Thursday 27 July 2017

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல் - நாகப்பட்டினம்

வெண்ணெய் உகந்த சிவபிரான் எழுந்தருளிய தலம் ; சிவாலயத்தில், பெருமாளுக்கும் தனிச் சந்நிதி அமைந்துள்ள ஆலயம் ; சப்தவிடங்கத் தலமாக இல்லையெனினும் மரகதவிடங்கராக ஸ்ரீதியாகேசர் காட்சி தரும் கோயில் ; தாயைப் பணிகிற தனயனாக, முருகப்பெருமான் அருள்பாலிக்கிற க்ஷேத்திரம் ; சோழ தேசத்துக்கே உண்டான கட்டுமலைக் கோயில் அமைந்த தலம் ; கடல் நாகைக் காரோணத்தின் பஞ்சகுரோசப் பெரும்பதிகளில் ஒன்றான தலம்.....

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைபேசி எண் : 04365-245350

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)

உற்சவர் : சிங்கார வேலவர்

அம்மன்/தாயார் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)

தல விருட்சம் : மல்லிகை

தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி (பாற்குளம்)

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : மல்லிகாரண்யம், திருச்சிக்கல்

ஊர் : சிக்கல்

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.  -திருஞானசம்பந்தர்

நீலம்நெய் தல்நில விம்மல ருஞ்சனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வனம் மல்கிய சிக்கலுள் வேலோண்  கண்ணியி னாளையொர் பாகன்வெண்ணெய்பிரான்
பாலவண் ணன்கழல் ஏத்தநம்
 பாவம்ப றையுமே. - திருஞானசம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 83வது தலம்.🌱

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 கந்தசஷ்டி திருவிழா –ஐப்பசி மாதம் (சக்திவேல் வாங்குதல் வியர்க்கும் மகிமை)

🌻 சித்திரை பெருந்திருவிழா –(சித்திரை மாதம் )

🌻 தெப்பத்திருவிழா –தைப்பூசத்தன்று நடைபெறும்

🌻 மாதாந்திர கார்த்திகை

🌻 பிரதோசம்-சுவாமி புறப்பாடு

🌻 மாதாந்திர சங்கடகர சதுர்த்தி –விநாயகர் அபிஷேகம்

🌻 திருவாதிரை –நடராஜர் அபிஷேகம் –ஊடல்,வீதி புறப்பாடு

🌻 தமிழ் வருடப்பிறப்பு –சிங்காரவேலவர் அபிஷேகம்

🌻 மாசி மாதம் –மகா சிவராத்திரி (நான்கு காலமும் பூஜை நடைபெறும் )

🌻 வைகாசி விசாகம்-சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

🌻 ஆடிப்பூரம் –அம்பாள் அபிஷேகம்

🌻 ஆடிக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு -தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு

🌻 விநாயகர் சதுர்த்தி-சுந்தரகணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

🌻 நவராத்திரி உற்சவம்-பள்ளியறை அம்மன் சிறப்பு அலங்காரம்

🌻 சரஸ்வதி பூஜை –எல்லா சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

🌻 விஜயதசமி –சிங்காரவேலவர் தங்கக்குதிரை வாகனத்தில் அம்பு போடுதல்

🌻 ஐப்பசி பெளர்ணமி –சிவனுக்கு அன்னாபிஷேகம்

🌻 தீபக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –சொக்கப்பானை ஏற்றுதல்,சுவாமி வீதியுலா

🌻 பங்குனி கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலா

🌻 பங்குனி உத்திரம் –சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

🅱 தல சிறப்பு:🅱

🎭 இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.

🎭 ஒருமுறை, பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல்.

🎭 திலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல்.

🎭 முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொண்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.

🎭 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல்.

🎭 சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி.

🎭 இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

🎭 எப்போதும் வற்றாத நீர்ப் பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு “வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி”  என்று பட்டினப் பாலை என்னும் நூல் கூறுகிறது. அண்ணல் பாகத்தையாளுடைய நாயகி உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது”  என்று சேக்கிழார் காவிரி நதியைப் போற்றுகிறார். சோழநாடு பூவினுள் பதுமம் போல்வது,கலைகளுள் ஞானம் போல்வது அறத்துள் இல்லறமே போன்று இலங்குவது. அத்தகைய நாட்டில் உள்ள சிவதத் தலங்களில் சிக்கல் ஒன்றாக விளங்குவது ஆம். அதன் பழம்பெரும் பெருமையை முறையாக காண்போம்.

🅱 திருநகர சிறப்பு: 🅱

🎭 அலைமகளும், மலைமகளும் நாமகளும் நண்ணியமர்ந்து நாளும் நாமலி புலவரேத்த நலந்தரும் தன்மை வாய்ந்தது திருச்சிக்கல் ஆகும்.

