Thursday 7 December 2017

என் சுவாசக்காற்றே... - மூச்சு சொல்லும் சூட்சுமம்

ம் உடலில் மூளையின் கட்டளையால் நடக்கும் சில முக்கியமான செயல்களில் சுவாசமும் ஒன்று. நாம் எவ்வளவு முயன்றாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் மூச்சை அடக்க முடியாது. நாம் சரியாக சுவாசிக்கிறோமா? நாம் மூச்சுவிடும் விகிதம் சரியா? சரியாக மூச்சுவிடாவிட்டால் சுவாசப் பிரச்னை ஏற்படுமா? சுவாசப் பிரச்னையின் அறிகுறிகள் என்னென்ன?  


சுவாசத்தின் தொடக்கம்


தாய், பிரசவிக்கும்போது, சுவாசத்தை எதிர்கொள்ள முடியாமல் குழந்தை கதறி அழும். அந்தக் கதறலே அந்தக் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சு. 10 மாதங்களாகத் தாயின் கருவறையில் இருந்த குழந்தை முதன்முறையாக வெளிக்காற்றை சுவாசிப்பதால் ஏற்படுவதே அந்த அழுகை. அந்தத் தருணம் முதல் கடைசி மூச்சு உள்ளவரை நேரடியாக மூளையின் கட்டுப்பாட்டில் சுவாசம் செயல்படுகிறது. 

ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும்போது ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் என்பதைக் கணக்கிடுவதே சுவாச விகிதம். தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் நாம் ஒரே அளவு எண்ணிக்கையிலேயே சுவாசிக்கிறோம். மேலும், உறங்கும்போது நாம் சுவாசிக்கும் வேகம் மாறுபடுமே தவிர, எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது.  பொதுவாக, ஒரு நிமிடத்துக்கு 12-ல் இருந்து 18 முறை சுவாசிக்கிறோம். 

சுவாச விகிதம் கணக்கிடுவது எப்படி?

ஒரு நிமிடத்தில் நாம் எத்தனைமுறை சுவாசிக்கிறோமோ அதுவே சராசரி சுவாச விகிதமாகும். இந்தக் கணக்கீடு பல காரணிகளால் மாறக்கூடும். உதாரணமாக, உடல் பருமனானவர்கள், இதயநோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்களின் சுவாச விகிதத்தைக் கணக்கிடுவது சற்று சிரமம். சுவாச விகிதக் கணக்கெடுப்பில் முக்கியமான மற்றொன்று, கணக்கிடும் நேரம். நாம் விழித்திருக்கும்போதோ நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து முடித்தபின்னரோ வேலை களைச் செய்துமுடித்தவுடனோ கணக்கிடக் கூடாது. அவ்வாறு எடுக்கப்படும் அளவு துல்லியமாக இருக்காது. ஓய்வில் இருக்கும்போது எடுக்கப்படும் அளவே சரியானது. 

சுவாச விகிதத்தைக் கணக்கிடுவதில் சவாலான ஒன்று, மூளையின் செயல்பாடு. ஒரு நிமிடத்தில் நாம் எத்தனைமுறை மூச்சு விடுகிறோம் என்பதை மூளையே முடிவுசெய்யும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறையும்போதோ, கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு அதிகமாகும்போதோ அடிக்கடி சுவாசிக்க வேண்டும் என நம் மூளை கட்டளையிடும். உதாரணமாக, ஒரு நோய்த் தொற்றின் காரணமாக நம் உடலில் கார்பன்-டை ஆக்ஸைடு அதிகரித்தால், (ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கும்போது) நமது மூளை, நம்மை வேகமாக சுவாசிக்க வைத்து கார்பன்-டை ஆக்ஸைடை வெளியேற்றும்.
எப்போது சுவாச விகிதம் குறையும்?

போதைப் பொருள்களைப் பயன்படுத்தும்போது நம் சுவாசம் சரியாக வேலை செய்யாது. இதற்குக் காரணம் போதை மருந்துகள் ரத்தத்தின் வழியாக நம் மூளைக்கு அனுப்பும் செய்திகளை, மூளை மந்தமாக எடுத்துக்கொள்ளும். இதனால், நம் தேவையைவிடக் குறைவாக சுவாசிப்போம். தலையில் அடிபட்டு மூளையில் உள்ள சுவாச மையம் பாதிக்கப்பட்டாலும் நம்முடைய சுவாச விகிதம் குறையும். 

