள்.

🔥 வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ளது.

🔥 கேதார்நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

🔥 ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது.

🔥 கேதார்நாத் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள்.

🔥 இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியது போல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும்.

🔥 ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர்.

🔥 இத்தலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது.

🔥 பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும் படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது.

🔥 பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று!

🔥 யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

🅱 திருக்கோவில் அமைப்பு.. 🅱

Ⓜ வெள்ளிப்பனிமலையாம் திருக்கயிலையில் விளங்கும் நாதரின் இன்னொரு வெள்ளிப்பனிமலை ஆலயம் இந்த திருக்கேதாரம். கேதார மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இப்புனிதமான ஆலயம். மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள், நர நாராயண சிகரங்கள் பின் புறம் எழிலாக விளங்க 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத் பாதாள் கட்டிய கோவில் இமய மலைப்பகுதியில் ஓங்கி உயர்ந்த ஒரு விமானத்துடன் கற்றளியாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

Ⓜ இமயமலைக் கோவில்களின் கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஓங்கி உயர்ந்து எழிலாக காடசி தருகின்றது திருக்கோவில். எல்லோரையும் வரவேற்கின்றது. தோரண வாயில் அதையடுத்து எண்ணற்ற விதவிதமான மணிகள் சாயங்கால ஆரத்தியின் போது அந்த மணிகளை அடிக்கும் போது மணியொளியும் சங்க நாதமும் மலை முகட்டில் முட்டி எதிரொலிக்கும் அந்த அற்புதத்தை என்ன என்று சொல்ல. அங்கிருந்தால் தான் அந்த தெய்வீக உணர்வை தாங்கள் உணர முடியும்.

Ⓜ முன் மண்டபத்தின் உட்பகுதியில் அழகிய சிற்பங்கள். சிங்கி, பிங்கி என்று இரண்டு துவார பாலகர்கள், அருகில் கணேசர், அற்புத சிற்பங்கள் ஒவ்வொரு கதவிலும் மற்றும் சுவற்றிலும். மேலே மரசட்டங்கள் கொண்ட சாளரம் அதற்கு மேல் கலசம். ஐயனை எப்போதும் சுமக்கும் நந்தியெம்பெருமான் பெரிய வடிவில் கோவிலுக்கு எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

Ⓜ நந்தி தலையைத் தூக்கி எம்பெருமானை தனது மூச்சுக் காற்றால் குளிர்விக்கும் கோலம் ,
கதவில் தசாவதார கோலங்கள், மஹா மண்டபத்தில் உள் கோஷ்டத்தில் லக்ஷ்மி நாராயணர் மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கும், திரௌபதி தேவிக்கும், குந்தி அன்னைக்கும் சிலை, இம்மண்டபத்தில் நடுநாயகமாக சிறிய வெள்ளிக்கவசம் பூண்ட நந்தி. இதை அடுத்து முன் மண்டபம் இம்மண்டபத்தில் எதிரெதிரே விநாயகர் மற்றும் கௌரி அன்னை. வெள்ளி கவசத்தில் அன்னை எழிலாக அருட்காட்சி தருகின்றாள்.

Ⓜ மனமார ஐயனையும் அம்மையையும் வணங்கி விட்டு வெளியே வந்து பிரகார வலம் வர வேண்டும்..

Ⓜ பிரகாரம் பின் பகுதியில் தமிழில் ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் திருவுருவப்படங்கள் மற்றும் பாசுரங்கள் கண்டு அப்பாசுரங்களை பாடிப்பரவசம் அடையலாம். பின்னர் விஸ்வரூப நந்தியெம் பெருமானை வணங்கிட வேண்டும்.

Ⓜ கோவிலுக்குப் பின்னே ஆதி சங்கரரின் சமாதி உள்ளது. விஜய கொடியுடன் அவருடைய தண்டத்தை இங்கு அமைத்துள்ளனர். அதற்கு பின் லங்கார் எனப்படும் அன்னம் பாலிக்கும் இடம். பின்னர் ஆதி சங்கரர் திருக்கயிலையில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்கம் தரிசிக்கலாம்..

