Friday 1 July 2016

சிவ சின்னம் - உருத்திராட்சம்

சிவ சின்னம் - உருத்திராட்சம்

உருத்திராட்சம் என்பது உருத்திர + அட்சம் . ஸ்ரீகண்ட உருத்திரரின் கண் என்று பொருள் . சிவபெருமானின் கண்ணிலிருந்து தோன்றிய கண்ணீரே உருத்திராட்ச மரம் என்பது வரலாறு
ஒவ்வொரு மரத்திற்கும் அதிதெய்வம் என்று ஒன்று உண்டு.இந்த உருத்திராட்ச மரத்திற்கு சிவபெருமானே அதிதெய்வமாக உள்ளார்  

 உருத்திராட்சம்,உருத்திராக்கம், கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி,கண்டம், நாயகமணி, கண்மணி,  கண்டி, கண்டிகை, முண்மணி அக்கமணி என பல பெயர்களால் அழைக்க பெறுகிறது.சம்பந்தர் சுவாமிகள் தமது நமசிவாயப் பதிகத்தில் அக்குமாலை கொடு அங்கையில் எண்ணுவார் என்றே பாடியுள்ளார்.

பெண்களுக்கு மாங்கல்யம் போல சிவனடியார்,
சிவத்தொண்டர்களுக்கு உருத்திராட்சம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் .மூர்த்தி நாயனார் உருத்திராட்சம்,ஜடாமுடி,திருநீறு என்று இவற்றினால் வாழ்ந்தார் . சுந்தரமூர்த்தி சுவாமிகள் மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் என்று தமது திருத்தொண்டத் தொகையில் பாடியுள்ளார் .

இந்த உருத்திராட்சம் ஒரு முகம் முதல் 38 முகம்  உள்ளதாக கூறுகிறார்கள் .நாம் பொதுவில் ஐந்து முகம் உள்ள உருத்திராட்சத்தை பயன்படுத்தலாம் . இயற்கையாகவே துளையுள்ள ஒன்று தான் உருத்திராட்சம். 


யாரெல்லாம்  உருத்திராட்சம் அணியலாம்?    
1.தீட்சை பெற்றவர் பெறாதவர் என அனைவரும் அணியலாம் 
2.ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் எல்லா வயதினரும் எல்லாக்காலத்தும் அணியலாம் 
3.மது மாமிசம் அறவே சாப்பிடக்கூடாது .அதன் புனிதம் காக்கப்படவேண்டும்  
4.தாம்பத்தியம் செய்ய இல்லற வாழ்க்கைக்கு தடை எதுவும் இல்லை
5.பெண்கள் மாதவிலக்கு பிறப்பு இறப்பு தீட்டு 
என்று  எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது ஏனெனில் இவையெல்லாம் மனிதபிறவியில்  உண்டான இயற்கை நிகழ்வுகளே ஆகும்  
6.வியாதி உள்ளவர்கள், குழந்தைகள் , மன நோய்க்கு ஆட்பட்டவர்கள், நரம்பு,வலிப்பு, இரத்தஅழுத்தம் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் என சகல நோய் பீடித்தவர்களுக்கும் மிக சிறந்த வைத்தியமாகும்   
7.பில்லி  ஏவல் சூனியம் பேய் பிசாசு  தந்திரம் மந்திரம் எந்திரம் கண் திருஷ்டி போன்ற எதுவும்  உருத்திராட்சம் அணிந்தவர்களுக்கு வேலை செய்யாது .
8.சிவப்பு கயிற்றில் கோர்த்து கழுத்தில் கண்டத்தில் படுமாறு அணிய வேண்டும் 
9.குளிக்கும்போது உருத்திராட்சம் அணிந்து குளித்தால் கங்கையில் குளித்த பலன் உண்டு 
10.ஒரு முறை அணிந்தால் வாழ்நாள் முழுக்க
அணிந்திருக்க வேண்டும் .மரணத்தின் போது எமகணங்கள் நம்மை நெருங்காது . சிவகணங்கள் வந்து கொண்டு செல்வார்கள் அதனால் நரகம் கண்டிப்பாக இல்லை .
11.ஆலய வழிபாட்டின் போதும் சிவபூசையின் போதும் கண்டிப்பாக உருத்திராட்சம் அணிய வேண்டும் அதில் உள்ள மின் காந்த ஆற்றல் நமக்கு இறைவனை நெருங்கி இழுத்து வரும் காந்தம் இரும்பை ஈர்ப்பது போல  

 உருத்திராட்சத்தின்  பயன்கள்  

1.அணிந்து கொள்ள  
2.செபிக்க  
3.பூசிக்க 

 உருத்திராட்சம் அணியும் இடங்களும் எண்ணிக்கையும்  

1.குடுமி-------------1மணி 
2. தலை------------22மணிகள் - இண்டை என்று பெயர் 
3.காதுகள்----------1(அ )6 மணிகள்  -ஆறுகட்டி என்று பெயர் 
4.கழுத்து-----------32 மணிகள் - ஆரம் என்று பெயர் 
5.மார்பு ------------108(அ) 54 மணிகள் - மாலை என்று பெயர் 
6.புயங்கள்(தோள் )--------16 மணிகள் - வடம் என்று பெயர் 
7.கைகள்----------12 மணிகள் - கடகம் என்று பெயர்  


ஒரு உருத்திராட்சம் அணிந்து கொள்ள எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது .உருத்திராட்சம் ஒன்றுக்கு மேற்பட்டு அணியும் போது சயனத்தின் போதும் (உறக்கம் ) மலசலம் கழிக்கும் போதும்,பிறப்பு இறப்பு மற்றும் தீட்டு காலங்களிலும்  புணர்ச்சி எனும் ஆண் பெண் சேர்க்கையின் போதும் அணியக்கூடாது அப்போது கழட்டி வைத்து விட வேண்டும் 

மந்திரங்களை உச்சரிப்பது தான் ஜெபம்  அது மட்டுமே  ஜெபம் எனப்படும்.எதை ஜெபிக்கவேண்டும் .ஐந்தெழுத்தை ஜெபிக்க வேண்டும் .(THE METHOD OF  CHANTING IS CALLED JEBAM ) 

இந்த செபம் முறைகள் நான்கு வகைப்படும் :
1.உரை 
2. மந்தம் 
3. மானதம் 
4.சுத்த மானதம் 

1.உரை என்பது பிறர் காதுக்கு கேட்பது போல உரக்க செபிப்பது
2.மந்தம் என்பது நம் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் செபிப்பது 
3.மானதம் என்பது சத்தம் வெளியே வராமல் உதடு அசையாமல் செபிப்பது 
4.சுத்த மானதம் என்பது மனம் சம்பந்தம் இல்லாமலே செபிப்பது .அது சாமான்யர்களுக்கு அரிது 


ஜெப மாலை என்று தனியாக வைத்துக்
கொள்ள  வேண்டும் அது 108 மணிகள் அல்லது 54 மணிகள் கொண்டிருக்க வேண்டும் அதில் நாயக மணி (மேரு மணி ) ஒன்று சேர்த்துக் கொள்ளவேண்டும் .108 முறை ஐந்தெழுத்தை குரு நாதர் உபதேசித்த வண்ணம் ஜெபிக்க வேண்டும் . 54 மணிகள் கொண்டிருந்தால் மேரு மணியை தாண்டாமல் திருப்பி எண்ணி செபிக்கவேண்டும்.இப்படி செபிக்கும்போது வலது கையில் கொண்டு இதயத்தின் அருகே வைத்து ஆள்காட்டிவிரல் மீது வைத்து பெருவிரலால் நகர்த்தி செபிக்கவேண்டும் . அப்போது பிறர் பாராத வண்ணம் ஒரு வஸ்திரம் கொண்டு மூடிக்கொள்ளவேண்டும்
ஏனென்றால் பிறர் பார்வை பட்டால் மந்திரம் பலிக்காது 
 
ஜெபிக்கும்போது நாம் இன்னும் ஒரு பிறவி எடுத்து இன்னும் அதிக காலம் சிவ சிந்தனையோடும் சிவபூசை செய்தும் பின் இறைவனடி சேர விரும்பினால் செபிக்கும் போது மணியை நம்மை நோக்கி விரலால் நகர்த்தவேண்டும் . அதற்கு போக காமிகள் என்று பெயர்.

இப்பிறவியிலேயே நமக்கு முக்தி பெற வேண்டும் பிறவி தளையில் இருந்து மீள வேண்டும் என்றால் மணியை மேல் நோக்கி தள்ளி செபிக்கவேண்டும் அதற்கு பெயர் முக்தி காமிகள் எனப்படும் .

