Monday 28 November 2016

கங்கை கரையில் - 7

சார்தாம் யாத்திரை - பத்ரிநாத் 

Image result for badrinath god


சிறப்பு வாய்ந்த பத்ரிநாதரை தரிசிக்கலாம் வாங்க...


பத்ரிநாதரை தரிசிக்க முதலில் தப்த் குண்டத்தில் குளிக்க வேண்டும். அக்னி தேவன் தவம் செய்து பத்ரி நாதரை தரிசனம் செய்த போது உண்டாக்கிய குளமே தப்த் குண்டம் ஆகும். இது ஒரு வெந்நீர் குளம், கருட ஷிலாவிலிருந்து உற்பத்தி ஆகி ஓடி வருகின்றது. இது ஒரு குளத்தை அடைகின்றது. அடுத்து நாரத குண்டம், இது நாரத ஷிலாவில் இருந்து உற்பத்தியாகி வரும் வெந்நீர் ஊற்று. இந்த நாரத குளத்தில் இருந்து தான் பத்ரிநாதரை மீட்டு ஆதி சங்கரர் புனர் பிரதிஷ்டை செய்தார். இந்த குளங்களில் நீராட வேண்டும்.


Related image

தப்த குண்டத்தை சுற்றிலும் ஐந்து பாறைகள் அமைந்துள்ளன அவையாவன நாரத ஷிலா, கருட ஷிலா, மார்க்கண்ட ஷிலா, நரசிங்க ஷிலா, மற்றும் வராஹ சிலாக்கள் உள்ளன.


Image result for badrinath god

நாரத ஷிலா நாரதர் தவம் செய்த பாறை ஆதியில் கலிகால ஆரம்பத்தில் நாரதர் பத்ரிநாதரை இவர் பிரதிஷ்டை செய்தார். இப்போதும் பனிக்காலத்தில் கோயில் மூடப்பட்டிருக்கும் போது நாரதர் பத்ரிநாதருக்கு நித்ய பூஜை செய்வதாக ஐதீகம்.


Image result for badrinath temple nardha sheela

கருடன் தவமிருந்த பாறை கருட ஷிலா. தவத்தின் பயனாக பெரும் பலசாலியாகும் வரமும், மேலும் இத்தலத்தில் எப்போதும் பெருமாளுடன் சேவை சாதிக்கும் பாக்கியமும் பெற்றார் என்பது புராணம்..

Related image


மேலும் பிரஹலாதா தாரா, கூர்ம தாரா, ஊர்வசி தாரா, பிருகு தாரா, மற்றும் இந்திர தாரா என்னும் ஐந்து நீர் வீழ்ச்சிகளும் இங்குயுள்ளன.

தப்த் குண்டத்தில் நீராடிய பின்னர் முதலில் ஆதி கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு பத்ரிநாதரை தரிசிக்க செல்ல வேண்டும். முதலில் நமக்கு காட்சி தருவது அற்புதமான சிம்ம துவாரம் இது போன்ற ஒரு அற்புதமான அமைப்பை வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.


கிழக்கு நோக்கிய கோவில் பத்து தூண்கள் உள்ளன அவை விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிக்கின்றன, சிம்மங்கள் , கஜங்கள் தாங்க பல வித மரவேலைப்படுகளுடன் பல வர்ணத்தில் மூன்று சுவர்ண கலசங்களுடன் எழிலாக விளங்குகின்றது சிம்ம துவாரம். சிம்ம துவாரத்தின் நுழையும் போது கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும்.


Related image

ஒரு பிரகாரம் பிரகாரத்தில், செந்தூரம் பூசப்பெற்ற விநாயகர், பிரம்மா, விஷ்ணு, கருடன், சூரிய நாராயணர், ஹனுமன் சிற்பங்கள் அற்புதமாக உட்புற சுவரில் அமைந்துள்ளன.

பிரகாரத்தில் வடக்கு நோக்கி மஹாலக்ஷ்மி தாயாருக்கு தனி சன்னதி, தாயாரின் பெயர் அரவிந்தவல்லி. அம்மன் சன்னதி கோபுரமும் பொன் வேய்ந்த கோபுரம். தீபாவளி பெரிய பிராட்டிக்கு விசேஷம். அம்பாளுக்கு சேலை சார்த்துவது மிகவும் நல்ல பிரார்த்தனை. இங்குள்ள அன்பர்கள் மங்கல பொருட்களான, குங்குமம், மஞ்சள், கண்மை, வளையல் படைத்து தாயாரை வழிபடுகின்றனர்.

அடுத்த சன்னதி பத்ரிநாதர் உற்சவர் சன்னதி. இவர் வெள்ளி மூர்த்தம், நின்ற கோலத்தில் சதுர்புஜனாய் , சங்கு சக்ரதாரியாய் சேவை சாதிக்கின்றார்.பனி காலத்தில் ஜோஷிர்மட் என்ற இடத்திற்கு செல்பவர் இவர்தான். அப்போது தாயார் உள் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். எதிரே பெருமாளின் தங்க கோபுர கலசத்தைக் காணலாம். கர்ப்பகிரக சுவரில் தர்மசீலா, காமதேனு உள்ளன, இவற்றை வணங்கிச் செல்கின்றனர் அன்பர்கள்..

சன்னதிக்கு பின்புறம் நரநாராயணர் சன்னதி, கையில் சக்கரத்துடன் நாராயணரும், வில்லேந்திய கோலத்தில் நரனும்( கிருஷ்ண – அர்ச்சுனரராக ) சேவை சாதிக்கின்றனர். தெற்கு நோக்கி ஷேத்ரபாலரான கண்டாகர்ணன் மற்றும் ஹனுமன் சன்னதி உள்ளது. கண்டாகர்ணன் இங்குள்ள கிராமமான மானாவின் கிராம தேவதை, இவரை வணங்கிய பிறகே பத்ரிநாத் யாத்திரை நிறைவடைகின்றது என்பது ஐதீகம்.

Related image


பின்னர் தான் பத்ரி நாதர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.. மூன்று பகுதிகளாக உள்ளது சன்னதி. மூலஸ்தானம் பொன் வேயப்பட்ட கோபுரத்தின் கீழே சேவை சாதிக்கின்றார் பத்ரிநாதர். வெள்ளி மஞ்சத்தில் உடன் குபேரன், அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் பெருமாளின் வாகனமும் கொடியுமான கருடன், உத்தவர், நாரதர், நரநாரயணர்களுடன் பஞ்சாயாதன் முறையில் சேவை சாதிக்கின்றார் பத்ரிநாதர், அகண்ட தீபம் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கின்றது . அடுத்த பகுதி தரிசன மண்டபம் இங்குதான் பூஜைகளும் மற்ற சடங்குகளும் நடைபெறும். அடுத்து சபா மண்டபம், கருங்கல்லால் ஆன தூண்கள், தூண்களில் அற்புதமான சிற்பங்கள் , மேலே தசாவதாரக் கோலங்கள், கர்ப்ப கிரகத்தின் முகப்பில் கஜலக்ஷ்மி, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டுள்ளது . உள் துவார பாலகர்கள் தென்னக அமைப்பில் உள்ளனர். மேலே “ஓம் நமோ பகவதே வாசுதேவாய:” என்னும் மந்திரம் .



Image result for badrinath temple in snow


சாளக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நிஜ ரூபத்தை காலை அபிஷேகத்தின் போது மட்டுமே சேவிக்கலாம். பின்னர் அலங்காரம் ஆகிவிட்டால் முக தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது. ஆராவமுது பத்ரி நாதரின் அலங்காரம், தலைக்கு மேலே தங்க குடை தலையிலே தங்க கிரீடம், கிரீடத்தில் வைர மணிகள் மின்னுகின்றன, இரு புறமும் மயில்பீலி, திருமுகத்தில் சந்தன திலகத்தில் வைர திருமண், வெள்ளிக்கவசம், திருமார்பில் இரத்தின பதக்கங்கள், கௌஸ்துபம், வனமாலை மின்ன சங்கு சக்ரதாரியாய் எழிலாக அழகிய மலர் மாலைகள். துளசி மாலைகள், வாடாத இந்த பத்ரி ஷேத்திரத்தின் மலர் மாலைகளுடன் சேவை சாதிக்கின்றார் முக்தியளிக்கும் பத்ரிநாதர், பெருமாளை ஆழ்வார்களின் பாசுரம் பாடி சேவிக்கலாம்..

Image result for badrinath god

எய்த்தசொல்லோடுஈளையேங்கி இருமியிளைத்து உடலம் பித்தர் போல சித்தம் வேறாய்ப் பேசிஅயராமுன்

அத்தன்எந்தைஆதிமூர்தி ஆழ்கடலைக்கடைந்த மைத்தசோதிஎம்பெருமான் வதரிவணங்குதுமே.



Image result for badrinath god

(வயதானபின் சென்று தரிசித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் இளமையிலேயே, உடல் நலம் நன்றாக உள்ள நிலையில் பெருமாளை தரிசனம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றார் திருமங்கைமன்னன்)

பிரம்ம கபாலம் சென்று ஒரு மிகவும் முக்கியமான கடமையை செய்ய வேண்டும். என்வென்று அடுத்த பதிவில் பார்க்கலாம்..



Image result for badrinath temple in snow

திருச்சிற்றம்பலம்


கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்..

No comments:

Post a Comment