🎭 எண்ணரும் செல்வத்தோடு போகமும்எய்தி நாளும் நண்ணரும் ஒழுக்கம் வாய்ந்த நன்மக்கள் வாழும் தலமாகும்.

🎭 சோழ மண்டலத்தில் நடுவணமைந்த செம்மணியே போலுந் திகழ்வது,மங்கல்தொயும் மாடவீதிகளில் வேளாண் மாந்தர் திருமனைகள் எண்ணில உண்டு.வேளாளர்கள் வெண்ணீறு பூசித் திகழ உருத்திராக்கம் பூண்டு பொருந்தவே திருவைந்தெழுத் தோதிப்,புனல் மலராதி கொண்டு வேனேடுங்கண்ணி பாகனை யருச்சித் தேத்திப் பெருந்தமிழ் நலம் பாராட்டும் பெற்றிமை வாய்ந்தவர்கள் வருவிருந்தெதிர் கொண்டுள்ளம் மகிழ்ந்து முகமன் கூறித் திருமலராதி நல்கிச் சிவார்ச்சனை செய்வித் தன்பால் அருகினில் அமரச் செய்து இனிதினட்ட அறுசுவை யமுதமூட்டிப் பொருவது மடைகாய் நல்கிப் போந்ததோர் குறிப்புத் தேர்ந்தருள் புரிவர்.

🎭 பேச்சாலும் ,எழுத்தாலும் ,பாட்டாலும் ,கூத்தாலும் பிறர் உவக்க ஒச்சுகவே மணிமுரசு வீதியெல்லாம் வரிசையுற உழவர் நிர்பீர்: ஏச்சாலும் எதிப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப வெள்ளம் பாயச்சாதோ பொதுத்தொண்டு ? பைந்தமிழ் செய்யும் தொண்டு பருக வாரீர்”என்ற நம் கவிஞர் வாக்குப்படி அழைக்கும் செம்மனச் சீலர்கள் நிறைந்து வாழும் திருவீதிகளை உடையது.

🎭 அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

🎭 விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

🎭 சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும்.

🎭 அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார்.

🎭 கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

🎭 தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப் பெருமானுக்கு "திரி சதை' செய்து வேண்டிக் கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.

🎭 சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு "சத்ரு சம்ஹார திரி சதை' அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 146 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடை திறப்பு:🅱

🗝 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 🗝

🌻 பூஜைவிவரம் : ஆறுகால பூஜைகள்🌻

🅱 பொது தகவல்:🅱

🍁 இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

🍁 எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர்.

🍁 கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.

🍁 கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோவவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

🅱 தலபெருமை:🅱

🔥 “மூர்த்தி,தலம் ,தீர்த்தம் முறையாய் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்ற தாயுமானவர் வாக்குப்படி இறைவன் மூர்த்தியாகவும்,தலவடிவமாகவும் தீர்த்த வடிவினனாயும் விளங்குகின்றான்.

🔥 திருச்சிக்கல் மல்லிகை வனமாக முற்காலத்தில் விளங்கியது.மல்லிகை வனச் சூழலில் நடுவண் சிக்கல் ஞான நாயகன் இனிதமர்த்திருந்தான். கடனாகைக் காரோணத்தின் பஞ்சக் குரோசத் தலத்தில் ஒன்றாக இத்தலம் விளங்கியது.பின்பு ஒருசமயம் காமதேனுப்பசுவின் பால் பெருகியதால் உண்டான வெண்ணையை வசிட்ட முனிவர் சிவலிங்கமாக்கிப் பூசித்த இலிங்கமாக அமைந்த நற்சிறப்பினை வெண்ணெய் பிரானாக நாம் இப்போது காண்கிறோம்.உழுவலன்பு அமைத்து தலமெலாம் தரிசித்து ஓங்கு புன்னியயன்கோள நினைந்தோர். தழுவுசீர்ச் சிக்கலைத் தரிசித்தால் அப் பயன் பெறுவர் என்பது சாதகமாகும்.

🔥 விசுவாமித்திரர்,வசிட்டர்,அகத்தியர்,கார்த்திகேயனர்,நாரதர் முதலிய முனிவர்களும் இத்தலம் சார்ந்து வழிபட்டு பேறு பெற்றனர் என்னில் இத்தலத்தின் பெரும சொல்லொணாத நலத்தது ஆம்.திருச்சிக்கல் தலம் பரவுவார் பாவ முற்றோழிந்து துன்னிய பூதப் பிரேத பைசாசத் தொடரபுறச் சந்ததி பெருக.முன்னிய உலகனில் களித்து வாழ்ந்து இருந்து முத்தியின்பமும் அடைவர்.    

