Thursday 8 March 2018

30 வகை ஸ்பெஷல் ரெசிப்பி


வத்தக்குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள் - தலா 3 டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, மணத்தக்காளி வற்றல் சேர்த்துக் கிளறவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: நல்லெண்ணெய் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

கருணைக்கிழங்கு வறுவல்

தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கருணைக்கிழங்கை தோல் சீவி, பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைத்து நீரை வடியவிடவும்.  கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் குழைக்கவும். இதில்  கருணைக்கிழங்கை சேர்த்துப் பிசிறி வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, கருணைக்கிழங்குச் துண்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு வறுத்து எடுக்கவும்.

ஈஸி சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கிலோ, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசல், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன்  வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

தேங்காய் இட்லிப் பொடி

தேவையானவை: தேங்காய் - ஒரு மூடி (துருவவும்), கடலைப்பருப்பு, உளுந்து - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற பொடி இது. நல்லெண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம்.

பொரிச்ச கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், புடலங்காய் - கால் கிலோ (விதை, நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன். 
செய்முறை: பாசிப்பருப்பை வேகவைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் தேங்காய்த் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் புடலங்காய், மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு, பருப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கவும்.

அரிசி இட்லிப் பொடி

தேவையானவை: புழுங்கல் அரிசி, உளுந்து - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் -  5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

வேப்பம்பூ ரசம்

தேவையானவை: வேப்பம்பூ - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா), துவரம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், மல்லி (தனியா), துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாய் ஒன்று, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

வேப்பம்பூ துவையல்

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடியளவு, கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை (புளி, கடுகு தவிர) வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். ஆறிய பின் புளி சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

முருங்கைக்கீரை சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை - கைப்பிடியளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொள்ளு - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், கொள்ளு, முருங்கைக்கீரை சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது, தேவையான தண்ணீர், சோள மாவுக் கரைசல், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.

அவல் கொழுக்கட்டை

தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 2 (தட்டவும்), தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்.
செய்முறை: அவலை மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதனுடன் அரைத்த அவல், ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறிய பின் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும் (இட்லி பானையில் / இட்லி குக்கரில் வேகவைக்கலாம்)

கேரட் கீர்

தேவையானவை: கேரட்  - 2 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), காய்ச்சாத பால் - கால் லிட்டர், ஏலக்காய் - 3 (தட்டவும்), முந்திரி - 6, சர்க்கரை - அரை கப்.
செய்முறை: முந்திரியைச் சுடுநீரில் சிறிது நேரம் ஊறவிடவும்.  குக்கரில் கேரட்டுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.  ஆறியபின் கேரட்டுடன் முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். இதனுடன் அரைத்த விழுது, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப்,  ஏலக்காய் - 2 (தட்டவும்), முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.
செய்முறை:  வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அவலை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் உடைத்த அவல், ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

கீரை தோசை

தேவையானவை: பாலக்கீரை - அரை கட்டு, தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தோசை மாவு - 2 கப், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பாலக்கீரையின் நரம்பு நீக்கி கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். தோசை மாவுடன் அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: தோசை மாவிலேயே உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப் படுபவர்கள், மிகவும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

கார்ன்  சுண்டல்

தேவையானவை:  கார்ன் (முழு சோளம்) - ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கார்னை உப்பு சேர்த்து வேகவைத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் உதிர்த்த கார்ன் முத்துகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கடலை மாவு -  கீரை சப்பாத்தி

தேவையானவை: கடலை மாவு - 300 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, கீரை, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லை க்காயவைத்து திரட்டிய சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

வேர்க்கடலைப் பால் பாயசம்

தேவையானவை: பாசிப் பருப்பு, வெல்லம் -  தலா 150 கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்.
செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்துக் குழைவாக வேகவிடவும். மிக்ஸியில் வேர்க்கடலையுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வெந்த பருப்புடன் சேர்த்துச் சூடாக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

கோதுமை ரவை - காய்கறி சாதம்

தேவையானவை: கோதுமை ரவை – 500 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவை - 100 கிராம், கேரட், பீன்ஸ் - தலா 150 கிராம், கீரை - சிறிய கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), எலுமிச்சைப் பழம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளுடன் கேரட், பீன்ஸ், கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, கோதுமை ரவைச் சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் வேகவைத்த பருப்பு - காய்கறி கலவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.  இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். இத்துடன் சூடான எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப் 
பரிமாறவும்.

மாவிளக்கு

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய்  - 3, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து நிழலில் உலர்த்தவும். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும்.

கொத்தமல்லி சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், கொத்தமல்லித்தழை  - 2 கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரி - 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து கலக்கவும். மேலே வறுத்த கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

கீரை - கடலைப்பருப்பு கட்லெட்

தேவையானவை: கடலைப்பருப்பு - 250 கிராம், ஏதாவது ஒருவகை கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து, நறுக்கவும்), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), பிரெட் ஸ்லைஸ் -  5 ( மிக்ஸியில் பொடிக்கவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்புடன் கீரை சேர்த்து வேகவைத்து மசிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, அரைத்த பிரெட் பொடி, உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கி கட்லெட் வடிவில் தட்டவும். தோசைக்கல்லை காயவைத்து, கட்லெட்டுகளை அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.

புளியோதரை பொடி சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எள் - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை -  தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். கலவை கெட்டியான பிறகு சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எள்ளு சாதம்

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - ஒரு கப், எள் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எள்ளை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து காயவைக்கவும். காய்ந்த எள்ளை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிட்டு எடுக்கவும். பிறகு, அதே வாணலியில்  காய்ந்த மிளகாய், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு, எள்ளுடன் வறுத்த பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.  சாதத்துடன் அரைத்த பொடி சேர்த்துக் கிளறினால் எள்ளு சாதம் ரெடி.

வெஜ் சப்ஜி

தேவையானவை: கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா (மல்லி), கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். குக்கரில் காய்கறிகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு சீரகம் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து மேலும் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் - குடமிளகாய் பொரியல்

தேவையானவை: வாழைக்காய், குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வேர்க்கடலை - 3 டீஸ்பூன்.

செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி, வாழைக்காய், குடமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். இறுதியாக கறிவேப்பிலை, அரைத்த பொடி தூவிக் கிளறி இறக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 2, ஊறவைத்த கடலைப் பருப்பு  - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோலைச் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு அரைத்த கலவையைச் சிறிய வடைகளாகத் தட்டிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பச்சைப் பயறு குழம்பு

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். குக்கரில் பச்சைப் பயறைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு, தேவையான தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பச்சைப் பயறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக, அரைத்த விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

வெள்ளரிக்காய் ஸ்டூ

தேவையானவை: வெள்ளரிக்காய் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கோதுமை அப்பம்

தேவையானவை:  கோதுமை மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக்   கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பச்சைப் பயறு - அரிசி தோசை

தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறு, அரிசியை தனித் தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் களைந்து பச்சைப் பயறு, அரிசி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு மாவாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

பிரெட் உப்புமா

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்து, பிரெட் ஸ்லைஸ்களைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். கடைசியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment