Saturday, 5 November 2016

திருமுறைகளும் திருத்தொண்டும் (சில நுட்பங்கள்):

sekkizhar

பெரிய புராணத்தில் 'கணநாத நாயனார்' பகுதியில் திருத்தொண்டின் சில முக்கிய வகைகளைச் சேக்கிழார் பெருமான் கோடிட்டுக் காட்டுகிறார். இனி பின்வரும் அற்புதப் பாடலைக் காண்போம்.

நல்ல நந்தனவனப் பணி
  செய்பவர் நறுந்துணர் மலர் கொய்வோர்
பல் மலர்த் தொடை புனைபவர்
 கொணர் திருமஞ்சனப் பணிக்குள்ளோர்
அல்லும் நண்பகலும் திரு
 அலகிட்டுத் திருமெழுக்கு அமைப்போர்கள்
எல்லையில் விளக்கெரிப்பவர்
 திருமுறை எழுதுவோர் வாசிப்போர்.

(திருநந்தவனம் அமைத்தல், முறைப்படி மலர்களைக் கொய்தல், (இறைவனுக்கு சூட்டும் பொருட்டு) வகை வகையாக அவற்றைத் தொடுத்தல் , இறைவனின் திருமஞ்சனத்துக்கு உரிய சாதனங்களை அமைத்துக் கொடுத்தல், திருக்கோயிலில் அலகிடுதல், மெழுகுதல், திருவிளக்கிடுதல், திருமுறைப் பாடல்களை 'எழுதுதல்; பாராயணம் புரிதல்').

Gananatha Nayanar



மிக நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டிய பாடல் இது. திருத்தொண்டின் வரிசையில் சேக்கிழார் திருமுறைப் பாடல்களைப் பாராயணம் புரிதலையும் குறித்துள்ளார். எனில் திருமுறைப் பாராயணத்தை இறைவன் திருத்தொண்டாக ஏற்றருள்கிறான் என்பது ஐயம் திரிபற நிரூபனம் ஆகிறது.

சைவ மரபில் பன்னிரு திருமுறைகள்; திருப்புகழ் இவை திருமுறைகளில் அடங்கும். திருமுறைகளின் ஒவ்வொரு பாடலும் (சொல்லும்) மந்திர ஆற்றல் பொருந்தியவை.

lord shiva


திருமுறைகளைப் பதிகங்களை முயன்று மனனம் செய்து பழக வேண்டிய தேவை இல்லை. மாறாக அனுதினமும் அவற்றைப் பாராயணம் புரிந்து வந்தால் (சில மாதங்களில்) இயல்பாகவே பாடல் வரிகள் மனதில் வேரூன்றி விடும்.

திருமுறைப் பதிகங்களை இசையோடு பாட வேண்டும் என்ற நிபந்தனையில்லை. 'திருமுறை வாசிப்போர்' என்று சேக்கிழார் குறித்துள்ளமையால் இது தெளிவு. எனினும் பாடல்களில் உள்ள பதங்களை முறையாகப் பிரித்துப் பாராயணம் புரிதல் அவசியம். சம்பந்தரும் திருவைகாவூர் பதிகத்தில் 'இசைப் பயிற்சியற்றோரும் திருமுறைகளால் பயன் பெறலாம்' என்று குறிக்கிறார்.

'கவி கோளும் இலவாக இசை கூடும்வகையால் ஏழையடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன்'
Gananatha Nayanar 

அருளாளர்கள் எந்த பாவனையில் திருமுறைகளைப் பாடியுள்ளனரோ அதே பாவனையை மனதில் கொண்டு பாராயணம் புரிதல் கூடுதல் சிறப்பு. திருமுறைகள் 'அணைத்து தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டு மறைந்து உறையும் பரம்பொருளையும்' நம்மையும் இணைக்கும் சக்தி வாய்ந்த பாலம் (a powerful medium).

ஆன்ம பயணத்தில் எந்த ஒரு நன்முறையையுமே பயன்பாட்டில் கொண்டு வருவதன் மூலமே பரிபக்குவம் பெற இயலும். அறிவது முதல் படி. நடைமுறைபடுத்திப் பயன் பெறுவதே இறுதி நோக்கம். எளிய பதிகங்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அனுதினமும் பாராயணம் புரியத் துவங்குவோம். நலமெலாம் பெறுவோம்.

No comments:

Post a Comment