Tuesday 6 March 2018

வேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி


இடியாப்ப பிரியாணி 

தேவையானவை:   மீதமான இடியாப்பம் - 3 (உதிர்க்கவும்)  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தக்காளி - பாதி (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  அன்னாசி மொக்கு, ஏலக்காய் - தலா 2  பிரியாணி இலை - ஒன்று  கிராம்பு - 3  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) -  ஒன்றரை டீஸ்பூன்  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது -  ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:         வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மேலும் வதக்கவும். அதனுடன் இடியாப்பம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆலு பராத்தா

தேவையானவை:      கோதுமை மாவு - ஒரு கப்  மீதமான உருளைக்கிழங்கு மசியல் - கால் கப்  உப்பு - கால் டீஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    
    கோதுமை மாவுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்திகளின் நடுவே சிறிதளவு உருளைக்கிழங்கு மசியலை வைத்து மூடி, மீண்டும் உருட்டித் தேய்க்கவும்.  தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடான ஆலு பராத்தா ரெடி.

 
கறிவேப்பிலை இட்லி

தேவையானவை:     மீதமான இட்லி - 3 (துண்டுகளாக நறுக்கவும்)  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு  கறிவேப்பிலை பொடி, எண்ணெய் -  தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:        வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.   இரும்புச் சத்துமிக்க இந்த கறிவேப்பிலை இட்லி, அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

உப்புமா லட்டு

தேவையானவை:      மீதமான ரவை உப்புமா - ஒரு கப்  தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை - தலா கால் கப்  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். உப்புமாவைச் சிறிய  உருண்டைகளாக உருட்டவும். ஒரு தட்டில் நாட்டுச் சர்க்கரையைப் போட்டு, இன்னொரு தட்டில் வறுத்த தேங்காய்த் துருவலைப் போடவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை நாட்டுச் சர்க்கரையில் புரட்டி எடுக்கவும். பிறகு தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும்.

கீரை தோசை

தேவையானவை:    மீதமான அரைக்கீரை மசியல் - 2 டேபிள்ஸ்பூன்  தோசை மாவு - ஒரு கப்  எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:  தோசை மாவுடன் கீரை மசியலைச் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். அனைவரும் விரும்பி உண்ணும் இந்தக் கீரை தோசையில் இரும்புச் சத்து அதிகம்.

கேக் பாப்ஸ்

தேவையானவை:    மீதமான கேக்  துண்டுகள் - ஒரு கப்  வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உருக்கிய சாக்லேட் -  கால் கப்.

செய்முறை:   கேக்குடன் வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிறகு, உருண்டைகளை உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுக்கவும்.

சப்பாத்தி நூடுல்ஸ்

தேவையானவை:     மீதமான சப்பாத்தி - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)  கேரட் துருவல், வேகவைத்த ஸ்வீட் கார்ன், வேகவைத்த பச்சைப் பட்டாணி – தலா 2 டேபிள்ஸ்பூன்  குடமிளகாய் - பாதி (நீளவாக்கில் நறுக்கவும்)  நறுக்கிய வெங்காயத்தாள் - அரை டேபிள்ஸ்பூன்  சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கேரட் துருவல், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஸ்வீட் கார்ன், பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். பிறகு, சப்பாத்தியைச் சேர்த்து மேலும் வதக்கவும். அதன்மீது சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். இறுதியாக வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இந்த உணவு, இரும்புச் சத்து மிகுந்த உணவாகும்.

கொத்து பரோட்டா

தேவையானவை:   மீதமான பரோட்டா - 2 (சிறிய துண்டுகளாக்கவும்)  தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்  மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    பரோட்டா துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுவிட்டு உதிர் உதிராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி   சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு உதிர்த்த பரோட்டா, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இட்லி டிக்கா

தேவையானவை:     மீதமான மினி இட்லி - 3  இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்  பொடியாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - ஒரு கைப்பிடி அளவு  பனீர் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு  வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு, சூடானதும் மினி இட்லி, இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். தோசைக்கல்லில் மீதமுள்ள வெண்ணெய்விட்டுச் சூடாக்கி குடமிளகாய், பனீர் துண்டுகள் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். டூத் பிக்கில் முதலில் ஒரு குடமிளகாய் துண்டு குத்தவும். அதன்மீது ஒரு பனீர் துண்டு. அடுத்து மினி இட்லி என வரிசையாக அடுக்கி பரிமாறவும். 

