Thursday 6 July 2017

கணையம் காக்க 10 வழிகள்



ன்சுலின் போதுமான அளவில் சுரக்கவில்லை எனில், கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும். இன்சுலின் என்ற நாளமில்லா சுரப்பையும், சில என்சைம்களையும் சுரக்கும் மிக முக்கிய வேலைகளை கணையம் செய்கிறது என்பதால், நம் உடலின் மிக முக்கிய பாகம் கணையம்.
உணவைச் செரிக்க, சில வகையான என்சைம்களை கணையம் சுரக்கிறது. இதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், கணையத்தில் சுரக்கப்படும் என்சைம்கள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதிக்கிறது. மது அருந்துவதால் அதிக அளவில் கணைய அழற்சி ஏற்படும்.  ஆல்கஹால் கணையத்துக்கு அரக்கன் என்பதை உணர வேண்டும்.
சிகரெட் புகைப்பதால் நுரையீரல் மட்டுமல்ல, கணையமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கணையத்தில் உற்பத்தியாகும் என்சைம் சிறுகுடலுக்குச் சென்றபிறகுதான், செயல்திறன் பெறும். ஆனால், புகைப் பழக்கமானது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, என்சைம்களை கணையத்தில் இருக்கும்போதே செயல்படத் தூண்டி, பாதிப்பை ஏற்படுத்தும். புகை கணையத்துக்குப் பகை.
அதிக உடல் எடை, உடல் பருமன் கணைய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யும்போது, உடல் உறுப்பு, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் சென்று சேருவது எளிதாகும். இதனால், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகச் செயல்படும்.
ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதால், கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகள், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். ரெட் மீட் எனப்படும் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட, மைதா, சர்க்கரை போன்ற அதிகம் சுத்தகரிக்கப்பட்ட, நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்தச் செயல்பாடு காரணமாக, கணையம் பாதிக்கப்படலாம். கிளைசமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன்) குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட் போலவே, புரதச்சத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்குத் தேவையான அளவு மட்டுமே புரதச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப் புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதைச் செரிப்பதற்கு, கணையம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 
பித்தப்பை கல்கூட கணையத்தைப் பாதிக்கலாம். பித்தப்பை கல் காரணமாக, கணையத்தில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கணைய நீரானது மீண்டும் கணையத்துக்கே செல்லத் தூண்டப்படும். இதனால், கணைய செல்கள் பாதிக்கப்பட்டு, கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் பிரச்னையை முன்கூட்டியே கண்டறிந்து, பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
விலங்குக் கொழுப்பு, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்த காய்கறி, முழுதானியம், தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பாலுக்குப் பதிலாக, தாவரங்களிலிருந்து பெறப்படும் பாலை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment