Thursday 7 December 2017

உயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்?


யர் ரத்த அழுத்தம், உலகை ஆட்கொள்ளத் துடிக்கும் உயிர்க்கொல்லி நோயாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மாரடைப்பு, பக்கவாதம், பார்வை பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கும் உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகளே இல்லாமல், உயிரைப் பறிக்கக்கூடிய கொடியநோய். அதனால்தான், இதை ‘மெல்லக் கொல்லும் நோய்’ (Silent Killer) என்கிறார்கள்.

உடல் முழுவதும் ரத்தம் சீராக ஓடுவதற்கு, ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்க வேண்டும். இந்த ரத்த அழுத்தம்தான் உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் உந்துசக்தி. இந்த அழுத்தமானது, வயது, எடை, உயரம் ஆகியவற்றைப் பொறுத்துச் சிறிது மாறுபடலாம். சீரான ரத்த அழுத்தத்தை, 120/80 மி.மீ. மெர்குரி என்று அளவிடுகிறார்கள். அதாவது, இதயம் ஒருமுறை சுருங்கி ரத்தத்தை மகா தமனியில் செலுத்தும்போது, ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்துக்கு ‘சிஸ்டாலிக் ரத்த அழுத்தம்’ (Systolic blood pressure) என்று பெயர். இந்த ரத்த அழுத்தம், சராசரியாக 120 மி.மீ மெர்குரி என்ற அளவில் இருக்க வேண்டும். ரத்த நாளங்கள் இயல்பாக இருக்கும் நிலையில் உள்ள அழுத்தத்துக்கு ‘டயஸ்டாலிக் ரத்த அழுத்தம்’ (Diastolic blood pressure) என்று பெயர். இந்த ரத்த அழுத்தம் சராசரியாக 80 மி.மீ மெர்குரி என்ற அளவில் இருக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம்

120/80 மி.மீ. மெர்குரி என்ற சீரான ரத்த அழுத்த அளவு, 140/90 மி.மீ.மெர்குரி என்ற அளவுக்குமேல் செல்லும் நிலையே ‘உயர் ரத்த அழுத்தம்’ அல்லது ‘ஹைப்பர் டென்ஷன்’ என்று உலகச் சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப் பட்டிருக்கிறது. இந்த அளவீட்டின் படியே, மருத்துவர்கள், ரத்த அழுத்த நோயாளிகளை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். 

இந்தச் சூழலில், அமெரிக்க இதய மருத்துவச் சங்கம் (American Heart Association) அந்நாட்டு கார்டியாலஜி ஆராய்ச்சி மையத்தோடு இணைந்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் 130/80 மி.மீ மெர்குரி அளவு அழுத்தம் கொண்டவர்களுக்கும் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 140/90 மி.மீ மெர்குரி என்ற உயர் ரத்த அழுத்தத்துக்கான அளவு வரையறையை 130/80 மி.மீ மெர்குரி என்று மாற்றியமைக்கப் பரிந்துரை த்துள்ளது அந்த அமைப்பு. 

இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் 32 சதவிகிதமாக இருந்த உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை 46 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. சுமார் 42 லட்சம் பேர் புதிதாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. தற்போது அமெரிக்காவில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை விரைவில் இந்தியாவுக்கும் வரும் என்கிறார்கள், இதய மருத்துவ வல்லுநர்கள்.
இதயநோய் சிறப்பு மருத்துவர் சொக்கலிங்கத்திடம் இது பற்றிப் பேசினோம்.

“உயர் ரத்த அழுத்தத்துக்கு முக்கியக் காரணங்களாக இருப்பவை உணவுப்பழக்கங்களும் வாழ்க்கைமுறை மாற்றங்களும்தாம். நாம், நம் மரபு வாழ்க்கைமுறையையும் பாரம்பர்ய உணவுகளையும் மெள்ள மெள்ள கைவிட்டு வருகிறோம். அதனால் உயர் ரத்த அழுத்தமானது இளவயதுக்காரர்களையும் விடாமல் துரத்துகிறது. எனவே, இந்த அறிக்கை ஓர் எச்சரிக்கை மணி. உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புஉணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

பொதுவாகவே, ரத்த அழுத்தமானது 130/80 என்ற அளவைத் தொட்டாலே, அவர்களை எச்சரிக்கையுடன் இருக்க நாங்கள் அறிவுறுத்துவோம். அதற்காக, அவர்கள் ரத்த அழுத்த நோயாளிகள் என அர்த்தமல்ல. அதேபோல, அவர்கள் மாத்திரை எடுத்துக்கொண்டே ஆக வேண்டும் என்பதுமில்லை. இருந்தாலும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி உணவுப்பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.
இன்றைய தலைமுறையினரிடம் எதிர்மறை எண்ணம், மனஅழுத்தம், பணிச்சூழல் காரணமாக அவ்வப்போது தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதுவே நாளைடைவில் நிரந்தமான உயர் ரத்த அழுத்தமாக மாறவும் வாய்ப்புள்ளது. 

உயர் ரத்த அழுத்தம் என்பது, தவிர்க்கக்கூடிய பிரச்னை. ஒருவேளை, வந்துவிட்டால் கட்டுப்படுத்தவும் முடியும். விழிப்புஉணர்வோடு இருப்போம்.”

No comments:

Post a Comment