கொத்து பனீர் ரொட்டி

தேவையானவை:   மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 4 (சதுர துண்டுகளாக்கவும்)  துருவிய பனீர் - ஒரு கைப்பிடியளவு  பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்  வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கவும்)  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் 
 கறிவேப்பிலை - சிறிதளவு  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் ரொட்டித் துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள வெண்ணெயைச் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு பனீர் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இறுதியாக வறுத்த ரொட்டியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சீஸ் தோசை
தேவையானவை:    மீதமான கேரட் பொரியல் - 2 டேபிள்ஸ்பூன்  தோசை மாவு - அரை கப்  சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசையாக ஊற்றவும். அதன்மீது கேரட் பொரியல், சீஸ் தூவி மூடி வேகவிடவும். சீஸ் உருகியதும் எடுத்துப் பரிமாறவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்த சீஸ் தோசை.

சில்லி பரோட்டா

தேவையானவை:   மீதமான பரோட்டா - 3 (சதுரத் துண்டுகளாக்கவும்)  கேரட் துருவல், நறுக்கிய முட்டைகோஸ், நறுக்கிய குடமிளகாய் – தலா கால் கப்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய வெங்காயத்தாள், சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா அரை டேபிள்ஸ்பூன்  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் -  3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கேரட், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, பரோட்டாக்களைச் சேர்த்துக் கிளறவும். அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும்.

சாத அடை

தேவையானவை:    மீதமான சாதம் - ஒரு கப்  கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்  வற்றல் பொடி -  அரை டீஸ்பூன்  தயிர் -  2 டேபிள்ஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.
செய்முறை:   சாதத்துடன் கடலை மாவு, வற்றல் பொடி, தயிர், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய்விட்டுத் தேய்த்து, மாவை அடையாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

சீஸ் பால்ஸ் 

தேவையானவை:   மீதமான சாதம் - ஒரு கப்  ஆரிகானோ, தைம், மிளகுத்தூள் -  தலா ஒரு சிட்டிகை  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்  மோசரெல்லா சீஸ் துண்டுகள், பிரெட் தூள் - தலா ஒரு கைப்பிடியளவு  உப்பு - தேவையான அளவு 
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    சாதத்துடன் ஆரிகானோ, தைம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் சீஸ் துண்டுகளை வைத்து உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

முருங்கைக்கீரை போண்டா

தேவையானவை:     மீதமான முருங்கைக்கீரை பொரியல் - கால் கப்  கடலை மாவு - முக்கால் கப்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு சேர்த்து போண்டா பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதில் முருங்கைக்கீரை பொரியல் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

டிபன் சாம்பார்

தேவையானவை:   மீதமான பருப்பு - அரை கப்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பீட்ரூட் சாதம்

தேவையானவை:    மீதமான சாதம் -  ஒரு கப்  வெங்காயம் -  ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை -  சிறிதளவு  பீட்ரூட் துருவல் - கால் கப்  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துள்ள இந்தச் சாதத்தைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது மிக நல்லது.