குழந்தைகளிடம் வேறுபடும்


 நடக்கப் பழகிய குழந்தையைவிட கைக்குழந்தை அதிகமாக சுவாசிக்கும். மருத்துவ மொழியில் இதை ‘பீரியாடிக் ப்ரீத்திங்’ (Periodic breathing) என்று கூறுவார்கள். இந்தப் பீரியாடிக் ப்ரீத்திங்கின்போது குழந்தைகளின் சுவாச அளவு பரவலாக மாறுபடும். ஒரு குழந்தை சில நிமிடங்கள் வேகமாக சுவாசித்துவிட்டுப் பின்னர், இயல்பை விடக் குறைவாக சுவாசிக்கலாம். பீரியாடிக் ப்ரீத்திங்கில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான அம்சங்கள் உள்ளன. இயல்பைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குழந்தை சுவாசிப்பது பெற்றோருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். உங்கள் குழந்தை நோயோ,  வேறு ஏதாவது குறிப்பிட்ட உடல் பாதிப்புகளோ இல்லாமல் இருந்தால், பீரியாடிக் ப்ரீத்திங் சாதாரண ஒன்றுதான், இல்லையென்றால் உடனடியாகக் கவனிக்க வேண்டியது அவசியம்.

சீரற்ற சுவாச விகிதம் 

உடலில் பிரச்னை இருப்பதன் அறிகுறியே சீரற்ற சுவாச விகிதம். இந்த நேரத்தில் சுவாசவிகிதம் இயல்பைவிடக் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கும். அதேபோல், உடற்பயிற்சி செய்யும்போது சுவாச விகிதம் அதிகரிப்பதும் இயல்பான ஒன்று. 

வயது வந்தவர்கள் (Adults) சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை சுவாசிக்க வேண்டும். மாறாக, சுவாச விகிதம் 24-க்கும் மேல் இருந்தால் அது ஆபத்தானது. ஒருவர், திடமானவர் அல்லது திடமற்றவர் என அவரின் இதயத்துடிப்பின் அளவு, ரத்த அழுத்த அளவின் அடிப்படையில்  நிர்ணயிக்கப்படும். சுவாச விகிதம் அதிகமாக இருப்பதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. சில காரணிகள் நுரையீரல் தொடர்புடையவையாக இருக்கும். சில காரணிகள் நுரையீரல் தொடர்பில்லாதவையாக இருக்கும். 

சுவாச விகிதம் எதனால் அதிகரிக்கும்?


 காய்ச்சல்: காய்ச்சலின் காரணமாக உடலில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, நமது உடல் வேகமாக சுவாசிக்கத் தொடங்கும். இதனால், சுவாச விகிதம் அதிகரிக்கும். இவ்வாறு  அதிகரிக் கும் சுவாச விகிதம், நோயை மோசமடையச் செய்யும். குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பில்  இருக்கும்போது, இயல்பைவிட அதிகரிக்கும் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு, சுவாச விகிதம் ஐந்து முதல் ஏழு வரை அதிகரிக்கும். ஆனால், 12 மாதத்துக்குட்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சலின் போது சுவாச விகிதம் அதிகரிப்பதாக இதுவரை எந்த ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை. அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில், ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு ஏழு முதல் 11 வரையிலான சுவாச விகிதம் இயல்பைவிட அதிகரிக்கலாம்.  

 டீஹைட்ரேஷன் எனப்படும் உடலின் நீர்வற்றிய தன்மை இருந்தால் சுவாச விகிதம் அதிகரிக்கும்.  

 ஆஸ்துமா இருந்தால் சுவாச விகிதம் அதிகரிக்கும்.

 நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.பி.ஓ.டி)  உள்ளவர்களுக்கு சுவாச விகிதம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

 மனஅழுத்தம், வலி, கோபம் அல்லது தாக்குதலுக்கு ஆளாகும்போது சுவாச விகிதம் உடனடியாக அதிகரிக்கும். 

 நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்களுக்கு சுவாச விகிதம் அதிகரிக்கும். உறைந்த ரத்தம்  காலில் இருந்து நுரையீரலுக்குச் செல்லும் போதும் சுவாச விகிதம் அதிகரிக்கலாம்.  

 ஃப்ளு, நிமோனியா,  டிபி உள்ளிட்ட நோய்களாலும் சுவாச விகிதம் அதிகரிக்கும்.

 பிறந்த குழந்தைகளுக்கு டிடிஎன் (TTN) என்று சொல்லக்கூடிய மூச்சுத்திணறல் இயல்பாக ஏற்படும். சில குழந்தைகளுக்கு 24 மணி நேரத்தில் சரியாகிவிடும். 

 சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்களுக்கு அமிலத்தன்மை அதிகரித்து சுவாச விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்வதாலும் சுவாச விகிதம் அதிகரிக்கும்.

 சுவாச விகிதம் எதனால் குறையும்?

இயல்பான சுவாச விகிதத்தைவிட, நிமிடத்துக்கு 12 முதல் எட்டு வரை குறைந்தால் உடனே கவனிக்க வேண்டும். 

 மது உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் சுவாச விகிதம் குறையும்.

 உடலில் ஏற்படும் அசாதாரண வளர்சிதை மாற்றத்தால் சுவாச விகிதம் குறையும்.

 பக்கவாதம், தலையில் காயம் போன்ற காரணங்களால் மூளையின் செயல்பாட்டில் பிரச்னை உள்ளவர்களுக்கு சுவாச விகிதம் குறையும்.

சிகிச்சை

அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், சி.பி.ஓ.டி, ஸ்லீப் ஆப்னியா, நிமோனியா போன்றவற்றால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அந்தந்த நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
பிஎஃப்டி (Pulmonary function test), ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், ஸ்லீப் டெஸ்ட் மற்றும் நுரையீரலில் எவ்வளவு சளி உள்ளது என்பதற்கான பரிசோதனைகள் மூலம் சுவாசப் பிரச்னைக்கான காரணங்கள் கண்டறியப்படும். சுவாசப் பிரச்னைகள் வராமல் தடுக்க ஆண்டுக்கு ஒருமுறை நிமோனியா மற்றும் ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

- ஐ.கெளதம், ச.மோகனப்பிரியா

சுவாசப் பிரச்னையைத் தவிர்க்க

 சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 சமைப்பதால் உண்டாகும் புகை சமையலறைக்குள் தங்கிவிடாமல், வெளியேற வழிவகுக்க வேண்டும்.

 பினாயில், டாய்லெட் கிளீனர் போன்ற கெமிக்கல்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.

 வீட்டைச் சுத்தம் செய்யும்போதும் வாகனங்கள் ஓட்டிச்செல்லும்போதும் மாஸ்க் அணிந்துகொள்ளலாம்.  

 புகைபிடிப்பதைத் தவிர்ப்பதுடன், புகைபிடிப்பவரின் அருகில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்.

 சத்தான உணவை சரிவிகிதத்தில் சாப்பிட வேண்டும். 

 யோகா, தியானம், பிராணயாமம் போன்ற பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும். 

 நுரையீரலில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும்.

சுவாசம் தொடர்பாகத் தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள்

 ப்ராடிப்னியா (Bradypnea): தூக்கத்தின்போது சுவாசம் குறைவதால் ஏற்படுவது. 

 டேகிப்னியா (Tachypnea): தூக்கத்தின்போது சுவாசம் அதிகரிப்பதால் ஏற்படுவது. 

 டிஸ்ஆப்னியா (Dyspnea): குறைவாக அல்லது அதிகமாக சுவாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுவது. 

 ஹைபர்ஆப்னியா (Hyperpnea): ஆழமான, அசாதாரணமான பெருமூச்சு விடுவது.  இந்தப் பிரச்னை உள்ளவர்கள் சுவாசிக்கும்போது மிகவும் சிரமப்படுவதுபோல் தெரியும். 

 ஆப்னியா (Apnea): ஒருசில விநாடி சுவாசம் நின்ற நிலையைக் குறிக்கும். இது மீண்டும் அடுத்த நொடியிலேயே சரியாகி, சுவாசம் சீராகிவிடும்.

No comments:

Post a Comment