🅱 வேல்நெடுங்கண்ணி -சிறப்பு தொகுப்பு:🅱

 🌤 திருவருட் சக்தி :🌤

🎸 கோயில் அமைப்புத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாயின. இத்துணை ஆண்டுகளாகப் பல கோடி மக்கள் ஆங்காங்கு எழுந்தருளியுள்ள திருவுருவத்தினை நோக்கி  தெய்வமே என்று நினைத்தும் வாழ்த்தியும் வணங்கியும் இருக்கிறார்கள்.அவர்களது தெய்வீக எண்ணங்கள் திருவுருவத்தில் படிந்து ஒன்றுடன் ஒன்று ஒன்றித் தெய்வீகச் சக்தி பெற்றுள்ளன.நன் மக்கள் நோக்கினின்றுந்ததிரளும் சக்தியைப் பார்க்கிலும் ஞானிகள் நோக்கினின்றுந்திரளும் சக்தி வல்லமை வாய்ந்தது .

🎸 இச்சக்தியிலும் பண்டை நற்றவத்தால் தோன்றிய பரமனைப் பக்தி செய்யுந் தொண்டர்களான நாயன்மார்கள் நால்வர் பெருமக்கள் நோக்கினின்றும் பிறப்பது சொல்லொணா ஆற்றல் வாய்ந்தது.அப்பர் ,சம்பந்தர் ,சுந்தரர் , மாணிக்கவாசகர் என்ற நால்வரும் தெய்வத் திருவருட் சக்தி மயமானவர் எல்லாம் வல்லவர். தங்கள் ஆன்ம நலனை மட்டும் கருதி வாழ்ந்தவர்களல்லர்.அவர்கள் தாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டும் என்ற கருணையில் மூழ்கியவர்கள் அவர்கள் தமிழ் மறைகளை உலகுய்யத்தந்தனர்.

🎸  எண்ணத்தில் ஆற்றல் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்தினார்கள்.அவர்களது தெய்வீகச் சக்தி நூல்களிலும் கோயில்களிலும் இறங்கியுள்ளது.நால்வர் அருளிய மறைமொழிகட்கு எவ்வளவு ஆற்றல் உண்டோ,அவ்வளவு ஆற்றல் அவர்தம் திருநோக்கம் பெற்ற கோயில்கட்குமுண்டு, அக்கோயில்களை விடுத்து அவரது நல்லெண்ணங்கள் நீங்கவே  மாட்டா,உலகிலுள்ள தீமைகள் எல்லாம் திரண்டு ஓருக்கொண்டு அக்கோயில்களைத் தாக்கினாலும்,அங்குள்ள அத்தீமைகளை எல்லாம் நீராக்கும் ஆற்றல் பெரியோர் நோக்குப் படிந்த கோயில்களுக்குண்டு மலைகள் அழியலாம். கடல்கள் அழியலாம்.உலகம் அழியலாம்.திங்கள் அழியலாம் .ஞாயிறு அழியலாம் .பிற அழியலாம்; பெரியோர் எண்ணங்கள் அழியோ.கோயில் கட்டிடங்கள் அழிந்தாலும் அவைகளைச் சூழ்ந்துள்ள நல்லெண்ணங்கள் அழியா . அவை மீண்டும் ஒரு காலத்தில் கோயிலாகும். கோயில் கல்லன்று; மண்ணன்று ;கண்ணமன்று; அஃது எண்ணம்; நல்லெண்ணம்;சக்தி வாய்ந்த எண்ணம்.தெய்வீகச் சக்தி வாய்ந்த எண்ணம். அவ்வெண்ணம் இந்நாளிலும் தியானதிற் சிறந்த அன்பர்கட்குப் பெருஞ்சக்தியை  உலகைத்திருத்தும் வல்லமையை –கடவுட்டன்மையை வழங்கி வருகிறது .

🎸 இத்துணைச் சிறப்பு வாய்ந்த கோயில் வழிபாட்டு இடையீடின்றி வளர்ந்தோங்கல் வேண்டும்.அதற்கு முட்டு நேரின் உலகம் இன்னலுறும். அவ்வின்னலைப் போக்கவும் வழிபாட்டையே கடைப்பிடித்தல் வேண்டும். வழிபாடே தியானயோகம் தவம்.  

🎸  இதனைக் கண்டு பொறுக்கமாட்டாத அவுணர்  கோன் அண்டபித்திகையின் வாயிலை அடைத்து அறை கூவினான்.முருகனும் அங்குச் சென்றார் .பிரிதிவி அண்டம் முழுவதும் சென்றான் .முருகனும் அங்கங்குச் சென்று பெருதார்.அவை வெந்து சாம்பலாயின . மனம் உடைந்த சூரபன்மன் தன் தாயாகிய மாயையை எண்ணினான்.மாயையும் வந்தாள். அவளிடம் தமது குறைகளை எல்லாம் கூறி , “இறந்தவர் அனைவரும் எழ ஒரு வழி கூறுக. என வேண்டினான்.

