Thursday 7 December 2017

அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்!

உலகுக்கெல்லாம் ஒளி வழங்கும் சூரிய பகவான், மாலை நேரத்தில்வரும் பிரதோஷ வழிப்பாட்டைத் தரிசிக்க முடியவில்லையே ஏங்கி வருந்தினாராம். அனுதினமும் செய்ய வேண்டிய பணியை விட்டுவிட்டு அவரால் எப்படி வர முடியும்?      
அவர் தனது ஏக்கத்தையும் வருத்தத்தையும் தன் சீடரான  யாக்ஞவல்கிய முனிவரிடம் தெரிவித்தார். சூரியனிடமிருந்து வேதங்களைக் கற்ற அந்த மாமுனிவர், தான் அனுதினமும் வழிபடும் இந்தத் தலத்தின் இறைவனான ஸ்ரீ  சூரிய கோடீஸ்வர பகவானிடம் சூரியனின் ஏக்கத்தைக் கூறி, தன் குருவின் கவலையைப் போக்குமாறு பிரார்த்தித்தார். மேலும், சூரியனிடம் கற்ற வேதங்கள் அனைத்தையும் இறைவனுக்குத் தட்சணையாக்கி, வேதாக்னி யோகப் பாஸ்கர சக்கர வடிவமாகச் செய்து, அதன் பலன்களைப் பொறித்து, அதை சூரிய கோடிப் பிரகாசரின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வேண்டினார். அப்படி அவர் சமர்ப்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாகத் தோன்றி வளர்ந்தது. தொடர்ந்து அந்த இடமே இலுப்பைக் காடாக மாறியது (கோயிலின் ஸ்தல விருட்சம் இலுப்பை மரம்). இலுப்பை மர விதைகளைச் சேகரித்து அவற்றிலிருந்து இலுப்பை எண்ணெய் எடுத்த முனிவர், மாலைவேளையில் கோடி தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபட ஆரம்பித்தார். பிரதோஷ காலத்தில், ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக்கொண்டிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியதேவன், கோடி தீபங்களைக் கண்டு வணங்கி, பிரதோஷ வழிபாட்டின் பலன்கள் அனைத்தையும் பெற்றதாக தலவரலாறு விவரிக்கிறது. 

சூரியன் குறித்து வேறொரு புராணத் தகவலும் உண்டு.

தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் சிவனாரின் கோபத்துக்கு ஆளான சூரியன் ஒளியிழந்தான். பின்னர் தன் குருநாதரின் ஆலோசனைப்படி இலுப்பை வனமாகத் திகழ்ந்த இத்தலத்தை அடைந்தான். அங்கே வந்ததும் பேரொளி படர்வதைக் கண்டான். கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனைத் தினமும் பூஜித்து இழந்த ஒளியையும் சக்தியையும் பெற்றான். இதையொட்டி யுகம் யுகமாக சூரியன் தனது முதல் கதிரொளியை  இந்தத் தலத்து இறைவனின் மீது பாய்ச்சி வணங்கியபிறகே, பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களைப் பாய்ச்சுவதாகப் புராணத் தகவல் கூறுகிறது. இன்றைக்கும் இக்கோயிலில் அனுதினமும் சூரிய பூஜை நிகழ்கிறது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது கீழச் சூரிய மூலை. மிகச் சிறிய ஊர் என்பதால், கடைகள் அதிகம் இல்லை. பூஜைப் பொருள்களை நாமே வாங்கிச் சென்றுவிடுவது நல்லது. 

