Saturday 9 December 2017

தேங்காயில் இருக்கு அழகும் ஆரோக்கியமும் !

பூலோகக் கற்பக விருட்சம்’ தென்னை மரத்துக்கு இன்னொரு பெயர்... தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மகத்துவமானது. தேங்காய் என்றால் சமையலுக்குத் தேங்காய்ப்பூ, தலைக்குத் தேய்க்க, தேங்காய் எண்ணெய் என இரண்டே உபயோகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தென்னையின் ஒவ்வொரு பகுதியும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படக்கூடியது.

தென்னம் பூ (பூம்பாலை)
தென்னை மரத்தின் பூ, சாப்பிடத்  துவர்ப்பாக இருக்கும். அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு, உடனே பால் குடித்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவைச் சாப்பிடலாம்.  மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப்படுத்தும்.
வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால், சிலருக்கு மலம் கழிக்கும்போது, ரத்தம்கூட வரலாம். இதற்குத் தீர்வாக, தென்னம் பூச்சாறு, தயிர் - தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து, மலம் கழிப்பது சுலபமாகும். ரத்தம் வெளியேறுவதும் நிற்கும். 

தென்னம் பூ, களர்ச்சிக்காய், நெருஞ்சி முள் ஆகியவற்றை 20 கிராம் அளவுக்குச் சம அளவில் எடுத்து, 100 மி.லி ஆட்டுப் பாலில் வேகவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டுவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குறும்பை
முதிராமல் உதிரும் தேங்காய்க்குக்  குறும்பை என்று பெயர். வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல்,  தீப்புண்ணுக்கு, குறும்பை நல்ல மருந்து. விஷம் குடித்ததால்  குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில்  ரணமாகியிருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள்,  அதிக மது குடித்து குடல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.

குறும்பையைச் சின்ன சின்னதாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது கால் லிட்டர் தண்ணீராகச் சுண்டிய பின், வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடிக்க வேண்டும்.
குருத்து
இளநீரை வெட்டும் போது வெள்ளைப் பகுதியாக சிறிது தடிமனாக இருப்பதுதான் குருத்து. இளம் தென்னங் குருத்தில் அதிகப் பலன்கள் உள்ளன. இது துவர்ப்புச் சுவையைத் தரும். வெள்ளைப் பகுதியை (குருத்து) நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, கொதிக்கவிட்டு,  கால் லிட்டர் தண்ணீராக மாறிய பின் குடிக்கலாம். வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடித்துவர, மூலம், ரத்த மூலம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.
இளநீர்
இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ஒரே அளவு என்பதால், அவசர காலத்தில் குளுக்கோஸுக்குப் பதிலாக, இளநீரையே சிலசமயம் நேரடியாக  ரத்த நாளத்தில் ஏற்றுவார்கள். அவ்வளவு மருத்துவப் பயன்கொண்டது. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது. அப்படிக் குடித்தால், இரண்டு நாட்கள் வரை வயிறு உப்பசமாக, மந்தமாக இருக்கும். காலை உணவு அல்லது மதிய உணவு முடிந்து, இரண்டு மணி நேரம் கழித்த பிறகே, குடிக்க வேண்டும்.
முற்றாத இளநீரைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். நீர்க்கடுப்புப் பிரச்னை இருந்தால், வெட்டிய இளநீரில் இரண்டு கிராம் சீரகத்தைப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து சீரகம் கலந்த இளநீரைக் குடிக்கலாம்.
சீரகம், சிறுபயிறு தலா இரண்டு கிராம் எடுத்து, இளநீரில் ஆறு மணி நேரம் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். ஊறிய சீரகம் மற்றும் சிறுபயிறை நன்கு மென்று சாப்பிடலாம். தீவிரமான நீர்க்கடுப்பு, நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழிக்காமல் இருத்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
தேங்காய்ப் பால்
வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாக, அரை மூடி தேங்காயிலிருந்து எடுத்த பாலில், சோம்பு கால் ஸ்பூன் கலந்து, குடிக்க வேண்டும்.  வண்டு, பூரான், அட்டைப் பூச்சிக் கடிக்கு வலியைப் போக்க, தேங்காய்ப் பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். பூச்சி கடித்த இடங்கள், ஜலதோஷத்தினால் மூக்கில் ஏற்படும் புண்களுக்கு தேங்காய்ப் பாலில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க ரணம் குணமாகும். அட்டைப் பூச்சிக்கடியின் மேல் தேங்காய்ப் பாலுடன், சுண்ணாம்பை சேர்த்து வைக்கலாம்.
தேங்காய்
தேங்காய்த் துருவல் 1/2 மூடி, பனங்கல்கண்டு 2 ஸ்பூன், 3 துளி நெய் கலந்து வாணலியில் வறுக்க, பாகு சேர்த்த பர்பி போல மாறும். அதை,  மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்க, சளி, இருமல் நீங்கிவிடும். மலம் மூலமாகச் சளி வெளியேறும். இதைச் சாப்பிட்ட பின், தண்ணீர் குடிக்கக் கூடாது. பெரியவர்கள், இதோடு சிறிது சுக்குப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால், சளி, இருமல் தொல்லை நீங்கும்.
தேங்காய் அழகுப் பலன்கள்
தாவர எண்ணெய்களில் தேங்காயில்தான் கிளிசரின் அளவு (13.5) அதிகம். கொப்பரையிலிருந்தும் தேங்காய்ப் பாலிலிருந்தும் என இருமுறைகளில் தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். தேங்காய் பாலிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது.
தேங்காய்த் துருவலை அடுப்பில்வைத்து வதக்கினால், எண்ணெய் போல மிதக்கும், அவற்றை அப்படியே எடுத்து, மெல்லிய வெள்ளைத் துணியில் வைத்து, அம்மைத் தழும்புகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஒற்றி எடுக்க, அம்மைத் தழும்புகள், கரும்புள்ளிகள் மறையும்.
ஒரு முழுத் தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட பாலை, அடுப்பில் வைத்துக் காய்ச்ச, அது எண்ணெயாக மாறும். அதைக் கரும்புள்ளிகள், அம்மைத் தழும்புகள், தீப்புண், வெட்டுக் காயங்கள், சொறி, சிரங்கு ஆகியவற்றில் மேல் பூசிவர, காயங்கள் தழும்புகள் மறைந்து அழகான சருமம் கிடைக்கும். பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் படர்தாமரைக்குக்கூட, இந்த எண்ணெயைப் பூசலாம். 
தலையிலும் சருமத்திலும் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெப்பாலை இலைகளைப் போட்டு மூன்று நாட்கள் வெயிலில்வைத்து, தலையிலும், சருமத்திலும் தடவினால், பொடுகு குணமாகும். உடல் முழுவதும் மசாஜ் செய்ய குழந்தைகளுக்குச் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையே சிறந்தது.
சிரட்டை (தேங்காய் ஓடு) மூலமாகத் தயாரிக்கும் கான்சன்ட்ரேடட் எண்ணெயை, சித்த மருந்துக் கடைகளில் வாங்கி, அனைத்து சருமப் பிரச்னைகளுக்கும் தடவலாம். 
தேங்காய், இளநீர், தென்னம் பூ போன்ற தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘நாரிகேளாஞ்சனம்’ என்ற மையை, குறைந்த அளவில் எடுத்து, கண் மையாகப் பூசிவரலாம். இதனால், கண் வலி, கண் புரை, கண் தொற்று, கண் நோய்கள், பார்வைத் திறன் குறைதல் போன்றவை வராது. மாதவிலக்கு சமயங்களிலும், கருவுற்றபோதும், எண்ணெய் குளியல் எடுத்த அன்றும் இந்த மையைப் பூசக் கூடாது.
இனி தேங்காயை பயன்படுத்தும்போது, அதன் இத்தனை பலன்களும்  நினைவுக்கு வரும்தானே?

No comments:

Post a Comment