🎸 மாயை“மைந்தா“ இந்நிலை எய்தியும் தேவரை விட நீ விரும்பவில்லை பன்னிரு கரத்து அறுமுகக் கடவுளோடு மேலும் சண்டை செய்ய விரும்புவாயாயின் உன் செல்வமெல்லாம் தொலையப் பெறுவாய் அவரை பாலனென்று எண்ணாதே.அவர் கரத்திலுள்ள ஞான சக்தி உன்னைக் கொல்லப்போகிறது.இன்று நான் சொல்வது காதில் ஏறாது உன் விருப்பம் போல் இறந்தவர்கள் எழும்ப வேண்டுமானால் பெரும்புறக் கடலின்   அருகில் அமுத சீத மந்திர கூடம் என்ற ஒரு மலை இருக்கிறது.அதனைக் கொணர்ந்தால் அனைவரும் எழுவர் என்று கூறி மறைந்தாள் .சூரபன்மன் மகிழ்ந்து தேரிலிருந்து இறங்கி சிங்க வாகனத்தில் ஏறிக்கொண்டு இந்திர மாஞாலத் தேரை நோக்கி “நீ சென்று அம்மலையைக் கொணர்க”எனப்பணித்தான்.அது அங்ஙனமே சென்று கொணர்ந்தது.அனைவரும் உயிர் பெற்றெழுந்தனர். சிங்கமுகன் முதலியோர் மீண்டும் அறுமுகப்பண்ணவனை வளைத்துப் போரிட வந்தனர்.முருகன் புன்முறுவல் பூத்து உருத்திர பாசு பதத்தை ஏவி அனைவரையும் அழைத்தார்.

🎸 சூரபன்மன் இந்திரமாஞாலத் தேரை நோக்கி நீ வீரவாகுதேவர் முதலிய வீரர்களையும்,பூதச் சேனைகளையும் தலைவர்களையும் வாரிக்கொண்டு போய் அண்டத்துச்சியிலே வைத்துக் கொண்டிருப்பாயாக என ஆணை தந்தான்.அதுவும் அவ்வண்ணமே செய்தது.முருகன் ஒரு கணையை ஏவி ,நீ அதன் ஆற்றலை யழித்து இங்கே கொணர்க .என அந்தக்கனையும் அவ்வாறே செய்து திருமுருகன் முன் கொணர்ந்தது வீரவாகுதேவர் முதலியோர் முருகனை வணங்கி அவர் பக்கலையடைந்தனர்.

🎸 இந்திர மாஞாலத் தேர் மீண்டும் சூரபன்மன் பக்கம் செல்ல எழுந்தது.முருகன்,”அவன் அழிவது உறுதி .அங்கே போகாதே,இங்கேயே நில்” என்று அதட்டினார்.அது அவ்வண்ணமே நின்றுவிட்டது.  இது கண்ட சூரபன்மன் பெருங்கோபங்கொண்டு கனைப் போர் புரிந்தான்.முருகனும் ஆயிரங் கணைகளை அனுப்பி அவன் வில்லத் துணித்தார்.சூரன் முத்தலைச் சூலத்தை ஏவினான்.அதனையும் முருகன் ஆயிரங்கோடி கணைகளால் பயனற்ரொழியச் செய்து குவிசப் படையை ஏவி அதனைப் பிடித்து வரச்செய்தார்.

🎸 சூலம் வலியயொடுங்கி முருகன் கரத்திலிருந்து,முருகன் இரண்டாயிரம் கணைகளை  ஏவி அவன் ஏறியிருந்த சிங்கத்தை கொன்றார் .சூரபன்மன் மாயா வாதத்தால் சக்கரவாளப் பறவையாக மாறி ஆகாயத்தில் பறந்து திரிந்து போர் செய்தான்.இந்திரன் ஒரு மயிலாக வடிவெடுத்து முருகனுக்கு வாகனமாயினான்.முருகன் அதன் மீது ஏறி ஆகாயத்தில்  சென்று சண்டையிட்டார்.சக்கரவாளப் பறவையாகிய சூரபன்மன் முருகனுடைய வில்லை கடித்துத் துணிக்க வந்தான்.முருகப் பெருமான் ஞான வாளால் அவனை வெட்டினார்.அதனுடைய பறவை வடிவம் மாறியது .சூரபன்மன் விசுவரூபம் எடுத்து கடல்களைத்தூர்த்தான்.கதிர்கள் வரும் வழிகளை அடைத்தான்.முருகன் ஏழு கணைகளால் அவன் செய்யும் பாணத்தை அழித்தார். தீயுரு எடுத்தான். புயல் வடிவானான்.

🎸 எல்லாவற்றையும் இறைவன் கணைகளே சென்று அளித்தன .சூரபன்மன் பல தேவவடிவங்கொண்டு பொருதான்.அவற்றையும் அம்பாலேயே அழித்தார் .சூரபன்மன் போர்க்களத்திலே தனித்து நின்றான்.முருக்கடவுள் உலகெலாம் தானாய் நிற்கும் உயர் பெரு வடிவங்கொண்டு அருள்மிகு சிங்கார வேலவராய் நின்றாய் அந்த இடம் இச்சிக்கல் தலமென உய்த்துணரக் கிடக்கின்றது.