Ⓜ இவ்வாலயத்தில் ஆதி சங்கரர், சுக்ராச்சாரியார் மற்றும் அனுமன் சிலைகளும் உள்ளன.

Ⓜ இரவில் திருக்கேதார கோவில் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மிகவும் அருமையாக காட்சியளிக்கும்.

Ⓜ திருக்கேதாரம் முக்தி ஸ்தலமாகவும் கருதப்படுகின்றது. இங்கு இறந்தால் புனர் ஜன்மம் கிடையாது.

🌤 திருக்கோவிலின் பின்புறம் ஈசானேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பூஜை முறையை ஆதி சங்கரர் வகுத்தார் எனவே மலபாரை சார்ந்த லிங்காயத் பிராம்மணர்களே பூஜை செய்கின்றனர். அவர் ராவல் எனப்படுகின்றார். அவருடைய சிஷ்யர்கள் பூஜை செய்கின்றனர்.

🌤 பைரவர் காவல் தெய்வம் என்பதால் அவருக்கு கோவில் எதுவும் கிடையாது வெட்ட வெளியில் இருந்து கேதார்நாத் கோவிலைக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சமயம் கோவில் மூடப்படும் போது கோவிலை பூட்ட மறந்த போது பைரவர் வந்து பூசாரிகளை நடக்க விடாமல் செய்து பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்களாம்.

🌤 திருக்கேதாரத்தை சுற்றிலும் எட்டு திசைகளிலும் எட்டு ஆலயங்கள் உள்ளன.

🌤 ரேதஸ் குண்டத்தின் தீர்த்தம் பருகினால் இந்த புனித யாத்திரை பூர்த்தி அடைவதாக ஐதீகம். இந்த தீர்த்தத்தை உட்கொள்பவர்களின் இருதயத்தில் நான் அமிர்தமாக அமர்வேன் என்று பார்வதி தேவியிடம் சிவபெருமான் இந்த தீர்த்தத்தின் மஹிமையை விளக்கியதாகவும், இங்கிருந்து தான் ஐயன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளியதாகவும் ஐதீகம்.

🌤 திருக்கேதாரத்தில் தினமும் அதிகாலை 4மணிக்கு நடை திறக்கின்றது. அது முதல் நிர்வாண தரிசனம் நாமே அபிஷேகம் செய்து கொள்ளலாம். அப்போது பால் போக், மஹா அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடைபெறுகின்றது.

🌤 மாலை சிவ அஷ்டோத்திரம், சிவ நாமாவளி, சிவ மஹிமா ஸ்தோத்திரம். மாலை நான்கு மணியளவில் முழு அலங்காரத்துடன் தரிசனம் வெள்ளிக்கிரீடத்துடன் பட்டாடையுடன், மலர் மாலைகளுடன் அற்புத தரிசனம். ஏகாந்த தரிசனம் கண்டு களிக்கலாம்..

🌤 இரவு 8 மணியளவில் ஆரத்தி. ஐயனின் ஆரத்தி தரிசனம் முதலில் கேதாரீஸ்வர்ரருக்கு ஆரத்தி பின்னர் பரிவார தேவதைகளுக்கு ஆரத்தி ஆகி பின்னர் சன்னதி தெரு வழியாக ஆரத்தி மந்தாங்கினி மாதா சன்னதி வரை செல்லும்.(பின்னர் திரும்பி வரும் போது ஆரத்தியை தொட்டு நாம் வணங்கலாம்.)

🌤 திருக்கேதாரத்தின் எதிரே சுமார் 1.5 கி.மீ ஏறிச்சென்றால் பைரவர் ஆலயம் உள்ளது.