மேற்சொன்ன போககாமி முக்திகாமி என்று நீங்கள் ஜெபம் செய்யும் முறையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது .குரு நாதர், மனைவி 
என்று யாரிடமும் அதை பகிர கூடாது உங்கள் மனதுள்ளேயே வைத்துக்கொள்ளவேண்டும் 
 
2 முக 3முக  12முக 13 முக உருத்திராட்ச மணிகள் ஜெப மாலைக்கு ஆகாது

ஏன் 108 முறை ஜெபிக்க வேண்டும் ?

 நாம் ஒரு நாளில் சராசரியாக 21600 தடவை சுவாசிப்பதாக சொல்லப்படுகிறது .அதில் பாதி நேரம் உறக்கம் ஒய்வு போக மீதம் 10800 முறை நாம் விழித்து இருந்து சுவாசிக்கிறோம் .அதில் 100 இல் ஒரு பங்கு 108 .எனவே 100 மூச்சுக் காற்றுக்கு ஒரு முறை இறைவனை நினைக்க அதை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே 108 ஜெபம் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் வகுத்து வைத்துள்ளார்கள் . இறைவனின் மிகப்பெரிய கருணையை இது காட்டுகிறது   

ஏன் ஐந்தெழுத்தை ஜெபிக்கவேண்டும் .ஓதுதல் என்று சொன்னால் என்ன என்ற கேள்வி வரும். காரணம்  திருமுறைகள்  - ஓத வேண்டும் 
சாத்திரங்கள் - கற்க வேண்டும் . 
திரு உருவங்களை (கடவுளை) - தியானிக்க வேண்டும். மந்திரங்களை -  ஜெபிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரம் தலையாய 
மந்திரம் அதனால் அதை ஜெபிக்க வேண்டும் 
அதனால் நம் வினைகள் (பாவங்கள்)அழியும்

சிவபூசைக்கு சிவலிங்கம் இல்லாத இடத்தில் உருத்திராட்சத்தையே சிவலிங்கமாக பூசிக்கலாம் இதற்கு சணிகலிங்கம் என்று பெயர். சணிகலிங்கம் என்றால் பூசித்ததும் விட்டு விடுதல் என்று பொருள் . இது போல சணிகலிங்கமாக அன்னம், மண்,ஆற்று மணல்,
அரிசி,கோமியம், முதலானவற்றையும் பூசிக்க உகந்தவை என்று அருளியுள்ளார்கள் 

உருத்திராட்சம் அளவு நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது, இலந்தைக் கனி அளவுள்ளது மத்திமம், கடலை அளவுடையது அதமம் என்று அதன் வடிவ அளவு கொண்டும் ஒரு வரையறை உள்ளது 

உருத்திராட்சம் உண்மையானதா இல்லையா என பரிசோதிக்க நீரில் இட்டால் மூழ்கினால் அது நல்ல உருத்திராட்சம் .மற்ற தாவர விதைகள் நீரில் மிதக்கும் தன்மையுடையன .

உருத்திராட்சம் அணியும் பலன்கள் 

  திருமகள் பேரருள் ,செய்தொழில் மேன்மை , கல்வி, உள்ளத்தூய்மை, மன அமைதி , திருமண பேறு , புத்திர பேறு ,கிரக பாதிப்புகள் நீக்கம் என பல நன்மைகள் கிடைக்கும் .

மாரடைப்பு, இரத்த அழுத்தம் ,நீரிழிவு , புற்று நோய் போன்ற நோய்களின் தீவிரம் குறைவதாக மேல்நாட்டு ஆராய்ச்சிகள் சொல்கின்றன ..

இந்த சிவசின்னங்கள் திருநீறு உருத்திராட்சம்
ஐந்தெழுத்து ஜெபித்தல் நமக்கு கிடைக்க நாம் அவன் அருள் பெற்றிருக்க வேண்டும். இதைக் கடைப்பிடிப்பவர்களை சிவபெருமான் தன் உள்ளங்கைகளில் வைத்து தாங்குவார் என்பதில் துளி கூட ஐயமில்லை . நம் சமய சின்னம் அணிவதை நாம் பெருமையாக கருத வேண்டும் . ஏனெனில் மிக உயர்ந்த மிகவும்  பழமையான கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட உன்னதமான கொள்கைகளை கொண்ட சமயம் சார்ந்தவர் என்று பெருமையாக பறைசாற்றிக் கொள்ளலாம் அதற்கு துளி கூட வெட்கமோ கூச்சமோ தேவையில்லை .சிவசின்னம் அணிதலை மிகப்பெரிய கடமையாக கருதி செய்யவேண்டும் 

No comments:

Post a Comment