Thursday 8 March 2018

வைட்டமின் டி சைவ உணவுகள்!


லும்புகள் உறுதியாக இருக்க உதவும் வைட்டமின் டி சூரிய கதிர்கள் மற்றும் சில தாவரங்களிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் வாரம் இருமுறை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதாலும், பால், யோகர்ட், சீஸ், பனீர் உட்பட சில உணவுகளாலும் வைட்டமின் டி கிடைக்கப் பெறலாம். இத்தகைய உணவுப் பொருள்களைக் கொண்டு சுவையான, வித்தியாசமான ரெசிப்பிகள்..

பனீர் டில்வாலே

தேவையானவை:  பனீர் துண்டுகள் - ஒரு கப், தயிர் - அரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 15, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வெள்ளை எள், சோள மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முந்திரியைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, விழுதாக அரைத்து எடுக்கவும். தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, முந்திரி விழுது, ஏலக்காய்த் தூள், சீரகத்தூள், மிளகுத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். சோள மாவுடன் வெள்ளை எள் சேர்த்துக் கலக்கவும். ஊறிய பனீர் துண்டுகளைச் சோள மாவு - எள் கலவையில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பனீர் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பனீர் பால்ஸ்

தேவையானவை: பனீர் துருவல் - 2 கப், வறுத்துப் பொடித்த பாதாம் -  ஒரு டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், கலர் ஸ்ப்ரிங்கிள்ஸ் - சிறிதளவு (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்).
செய்முறை: பாத்திரத் தில் பனீர் துருவலுடன் கண்டன்ஸ்டு மில்க்  சேர்த் துச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் நெய், பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். பிறகு, பால் பவுடர் சேர்த்துக் கலக்கவும். ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி, கலர் ஸ்பிரிங்கிள்ஸில் புரட்டிப் பரிமாறவும்.

பனீர் ஸ்வீட் பூரி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பனீர் துருவல் - ஒரு கப், காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு, ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, இனிப்பு சேர்க்காத கோவா - கால் கப், பொடித்த சர்க்கரை - கால் கப், வெனிலா எசன்ஸ் - சில துளிகள், வறுத்துப் பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:  பனீர் துருவலுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, கோவா, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதுவே பூரணம். கோதுமை மாவுடன் பால்விட்டு பூரி மாவு போல பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும். ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணம் வைத்து மற்றொரு பூரியால் மூடி, ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டவும் (மைதா பேஸ்ட் தொட்டும் ஒட்டலாம்). வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தயாரித்த பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பனீர் சாட்

தேவையானவை: பனீர் துண்டுகள் - அரை கப், வேகவைத்து, தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று, சாட் மசாலாத்தூள், தோல் சீவி, துருவிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழியவும். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு துண்டுகளுடன், பனீர் துண்டுகள், சாட் மசாலாத்தூள், உப்பு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

ஸ்டஃப்டு மஷ்ரூம்

தேவையானவை:  காளான் - 12, டூத் பிக், எண்ணெய், உப்பு -  தேவையான  அளவு.

ஸ்டஃபிங் செய்ய:
 நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு, அரிசி மாவு, மைதா மாவு, கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மைதா மாவுடன் அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.  இதுவே ஸ்டஃப்பிங் மசாலா.

காளானை நன்கு அலசி, தண்டுப் பகுதியை நீக்கவும். ஒரு காளானின் நடுவே சிறிதளவு மசாலா வைக்கவும். இதன் மீது மற்றொரு காளான் வைத்து டூத் பிக்கால் நடுவே குத்தவும். இதே முறையில் மீதமுள்ள காளான்களையும் தயாரிக்கவும். பிறகு, காளான்களை மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பிரெட் க்ரம்ஸில் புரட்டி, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, காளான்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மஷ்ரூம் கோஃப்தா கறி

தேவையானவை: பொடி யாக நறுக்கிய காளான் துண்டுகள் - ஒன்றரை கப், உருளைக்கிழங்கு - ஒன்று, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - தேவையான அளவு, வறுத்த கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த கசகசா - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
அரைக்க: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 6 பல், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, ஏலக்காய் - ஒன்று, உப்பு - சிறிதளவு, தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காளான்களைப் போட்டு வதக்கி இறக்கவும். இதனுடன் கடலை மாவு, கசகசா, உப்பு, மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசையவும். பிறகு, இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இதுவே மஷ்ரூம் கோஃப்தா (அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில்கூட இந்த உருண்டைகளை வேகவிட்டு எடுக்கலாம்).