🌤 அதற்கு சிறிது மேலே பீமன் பாதம் உள்ளது. இங்கு தான் பீமன் காளை வடிவில் இருந்த சிவபெருமானை பிடித்ததாக ஐதீகம் .

ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர்

தாழ்ந்த தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பது

வீழ்ந்து செற்று நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினன்று

கீழந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே
என்று ஆளுடையப்பிள்ளை அவர்கள் பாடிய திருக்கேதாரத்தில் ஜோதிர் லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானை, தேவ தேவனை, மஹா தேவனை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை, சகல புவன ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார காரணனை தியாகராஜனை உள்ளன்போடு வழிபடலாம்.

🌤 பத்ரியிலும் கேதாரத்திலும் இறைவனை வழிபடுபவர்களுக்கு சம்சார பந்தம் விலகும், கேதாரத்தில் தானம் செய்பவர்கள் சிவரூபம் பெறுவர் என்பது திண்ணம்.

🅱 தல வரலாறு:🅱

⛱ திருக்கேதாரம் பாண்டவர்களுடன் தொடர்புடையது. மஹா பாரதப் போரில் தமது சகோதரர்களையே கொன்றதனால் பாண்டவர்கள் கோத்ரா ஹத்யா என்னும் பாவத்திற்கு ஆளாகின்றனர், பாவ விமோசனம் பெற அவர்கள் சிவ பெருமானை தரிசிக்க வாரணாசி  செல்கின்றனர்.

💐 அங்கே அவர் இல்லையென்றும் இமயமலையில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர். பின்னர் இளைப்பாறும் போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சி தரமுடியாது என்றும், முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்த போது காட்டில் ஏராளமான எருமைகள் மேய்வதை பாண்டவர்களில் பலசாலியான பீமன் கண்டார். அதில் ஒரு எருமையின் முன் கால்களில், ஒரு காலில் மட்டும் சலங்கை கட்டியிருந்ததை கண்டு, அந்த எருமை தான் சிவபெருமானாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து ஓடிச்சென்று எருமை உருவில் இருந்த சிவபெருமானை தொட்டு வணங்கினார். ஆனால் சிவபெருமான் எருமை உருவத்திலிருந்து பூமிக்குள் நுழைந்தார்.

💐 பீமன் எருமையை தொட்டு நிறுத்தியதால் எருமை உருவின் முதுகு பகுதி மட்டும் பூமியின் மேல் பகுதியில் அசையாமல் நின்று விட்டது. எனவே கேதார்நாத்தில் எருமை உருவில் சிவபெருமானின் முதுகு பகுதியை மட்டும் தரிசிக்கலாம். பின்னர் அசரீரி மூலம் கேதார்நாத்தில் தனது முதுகு பகுதியை இங்கு தரிசிக்கலாம் என்றும், பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார்.

💐 பின்னர் பாண்டவர்கள் பசுபதி நாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர்.

💐 தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

💐 பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சொர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது.

💐 அவ்வாறு ஐயன் பாய்ந்த போது அவரது மற்ற அங்கங்கள் மற்ற இடங்களிலும் வெளிப்படுகின்றன, ஐயனின் தலை பகுதி வெளிப்பட்ட இடம் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத். தொப்புள் மதுமஹேஸ்வரரிலும், கரங்கள் துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், ஜடாமுடி கப்லேஸ்வரிலும் வெளிப்பட்டன. இந்த ஐந்து இடங்களும் பஞ்ச கேதாரம் என்று அழைக்கப்படுகின்றது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻  கேதாரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று..

♻ கேதார்நாத் கோயில் தேவாரப் பாடல் கல்வெட்டுகள்  அனைத்துமே கேதார்நாத் கோயிலில் நம்மூர் கல்வெட்டுகளைப் போலவே தமிழில் கல்வெட்டுகளாகவே செதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன.

