அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்(கேது ஸ்தலம்) கீழப் பெரும்பள்ளம்
கேது தோஷ பரிகாரங்கள் தனி சந்நதி கொண்டு கேது பகவான் விளங்கும் இத் திருத்தலம் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. கேது பகவான் மோட்சம் தருபவர். திடீர் தன பிராப்தி, யோகம், புதையல் போன்றவை இவனால் ஏற்படுபவையே. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகருக்கு நீர் ஊற்றி அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்தால் கேது தோஷம் நிவர்த்தியாகும். பல வண்ணம் கொண்ட துணி, கேதுவின் தானியமான கொள், ராகுவின் தானியமான உளுந்து போன்றவற்றை வைத்து சித்திர குப்தனை தேங்காய், பழம் கொண்டு அர்ச்சித்து வழிபட்டு, பல வண்ணம் கொண்ட துணியை கோயிலுக்கும், தேங்காயையும், பழத்தையும், உளுந்தையும், கொள்ளையும் பசு மாட்டிற்கும் கொடுக்க வேண்டும். பிரம்ம தேவரையும், காளத்தி நாதரையும் வழிபட கேது பகவான் மகிழ்வார். சிவன் கோவில் சென்று கொள்ளுப் பொடி அன்னம் வைத்து வழிபடுவதும் கேது தோஷ நிவர்த்தி தரும்.
|
சுவாமி : அருள்மிகு நாகநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு சௌந்தரநாயகி.
மூர்த்தி : நடராசர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், கேது, தனி அம்பாள்.
தீர்த்தம் : நாகதீர்த்தம்.
தலவிருட்சம் : மூங்கில் மரம்.
தலச்சிறப்பு : இங்கு கேது பகவான் தனிச் சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இங்கு வந்து வழிபட்டால் கேதுத் தொடர்பான தோஷங்கள் விலகி நன்மைகள் நடக்கும். கேது தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் திருட்டு பயம், கெட்ட பழக்கங்கள், சொத்து சேதம் அடைதல் அல்லது நாசமடைதல், மானமிழத்தல் மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றால் அல்லல் படுவர். இங்கு வந்து கேது பகவானை தரிசிக்கும் பக்தர்கள் தோஷங்களில் இருந்து முக்தி அடைவர் என நம்பப்படுகிறது.
கேதுவின் திசை - வட மேற்கு,
கேதுவின் ரத்தினம் – வைடுரியம்,
கேதுவின் வண்ணம் – கரும்புகை வண்ணம்,
கேதுவின் சுவை – உறைப்பு,
கேதுவின் வாகனம் – சிங்கம்,
கேதுவின் தானியம் – கொள்ளு,
கேதுவின் தெய்வம் – விநாயகர்,
கேதுவின் மலர் – செவ்வரளி,
கேதுவின் உலோகம் – கருங்கல்,
கேதுவின் கிழமை – ஞாயிறு.
கேதுவின் பலன்கள் - தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில் இருந்து நிவர்த்தி.
தல அமைவிடம்
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயம் ஒரு சுற்றையும், ஒரு கோபுரத்தையும் கொண்டு விளங்குகிறது. பிரகாரத்தின் மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும், பிரகார நடுப் பகுதியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரும் உள்ளனர். அடுத்து, துர்க்கையும், லக்ஷ்மி சமேத நாரயணரும் அமைந்துள்ளனர். அதன் பின்னர் கஜ லஷ்மியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிரகரத்தில் கேது பகவானும், சனி பகவானும் தனி சந்நதி கொண்டுள்ளனர். பைரவர், சூரியன், ஞானசம்பந்தர் சந்நதிகளும் உண்டு. கருவறையில் நாகநாத சுவாமியும், வலப் புறம் தெற்கு நோக்கி சௌந்தர நாயகியும் வீற்றிருக்கின்றனர். நடராஜர், பஞ்ச மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். மூங்கில் மரம் இத் தல விருட்சம். கேது பகவானுக்கு சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சூரியன் , சந்திரன், செவ்வாய் பகைவர்கள்.
அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் பாடப் பெற்ற இத் தலத்திற்கு வந்த கேது பகவான், தனது பாவங்களை போக்குமாறு இறைவனை வேண்ட, இறைவனும் கேது பகவானிடம் இத் தலத்திலேயே தங்கியிருந்து கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அருளுமாறு வரம் தந்தார். மேற்கு முகமாக காட்சி தரும் கேது பகவானின், தேகம் தெய்வ வடிவிலும், தலை ஐந்து தலை நாக வடிவிலும் உள்ளது. தன் இரு கைகளை கூப்பி நாகநாதரை வணங்கிய வண்ணம் காட்சியளிக்கிறார் கேது. வாசுகி நாகம் தன் சாபம் போக்கிக் கொண்ட தலம் இது.
பாற்கடலை கடைந்து அமுதம் பெற தேவரும், அசுரரும் " வாசுகி " என்கின்ற நாகத்தை மத்தாக பயன்படுத்தினர். வலி பொறுக்க மாட்டாமல் வாசுகி விஷம் கக்க, அனைவரும் மயங்கி வீழ்ந்தனர். விஷம் பரவாமல் தடுக்க சிவ பெருமான் அதை உண்ண, உமையாளால் அவரது கண்டத்திலேயே தடுக்கப்ப்பட்டு " திருநீலகண்டனானார் ". இதை பின்னர் அறிந்த வாசுகி, இத் தலம் வந்து ஈசனை பூஜித்து வருந்தி மன்னிப்பு கேட்டது. வாசுகியின் வேண்டுதளுக்கிணங்க, ஈசன் இங்கு நாகநாதராய் அருள்பாலிக்கிறார்.
|
No comments:
Post a Comment