Thursday 7 December 2017

தோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்!

அருள்மிகு வைத்தியநாத சுவாமி - சுந்தராம்பிகை திருக்கோயில்


ம்பிரான் தோழர் என்ற சிறப்பினைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார், தலங்கள்தோறும் சென்று தேனினும் இனிய தேவாரப் பாடல்களால் இறைவனின் புகழைப் பாடி வழிபட்டார். அப்படி திருவாரூரிலிருந்து நன்னிலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம் போன்ற தலங்களை தரிசித்தபடி வந்துகொண்டிருந்தார். திருவாலம்பொழில் தலத்து இறைவனை வழிபட்டுவிட்டு, அன்றிரவு அங்கேயே உறங்கிக்கொண்டிருந்தார்.

சுந்தரரின் தேனினும் இனிய பாடல்களைக் கேட்க விரும்பிய திருமழபாடி இறைவன், சுந்தரருடைய கனவில் தோன்றி, ‘மழபாடி மறந்தனையோ?’ என்று கேட்டார். விடிந்ததும் எழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து வடகரையில் இருந்த திருமழபாடி வைத்தியநாத சுவாமியை தரிசித்து, ‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து ' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அந்தப் பதிகத்தில் இறைவனை, ‘மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே’ என்றெல்லாம் உருகி உருகி பாடியிருக்கிறார். சுந்தரர் மட்டுமல்லாமல், ‘மழபாடி மன்னும் மணாளன்’, ‘மழபாடி வைரத்தூணே’ என்று அப்பர் சுவாமிகளும், ‘மழபாடியைத் தலையினால் வணங்கத் தவமாகுமே’ என்று திருஞானசம்பந்தரும் பாடிப் போற்றிய தலம் திருமழபாடி திருத்தலம்.
முற்காலத்தில் காவிரியின் வடகரை மழபாடி நாடு என்று அழைக்கப்பட்டது. கொல்லிமழவன் என்னும் அரசர் இந்தப் பகுதியை ஆட்சி செய்துள்ளார். இந்தப் பகுதியில் ‘தால மரம்’ என்று சொல்லப்படும் பனை மரங்கள் அதிகமிருந்ததால், தாலவனம் என்று அழைக்கப்பட்டது.  அதன் காரணமாகவே மழபாடி கோயிலின் தல விருட்சமாகப் பனை மரம் திகழ்கிறது.
திருமழபாடி திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின் தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார். ‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான். திருமழபாடி தலத்தில் சுவாமி வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் கொண்டு அருள்கிறார். சந்திரனின் சருமநோயைப் போக்கிய காரணத்தினால், இறைவன் வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் கொண்ட தாகத் தலவரலாறு கூறுகிறது. அம்பிகையின் திருப்பெயர் சுந்தராம்பிகை. மேலும், புருஷாமிருகர், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றனர். சுவாமிக்கு வெள்ளை நிற வேஷ்டியும் சம்பங்கி மாலையும், சுந்தராம்பிகைக்கு மாம்பழ நிறத்து பட்டுப் புடவையும் சிவப்பு ரோஜா மாலையும் சாத்தி வழிபடுவதால், நாம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்தத் தலத்தில் பாலாம்பிகையும் தனிச் சந்நிதி கொண்டிருக் கிறாள். இந்தத் தலத்தில் திருமணக்கோலத்தில் இருந்த இறைவனை தரிசிக்க வந்த அம்பிகை, சுவாமியின் அழகில் லயித்தவராக இந்தத் தலத்திலேயே தங்கிவிட்டார்.
கிழக்கு நோக்கிய சந்நிதிகளில் ஐயன் வைத்தியநாதரும் அன்னை சுந்தராம்பிகையும் திருக்காட்சி தர, பாலாம்பிகை தெற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறாள்.
மேலும் இந்தக் கோயிலில் காத்தியாயினி அம்மனும் மயில் வாகனத்தில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க விசேஷம். இந்தக் கோயிலில் விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருகிறார். முற்காலத்தில் உத்தரவாகினியாகப் பாய்ந்த ஆற்றை தெற்கு நோக்கி, தெற்குப் பக்கமாகத் திருப்பியதாகவும் அதன் காரணமாகவே விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தலத்தில் நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு நந்தி தேவர்கள் திருக்காட்சி தருகிறார்கள். இந்தக் கோயிலைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் நான்கு ஐயனார் கோயில்கள் அமைந்திருந்ததாகச் சொல்லப் படுகிறது. தற்போது மேற்கில் ஆகாச ஐயனாரும் கிழக்கில் மணிகட்டி ஐயனாரும் வழிபாட்டில் உள்ளனர்.
இந்தக் கோயிலில் மூன்று குழிகளே நவகிரகங்களாக வழிபடப்படுகின்றன. இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர். சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இங்குள்ள, ஒரே கல்லினால் ஆன சோமாஸ்கந்த மூர்த்தமும், ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியும் சிற்பச் சிறப்பினை விளக்குவதாகத் திகழ்கின்றன. வேறொரு சிறப்பும் உண்டு இந்தக் கோயிலில். ஆம்! இந்தக் கோயிலில் சந்நிதிகொண்டிருக்கும் ஜுரஹரருக்கு புழுங்கலரிசி சாதமும் மிளகு ரசமும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தீராத காய்ச்சலும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சருமநோய்களைப் போக்கும் சுந்தராம்பிகை

சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சருமநோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த அம்பிகை. நாள்பட்ட சருமநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈரப்புடவையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

கார்த்திகை சோம வாரச் சிறப்பு

கார்த்திகை மாதம் வரும் சோம வாரங்களில் 11 வகையான சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. திருக்கார்த்திகையன்று, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பிறகு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், சுடலை (சொக்கப்பனை) கொளுத்துவதும் நடைபெறும். சொக்கப்பனையில் கொளுத்தப்பட்ட பனை மட்டை மற்றும் மரத் துண்டுகளை வயல்வெளிகளில் நட்டு வைத்தால் விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை இருப்பதால், சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், பனை மட்டை, மரத்துண்டுகளை எடுத்து வயல்வெளிகளில் நட்டு வைக்கிறார்கள்.

எப்படிச் செல்வது?

அரியலூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது திருமானூர். திருமானூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருமழபாடி. கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதி உண்டு.

நடை திறப்பு நேரம்:


காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

தொடர்புக்கு:

கணேச குருக்கள் (ஆலய அர்ச்சகர்) 85259 38216, 98433 60716

No comments:

Post a Comment