🎸 சூரபன்மன் சிங்காரவேலவனை வியந்து நோக்க,முருகன் அவனுக்குச் சிறிது நல் உணர்ச்சியை நல்கினார்.சூரபன்மன் நிமிர்ந்து பார்த்தான்.இதுகாறும் அத்தகைய திருவுருவத்தைக் கண்டதில்லை. ஆயிரமாயிரம் கதிர்களை வீசிப் பரப்புகின்ற தேசுத் திருவுருவம் தன் முன்னே நிற்பதைப் பார்த்தான்.ஒருவனுக்கு அடிபணிந்து வளையவும் வியந்து அண்ணாந்து பார்க்கவும் அவனுக்குத் தெரியாது.நின்றால் நின்றபடியே பார்க்கும் தகைமையன்.

🎸  இப்போது மிக மிக உயரமாக இருக்கிற முருகப்பெருமானின் திருவுருவத்தை அண்ணாந்து பார்த்தான் பார்க்கும்போது இதுகாறும் இத்தகைய பேருருவுத்தைக் கண்டிலோமே என்ற வியப்பு உண்டாகியது. ”யாரோ சிறிய குழந்தை ஒரு மயிற்குஞ்சின் மீது ஏறி வருகிறதென்று அல்லவா நினைந்தேன் ! இவ்வளவு பெரிய அழகுத் திருவுருவத்தை உடையவன் முருகன் என்பதை இந்நாள் வர நினைத்திலேனே” என்று எண்ணி ஏங்குகிறான்.
    ‘கோலமா மஞ்சைமீதிரற் குலவிய குமரன் தன்னைப்
   பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிவை யுணர்ந்திலன்
   மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
   மூலகா ரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ’
என்று வியப்பு அடைகிறேன்.இது முதற் தோற்றத்தில் உண்டான வியப்பு . தான் சிறுவன் என்று கருதிய திருவுருவம் எல்லாப் பொருளுக்கும் மூலகாரணமாக இருக்கிற மூர்த்தியாக தோன்றியவுடன் தோற்றிய வியப்பு.அதற்குப் பின்னர் அவன் தன்னுடைய கண்ணால் அப்பெருமானது ரூப லாவண்யத்தை நுகரப் போகிறான்.

🎸 மெல்ல ஒவ்வோர் உறுப்பாக கண் உலவுகிறது.எல்லை கட்டி காணவொண்ணாத பரப்பும் எல்லை கட்டிச் சொல்ல முடியாத அழகும் உடைய அந்தத் திருவுருவத்தின் திருவடி முதல் திருமுடி வரையில் தன் கண்ணை ஓச்சுகிறான். பக்கத்தில் ஓட்டுகிறான். திருக்கரங்களின்  முடிவு காணவில்லை. திருமேனியின் எல்லை காணவில்லை. அழகை அனுபவித்து  முழுமையும் காணமுடியவில்லை. இந்த நிலையில் எம்பெருமானுடைய திருவழகில் ஈடுபடுகிறான்.

🎸  உலகம் அறியாமையால் காமனைப் பேரழகன் என்று சொல்கிறது. அழகுக்குத்தலை எல்லை மன்மதன் என்று மயங்கிச் சொல்கிறார்களே! அந்த மன்மதன் எம்பெருமானுக்கு முன்னாள் நிற்க முடியுமா? எம்பெருமானுடைய திருவுருவம் முழுமையிலும் உள்ள அழகு கிடக்கட்டும். அதன் திருவடியின் கண்ணே உள்ள அழகின் ஒரு பகுதிக்காவது ஆயிரம்கோடி மன்மதன்களுடைய அழகு எல்லாம் ஒன்றுச் சேர்ந்து உருவம் எடுத்தாலும் ஒப்பாகுமா? என்று ஈடுபட்டு அந்த அழகை வியக்கிறான்.

      “ஆயிரம் கோடி காமர் அழகெலாந் திரண்டொன்றாசி
                மேயின எனினும் செவ்வேன விமலமாம் சரணந்தன்னில்
      தூயஇவ் வெழிலக் காற்றாதென்றிடின் இணைய தொல்லேன்
       மாயிரு வடிவிற் கெல்லாம்  யார் வகுக்க வல்லார்”

🎸  முருகனை இவ்வகையில் பலவாறு  போற்றிப் புகழ்ந்தான். உண்மை ஞானம் சிறிது கைவரப் பெற்றான். அதனால் “என்றும் மீளா ஆளாகவேயிருக்க எனக்கு ஆசை; ஆனால் என் மானம் என்னைத் தடுக்கிறது. என் செய்வேன்” என்று பலவாறு தோத்தரித்துத் தன் குற்றத்தை உணர்ந்து வருந்தினான். அப்போது முருகன் மீண்டும் மயில் வாகனத்தின் மீது பண்டைய பாலக உருவில் காட்சியளித்தார். சூரபன்மன்  மனம் முன்போல் அறியாமை மிக்கவனாகி மாயை மந்திர வலியால் கதிரவனும் ஒளி மழுங்கும் பேரிருள் வடிவாக வானிற் கிவம்பித் தேவர்களை வருத்தினான். தேவர்கள் “தேவர்கள் தேவே “ ஓலம். மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே !ஓலம்,ஓலம்”, என்று ஒலிமிட்டனர் முருகன் தமது அன்யையாம் சிக்கல் வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேற்ப்படையினைப் பெற்றார் . (இன்றும் வேல்நெடுங்கண்ணி இடம் வாங்கும் ஐதீகக் காட்சி நடைபெறுகிறது. வில் வாங்கிய பின் அருள்மிகு சிங்காரவேலவன் மீது வியர்வைத் துளிகள் காணப்படும்.)

🎸  சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் ஆகிநிற்கும் முருகன் தமது திருக்கரத்திலுள்ள சக்தி வேற்படையை நோக்கி சூரன் மார்பை பிளந்து விரைவில் மீளுதி” என்று ஏவினார். அவ்வேல் சென்று அவன் கொண்ட. இருள் வடிவத்தை அழித்தது. சினங்கொண்ட சூரபன்மன் கடல் நடுவில் ஒரு பெரிய மாமரமானான். வேற்படை அங்கும் சென்று மாமரமாக இருந்த அவனை வெட்டி வீழ்த்தியது.மீண்டும் எழுந்து சூரபன்மன் வாட்போர் செய்ய வந்தான்.

🎸  வேற்படை அவன் மார்பைப் பிளந்து உடலை இரு துண்டாக்கிக் கடலில் தள்ளியது. தேவ கங்கையில் மூழ்கித் தேவதேவன் திருக்கரத்தை அடைந்தது. சூரபன்மன் அழியா வரம் பெற்றவன் ஆதலின் மீண்டும் எழுந்தான். போர்ச் செருக்குக் கொண்டான். கோழியும் மயிலும் ஆனான். முருகன் முன்பு வந்தான். அருள்மிகு சிங்காரவேலவர் ஞான நோக்கருளினார். பரிசவேதியால் இரும்பு பொன்னானது போல அருள்மிகு சிங்காரவேலவனின் பார்வையால் சூரன் பகைமை நீக்கி நல்லறிவு பெற்றான். கொடியாகவும், ஊர்தியாகவும் இருக்க அருள் வேண்டினான்.

🎸 அருள்மிகு சிங்காரவேலவரும் அவ்வாறே நல்லருள் புரிந்தார். கோழியைக் கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் கொண்டார். தேவர்கள் ஆரவாரம் செய்தனர். தோத்திரம் செய்தனர். போர்களத்திலேயே அருள்மிகு சிங்காரவேலவர் அனைவருக்கும் அருள் வழங்கினார்.

🎸 அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அவ்வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதலாம் என்பர்.

🅱 கோவிலின் அமைப்பு:🅱

🍁  சிக்கல் சிங்காரவேலர் என்று இந்தத் தலத்து முருகக் கடவுள், பிரசித்தி பெற்றுள்ளார். எனவே, 'முருகன் கோயில்’ என்றே அனைவருக்கும் அடையாளம் தெரிகிறது. ஸ்காந்த புராணத்தின் தீர்த்த ஸம்ஹிதையில் உள்ள வசிஷ்டாஸ்ரம மகாத்மியத்தில் கூறியுள்ள தகவல்கள், இங்கேயுள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 'வடக்கில் வாரணாசியைப் போல், தெற்கில் இங்கு தெய்வங்கள் அனைவரும் கூடுகின்றனர்; வாரணாசியில் இறந்தால் முக்தி; இங்கேயோ, சிவலிங்கத்தைக் கண்டாலே முக்தி’ என சிக்கல் தலம் குறித்த செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

🍁 ஏழு நிலை ராஜகோபுரம்; அருகில் மூன்று நிலையில் இன்னொரு கோபுரம். ஏழுநிலை கோபுரம் சிவாலயத்துக்கும், மூன்று நிலை கோபுரம் பெருமாள் கோயிலுக்கும் வழியாக அமைந்துள்ளன. உள்ளே நுழையும்போதே, மனதுள் கேள்வி வருகிறது... அதென்ன சிக்கல்? யாருக்குச் சிக்கல்?

🍁 வசிஷ்ட மாமுனிவர், இங்கு சிவனாரைப் பூஜித்து காமதேனுவைக் கிடைக்கப் பெற்றார். அதனிடமிருந்து பால் பொங்கிவர, அதில் இருந்து வெண்ணெயை எடுத்து, அந்த வெண்ணெய்யால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டாராம்!  பூஜை முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. பூமியில் வெண்ணெய் சிக்கிக் கொண்டதால், ஊருக்கு சிக்கல் எனப் பெயர் அமைந்தது!

