Thursday 28 December 2017

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில், பாடலூர் வழி, ஊட்டத்தூர் – திருச்சி


சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரிய தலம் ; வாழ்வில் ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைக்ககூடிய சிவாலயம் ; ஊழ்வினையால் ஏற்படும் சோதனைகளை போக்கிக் கொள்ள  ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு திவ்ய க்ஷேத்திரம்..

🍄💧🍄💧 BRS🍄💧🍄💧🍄


தொலைபேசி : +91 97880 62416, +91 4328 – 267126

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁

மூலவர் : சுத்த ரத்தினேஸ்வரர், துய்ய மாமணீஸ்வரர், மாசிலாமணி

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், அகில தீர்த்தம், தேவ தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம், நந்தியாறு

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

புராண பெயர் : ஊற்றத்தூர்

ஊர் : ஊட்டத்தூர்

பாடியவர்கள் : அப்பர் பெருமான் (6-70-10, 6-71-4)

🅱 தேவாரப்பதிகம்:🅱

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு  
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

🅱 திருவிழாக்கள் :🅱:

🌀 வைகாசி புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றம் செய்து, சுவாதியில் தேரோட்டம், விசாகம் நட்சத்திரத்தில் தீர்த்தவாரி.

🌀 தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு,

🌀 வளர்பிறை பஞ்சமியில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நடக்கிறது.

🌀 மாதந்தோறும் பிரதோஷம்.

🌀 வருடந்தோறும் முள் படுகளம் எனும் இருபதுக்கும் மேலான கிராம மக்கள் பங்கு பெறும் திருவிழா இத்திருத்தலத்தில் நடைபெறுகின்றது.

🅱 தல சிறப்பு:🅱

🎭  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭  அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.

🎭  ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசி 12, 13, 14 ஆகிய மூன்று தேதிகளில் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள் லிங்கத்தின் மேல் படுகிறது.

🎭  நாட்களிலும் இதே போல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

🎭  இத்தலம் தேவார வைப்புத்தலமாகும்.

🎭  சிவனைப்பார்த்து மேற்கு திசை நோக்கி ஒரு நந்தியும், கிழக்கு திசை நோக்கி ஒரு நந்தியும் அமைந்திருப்பது சிறப்பு.

🅱 நடைதிறப்பு :🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱  ஸ்ரீபஞ்ச நதன நடராஜர் பூஜை காலம்: 🅱

🍁 அபிஷேக நேரம் : காலை: 10.00 முதல் 11.00 மணி வரை.

🍁 கால சந்தி:  8.30 மணி முதல் 9.30 மணி வரை.

🍁 உச்சி காலம்:  11.30 மணி முதல் 12.00 மணி வரை.

🍁 சாயரட்சை:  6.00 மணி முதல் 6.30 மணி வரை.

🍁 அர்த்த ஜாமம்:  7.30 மணி முதல் 8.00 மணி வரை.

🅱 பொது தகவல்:🅱

🌀 பிராகாரத்திற்குள், அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திருக்கோயிலில் விநாயகப் பெருமான், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அறுபத்துமூன்று நாயன்மார்கள், அதிகாரநந்தி, துர்க்கை, கஜலட்சுமி, சரஸ்வதி, சிவகாமசுந்தரி, வீரபத்ரர், பைரவர் ஆகியோரும் அழகாக எழுந்தருளியுள்ளனர். இந்த கோயிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார்.

🌀 ஒரு திருக்கோயில் எவ்விதம் அமையவேண்டும் எனப் புராதன நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளதோ அதன்படியே அமைந்துள்ளது. அழகான இப்பெரும் திருக்கோயில்.

🌀 ஊழ்வினையால் (முற்பிறவி) தான் நமக்குப் பலவித சோதனைகளும், துன்பங்களும் வாழ்க்கையில் ஏற்படுகின்றன. அவற்றைப் போக்கிக்கொண்டு நல்வாழ்வு பெற இப்பெருமானை ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும்.

 🌀 உற்ற துணையும், பெற்ற தாயும், வளர்க்கும் தந்தையும், கல்வி புகட்டும் ஆசானுமாக இருந்து ஒவ்வொரு விநாடியும் நம்மைக் காத்தருளும் ஊட்டத்தூர் அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரரை ஒருமுறையாவது அனைவரும் தரிசிக்க வேண்டும்.

🌀 கொடிமரம் அருகில் மேல் விதானத்தில் 27 நட்சத்திரங்கள் 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🅱 ஸ்ரீபஞ்ச நதன நடராஜர்: 🅱

🌀 பஞ்சநதனக் கல் என்பது, பார்ப்பதற்கு வழக்கமான கருங்கல்லைப் போன்ற தோற்றம் கொண்டது தான். எனினும் சில தருணங்களில் கருநீலமாகவும் கரும்பச்சை வண்ணத்திலும்கூட காட்சியளிக்கும். பல கோடி சூரியன்களின் சக்தியை உள்ளடக்கியது இந்தக் கல் என்பது சித்தர்கள் வாக்கு. அது எப்படி என்று கேட்கத் தோன்றும். கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணிய அணுவுக்குள், எவ்வளவு மகத்தான அணுசக்தி புதைந்திருக்கிறது ! அண்டத்தையே அழிக்க வல்ல ஆற்றல், ஓர் அணுவுக்குள் இருக்கிறது. என்பதையே நாம் அரை நூற்றாண்டுக்கு முன்புதானே அறிந்தோம் ? அதே போலத்தான், பஞ்சநதனப் பாறையின் சக்தியும் !

🌀 இந்த வகைப் பாறைகள் அரிதினும் அரிதானவை. பத்து லட்சம் கோடி பாறைகள் உருவாகும் போது, அவற்றுள் ஒன்றே ஒன்று தான் பஞ்சநதனப் பாறையாக மாறும் வாய்ப்பு உண்டு என்றும் சித்தர்கள் விளக்கியுள்ளார்கள்.

🌀 சூரியனிலிருந்து பூமிக்கு வரும் கிரணங்களில் பலவகை உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒருவித ஆற்றலுடன் திகழும். பூமியில் வாழும் உயிர்கள் அந்தக் கதிர்களை கிரகித்து, தமக்குத் தேவையான சக்தியை அதிலிருந்து பெற்று உயிர் வாழ்கின்றன. அவ்வகையில், சூரியனிலிருந்து வெளிப்படும் சிற்சபேச கதிர்களை தனக்குள் ஈர்க்கிறது பஞ்சநதனப் பாறை. பக்தியில் மூழ்கித் திளைத்து பரமாத்மாவைத் தரிசிப்பவருக்கு, இதை உணர முடியும்.

🌀 பஞ்சநதனப் பாறைகளால் பஞ்ச ஸ்வரங்களையும் உருவாக்க முடியும். இந்தப் பாறையைத் தட்டினால், இசையின் அடிநாதமான சப்த ஸ்வரங்களில் ஐந்து ஸ்வரங்களை கேட்க முடியும். பஞ்சநதனப் பாறையின் இன்னோர் அபூர்வமான சிறப்பு, மனிதக் கரங்களால் இதைச் செதுக்கி சிலைகள் செய்ய முடியாது. சித்தர்களின் ஆன்மிகச் சக்தியால், பஞ்சநதனப் பாறைகளில் இறைவனின் உருவங்கள் தானாகவே உருவாகும் என்று சொல்லப்படுகிறது. அவ்வகையில் ஊட்டத்தூரில் அருள்பாலிக்கும் ஆடல் வல்லானின் விக்கிரகம், உளி இல்லாமல் செதுக்கப்பட்டது என்கிறார்கள். இதைப்போல பல கோயில்களில் அருள்பாலிக்கும் நந்தி உருவங்கள், தெய்விக சக்தியால் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் பஞ்சநதனக் கல்லில் உருவான மூர்த்தி ஊட்டத்தூர் நடராஜர் மட்டுமே எனலாம்.

🌀 நவ லிங்க பூஜை எனப்படும் ஒன்பதுவிதமான பூஜைகளை நிறைவு செய்த பின்னரே, பாறையில் பஞ்சநதன நடராஜர் உருவம் தோன்றும் என்றும், அதன் பிறகுதான் மானிடர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் கூறுவர். ஆகவே தான், பஞ்சநதனப் பாறையும் அதில் உருவான நடராஜ மூர்த்தியின் தரிசனமும் சாந்நித்தியம் மிகுந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் ஆடல்வல்லானை, வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து, நமது பிரார்த்தனைகளையும் கோரிக்கைகளையும் அவரின் திருவடியில் சமர்ப்பித்தால், அவை அத்தனையும் நிச்சயம் நிறைவேறும்.

🅱 பிரார்த்தனை:🅱

🍄 திருமண தடையுள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்திக்கின்றனர். பஞ்ச நதன நடராஜர் சிறுநீரக சம்மந்தமான நோய் நீக்க வல்லவர். இழந்த பதவிகளை மீட்டு தரும் சக்தி படைத்தவர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

🌻 சுவாமிக்கு குத்துக்கடலையை மாலையிட்டு குத்துக்கடலை சுண்டல் பூஜையை விடியற்காலை 4.30 மணி முதல் 7 மணிக்குள் குரு ஓரையில் வழிபட வேண்டும். இந்த பூஜையை 11 வாரம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

🌻 இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

🌻 பஞ்ச நதன நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாத்தி வழிபாடு செய்தல் சிறப்பு.

🅱 தலபெருமை:🅱

🔥 இக்கோயிலில் வானளாவிய பெரிய ராஜகோபுரம் உள்ளது. கோயிலின் நடுவில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.

🔥 இக்கோயிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோயிலான பெருமாள் கோயிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. நான்கு புறமும் பெரிய மதில் சுவர் உள்ளது.

🔥 இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று. மாசி மாதம் வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்தால் பல தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது.

🔥 இந்த சிவன்கோயிலில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோயிலில் அருளுகிறார்.

🅱 பாறைகளின் சிறப்பு: 🅱

🔥 ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளிவீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது.

🔥 நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

🔥 நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாமசுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார்.

🔥 இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி; நின்ற திருக்கோலத்தில், திருநயனங்களில் கருணை பொங்க, உதடுகளில் புன்னகையுடன் சேவை சாதிக்கும் அம்பிகையின் பேரழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை. தாயின் சக்தி அளவற்றது. தரிசித்த அந்த விநாடியே நம் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. அம்பிகையின் சக்தியை உணர முடிகிறது.

🔥 மகாமண்டபத்தைத் தாண்டி சன்னிதியினுள் சென்றால் நோய்களைத் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் சக்திவாய்ந்த பிரம்ம தீர்த்தம் உள்ளது. இங்குள்ள பிரம்ம தீர்த்தம் பிரம்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டது.இதன் அருகே காட்சி அளிக்கிறார் நந்தியெம்பெருமான்.

🅱 கோவில் அமைப்பு: 🅱

🌀 நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் ஊற்றத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது.

🌀 அடுத்துள்ள 2-வது நுழைவாயில் மேற்புறம் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி, அருகில் நால்வர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். 2-வது நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் உருவத்தில் சற்றே பெரியதாக உள்ள நந்தியை தரிசிக்கலாம்.

🌀 கருவறை சுற்றுப் பிராகாரம் வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கிலாம், இவர் கல்லால மரத்தின் கீழ், முயலகன் காலடியில் கிடக்க அழகிய சிற்ப வடிவில் காட்சி அளிக்கிறார்.