♻ பதினான்கு கி.மீ நடைபயணம். இரு நெடிதுயர்ந்த மலைகள் இரண்டு மலைத்தொடர்களுக்கு இதையில் பொங்கி நுப்பும், நுரையுமாக பாய்ந்து வரும் மந்தாங்கினி நதி. வழியெங்கும் இயற்கையன்னையின் எழிற் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன.

♻ இரு பக்கமும் எண்ணற்ற நீர் வீழ்ச்சிகள் சிற்றரசர்கள் சக்ரவர்த்திக்கு கப்பம் கட்டுவது போல தங்களுடைய தண்ணீரைக் கொண்டு வந்து மந்தாங்கினியில் சேர்க்கின்றன. இந்த தண்ணீர் எல்லாம் பனி உருகுவதால் உண்டானவை எனவே வருடம் முழுவது தண்ணீர் இருந்து கொண்டே இருக்கின்றது.

♻ இரு பக்கமும் பச்சை கம்பளம் போர்த்தியது போல் உள்ள மலைத்தொடர்களில் நெடிதுயர்ந்த மரங்கள், பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள், பாய்ந்து வரும் வெள்லி அருவிகள் என்று இயற்கை அழகை இரசித்துக் கொண்டே மலையேறலாம்..

இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்

துன்னிய பினை மலர்க் கையினர் ஒரு பால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால் . . . .என்று சிவபெருமானையே குருவாகப் பெற்ற மாணிக்கவாசப் பெருமான் தமது திருப்பள்ளியெழுச்சியிலே பாடியபடி நடந்தே மலையேறி ஐயனைக்காண செல்லலாம்..

♻ ஃபாடா, குப்த காசி, டேராடூன் ஆகிய இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்

தாழாதறஞ் செய்ம்மிந்தடங் கண்ணான் மலரோனும்

கீழ்மேலுற நின்றான் திருக் கேதாரமெனீரே!
- என்று எம்பிரான் தோழர் சுந்தரர் மிஞ்சு தமிழில் பாடியுள்ள கேதாரீஸ்வரரின் சன்னதி முன் நிற்கும் போது மனது நிறைய ஆனந்தம் பொங்கும்.

♻ காலையில் இருந்து மதியம் மூன்று மணி வரை ஐயன் நிர்வாண தரிசனம் என்னும் எந்த அலங்காரமும் இல்லாமல் மலை உச்சியாகவே தரிசனம் அளிக்கின்றார். நாமே நமது கையால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். கட்டி அனைத்துக் கொள்ளலாம். அவர் மேலேயே தலைவைத்து வணங்கலாம்.

🅱 இருப்பிடம்:🅱

✈ சென்னை - டெல்லி- 2184 கி.மீ., டெல்லி - ஹரித்துவார்- 205 கி.மீ., ஹரித்துவார் - ரிஷிகேஷ்- 24 கி.மீ., ரிஷிகேஷ் - கவுரிகுண்ட்- 215 கி.மீ., கவுரிகுண்ட் - கேதார்நாத்- 14 கி.மீ. (மலை வழி)

✈ இமயமலையில் உள்ள கேதார் நாதத்திற்கு வாயிற்படிபோல அமைந்த ஹரித்வார், ரிஷிகேசம் வழியாகச் செல்ல வேண்டும்.

✈ ஹரித்வாரிலிருந்து கேதார் நாதம் மலைமேல் 260 கி.மீ. ரிஷிகேசிலிருந்து கேதார் நாதம் 230 கி.மீ. தூரம் உள்ளது. இதில் 216 கி.மீ. உள்ள கவுரி குண்டு என்று கூறப்படும் இடம் வரையே பேருந்து சாலை.

✈ கவுரி குண்டிலிருந்து 14 கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். உயர்ந்த பனி சூழந்த பகுதியில் நடந்து செல்ல முடியாதவர்கள் குதிரையிலோ, பல்லக்கு அல்லது கூடை ஆகியவற்றிலோ செல்லலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment