Sunday 31 December 2017

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு (திருக்கருப்பறியலூர்) - நாகப்பட்டினம்.

தருமம் செய்ய உகந்த சிவஸ்தலம் ; எழுபத்திரண்டு சித்தர் பெருமக்கள் தொழுத திவ்விய க்ஷேத்திரம் ; இத்தல ஈசனை தொழுதால் நூற்றி எட்டு விஷ்ணு புண்ணிய க்ஷேத்திரங்களைத் தொழுத பெரும் புண்ணியம் சேரக்கூடிய ஸ்தலம் ; சிவனின் திருப்பாதத்தை சேர விரும்பும் பக்தர் தொழுதெழ வேண்டிய சிவ திவ்விய க்ஷேத்திரம்.

🔥🔱🔥🔱 BRS🔥🔱🔥🔱🔥

தொலைப்பேசி : +91- 4364 - 258833 , 203678 ;9443190169

🌱🏵🌱🏵 BRS🌱🏵🌱🏵🌱

மூலவர் : குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர் )

 அம்மன்/தாயார் : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை )

 தல விருட்சம் : கொடி முல்லை

தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண, காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி

ஊர் : தலைஞாயிறு

பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே. -திருஞானசம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 27வது தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு.

🌻 சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
🅱 தல சிறப்பு:🅱

🌱 இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

🌱 திருஞானசம்பந்தர், சுந்தரர் இருவருமே தங்கள் பதிகங்களில் இக்கோவிலை "கொகுடிக்கோயில்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

🌱 சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் 'தலைஞாயிறு' என வழங்கப்படுகிறது.

🌱 இத்திருத்தலத்தில் செய்யப்படும் தரும செயல்கள் யாவும் ஒன்றுக்கு பத்தாக பலன் தருகின்றன.

🌱 இத்தல இறைவனை வசிஷ்டரால் பூஜிக்கப்பட்டவர்.

🌱 இத்தல ஈசனை தொழுதால் நூற்றி எட்டு விஷ்ணு புண்ணிய க்ஷேத்திரங்களைத் தொழுத பெரும் புண்ணியம் சேரும் என்கின்றார் அகத்தியர்.

🌱 வசிஷ்டர், தயரத சக்கரவர்த்தியின் குலகுரு. ராமசந்திர மூர்த்தியால் பூஜிக்கப்பட்டவர். இதனை அழகுற அகத்தியன் பேசுகின்றார்.

“தயரதன் தங்குலகுரு வசிட்டங் கொண்டாடி
யுருச் செய் செய்குற்றமே பொறுத்தானை
தொழுதெவார் தமக்கு யெண்ணற்ற மாலவன
ம்பலந் தொழுதெழு புண்ணியங் கூடுமன்றோ.”
(செய்குற்றம் என்பது செய்த குற்றம், செய்யும் குற்றம் அன்றி இனி திட்ட மிட்டு செய்யப்போகும் குற்றத்தையும் பொறுத்துக் காப்பவன் என்று பொருள்.)

🌱ஆதித்ய பகவான் கொலுவிருந்த தலம் என்பதினால், அகத்தியன் இத்திருத்தலத்தை ‘தலை ஞாயிறு’ என்றார். இன்றளவும் இப்பெயரே வழங்குகின்றது.

🌱 இத்திருக்கோயிலின் சிறப்பை, மாண்பை கோல மகரிஷிகள் விவரிக்கின்றார்.

🌱 “அட்டநவ சித்தர் கொண்டாடிடும் தலம்
யீண்டு தொழுதக்கால் அன்னை கரு
தங்கலிலை சத்தியமே.” - என்றார்.

🌱 “குடமுனி உலோபமுத்திரையோடு மேலைக்
காழி யுறைவானை தொழுதவாறு தொழுதுய்ய
பிறவி பல பெற்று புண்ணியஞ் செய்துமே” - என்கிறார் இடைக்காடனார் எனுஞ் சித்தர்.

🌱 உலோப முத்திரை, அகத்திய முனிவரின் துணைவியார். சிலருக்கு கருவிலே சிசுக்கள் கலைவது உண்டு. சிலருக்கு குழந்தைகள் பிறந்த உடன் இறப்பதும், சில குடும்பத்தில் சிசு மரணம் ஏற்படுதலும், சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டாகின்றன. இவை எல்லாம் ‘ஆலாள’ என்ற தோஷத்தினால் நிகழ்கின்றன. இத்தோஷங்களை கோயில்களில் பிரார்த்தித்துத்தான் போக்க வேண்டுமே அல்லாமல் பரிகாரம், சிரார்த்தம் போன்றவற்றால் நீக்க இயலாது.

🌱 ‘ஆலாள’ தோஷமறுபட ஓராயிரத்தெட்டு சிவன் அம்பலங்களில் ஒரு முகூர்த்த நாழிகை உளமுருகி பிரார்த்திக்க வேண்டும். அப்படி இயலாதவர்கள், இந்தக் குற்றம் பொறுத்த நாதர் திருவடியை கணப்பொழுது கருத்து ஒருமித்து தொழுதால் தொலையும் என்கின்றார் கருவூர்ச் சித்தர்.

🌱 “கரும நாசமாக வாலாளப் பீடை
யறுபட்டே துர்சுவப் பனமுடனே
யகால காலனண்டாது வோட
சிசுச் சாக்காடகற்ற கருவாவான்
மேலைக் காழி யுறை அபராதசமேசனே.”

🌱 இத்திருக்கோயில் கரும நாசனி என சித்தர் பெருமக்களால் போற்றப்படும் திவ்விய தலம்.

🌱 தேவர்கள், இத்திருத்தலத்தை ‘கர்ம நாசபுரம்’  என்ற பெயரால் அழைத்தனர்.

🌱 ‘ஆலாள’ தோஷம் அறுபட, மற்றைய சிசு மரணம் விலக அபராதசமேசனை தொழுவீரே என்றார்.

🌱 அருள்மிகு குற்றம் பொறுத்த ஈஸ்வரனுக்கு ‘அபராதசமேசுவரர்’ என்ற பெயரும் உண்டு. இது அகத்திய முனிவரும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியும் சேர்ந்து வணங்கி வாழ்த்திய பெயராகும்.

🌱 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 27 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱

💡இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

💡சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை "மேலைக்காழி' என்பர்.

💡 கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
⚖ குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண் வாரிசு வேண்டுபவர்களும், பெண் வாரிசு வேண்டுபவர்களும் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

❀ பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர்.
 
🅱 தலபெருமை:🅱

🔥விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு.

🔥இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் என தல புராணம் கூறுகிறது.

🔥 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது.

🔥 சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் "கருப்பறியலூர்' என வழங்கப்படுகிறது.

🔥 அனுமன் தோஷம் நீங்கிய தலம் ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் "இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா'' என்றார்.

🔥 உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.

🔥 ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவபாராதம் ஏற்பட்டது.

🔥சிவனை குறித்து தவமிருந்தால் சிவபாராதம் நீங்கும் என ராமர், அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, "அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்,'' என அருள்பாலித்தார்.

🔥அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது "திருக்குரக்கா' என வழங்கப்படுகிறது.

🅱 கல்வெட்டுகள்:🅱

🍄 இக்கோயில் வளாகத்திலிருந்து 19 கல்வெட்டுகள் படியெடுக் கப்பட்டுள்ளன. அவற்றுள் ஐந்து கல்வெட்டுகள் மூன்றாம் இராஜராஜருக்குரியவை. இரண்டு கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கரின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டவை.

🍄 இரண்டாம் இராஜாதிராஜரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றும் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டொன்றும் இங்குள்ளன. நான்கு கல்வெட்டுகள் உருவச் சிற்பங்களின் பெயர்களைத் தருவனவாக அமைந்துள்ளன.

🍄 ஒரு கல்வெட்டு கோட்டப் பிள்ளையாரைச் சுந்தரப் பிள்ளையார் என்று அழைக்கிறது. இரண்டு கல்வெட்டுகள் விக்கிரமசோழ வேளார் திருமலை திருமஞ்சண மண்டபம், குற்றம்பொறுத்த ஈசுவரர் கோயிலின் பெருமண்டபம் ஆகியவற்றை எடுப்பித்த தகவலைப் பகிர்ந்துகொள்கின்றன.

🍄 மூன்று கல்வெட்டுகள் மன்னர் பெயரின்றிக் கிடைத்துள்ளன.

🍄 பெரும்பாலான கல்வெட்டுகளில் பார்வதிபாகர் கோயிலாகக் குறிக்கப்படும் இவ்வளாகம், இராஜாதிராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டு அகரம் ஸ்ரீகுலோத்துங்கசோழன் தனி நாயகச் சதுர்வேதிமங்கலத்தில் இருந்தது. இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் ஒன்றிலேனும் தலைஞாயிறு, பறியலூர் எனும் ஊர்ப்பெயர்கள் கோயிலிருக்கும் இடத்தைச் சுட்டுவனவாக இடம்பெறாமை வியப்பளிக்கிறது.

🍄 உய்யக்கொண்டார் வளநாடு, அமரநாடு எனும் வருவாய்ப் பிரிவுகளுடன் ஆறு ஊர்ப்பெயர்களை இக்கல்வெட்டுகளில் இருந்து பெறமுடிகிறது.

🍄 நான்கு கல்வெட்டுகள் அரச ஆணைகளாக விளங்கிய போதும் மூன்றாம் குலோத்துங்கரின் இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே திருமந்திர ஓலைநாயகமாக நெறியுடைச்சோழ மூவேந்தவேளாரும் கையெழுத்திட்டவர்களாகக் குருகுலராயர், மழவராயர், விழிஞத்தரையர், வயிராதராயர், வேணாடுடையார், மலையப்பராயர், காடுவெட்டி, நரசிங்கபன்மர், அமரகோன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

🅱 கோவில் அமைப்பு:🅱

🌸 தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

🌸 உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது. பிராகாரத்தில் சீர்காழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது.

🌸 மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டை நாதரைத் தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏறவேண்டும்.

🌸 இதனாலேயே இத்தலம் மேலைக்காழி என்றழைக்கப்படுகிறது. தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர்.

🌸 தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.

🌸 கருவறையில் சிவபெருமானும் உமையும் சுகாசனத்தில் சுதையுருவங்களாய் உள்ளனர். சடைமகுடம், சிற்றாடை, கழுத்தணிகள், மகர குண்டலங்கள் செவிப்பூக்கள், தோள், கை வளைகள் அணிந்துள்ள தோணியப்பரின் பின்கைகளில் மானும் மழுவும். வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடகத்தில் உள்ளது. இறைவன், இறைவியின் கீழிறக்கிய பாதம் இருத்தத் தாமரைத் தளங்கள் காட்டப்பட்டுள்ளன.

🌸 இறைவனின் இடப்புறமுள்ள இறைவி கரண்டமகுடம், பட்டாடை அணிந்து, வலக்கையை கடகத்திலும் இடக்கையை இருக்கையின்மீதும் இருத்திக் காட்சிதருகிறார்.

🅱 தல வரலாறு:🅱

⚜ ராவணனின் மகன் மேகநாதன். இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு "இந்திரஜித்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான்.

⚜ இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான்.

⚜ இந்த செய்தியை கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் "குற்றம் பொறுத்த நாதர்' எனப்படுகிறார்.

⚜ இத்தலத்தில் மற்றுமொரு வரலாறும் செல்லப்படுகிறது.

⚜ ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான்.

⚜ இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும்,  குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண், பெண் வாரிசு வேண்டுபவர்களும் வழிபடவேண்டிய தலம்.

♻  வெண்குஷ்டம், மேக நோய், சொரி, சிரங்கு, தேமல், சூரிய வெப்பத்தினால் தோன்றும் தோல் நிற மாற்றந் தரும் பிணிகளிலிருந்து விடுபட இந்த குற்றம் பொறுத்த நாதனைக் வழிபடுங்கள் என்கிறார் சட்டை முனிச்சித்தர்.

🅱 இருப்பிடம்:🅱

✈ வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து (8 கி.மீ) மணல் மேடு செல்லும் வழியில் தலைஞாயிறு உள்ளது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

No comments:

Post a Comment