கோயில் மிகச் சிறியதுதான் எனினும் சாந்நித்தியம் நிறைந்தது. கோயிலின் அர்ச்சகர் கணேச குருக்களைச் சந்தித்தோம்.  ‘‘ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழைமையான தலம் இது. சூரியனுக்கு மூலாதாரச் சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார்கோயிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில்தான் முழுச்சக்தியையும் பெற்றான். நவகிரக தலங்களில் ஒன்றான சூரியனார்கோயில் தலத்தின் ஈசான்ய பாகத்தில், அதாவது கீழ் மூலையில் இருப்பதால்தான், இந்த ஊருக்கு கீழச் சூரிய மூலை என்றே பெயர் வந்தது. இங்கே சூரியன் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சூட்சும வடிவில் இறைவனை வழிபடுவதாக நம்பிக்கை. அதை உறுதிப்படுத்துவது போல, கர்ப்பகிரகத்தின் உள்ளும் வெளியே சந்நிதியிலும் எல்லா கோயில்களிலும் இருப்பதுபோல இருட்டாக இல்லாமல் வெளிச்சமாக இருக்கும். உள்ளே ஒரு கண்ணாடியைக் கொண்டுபோனால், அதன் பிரதிபலிப்பு சுவரில் தெரியும்’’ என்கிறார் கணேச குருக்கள்.   
இக்கோயிலில், கிழக்கு பார்த்த சுவாமி சந்நிதி.  உதிக்கின்ற சூரியனை மறைக்கும் என்பதால் ராஜகோபுரம் இல்லை என்பது ஐதீகம். கோயிலுக்குள் நுழைந்தால், நந்தியும் பலிபீடமும், அதைத் தாண்டி சுவாமி, அம்பாள் சந்நிதி. 

பித்ருக்களின் சாபத்தை நிவர்த்திசெய்யும் தலமாக இது விளங்குகிறது. அது மட்டுமல்லாமல், சூரியன் வணங்கும் இடம் என்பதால் கண் நோய்கள், கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் இருக்கிறது. கிழக்குப் பார்த்த சந்நிதியில் அருள்கிறார் சூரிய கோடீஸ்வரர். தெற்கு நோக்கிய சந்நிதியில் பவளக்கொடி அம்பாள். இந்தச் சந்நிதிகள் அமைந்த மண்டபத்திலேயே பைரவரும், சூரியனும் எழுந்தருளி இருக்கிறார்கள். 
மகா மண்டபத்தைவிட்டு வெளியேவந்தால், சந்நிதியைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் சிரித்த முகத்தோடு ஆனந்த நிலையில் இருக்கும் தட்சிணாமூர்த்தி. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அருளும் தட்சிணாமூர்த்தி இவர். அடுத்ததாக, கன்னி மூலை கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, துர்கை ஆகிய தெய்வங்கள் அருளாசி புரிகின்றனர். இங்கே சூரியனை வணங்குவதோடு சுக்கிரனையும் வணங்கலாம்.  

ஆறு விரல்களுடன் அருளும் மகாலட்சுமி!

‘‘கோயிலின் குபேர மூலையில், பத்மாசன கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் வலக்காலில் ஆறாவது விரல் அமைந்துள்ளது. ‘ஆறு’ என்பது சுக்கிரனுக்குரிய எண். எனவே சுக்கிரனின் ஆதிக்கம் அவளிடம் நிறைந்திருக்கிறது. மகாலட்சுமி எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத்திலேயே இருப்பதால், அவளை வணங்குவோருக்குச் செல்வத்தை அருளுவாள். சூரியனை நிமிர்ந்து பார்த்து வணங்கும் நாம், சுக்கிரனைக் குனிந்து வணங்குமாறு அவளுடைய வலக்காலில் ஆறு விரல்கள் அமைந்திருப்பது சிறப்பு. குருவின் சக்தி பவளக்கொடி அம்மனுக்கும், சுக்கிரனின் சக்தி மகாலட்சுமிக்கும் தீர்க்கமாக இருப்பதால், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குச் சூரிய பகவான், குரு  மற்றும் சுக்கிர பகவானின் அருள் பூரணமாகக் கிடைப்பதுடன், பித்ரு சாபங்களும் நீங்கும். பித்ரு சாபங்களைப் போக்குபவர், இங்கிருக்கும் சொர்ண பைரவர். அவரிடமும் மெய்சிலிர்க்க வைக்கும் ஓர் ஆச்சர்யம் இருக்கிறது!’’ என்கிறார் கணேச குருக்கள்.  
ஆம்! சுவாமி, அம்பாளுக்கு ஆரத்தி காண்பித்துவிட்டு, பைரவ ரிடம் ஆரத்தி காட்டும்போது மட்டும், பைரவரின் கண்டத்தில் (கழுத்தில், குரல்வளை பகுதியில்) சிவப்பு நிறத்தில் பவழம் போல ஓர் ஒளி தோன்றி, அசைந்து மறைகிறது. சிறு பொறி போல வந்து மறையும் அந்தப் பவழ மணியின் ஒளிக்கிரணங்கள்தான், நம் பித்ரு சாபத்தையும் சூரிய சந்திரர்களின் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் பிணிகளையும் நிவர்த்தி செய்வதாக நம்பிக்கை.

