Thursday 7 December 2017

வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்!

ம்மை அம்மை என இரண்டும் இவை 
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர் 
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை 
வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே


- திருநாவுக்கரசர்


இந்தப் பிறவியிலும் முற்பிறவியிலும் நாம் செய்த வினைகள் யாவற்றையும் தீர்த்து, நமக்கு நற்கதி அளிக்கும் நாயகன், எத்தனை எத்தனை ரூபங்களில், பெயர்களில், கோயில்களில் குடிகொண்டிருக்கிறார். தேடத் தேடத் தீராத ஆன்மிக ஆனந்தம் அது.  
நம்முடைய அந்தத் தேடலின் அடுத்த ஆலயம், காவிரியின் தென்கரையில் இருக்கும் அன்னியூர். திருவன்னியூர் என ஒரு காலத்தில் அழைக்கப்பெற்று, பின்னர் மருவி ‘அன்னியூர்’ என ஆகியுள்ளது.

திருஅன்னியூர் என்ற பெயரில் காவிரியின் வடகரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. பலர் இந்த இரண்டு தலங்களின் பெயர்களையும் கேட்டு, குழப்பம் அடையலாம். அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் தலமான அன்னியூர், திருவீழிமிழலைக்கு அருகே உள்ளது. இந்த இரண்டு ஊர்களுக்கும் மிக முக்கியமான சம்பந்தம் ஒன்றும் உள்ளது. அதைப் பிறகு பார்ப்போம்.

மிக மிகச் சிறிய கிராமம் அன்னியூர். கோயிலும் மிகச் சிறியதுதான். இரண்டு நிலைகள் கொண்ட ராஜகோபுரம், ஒரே ஒரு பிராகாரம். ஒரே மகா மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர்... அம்பாள் ஸ்ரீ கௌரி பார்வதி. கோயிலுக்கு அருகேயே இருக்கும் அர்ச்சகர் கணேச குருக்கள், மூன்று தலைமுறைகளாக அக்னிபுரீஸ்வரருக்குப் பூஜை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறிய ஊராக இருந்தாலும், இங்கே குடிகொண்டிருக்கும் சுவாமியின் சக்தியையும் அருளையும் அறிந்த மக்கள், பிரார்த்தனைக்காக வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். 

சும்மாவா பின்னே... இன்றைக்குப் பெரும்பாலான மக்களைப் பாடாய்ப்படுத்தும் ரத்தக்கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) நோயைத் தீர்த்து வைக்கும் தலமல்லவா! தலத்தின் பெருமையையும் புராணத்தையும் எடுத்துச் சொல்கிறார் கணேச குருக்கள்.

திருக்கதைகள்...

‘‘எல்லாக் கோயில்களுக்கும் ஒரு தல வரலாறு இருக்கும். எங்க கோயிலுக்கு இரண்டு தல வரலாறுகள் உள்ளன’’ என்று ஆரம்பித்தார் குருக்கள். ஆர்வமுடன் செவிமடுத்தோம்.

‘‘புராண காலத்தில் தட்சன் என்ற அரசன், சிவபெருமானைப் புறக்கணித்துவிட்டு பெரிய யாகம் நடத்தினான். அந்த மாபெரும் யாகத்தில், அவன் கொடுத்த அவிர்பாகங்களை அந்தந்தத் தேவதைகளுக்குக் கொண்டு போய்க் கொடுக்கும் பணியைச் செய்தார் அக்னி பகவான். இதனால் சினம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்து, அக்னி தேவனின் கைகளையும் நாக்கினையும் துண்டித்தார். ‘இப்படிப்பட்ட சிவப்பழி யையும் சிவ அபராதத்தையும் சுமந்தோமே!’ என்று மனம் நொந்த அக்னி தேவன், அந்தப் பழி நீங்கி, பழைய உருவம் பெறவும், தன் தவற்றை மன்னிக்கும்படியும் மனம் உருகி வேண்டினார். அதேநேரம், அக்னி தேவன் செயல்படாத நிலையில் இருந்தபடியால், யாகங்கள் நடத்த முடியாமல் தேவர் களும் முனிவர்களும் அந்தணர்களும் தவித்தனர். அக்னி பகவானுக்கு ஏற்பட்ட சிவ அபராதத்தால், மழை வளம் இன்றி கருகியது பூலோகம். அனைவரின் துயரமும் நீங்க சிவனைத் தியானித்தார் அக்னி பகவான். 

அப்போது அவருக்குக் காட்சி தந்த இறைவன், ‘‘வன்னியூர் என்ற தலத்தில், சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, என்னை வணங்கிட, இழந்த கைகளும் நாவும் மீண்டும் கிடைக்கும்’’ என்று அருளாசி தந்தார்.

சிவபெருமான் கூறியபடி வன்னியூர் (வன்னி என்றால் அக்னி) வந்த அக்னி தேவன், இங்கிருந்த வன்னி மரக்காட்டில், சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதன் எதிரே அக்னி தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி இறைவனை வழிபட்ட போது, இழந்த கைகளும் நாக்கும் அக்னி தேவனுக்கு மீண்டும் கிடைத்தன. 