🌀 மேலும் வலம் வர, இக்கோயிலுக்குரிய விசேஷ மூர்த்தியான நடராசப் பெருமானை சிலா உருவில் தனி சந்நிதியில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றார். இந்த சிலையைத் லேசாக தட்டிப் பார்த்தால் "ஓம்" என்ற ஓசை எழும்பும். பக்கத்தில் சற்றுப் பார்வையைச் சாய்த்து சுவாமியைப் பார்ப்பது போன்ற அமைப்புடன் சிவகாம சுந்தரி எழுந்தருளியுள்ளாள். இதை அடுத்துள்ள மற்றொரு சந்நிதியில் தனிச் சபையில் நடராசரும், சிவகாமியும் எழுந்தருளியுள்ளனர்.

🌀 கருவறை சுற்றுப் பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளது. ஆலயத்தின் தீர்த்தமான பிரம தீர்த்தம் கிணறு வடிவில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. ஆலயத்திலுள்ள காலபைவர் சிலா உருவமும் காணத்தக்கது. காலபைரவருக்கு 11 வாரம் தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு மனபயம் நீங்கும், மாடுகளுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் கொத்துக்கடலை மாலை இறைவனுக்குச் சார்த்தி, விடியற்காலை குரு ஹோரையில் பூஜை செய்தால் காரியசித்தி கிடைக்கும்.

🅱 தல வரலாறு:🅱

🌺 ஒருசமயம் மன்னன் ராஜராஜ சோழன் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோளேஸ்வரம் என்ற திருக்கோயிலை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழன் அடிக்கடி வருவது வழக்கம். அவ்வாறு ஒருமுறை மன்னன் வந்தபோது, அவரது வருகையையொட்டி வழியெங்கும் பாதையைச் செப்பனிடுவதற்காகப் புல் செதுக்கும் பணி நடைபெற்றது.

🌺 அப்போது ஓரிடத்தில் எதிர்பாராது இரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் இதுபற்றித் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த ராஜராஜ சோழமன்னர், அந்த இடத்தைச் சோதித்துப் பார்த்தபோது, அழகான சிவலிங்கம் காட்சியளித்தது.

🌺 புல்லைச் செதுக்கும் போது மண்வெட்டி பட்டதால், சிவலிங்கப் பெருமானின் மீது தழும்பு காணப்பட்டது. பெருமானிடம் தன்னை மன்னிக்கும்படி பிரார்த்தித்த ராஜராஜ சோழன், உடனடியாக அப்பெருமானுக்கு அழகான திருக்கோயிலை எழுப்பிப் பூஜித்தார். அத்திருக்கோயில் தான் அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயிலாகும். இன்றும் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டியினால் ஏற்பட்ட வடு தெரிகிறது.

🌺 மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர் ? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவபெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார். இவ்விதம் சிவபெருமான் தீர்ப்பு கூறியபிறகு, நந்தி தான் குடித்த நதிகளின் நீரை வெளியில் விட்டார்.

🌺 அதுவே நந்தி ஆறு எனப் பெயர் பெற்று கொள்ளிடம் வரை பெருகிச் சென்றது. அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோயில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.

🌺 இறந்தவர்களின் அஸ்தியை இந்த நந்தி ஆற்றில் கரைத்தபோது, அவை புஷ்பமாக மாறியது. காசித் திருத்தலத்தில் கூட அஸ்தியைக் கரைக்கும் போது, அதிலுள்ள எலும்புகள் எலும்பாகவே காட்சி தந்தன. ஆனால், ஊட்டத்தூர் நந்தி ஆற்றில் கரைத்த அஸ்திகள் மட்டும் மலர்களாக மலர்ந்தன. ஆதலால், காசியை விட ஒரு குன்றுமணி அளவு ஊட்டத்தூர் உயர்ந்தது எனப் பெரியோர்கள் கூறுவர்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்.

♻ ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர்.

♻ இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

♻ உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்துள்ளார் என்றும், இதனால் இந்த தீர்த்தம் மேலும் சிறப்பு பெற்று உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது, ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீடிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை கதைகள் மூலம் அறிய முடிகிறது.

🅱 இருப்பிடம்: 🅱

✈ திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

✈தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூரில் இருந்து அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

✈ஊட்டத்தூர் செல்ல திருச்சியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

No comments:

Post a Comment