வலக்காலை முன்வைத்த கோலத்தில் துர்கை!

 துர்கை சந்நிதியில், துர்காம்பாள் நம்மை நோக்கி எழுந்து ஓடிவருவதுபோல, வலக்காலை ஓரடி முன்வைத்து நிற்கிறாள். அதோடு காலில் மெட்டியும் அணிந்துள்ளது காண, மிக இனிய காட்சி.   

‘‘துர்கை ராகுவால் ஏற்படும் சோதனைகளி லிருந்து நம்மைக் காப்பவள். இங்கே ராகு காலத்தில் தீபம் ஏற்றி வணங்குவோருக்கு, ஓடி வந்து அருள்செய்கிறாள் துர்கை. அதனால்தான் காலை முன்வைத்த கோலத்தில் நிற்கிறாள். இங்கிருக்கும் நவகிரக சந்நிதியில் எல்லா கிரகங்களுமே வாகனங்களுடன் இருக்கும். அது மட்டுமல்ல; எல்லா கிரகங்களுமே சூரியனைப் பார்த்தபடி இருப்பதும் அதிகம் காணமுடியாத அமைப்பு’’ என்று விளக்கினார் கணேச குருக்கள்.   
இந்த ஆலயத்துக்கு வரும் அன்பர்கள், சூரியனுக்கு ஹோமம் செய்து வழிபடுகின்றனர். மேலும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், மகாலட்சுமிக்கு ஹோமம், அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, சங்கல்பங்களை முன்வைத்து பிரார்த்தனை செய்வதால், கண் சம்பந்தமான பிரச்னைகள், பார்வை குறைபாடுகள் நீங்குவதாக ஐதீகம். இங்கே அன்னதானம் செய்வதும் முன்னோர்களின் தோஷங்களும் சாபங்களும் விலகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரதோஷ காலத்தில் அகல் தீபம் ஏற்றி ஸ்ரீ  சூரிய கோடீஸ்வரரை வணங்குவது, மிகவும் சிறந்த பிரார்த்தனை. சூரிய தோஷம் உள்ளவர்கள், மூலவருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் சில புராண தகவல்கள்...

சுக்ராச்சாரியார், இழந்த தன் கண் பார்வையை மீட்க, பல கோயில்களில் பூஜை செய்தார். இறுதியில், அகத்திய முனிவர் முன்னிலையில் இத்தலத்தில் ஹிருதய மந்திர ஹோம பூஜைகளைச் செய்து, சூரிய கோடீஸ்வரரை வழிபட்ட பின்னர், இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் என்கிறது மற்றொரு தல வரலாறு. 

ராமபிரானுக்கு அகத்திய முனிவர் ஹிருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும் இலங்கை போர்க்களத்தில் உபதேசித்தார். அதன் பின்னரே ராமபிரான் சீதையை மீட்டதாகக் கூறப்படுகிறது. ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி, சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங்களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர உபதேசங்களை ராமனுக்கு நிகழ்த்திய தலங்களில் கீழச் சூரிய மூலையும் ஒன்று..

உங்கள் கவனத்துக்கு...

தலம்: கீழச் சூரிய மூலை

ஸ்வாமி: சூரிய கோடீஸ்வரர்

அம்பாள்: பவளக்கொடி அம்பாள்

ஸ்தல விருட்சம்: இலுப்பை மரம்

திருத்தலச் சிறப்பு: நாள்தோறும் சூரிய பூஜை, வலக்காலில் ஆறு விரல்களுடன் அருளும் மகாலட்சுமி, வலக்காலை முன்வைத்த கோலத்தில் துர்காதேவி. பித்ரு தோஷம் நீக்கும் சொர்ண பைரவர்.

எப்படிச் செல்வது? தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது இக்கோயில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோக்கி செல்லும் பேருந்தில் சென்றால் கோயில் அருகே இறங்கிக்கொள்ளலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்: 
காலை 6 முதல் பகல் 12 மணி வரை; மாலை 4 முதல் 7 மணி வரை.

No comments:

Post a Comment