Tuesday 29 November 2016

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம் (சிவகங்கை)


மூலவர் : புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, மின்னனையாள்

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : வைகை, மணிறகர்ணிகை

ஆகமம்/பூஜை : இங்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பூவணம்

ஊர் : திருப்புவனம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. - திருநாவுக்கரசர்


 தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:

வைகாசியில் விசாக விழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசியில் நவ ராத்திரி கொலு உற்சவம், ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், கார்த்திகையில் பெரிய தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாசியில் சிவராத்திரி, பங்குனியில் 10 நாள் உற்சவம் ஆகியவை சிறப்பானவைகளாகும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருவிளையாடல் புராணத்தில் 36 வது திருவிளையாடல் ரசவாதம் செய்த படலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 201 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

தலத்தின் வேறு பெயர்கள்: புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் இங்கு எழுந்தருளியுள்ள சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். பூவனம் என்பதால் இவ்வூர் திருப்புவனம் ஆயிற்று. வழிபடுவோர் வினைகளை தீர்ப்பவராக புஷ்பவனேஸ்வரர் விளங்குகிறார். மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றிலும் பெருமையுடையதாக இத்திருத்தலம் விளங்குகிறது.

பாண்டி தேசத்தின் 13-வது கோயில் இது. பாண்டிய மன்னன் கட்டிய இந்தக் கோயிலுக்கு திருமலை நாயக்க மன்னரும் பல திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளார். 4 யுகங்களைக் கடந்த கோயில், ரசவாதம் செய்த படலம் எனும் 36-வது திருவிளையாடல் நிகழ்ந்த தலம் ஆகிய பெருமையும் உண்டு. புஷ்பவனக் காசி என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது கூடுதல் பலனைத் தரும். இந்தத் தலத்தில் கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுமதி பெற்றுக் காரியத்தில் இறங்க அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், சூரியனார் வழிபட்ட பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்கிற பெருமையும் திருப்புவனம் தலத்துக்கு உண்டு. அதை அறிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இங்கு வந்து வழிபட்டு, பித்ருக்களை ஆராதித்து, சூரிய நமஸ்காரம் செய்து, விநாயகரை வழிபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு. பாஸ்கர விநாயகருக்கு அருகில் சூரிய தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு, பாஸ்கர விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சவுபாக்கியத்துடன் வாழலாம்.

பிரார்த்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தரிசித்து வணங்கிட, நம் வாழ்வு வளமாகும்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

புஷ்பமாக மாறிய அஸ்தி : புராண காலத்தில் தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று ஓய்வு எடுக்கும் போது அவனுடன் வந்தவர் கலசத்தை திறந்து பார்க்க புஷ்பமாக இருந்ததாம். தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. ஓய்வு முடிந்து ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது அஸ்தியாகவே இருந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற உடன் வந்தவன், திருப்பூவனத்தில் தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, மறுபடியும் அஸ்தி கலசத்துடன் அங்கிருந்து திருப்பூவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் அஸ்தி புஷ்பமாக மாறி இருந்ததாம்.

காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை "காசிக்கும் வீசம் அதிகம்' எனும் சமயபெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.

வழி விட்ட நந்தி: திருஞான சம்பந்தர் திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்றுமணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சியளித்தனவாம். அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர் வைகையாற்றின் மறுகரை மீதிருந்தபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது. உடனே சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் கேட்டு கொண்டாராம். அதன்படி நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும்.

ஐந்து நிலை கோபுரத்துடன் சுவாமி சன்னதி நுழைவு வாயில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதியில் சுயம்புலிங்கமாய் ருத்ராட்ச மேனியாய் சிவபெருமான் காட்சியளிக்கிறார். இங்குள்ள சுயம்புலிங்கத்தில் திரிசூல முத்திரையும் உள்ளது. சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்மன் காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளன. இதில் மணி கர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தீர்த்தத்திலே ஸ்நானம் செய்தபடியால் அகஸ்திய முனிவர் கடல் நீரை பருகும் சக்தி பெற்றதாகவும், நளன், பிரம்மா, விஷ்ணு, கவுதம் மகமுனி, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தல வரலாறு:

சித்தராக வந்த சிவன் : திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்க தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது. இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார். பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னை கொண்டு பூவனநாதரை உருவாக்கினாள். அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment