Thursday 28 December 2017

அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை – காஞ்சிபுரம்



தொலைபேசி எண் : +91 -44- 2747 2235

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁

மூலவர் : நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள்

 உற்சவர் : நித்யகல்யாணப்பெருமாள்

 அம்மன்/தாயார் : கோமளவல்லித்தாயார்

 தல விருட்சம் : புன்னை, ஆனை

 தீர்த்தம் : வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்

 ஆகமம்/பூஜை : வைகானஸம்

 பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர் : வராகபுரி, திருவிடவெந்தை

 ஊர் : திருவிடந்தை

பாடியவர்கள்: திருமங்கையாழ்வார்

🅱  மங்களாசாசனம்: 🅱

திவளும் வெண்மதி போல் திருமகத் தரிவை செழுங்க டலமுதினிற் பிறந்த அவளும், நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசை விடாளால் குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின்தாள் நயந்திருந்த இவளை உன் மணத்தா லென் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.  -திருமங்கையாழ்வார்

🅱 திருவிழாக்கள் :🅱

வைகுண்ட ஏகாதசி, ஆனிகருடசேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்சம் கருடசேவை, ஸ்ரீஜெயந்தி, உறியடி உற்சவம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், தனுர்மாத பூசை, மாசிமகம் கருடசேவை, பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம்.

🅱 தல சிறப்பு:🅱

 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 63 வது திவ்ய தேசம்.

இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

திருமணத்தடை உள்ள பெண்கள் இங்குள்ள தாயாரை வழிபட்டு பலன் பெறலாம்.

இங்குள்ள பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவியின் தலை மீது வைத்துக் கொண்டும், அகிலவல்லி தாயாரை இடது தொடையில் தாங்கி கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்காகும்.

தினமும் கல்யாணம் பண்ணிக்கொண்டதால் திருவிடந்தையில் இப்பெருமாளுக்கு நித்ய கல்யாண பெருமாள் என்பது திருநாமம். 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 🗝

🅱 பொது தகவல்:🅱

கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார்.

இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம், காணக் கண்கோடி வேண்டும்.

பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும்.

இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு விடுகிறது.

இவருக்கு மேல் உள்ள விமானம் கல்யாண விமானம்.

பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம்.

பெருமாளை மார்க்கண்டேயர் தரிசனம் செய்துள்ளார்.
 
🅱 பிரார்த்தனை:🅱
 
 திருஷ்டி தோஷம், ராகு கேது தோஷம், சுக்ர தோஷம் , திருமணத்தில் தடை உள்ளவர்களுக்குரிய பரிகார தலம்.
 
🅱 நேர்த்திக்கடன்:🅱
 
 பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.
 
🅱 தலபெருமை:🅱
 
இத்தலத்தை திருமங்கையாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது.

360 கன்னியரை ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் சூட்டப்பட்டது.

360 கன்னியரில் முதல் கன்னிக்கு கோமளவல்லி என்று பெயர். இங்கு தனி சன்னதியில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, நாமெல்லாம் நாயகி, பெருமாள் ஒருவரே நாயகன் என்பது தான் இக்கோயிலின் தத்துவம்.

எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது.

தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும்.

அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

🅱 திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம்: 🅱

திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும்.

திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது சகஜமானது.

🅱 மன்னனுக்கு அருள் செய்த இறைவன் : 🅱

பல்லவ மன்னன் ஒருவன், திருவிடந்தை தலத்தின் மகிமையை அறிந்தான். இதையடுத்து ‘தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன்’ என்று அறிவித்தான். அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான். ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும் மண மகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. ஆனால், அவன் வேண்டுதல் வீணாகவில்லை அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான். மணம் செய்து கொண்டான்.

அந்த மணமகன் மன்னனை நோக்கி, ‘மன்னா என்னைப் பார்’ என்று சொல்லி, வராகராக காட்சி தந்து மறைந்தான்.

இதையடுத்து பல்லவ மன்னன் மூலவரே வராக மூர்த்தியாக அமையும் படியாக ஆலயம் எழுப்பினான்.

🅱 கல்வெட்டுத் தகவல்கள் : 🅱

1. விஜயராஜேந்திர சோழரின் 35-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1052) திருவிடவெந்தை ஆதிவராக பெருமாளுக்கு இந்த கிராமமே தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.

2. முதல் ராஜராஜ சோழனின் 19-வது ஆண்டு கல்வெட்டு (கி.பி.1003) பங்குனி ஊத்திரம் ஆதியாக ஒன்பது நாள் திருவிழா நடத்த மூலதனம் வழங்கிய செய்தியை கூறுகிறது.

3. இதே சோழனின் 29-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1013) பங்குனி உத்திர திருநாளில் பிராமண போஜனத்துக்கு வழங்கிய நன்கொடையை கூறுகிறது.

4. ராஜராஜ சோழனின் 17-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1001) அவர் பிறந்த ஆவணி சதயத்தை ஈறாகக் கொண்டு ஏழுநாள் திருவிழா நடத்த கட்டளையிட்டதை கூறுகிறது.

5. ராஜ ராஜ சோழனின் 19-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1003) கும்ப ஞாயிறு முழுமையும் பிராமண போஜனத்துக்கு மூலதனம் அளித்ததை கூறுகிறது.

6. திருமங்கையாழ்வார் பெயரில் கலிச்சிங்கன் மடம் ஒன்று இருந்ததையும், அமாவாசை தோறும் அங்கு பிராமண போஜனம் நடந்ததையும், குலோத்துங்க சோழனின் 45-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1115) கூறுகிறது.

🅱 தல வரலாறு:🅱
 
 திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர்.

அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க பெருமாளை குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.

🅱  தினமும் திருமணம்: 🅱

 சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.

தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.

தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.

‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அருளினார்.

காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராகர் யக்ஞ மூர்த்தி.

வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக முக்கியமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராகர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.

‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார். இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர் உண்டு.

எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

🅱 இருப்பிடம்:🅱

✈ சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி செல்லும் பஸ்களில் சென்று, கோவளம் அருகேயுள்ள திருவிடந்தை ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.

No comments:

Post a Comment