உலகுக்கே வெப்பத்தை வழங்கும் அக்னி தேவனுக்கே, இழந்த சக்தியை மீண்டும் கொடுத்த தலம் என்பதால், இங்கிருக்கும் இறைவன்,  அக்னிபுரீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். உடலில் உஷ்ணம் அதிகமாகும்போது  ஏற்படும் வெப்ப நோய்கள் மற்றும் ரத்தக்கொதிப்பு நோய் தீர இங்கு வந்து வழிபட்டால், அந்நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை'' என்ற கணேச குருக்களிடம் மற்றொரு தல புராணத்தையும் கேட்டோம். 
‘‘முற்காலத்தில், காத்யாயன முனிவரின் மகளாக, பார்வதி என்ற திருநாமத்தோடு பிறந்த உமையவள், எம்பெருமானைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தவமிருந்த தலமும் இதுதான். அதனால் இது ‘பெண் வீடு’ ஆகும். அவருக்குக் காட்சி கொடுத்த இறைவன், இறைவியை திருவீழிமிழலை தலத்தில் மணந்து கொண்டார். மணமுடித்த மாப்பிள்ளை சுவாமி, இங்கிருந்து       3 கி .மீ தூரத்தில் உள்ள திருவீழிமிழலை யில் இருக்கிறார். அவருக்குப் பெண் கொடுத்த தலம் என்பதாலும், இந்த அன்னியூர் முக்கியத்துவம் பெறுகிறது.  எனவே, திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்துவிட்டு, திருவீழிமிழலையிலும் தெய்வத் தம்பதியை வணங்கிப் பிரார்த்திக்க, தடை நீங்கி, விரைவில் திருமணம் நிகழும் என்பது கர்ண பரம்பரை ஐதீகம்’’ என்று மற்றொரு புராணத்தையும் கூறி முடித்தார். 

பிரார்த்தனை முறை

அக்னி தீர்த்தத்தில் இப்போது தண்ணீர் இன்றி வறண்டிருப்பதால், அதில் நீராட முடியாது. எனவே, உஷ்ணரோகத்தால் அவதிப்படும் அன்பர்கள்,  ஸ்ரீ அக்னிபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தைச் சேகரித்து வைத்துக்கொண்டு, சிறிது விபூதியோடு தினமும் காலையில் 11 நாள்கள் அருந்திவர, அக்னிபுரீஸ்வரர் அருளால், பூரண ஆரோக்கியம் பெறுவர் என்பது நம்பிக்கை. ரத்தக்கொதிப்பு மற்றும் உஷ்ண உபாதைகள் உள்ளவர்கள், சுவாமிக்கு அபிஷேகம் செய்தபின், தயிர்சாதம் நைவேத்தியமும், திருமணத் தடை மற்றும் பிற தடைகள் விலகவேண்டும் என்று விரும்புவோர், ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, கோதுமையால் செய்த சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும் என்பது இங்குள்ள வழக்கம். 

ஸ்தல விருட்ச மகிமை!


அக்னி பகவானுக்குச் சாபம் நீங்கிய தலம். அக்னிக்கு மேல் நோக்கிச் செல்லக்கூடிய ஆற்றலைக் கொடுத்த தலம். பிரம்மா, அகத்தியர், சனத்குமாரர், சனாதனர் ஆகியோர் வழிபாடு செய்த திருத்தலம் இது. நாவுக்கரசரால் பாடப் பெற்றதுடன், கந்த புராணத்திலேயே இந்தத் திருத்தலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சுமார் 1600 ஆண்டுகள் பழைமையான வன்னி மரம் இங்குள்ளது. இன்னும் பசுமையாக, இளமையாக இருக்கும் இந்த மரத்தின் திசுக்களைக் கோவை வேளாண் பல்கலையிலிருந்து வந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனராம்.

தேவகோட்டை நகரத்தாரால் பராமரிக்கப்படும் இக்கோயில், மிகச் சிறியதாக இருந்தாலும் அமைப்பாக, அழகாக இருக்கிறது. லிங்கத் திருமேனியாக ஸ்ரீ அக்னிபுரீஸ்வரரும், அருகிலேயே அம்மை ஸ்ரீ கௌரி பார்வதியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில், மகா கணபதி, பால சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறுகின்றன. தட்சிணாமூர்த்திக்கு அருகே, தல வரலாற்றுச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்க ளாகக் காணப்படுவது மிக அரிய, இனிய காட்சி.

ஆலயத்தை வலம் வந்தபின், நமது உடலும் உள்ளமும் குளிர்கிறது. உடல் வெப்பத்தையும் மன வெப்பத்தையும் கொடுப்பதும் அவனே... எடுப்பதும் அவனே! அந்த அக்னிபுரீஸ்வரர் திருவடியில் நம்மிடம் தகிக்கும் அக்னிகளை அர்ப்பணிப்போம். அகமும் புறமும் குளிர்ந்து ஆரோக்கியம் பெறுவோம்.


எப்படிச் செல்வது?

அன்னியூர் அமைந்திருப்பது திருவாரூர் மாவட்டம் என்றாலும், கும்பகோணத்தில் இருந்து செல்வதுதான் எளிதானது. 

கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், காரைக்கால் செல்லும் வழியில், திருநாகேஸ்வரம் தாண்டியதும் எஸ்.புதூர் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது அன்னியூர். ‘‘காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால், மிகச் சிறிய ஊராக இருப்பதால், கோயிலுக்கு அருகே கடைகள் எதுவும் இல்லை. பூஜைக்கான தேங்காய், பழம், மற்றும் அபிஷேகப் பொருட்களைப் பக்தர்களே கையோடு கொண்டு வந்துவிடுவது நல்லது’’ 

No comments:

Post a Comment