பிரெட் ஃபிங்கர்ஸ்
தேவையானவை:    மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 4 (விரல் போல நீளவாக்கில் நறுக்கவும்)  கடலை மாவு - அரை கப்  மிளகாய்த்தூள்  உப்பு -  தலா அரை டீஸ்பூன்  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    கடலை மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, பிரெட் துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஸ்பிரிங் ரோல்

தேவையானவை:   மீதமான கோஸ் பொரியல் - கால் கப்  கோதுமை மாவு - ஒரு கப்  உப்பு - கால் டீஸ்பூன்  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்திகளின் நடுவே கோஸ் பொரியலை வைத்து, பாய் போலச் சுருட்டி, தண்ணீர்தொட்டு ஓரங்களை ஒட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, சுருட்டிய ரோல்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பிரெட் குலாப் ஜாமூன்

தேவையானவை:    மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 7  சர்க்கரை - ஒரு கப்  ரோஸ் எசென்ஸ் - 2 துளி  பால் பவுடர், பால் - தலா 4 டேபிள்ஸ்பூன்  ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய் - 2 (தட்டவும்)  எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:   பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டுத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டுப் பொடித்து எடுக்கவும். அதனுடன் பால் பவுடர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பாலை சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் ரோஸ் எசென்ஸ், தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் உருண்டைகளைப் பொரித் தெடுக்கவும்.  பொரித்த உருண்டைகளைச் சர்க்கரைப் பாகில் ஊறவிட்டுப் பரிமாறவும்.

கேரட் - பீட்ரூட் சாலட்
தேவையானவை:    மீதமான பீட்ரூட் பொரியல் - அரை கப்  பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப்  கேரட் துருவல் - கால் கப்  எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  பீட்ரூட் பொரியலுடன் வெள்ளரிக்காய், கேரட், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள கேரட் - பீட்ரூட் சாலட் ரெடி.

குறிப்பு:        வெள்ளரிக்காய், உப்பு ஆகியவற்றைப் பரிமாறும்போது சேர்க்கவும். இல்லையென்றால் சாலட் நீர்த்துவிடும்.

வாழைப்பழப் பணியாரம்

தேவையானவை:    மீதமான தோசை மாவு - 3 கரண்டி  வாழைப்பழம் - 2 (தோல் நீக்கி, துண்டுகளாக்கி மசிக்கவும்)  உப்பு, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை  நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:          தோசை மாவுடன் உப்பு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழ விழுது சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் நெய்விட்டு உருக்கி, மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

மசாலா சாதம்

தேவையானவை:    மீதமான சாதம் - ஒரு கப்  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  அன்னாசி மொக்கு - 2  பிரியாணி இலை - ஒன்று  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடியளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். இறுதியாக சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வடைகறி

தேவையானவை:    மீதமான மசால்வடை (அ) பருப்பு வடை - 3 (சிறிய துண்டுகளாக்கவும்)  வெங்காயம்- ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தக்காளி - ஒன்றரை (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  அன்னாசி மொக்கு - 2  பிரியாணி இலை - ஒன்று  ஏலக்காய் - 2  கிராம்பு - 3 
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது  மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா 2 டீஸ்பூன்  தேங்காய்ப்பால் - 4 டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு வடைத் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

நம்ம ஊரு ஹுமூஸ்

தேவையானவை:    மீதமான வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல் - ஒரு கப்  எலுமிச்சைச் சாறு -அரை டீஸ்பூன்  பூண்டு - 2 பல்  ஆலிவ் எண்ணெய் - கால் கப்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   சுண்டலுடன், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்து எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிரெட்டுடன் பரிமாறவும். நம்ம ஊரு ஹுமூஸ், இரும்புச் சத்து மிகுந்தது.

ரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் பிற மளிகைப் பொருள்களின் விலை, `எப்படி சமாளிப்பது?’ என்று கவலைப்பட வைக்கிறது. காய்கறிகளின் விலையோ இறக்கை கட்டிப் பறக்கிறது. இத்தனை விலைகொடுத்து அவற்றை வாங்கி, அக்கறையுடன் சமைக்கும்போதும், சில நேரங்களில் செய்துவைத்த உணவு மிகுந்துபோய், குப்பைத்தொட்டிக்குப் போவது மனதைச் சங்கடத்தில் ஆழ்த்தும். இந்த வருத்தத்தில் இருந்து நீங்கள் விடுபட, உங்களுக்கு உதவும் விதத்தில் மிகுந்துபோன சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா, பொரியல் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய சுவையான ரெசிப்பி..

No comments:

Post a Comment