🍁 கதையின் சுவாரஸ்யத்தை அசைபோட்டபடியே, உள்ளே நுழைந்ததும் கார்த்திகை மண்டபம், வசந்த மண்டபம் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அழகிய மண்டபத்தைக் காணலாம். கார்த்திகைத் திருநாளில், சிங்காரவேலவர் இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பார். மண்டபத்தில் நிலைக்கண்ணாடியும் உள்ளது. ஆகவே சிங்காரவேலவரை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் பார்த்துப் பார்த்து பரவசத்துடன் தரிசிக்கலாம்.

🍁 அடுத்து, வெளிப்பிராகாரத்தை அடைகிறோம். இதில் பெரும்பகுதி நந்தவனமாகவே உள்ளது. வடமேற்கில், ஸ்ரீஅனுமனுக்கு தனிச்சந்நிதியும் உண்டு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த கருமுத்து அழகப்பச் செட்டியார் அவர்களின் விருப்பப்படி, சமீபகாலங்களில் அமைத்த சந்நிதி இது! ஸ்ரீஅனுமனுக்கு அமுது கட்டி வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பர்.

🍁 வடக்குத் திருச்சுற்றில், பெருமாளுக்கான தனிக்கோயில். ஸ்ரீகோலவாமனப் பெருமாள் என்பது திருநாமம். மாவலியைச் சந்திக்க வாமனராக அவதரித்த போது, சிவனாரின் அருளைப் பெறுவதற்காக இங்கே எழுந்தருளினாராம்! தலத்தில் உள்ள, கயாசரஸ் தீர்த்தத்தை எடுப்பித்து, அதில் அனுதினமும் நீராடி, திருநீறும் ருத்திராக்ஷமும் அணிந்து, சிவனாரைப் பணிந்து, மாவலியை அழிக்கும் ஆற்றலைப் பெற்றாராம் ! ஆகவே, இவருக்கு கயா மாதவன் என்றும் கோலவாமனர் என்றும் திவ்விய நாமங்கள். தாயார் - ஸ்ரீகோமளவல்லித் தாயார்.

🍁 ஆதியில், முசுகுந்தச் சக்கரவர்த்தி, இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுவர். இக்ஷ்வாகு குல மன்னனாக அயோத்தியில் ஆட்சி புரிந்த முசுகுந்தர், நேர்மையாளர். ஒருமுறை, இவருடைய குதிரைக் குளம்பு ஏற்படுத்திய காயத்தால் இறந்து போனார் ஒருவர். இதில் துடித்துப் போன முசுகுந்தர், தாம் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக, சிவத் தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்றார்; பலனேதும் கிடைக்கவில்லை. குல குருவான வசிஷ்டரை நாடினார். வெண்ணெய் நாதரான சிவனாரின் மகிமையை ஏற்கெனவே உணர்ந்திருந்த வசிஷ்டர், சிக்கல் தலத்தில், பால் தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வழிபடும்படி அறிவுறுத்த, அதன்படியே செய்தார்; தலத்துக்குச் சென்ற கணத்தில், பாவங்கள் அகலுவதை உணர்ந்த முசுகுந்தர், மரத்தடியில் எழுந்தருளியிருந்த வெண்ணெய்நாதருக்கு கோயில் எழுப்பி, பிராகாரங்கள் அமைத்து, விதானங்கள் செப்பனிட்டுத் திருப்பணிகள் செய்தார்.

🍁 அடுத்து, உள்வாயில் ஒருபுறம், ஸ்ரீவிநாயகர்; இன்னொரு புறத்தில் ஸ்ரீதண்டபாணி. உள்ளே நுழைந்தால், உள்பிராகாரம். இங்கே தான் கொடிமரம் உள்ளது. தெற்குச் சுற்றில், பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன வாகனங்கள்! சிங்காரவேலவரின் சிறப்பு வாகனங்களான மயில், ஆடு, குதிரை ஆகிய வாகனங்கள் தங்கத்தால் தகதகக்கின்றன. அடுத்து, ஸ்ரீவிநாயகர் மற்றும் அறுபத்து மூவர்.

🍁 மேற்குச் சுற்றில், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீகார்த்திகை விநாயகர். அட... இப்படியரு விசேஷ திருநாமம், எதற்காம் ? கந்தக் கடவுளை வளர்த்தவர்கள், கார்த்திகைப் பெண்கள், அல்லவா ? அவர்கள், அதாவது கார்த்திகைப் பெண்கள், 'கந்தனை சரியான முறையில் வளர்க்க எங்களுக்கு உதவுங்கள்’ என விநாயகரை வழிபட்டார்களாம். அதனால், கார்த்திகை விநாயகர் எனத் திருநாமம் அமைந்ததாம் !

🍁 இவர்களை அடுத்து, ஸ்ரீஆறுமுகருக்கான தனிக்கோயில்; மயிலேறியாக அவர் காட்சி தரும் அழகே அழகு ! சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சந்நிதி. வடமேற்கு மூலையில், ஸ்ரீகஜலட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில், ஸ்ரீபைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள்.

🍁 வலத்தை நிறைவு செய்து கொடிமரத்தை அடையலாம்.. இங்கேயுள்ளது முன்மண்டபம்; நமக்கு வலப்பக்கத்தில் அம்பாள் சந்நிதி மற்றும் பள்ளியறை உள்ளன. எதிரில் படிகள்; இந்தப் படிகளில் (பன்னிரண்டு படிகள்) ஏறிய பிறகு, மூலவரின் சந்நிதியை அடையவேண்டும். இதனைக் கட்டுமலை என்பார்கள். கட்டுமலை சந்நிதிகளை தேவகோட்டம் என்றும் சொல்வார்கள். படிகளுக்கு அருகில் ஸ்ரீசுந்தரகணபதி காட்சி தருகிறார். அவரை வணங்கிவிட்டு, மூலவரைத் தரிசிக்கப் படிகள் ஏறினால் முன்னதாக, சோமாஸ்கந்தரான ஸ்ரீதியாகேசரின் அற்புதத் தரிசனம்.

🍁 திருவாரூர் பகுதியில் சப்த விடங்கத் தலங்களில் இந்தத் தலம் அடங்காது. சோமாஸ்கந்தர் சந்நிதியில், மரகத லிங்கம் ஒன்றும் உள்ளது; மரகதவிடங்கர் என்று திருநாமம். அடுத்து, மூலவர் சந்நிதி. ஸ்ரீநவநீதேஸ்வரர், ஸ்ரீவெண்ணெய்நாதர், ஸ்ரீவெண்ணெய்ப்பிரான், ஸ்ரீவெண்ணெய்லிங்கேஸ்வரர், பால்வெண்ணெய்நாயனார் எனப் பல திருநாமங்கள், சிவனாருக்கு!

வானுலாவு மதி வந்துலவும்
மதின்மாளிகை தேனுலாவு மலர்ச்சோலை மல்குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்  பெருமானடி
ஞானமாக நினைவார் வினையாயின நையுமே
முன்னுமாடம் மதில்மூன்றுடனே எரியாய்விழத்
துன்னுவார் வெங்கணைஒன்று செலுத்திய சோதியான்
செந்நெல் ஆகும் வயல்சிக்கல் வெண்ணெய்ப் பெருமானடி
உன்னி நீடும் மனமே நினையாய் வினை ஓயவே... - என்று திருஞானசம்பந்தரால், துதிக்கப் பெற்ற பெருமான் இவர்தாம் ! லிங்கத் திருமேனி; சதுரபீட ஆவுடையார்; குட்டையான பாணம்; வெண்ணெயால் குழைக்கப் பெற்றவர் என்பதால், குழைவாகவே காட்சி தருகிறார்.

🍁 கடவுள் எங்கே இருக்கிறார் ? பாலில் படுநெய்யாக மறைய நின்றிருக்கிறார். பாலுக்குள்ளே, வெண்ணெயும் நெய்யும் இருந்தாலும், பாலைப் பார்க்கும் போது, இவற்றைக் காணவா முடிகிறது?! நமது அகப் பாற்கடலில் தான், ஆண்ட வனும் குடிகொண்டிருக்கிறார்.

🍁 ஆனால், அந்த அதிசயத்தை உணராமலே, ஆண்டவனை எங்கெங்கோ தேடுகிறோம் வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள், உள்ளம்  எனும் பாற்கடலைக் கடைந்து, உள்ளிருக்கும் சிவத்தை வெளிப்படுத்தி, வெண்ணெய்யாக்கி வழிபட்டனர். 'இறைவா, எங்களுக்கும் வெண்ணெய்யாக வசப்படு. திரண்டு வந்து ஆட்கொள் அப்பனே’ எனப் பணிவோம்.

🅱 தல வரலாறு:🅱

⛱ புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய சிவன், "பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்,'' என்றார்.

⛱ தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் "சிக்கல்' என்றழைக்கப்பட்டது.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது.

♻ சம்பந்தர் பெருமான் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

♻ சிக்கலுக்கு அருகிலுள்ள தேவார வைப்புத் தலம் ஆழியூர். (நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர் கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது. ஆழியூரிலிருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணங்குடி திவ்யதேசம் வைணவத் தலமும் உள்ளது.)

🅱 இருப்பிடம்:🅱

✈ திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில், நாகப்பட்டினத் துக்கு முன்னதாக (சுமார் 4 கி.மீ. முன்னதாகவே) உள்ளது சிக்கல். பேருந்து வசதிக்கு குறைவே இல்லாத திருத்தலம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment