Saturday 1 July 2017

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர் - விழுப்புரம்




மூலவர் : வீரட்டேசுவரர்


உற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி


அம்மன்/தாயார் : பெரியநாயகி , சிவானந்த வல்லி


தல விருட்சம் : சரக்கொன்றை


தீர்த்தம் : தென்பெண்ணை


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


புராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர்


ஊர் : திருக்கோவிலூர்


பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், சம்பந்தர்



 
🅱 தேவாரப்பதிகம்:🅱

உள்ளத்தீரே போதுமின் உறுதியாவது அறிதிரேல் அள்ளற் சேற்றில் காலிட்டிங்கு அவலத்துள் அழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனில் வெள்ளத்தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே. - சம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 11வது தலம்.🌱

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 மாசிமகம் - 10 நாட்கள் - பிரம்மோற்சவம் - இந்த விழாவில் ஏராளமான அளவில் பக்தர்கள் கோயிலில் கூடுவது சிறப்பு.

🌻 கார்த்திகை - 3 ம் சோம வாரம் சங்காபிசேகம் ஆடிவெள்ளி கிழமைகள் விசேசம்.

🌻 புரட்டாசி - நவராத்திரி ஐப்பசி மாதம் - அன்னாபிசேகம், கந்த சஷ்டி உற்சவம். சூரசம்காரம் மார்கழி - மணிவாசகர் உற்சவம் திருவாதிரை உற்சவம், ஆனித்
திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை விழா நாட்கள் ஆகும்.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭 இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 இத்தலத்து விநாயகப்பெருமானை குறித்து அவ்வையார் சீதக் களபச் செந்தா மரைப்பூம் எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார்.

🎭 சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம்.

🎭 அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையனாதும் வரலாற்றுச் சிறப்பு பெற்றதுமான 2 வது வீரட்டான திருத்தலம் இது.

🎭 சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளாராம். எனவே பில்லி சூன்யம்,வைப்பு போன்ற தோசங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம்.

🎭 வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது.

🎭 சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது.

🎭 அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது.

🎭 சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது.

🎭 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது.

🎭 இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

🎭 64 நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.

🎭 முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது.

🎭 அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும், மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 222 வது தேவாரத்தலம் ஆகும்.


 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🦋 இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பெரியாணை கணபதி.

🦋 முருகப் பெருமானின் திருநாமம் சண்முகர்.

🦋 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்" என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம்.

🦋 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், திருமுறை கண்ட சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல பெருமைகளை உடையது திருக்கோவிலூர் தலம்.

🦋 திருக்கோவிலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.

🌹 பூர்வஜென்ம பாவங்கள் விலகும்.(வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலகும். பாவ தோசங்களும் விலகும்.காரியத் தடைகள் நீங்கும்.

🌹 வீடுகட்டுவதற்கான தடைகள் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும்.(வாஸ்து ஐதீகம் தோன்றியதே இத்தலத்தில்தான்).

🌹 சுக்கிரன் சாபவிமோசனம் பெற்ற தலம் ஆதலால் திருமணத்தடை விலகும்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 வஸ்திரம் சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம்.

💥 அம்பாளுக்கு புடவை சாத்துல், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.


 
🅱 தலபெருமை:🅱

🔥 சோழ நாட்டுக்கும், தொண்டை நாட்டுக்கும் நடுவிலே அமைந்த நாடு, நடுநாடு எனப்பட்டது. இந்த நடுநாட்டை மலையமான்கள் ஆண்டார்கள். மலையமான் நாடு என்றும் வழங்கப்பட்டது.

🔥 கடையேழு வள்ளல்களில் மலையமான் திருமுடிக்காரி திருக்கோவிலூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தான். முல்லைக்குத் தேரீந்த பாரி, பறம்பு நாட்டை ஆண்டு வந்தான். வள்ளல் பாரி மறைவுக்குப்பின், சங்கப் புலவர்கள் கபிலரும், ஒளவையாரும், மலையமான் மைந்தருக்கும், பாரி மகளிருக்கும் திருமணம் நடத்திவைக்க முயற்சி எடுத்துக்கொண்டு இத் தகவலை திருமுடிக்காரியிடம் கூறினர். மன்னன் ஒப்பினான்.

🔥 திருமுடிக்காரி மைந்தர்கள் தெய்வீகனுக்கும் திருக்கண்ணனுக்கும், பாரியின் மகளிர் அங்கவை, சங்கவைக்கும் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. அவர்கள் திருமணம் நிகழ்ந்த திருநகர் திருக்கோவிலூரே.

🔥 திருமணத்துக்கு மூவேந்தர்களை பாலப்பந்தல் இட்டு வரவேற்ற இடம் "திருப்பாலப்பந்தல்' என்றும் சோழர்கள் தங்கிய பகுதி "செங்கணான்கொல்லை', என்றும் சோழர்களும், பாண்டியர்களும் தங்கிய ஊர்கள் "சோழபாண்டியபுரம், வீரசோழபுரம், வீரப்பாண்டி', என்றும் திருமணம் நிகழ்ந்த பகுதி "மணம்பூண்டி' என்றும், தேவர்கள் பூமாரி பொழிந்த ஊர்கள் "தேவனூர் பூமாரி', என்றும் தான தர்மங்கள் நிகழ்ந்த ஊர் "அறம் கண்ட நல்லூர்' என்றும். திருக்கோவிலூரைச்சுற்றி இன்றும் பல ஊர்கள் இருக்கின்றன.

🔥 சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர்.

🔥 கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது.

🔥 இப்போது அக்குன்று கபிலர் குன்று என்று அழைக்கப்படுவதோடு, அக்குன்றின் மீது சிறிய அழகான கோவிலும் எழுப்பப்பட்டு மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது.



🌷 அஷ்ட புஜ விஷ்ணு துர்க்கை அம்மன்: 🌷

🔥 சன்னதியின் பிரகாரத்தில் இருக்கும் இந்த அம்மன் இங்கு சிறப்பு பெற்றவர். சாந்த சொரூபியாக நமக்கு இருப்பது போலவே கண்கள் இருபுறமும் வெள்ளையாகவும் நடுவில் கருப்பு கருவிழியுடனும் சாந்தமாக சிரித்த முகத்துடன் இயற்கையாக இருப்பது போலவே இருக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது. கஷ்டங்கள் நீங்கும்.வேலை வாய்ப்பு தடை கல்யாணத் தடை ஆகியவை விலக விசேசமாக பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

🔥 எலுமிச்சம் பழ விளக்கு பூஜை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ராகு கால பூஜை செய்கிறார்கள்.



🌷 பெரிய யானைக் கணபதி: 🌷

🔥 “சீ தக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு’ என்று அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல். தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில  வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது.

🔥 திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள்  சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு  அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பிவிட்டார்.

🔥 அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன்  குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் “சிவாயநம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை  அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப்  பறந்தது.

🔥 இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு “நீயும்  வாயேன் பாட்டி’ என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன்  தோன்றி, “நீயும் கைலாயம் போக வேண்டுமா?’ என்றார்.

🔥 “நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ’ என்றார்  அவ்வையார்.

🔥 “ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு’ என்றதும், “சீதக் களபச் செந்தா மரைப்பூம்’ என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள்  நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

🔥 கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான்  பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விவரத்தைக் கேட்டனர்.   இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.

🔥 இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.



🌷 பெயர் காரணம் :🌷

🔥 முருகப்பெருமான் அசுரனை வதம் செய்ததால் பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டுள்ளது. தோஷத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிவபூஜை செய்வதற்கு பூமியில்  எந்த தலத்தை தேர்ந்தெடுக்கலாம் என்று அம்பிகையிடம் வேண்டிய போது அம்பிகை (பார்வதி) தன்னுடைய சக்திவேலை எடுத்து வீசியுள்ளார். அந்த சக்திவேல்  இத்தலத்தில் விழுந்துள்ளது. இங்கேயே முருகப்பெருமான் தனது பிரம்மகத்தி தோஷத்தை கழித்தார்.

🔥 அம்பிகை தனது வேலை எடுத்து தன் கையால் வீசியதால்  இவ்வூர் திருக்கை வேலூர் என்றழைக்கப்பட்டது. நாளடைவில் திருக்கை வேலூர், திருக்கோவிலூர் என்று மாறியது.

🅱 கோவில் அமைப்பு:🅱

🔥 7ம் நூற்றாண்டில் பல்லவ அரசரான நந்திவர்மனால் நிர்மாணம் செய்யப்பட்ட இக்கோயில், பின்னர் 3ம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், அதற்கு பின்னால்  ராஷ்டிரகூடர்கள் 3ம் கிருஷ்ணன், சோழர்காலத்தில் முதல் பராந்தக சோழன்,  ராஜராஜசோழன்,  ராஜேந்திரசோழன், 3ம் ராஜராஜசோழன் ஆகியோரால் படிப்படியாக  கட்டப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாகவும்,   பிரதான பைரவர் தலமாகவும் விளங்கி வருகிறது.

🔥 இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கோயிலின் முன்பக்கம் தெற்குபகுதியை பார்த்தது  போல் அலங்கார நுழைவு வளைவு, அதனை தொடர்ந்து 16 கால் கொண்ட சிங்கமண்டபம் உள்ளது.

🔥 வீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன.

🔥 சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது.

🔥 இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன.

🔥 கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.

 🔥 சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம்.

🔥 வெளிப் பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள் நாயனார் சிற்பம் உள்ளது.

🔥 வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது.

🔥 வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராச சபையும் உள்ளன.

🅱 திருப்புகழ் தலம்:🅱

🔥 திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

🔥 தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது.

🔥 பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

🔥 துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார்.

🔥 மூலவர் சன்னதிக்கு பின்னால் லிங்ககோத்பவரும், வலப்புறம் பிரம்மாவும், இடப்புறம் குரு தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகின்றனர். குரு தட்சிணாமூர்த்திக்கும் நந்தி வாகனம்  இருப்பது வேறு  எங்கும் இல்லாத சிறப்பு. கோயிலில் இடதுபுறம் சைவக்குறவர்கள் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ளது.

🔥 மூலவர் சன்னதிக்கு வலப்புறத்தில்  துர்கையம்மன் சன்னதி உள்ளது. இந்த துர்க்கையம்மன் கருவிழி நேரடியாக மனித உருவில் உள்ள கருவிழியை பார்ப்பது போன்று இயற்கையான அமைப்பை  கொண்டுள்ளது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

🔥 அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.

🔥 சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

🔥 ஈசான்ய மூலையில் பைரவரும், அதனருகே நவக்கிரகமும் உள்ளது.

🔥  இந்த 63 நாயன்மார்களில் முதன்மையானவர்களான  திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. இந்த அறுபத்து மூவரில் மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையறிய நாயனார் ஆகிய இருவரும் திருக்கோவிலூரிலேயே பிறந்து அரசாண்டு முக்தியடைந்தவர்கள் ஆவர்.  இதனால் சிவானந்தவல்லி தாயார் சன்னதிக்கு அருகே மெய்பொருள் நாயனாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

🔥 ஸ்தல மூர்த்தியாகவும்,  உக்கிரமூர்த்தியாகவும் அந்தகாசூர சம்ஹாரமூர்த்தி அருள்பாலிக்கிறார்.



🅱 வரலாற்றில் திருக்கோவிலூர்: 🅱

🔥 தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழனின் தாய் வானவன்மாதேவி பிறந்த ஊராகவும், ராஜராஜ சோழன், அவரது மூத்த சகோதரர் ஆதித்ய கரிகால்சோழன்,  சகோதரி குந்தவை நாச்சியார் ஆகியோர் பிறந்த ஊராகவும் திருக்கோவிலூர் விளங்குகிறது.

🔥 மேலும் ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் காஞ்சி படையெடுப்பின் போது போரில் இறந்துவிட அவரது மனைவி வானவன்மாதேவி உடன்கட்டை ஏறினார். அவருக்கு புலியை பெற்ற பெண் மான் வானவன் மாதேவி  என்ற பெயரும் உண்டு.

🔥 சதய நட்சத்திரத்தின் போது செய்த தான தர்மங்கள் குறித்தும், ராஜராஜசோழ வம்சம் குறித்தும், சங்ககால புலவர் கபிலர் கடையேழு  வள்ளல்களில் ஒருவரான பரம்பு நாட்டை ஆட்சி செய்த பாரி மன்னன் போரில் உயிரிழந்தபோது அவரது மகள்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும்  அவ்வையார் முன்னிலையில் நடுநாட்டின் தலைநகரம் திருக்கோவிலூரை ஆட்சி செய்த மலையமான் திருமுடிக்காரியின் மகன்கள் சிறுக்கண்ணன், திருக்கண்ணன்  ஆகியோருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் நண்பரின் பிரிவு தாங்காமல் தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் உயிர் துறந்தார். இதற்கு  ஆதாரமாக இத்தலத்தில் உள்ள துர்க்கை சன்னதிக்கு அருகே கல்வெட்டு உள்ளது.

🅱 தல வரலாறு:🅱

⛱  இறைவன் சிவபெருமான் திருக்கயிலாயத்தில் வீற்றிருந்தபோது பார்வதிதேவி, சிவனின் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று கண்களை தன் மென்கரங்களால் விளையாட்டுத்தனமாக மூடினாள். அந்தநொடியே உலகெங்கும் அந்தகார இருள் சூழ்ந்தது. உயிர்கள் எல்லாம் துன்பத்தால் துவண்டன. கண்பொத்தியிருந்த தன் கரங்களை உடன் எடுத்தாள். எங்கும் ஒளிவெள்ளம் பிரகாசமாக பரவியது. உலகில் பரவிய இருள் அந்தகாரம் ஒன்று சேர்ந்த வடிவாய் அந்தகாசூரன் ஆகிறான்.

⛱ அந்தகாசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது.

⛱ சிவன் அந்தகனுடைய தலையில் அடிக்க, அவன் தலையிலிருந்து குருதி பீறிட்டு பூமியில் பாய்ந்தது. ஒவ்வொரு துளி குருதியிலும் பல அசுரர்கள் உற்பத்தியாகி போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம்கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள்.

⛱ வெளிப்பட்ட குருதிகள் எட்டு திசையிலும் விழுகிறது.குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது.அந்த பதங்களில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அந்த பதங்களில் இருக்க செய்கிறார்.

⛱ சிவபெருமான் 64 பைரவர்களை உருவாக்கி, அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.

⛱ இதுவே இந்நாள்களில் வாஸ்து சாந்தி என்ற கிரகப்பிரவேச காலங்களில் அடிக்கல் நாட்டும் போது வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தியாகும். இந்த 64 பைரவர்களே வாஸ்து பூஜை எனப்படுகிறார்கள்.இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ அந்தகாசூரனை சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது.

♻  இறைவனுக்கு "வீரட்டானேசுவரர்', "வீரட்டேசுவரர்', "அந்தகாசூர சம்கார மூர்த்தி' என்று திருப்பெயர்கள் இருக்கின்றன.

♻ சிவபெருமான் வீரச்செயல் புரிந்த தலங்கள்...,
வீரஸ்தானம்.வீரட்டனம் - வீரட்டம் என்று அழைக்கபடுகிறன.

♻ வீரட்டேசுவராரக் அருள் பாலிக்கும் திருத்தலங்கள் எட்டு. அவைகள்.

1, திருக்கண்டியூர் = பிரமன் சிரம் கொய்தது.
2. திருக்கோவிலூர்= அந்தகாரனை சம்கரித்தது.
3. திருக்கடவூர் = எமனை உதைத்தது.
4. திருவதிகை = திரிபுரத்தை அழித்தது
5. திருவழுவூர் = கஜாசூரனை சம்கரித்தது.
6. திருப்பறியலூர் = அந்தகாசூரனை சம்கரித்தது.
7. திருக்குறுகை =மன்மதனை எரித்தது.
8. திருவிற்குடி = சலந்தா சூரனை அழித்தது.

♻ திருநாவுக்கரசர், “ அடைவுத் திருத்தாண்டகத்தில் ” இந்த எண் பெரும் விரட்டத்தலங்களை பாடியுள்ளார். எட்டு விரட்டத்தலங்களில் திருகோவிலூர் வீரட்டந்தலமும் சிறப்பிடம் பெறுகிறது..

🅱 இருப்பிடம்:🅱

✈  பண்ருட்டி - வேலூர் மார்க்கத்தில் திருக்கோயிலூர் உள்ளது.

✈ விழுப்புரத்திலிருந்து திருக்கோயிலூருக்கு பேருந்து வசதி உள்ளது. கீழையூர் என்பது திருக்கோயிலூர் நகரை ஒட்டி அமைந்த பகுதியாகும் என்பதால் கோயிலுக்கு எளிதில் சென்றடையலாம்.

✈ விழுப்புரம், திருவண்ணாமலை, பண்ருட்டி மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து இத்தலம் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதிகளில் இருந்து  சுமார் 1 மணி நேரத்தில் செல்லலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment