Thursday 24 November 2016

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் (கடலூர்)



மூலவர் :
பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்துநாதர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)

தல விருட்சம் : செண்பகம்

தீர்த்தம் : கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பெண்ணாகடம், திருத்தூங்கானை மாடம்
ஊர் : பெண்ணாடம்

பாடியவர்கள்:திருநாவுக்கரசர்



தேவாரப்பதிகம்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற்கு இச்சை யுண்டேல் இருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே. - திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 2வது தலம்.


திருவிழா:

சித்திரையில் 12 நாள் பிரம்மோற்ஸவம்.

தல சிறப்பு: 


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான். கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 213 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:


கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை :

கை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் இத்தல சிவனை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

தலபெருமை:

பிரளயகாலேஸ்வரர்: ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது.

இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார்.

ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார்.

திருநாவுக்கரசர்: இவர் சிவனிடம் தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் தன் கைப்பட அவருக்கு முத்திரையை பொறித்தார்.

மலைக்கோயில்: சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதி கோயிலுக்குள் உள்ளது.

தல வரலாறு:

ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்ப, பூக்களை பறித்து வரச் சொன்னான்.

பூமிக்கு வந்த கன்னியர்கள் ஒரு நந்தவனத்தில் பூக்கள் இருப்பதைக் கண்டு அதை பறிக்கச் செல்கிறார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டதும் பக்தியால் ஈர்க்கப்பட்டு, பறித்த பூக்களை அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர். கன்னியரைக் காணாத இந்திரன் அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினார். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக்கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது. மீண்டும், தன் ஐராவத வெள்ளையானையை அனுப்பினான் இந்திரன்.

யானை, பூமியில் இவர்கள் செய்யும் பூஜையை பார்த்து விட்டு தானும் தன் பங்கிற்கு, திறந்தவெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று, வெயில் படாமல் பார்த்து கொண்டது. பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு வந்துவிட்டான்.

தன்னால் அனுப்பபட்டவர்கள் அனைவரும் சிவபூஜை செய்வதை பார்த்து, அவனும் பூஜை செய்ய ஆரம்பித்து விட்டான். சிவனருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.

சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது.

No comments:

Post a Comment