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். இதனுடன் அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் 
வைத்துக் கிளறவும். பிறகு, உப்பு, கரம் மசாலாத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கிரேவி கெட்டியாகும்போது கோஃப்தாக்களைப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

வெந்தயக்கீரை - காளான் கறி

தேவையானவை: நறுக்கிய காளான் துண்டுகள் - ஒரு கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), ஆய்ந்த வெந்தயக்கீரை - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, ஓமம் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது -  ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, இஞ்சி - பூண்டு விழுது, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், ஓமம், வெந்தயக்கீரை, காளான் சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும் (சிறிதளவு நீர் தெளித்தும் வேகவிடலாம்).  காளான் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

இதை சாதம், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளலாம். பிரெட்டின் நடுவே வைத்து டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.

திங்கிரி டோல்மா

தேவையானவை: நறுக்கிய காளான் துண்டுகள் - ஒரு கப், பனீர் துண்டுகள் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, ஊறவைத்து அரைத்த முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், (விரும்பினால்) தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்,  துருவிய பனீர் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் காளான், சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், முந்திரி விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, பனீர் துண்டுகள், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம், பனீர் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை சேர்க்கவும். விருப்பப்பட்டால் தேன் சேர்க்கவும்.

சப்பாத்தி, பரோட்டோ, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தலாம். பிரெட் நடுவே வைத்தும் சாப்பிடலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். 

மஷ்ரூம் மசாலா டோஸ்ட்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஷ்ரூம் - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்), சோள மாவு (கார்ன்ஃப்ளார்), க்ரீன் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் குடமிளகாய், மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சோம்பு சேர்த்துக் கிளறவும். பிறகு தக்காளி கெட்சப், க்ரீன் சில்லி சாஸ் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். காளான் நன்கு வெந்ததும், சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைத்து ஊற்றிக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிடவும். தோசைக்கல்லைக் காயவிட்டு, பிரெட் ஸ்லைஸ்களை ஒவ்வொன்றாக வைத்து, சுற்றிலும் நெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்க வும். மேலே மஷ்ரூம் மசாலாவைத் தடவிப் பரிமாறவும்.

பிரெட்டை டோஸ்டரிலும் டோஸ்ட் செய்யலாம்.

ஆரஞ்சு புலாவ்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு -  2 கப், பாஸ்மதி அரிசி - ஒரு கப், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் -  கால் கப், பச்சை மிளகாய் - 2 (கீறவும்),  புதினா (அலசி, ஆய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, பிரியாணி இலை - தலா ஒன்று, பூண்டு - 8 பல், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, வடிய விடவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடானதும் அரிசியை லேசாக வறுத்து எடுக்கவும். குக்கரில் சிறிதளவு நெய்விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயத்தாள், முந்திரி, பச்சைப் பட்டாணி, புதினா, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரை கப் தண்ணீர், ஆரஞ்சுப் பழச்சாறு, அரிசி சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி 2 விசில்விட்டு இறக்கினால், ஆரஞ்சு புலாவ் ரெடி!

ஆரஞ்சுத் தோல் பச்சடி

தேவையானவை:  பொடியாக நறுக்கிய ஆரஞ்சுத் தோல் துண்டுகள் - ஒரு கப், வெல்லத்தூள் - 3 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, ஆரஞ்சு சுளைகள் - 2  (தோல், விதை நீக்கி உதிர்க்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளிக்கரைசல் - கால் கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: குக்கரில் ஆரஞ்சுத் தோலுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த ஆரஞ்சுத் தோல், புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு, வெல்லத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, அரிசி மாவில் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகக் கரைத்து இதனுடன் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆரஞ்சு சுளையைச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

இனிப்பு, புளிப்பு சுவையுடன் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பச்சடி.

ஆரஞ்சு ஸ்குவாஷ்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு - 4 கப் (விதை நீக்கி, வடிகட்டவும்), தண்ணீர் - 3 கப், சர்க்கரை - தேவையான அளவு,  கே.எம்.எஸ் பவுடர் (பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்) - கால் டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு துளி, சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட், கே.எம்.எஸ் பவுடர் சேர்த்துக் கிளறவும். பிசுக்கு பாகு பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். இதனுடன் ஆரஞ்சுப் பழச்சாறு, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும். இதுவே ஆரஞ்சு ஸ்குவாஷ். தேவையானபோது ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாஷ்விட்டுக் கலந்து பருகவும்.

குறிப்பு: ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் நன்கு குலுக்கிய பிறகு பயன்படுத்தவும். பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரெஷ்ஷாகப் பருக வேண்டுமானால் ஆரஞ்சு பழச்சாற்றுடன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள், புதினா இலை, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.

ஆரஞ்சு  ரசம்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு -  ஒரு கப் (விதை நீக்கி, வடிகட்டவும்), துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைக்கவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மல்லி (தனியா), வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடானதும் மிளகு, சீரகம், தனியா, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த துவரம்பருப்பு, சிறிதளவு தண்ணீர், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, அரைத்துவைத்த பொடி சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவிடவும். பிறகு, ஆரஞ்சுப் பழச்சாற்றை ஊற்றி நுரைத்து வரும்போது, மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

ஃப்ரூட் யோகர்ட்

தேவையானவை: பப்பாளி கூழ் - அரை கப், கெட்டித் தயிர் - 2 கப், சர்க்கரை - அரை கப், தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை: சுத்தமான மெல்லிய துணியில் தயிரை ஊற்றி மூட்டையாகக் கட்டி வடிகட்டியில் வைக்கவும். வடிகட்டியைப் பாத்திரத்தின் மேல் வைத்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பிறகு தயிரிலுள்ள தண்ணீர் வடிந்து நன்கு கெட்டியாகிவிடும்.  சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும், அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, பப்பாளிக்கூழைச் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும்.  இதனுடன் கெட்டியான  தயிர் சேர்த்துக் கலக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகும் சாப்பிடலாம்.
குறிப்பு: மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி என சீஸனில் கிடைக்கும் பழங்கள் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

சீஸ் டிப்

தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், சீஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஃபுட் வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுவே சீஸ் டிப். இதை பிரெட் மீது தடவி சாப்பிடலாம். சப்பாத்தி, நாண் உடன் தொட்டுக்கொள்ளலாம். சுவையும், சத்தும் நிறைந்தது.

சோயா பால்

தேவையானவை: சோயா பீன்ஸ் - ஒரு கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடியவிடவும். சோயாவுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியில் அல்லது மெல்லிய துணியில் வடிகட்டவும்.  வடிகட்டிய சோயா பாலுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கலந்து, கொதிக்கவைத்து இறக்கவும். பிறகு, மீண்டும் வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மேலே குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் அல்லது வெல்லப் பாகு சேர்த்தும் பருகலாம். சோயா பத்து மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும்.
லெட்டூஸ் காட்டி ரோல்ஸ்
தேவையானவை: லெட்டூஸ் இலை பெரியது - தேவையான அளவு, துருவிய சீஸ், துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சப்பாத்தி - 4, தக்காளி சாஸ், சோயா சாஸ், 
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - தலா 2 டேபிள்ஸ்பூன், முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு லெட்டூஸ் இலையை அலசி, பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெள்ளை மிளகுத்தூள், பச்சைப் பயறு, உப்பு, பனீர் துருவல், சோயா சாஸ், சீஸ் துருவல், நறுக்கிய லெட்டூஸ் இலை சேர்த்து வதக்கி இறக்கவும். ஒரு லெட்டீஸ் இலையின் மீது சப்பாத்தியை வைத்து, அதன் மீது தக்காளி சாஸ் தடவவும். அதன் மேல் சிறிதளவு லெட்டூஸ் மசாலா பரப்பி பாய் போல சுருட்டி, நடுவே டூத்பிக் குத்தி பரிமாறவும்.

லெட்டூஸ் மயோனைஸ்

தேவையானவை: நறுக்கிய லெட்டூஸ் - அரை கப், பச்சைப் பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு, மயோனைஸ் - ஒரு கப் (ரெடிமேடாகக் கிடைக்கிறது. நாமே தயாரிக்கவும் செய்யலாம்).
செய்முறை:  பட்டாணி, கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். மயோனைஸுடன் லெட்டூஸ், வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
மயோனைஸ் செய்முறை: தயிருடன் ஆலிவ் எண்ணெய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, ஃபுட் வினிகர் சேர்த்துக் கலக்கவும்.

மில்க் ஐஸ்க்ரீம்

தேவையானவை: காய்ச்சாத பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - கால் கப், ஆரஞ்சு சுளைகள் (தோல், விதை நீக்கி உதிர்க்கவும்), செர்ரிப்பழம்  - தேவையான அளவு, கண்டன்ஸ்டு மில்க் - அரை கப், வெண்ணெய் - 50 கிராம், சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன், விரும்பிய ஐஸ்க்ரீம் எசன்ஸ், முந்திரித் துருவல், பிஸ்தா துருவல்  -  தலா 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை கைவிடாமல் கிளறி, சுண்டக் காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். பிறகு, சிறிதளவு பாலில் சோள மாவைக் கரைத்துச் சேர்க்கவும். இதில் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்துக் கலந்து ஆறவிடவும். பிறகு, சிறிதளவு நட்ஸ் துருவல் சேர்த்து நன்கு அடிக்கவும் (முட்டை அடிக்கும் கருவியால் அடிக்கலாம்). இந்தக் கலவையை மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றி ஃப்ரீசரில் 5 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு, மீண்டும் நன்றாக அடிக்கவும். விருப்பமான மோல்டில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி, மீதமுள்ள நட்ஸ் துருவலை மேலே தூவி, ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். மேலே ஆரஞ்சு சுளைகள், செர்ரி பழம் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

செலரி - சீஸ் சாஸ்

தேவையானவை: செலரி - தேவையான அளவு, பனீர் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.
சீஸ் சாஸ் செய்ய:   துருவிய சீஸ் - ஒரு கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப், சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பாலுடன் சோள மாவு சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டுச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருகியதும் சோள மாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கலக்கவும். இதனுடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். இதுவே சாஸ். இதனுடன் செலரி, பனீர் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஆரஞ்சு ஃப்ளப்

தேவையானவை: ஆரஞ்சுப் பழச்சாறு - 2 கப், உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு ஜெல்லித்தூள் - ஒரு பாக்கெட், காய்ச்சிய பால் - ஒரு கப், ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப், கஸ்டர்ட் பவுடர் (ஆரஞ்சு ஃப்ளேவர்) - 2 டேபிள்ஸ்பூன்,  கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாலுடன் கஸ்டர்ட் பவுடரைச் சேர்த்துக் கரைத்துச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். சாஸ் போல கெட்டியாக வந்த வுடன் கண்டன்ஸ்டு மில்க், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் ஜெல்லித்தூள், உப்பு சேர்த்துச் சூடாக்கி, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இந்தப் பாத்திரத்தை குளிர்ந்த ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்தி ரத்துக்குள் வைக்கவும். கலவை நன்கு ஆறி, கெட்டியாகும்போது பால் கலவை சேர்த்து நன்கு அடிக்கவும் (முட்டை அடிக்கும் கருவியால் அடிக்கலாம்). கலவை நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து நுரைத்து வரும்போது விருப்பமான கிண்ணத்தில் ஊற்றவும். மேலே டூட்டி ஃப்ரூட்டி, காய்ந்த திராட்சை தூவி, ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

லெட்டூஸ் கூல் சாலட்

தேவையானவை: லெட்டூஸ் இலைகள் - 4 (பொடியாக நறுக்கவும்), உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், பாதாம், பிஸ்தா துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - ஒன்று, இளம் ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழியவும். லெட்டூஸ் இலைகளுடன் பாதாம், பிஸ்தா, சர்க்கரை, மிளகுத்தூள், உலர் திராட்சை, ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

தயிர் - சீஸ் போண்டா

தேவையானவை: உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்), துருவிய சீஸ் - ஒரு கப், சோள மாவு (கார்ன்ஃப்ளார்), மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கெட்டித்தயிர் - அரை கப், சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், ஆய்ந்த செலரி கீரை- ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். உருளைக்கிழங்குடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளைக் கரைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தயிருடன் சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் பொரித்த சீஸ் போண்டாக்களைப் போட்டு, மேலே செலரி கீரை தூவிப் பரிமாறவும்.

சோயா‌ மில்க் ஷேக்

தேவையானவை: சோயா பால் - ஒரு கப்,  காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், விருப்பமான ஃப்ரூட் கலவை - அரை கப் (தோல், விதை நீக்கியது).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும். இதனுடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும். பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு: சோயா பால் செய்முறை `சோயா பால்’ ரெசிப்பியில் தனியே குறிப்பிடப்பட்டுள்ளது.

செலரி சட்னி

தேவையானவை: செலரி கீரை - அரை கட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,  பச்சை மிளகாய் - 2, பூண்டுப் பல் - 2, தோல் சீவிய இஞ்சி -  சிறிய துண்டு, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பூண்டு, செலரி, கொத்த மல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  தாளித்து சட்னியுடன் கலந்து பரிமாறவும்.

செலரி சூப்

தேவையானவை:  நறுக்கிய செலரி கீரை - ஒரு கப் (அடிப்பகுதியை நீக்கிவிட்டு அலசி, தண்டு, இலையை நறுக்கவும்), சுக்குத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சோயா பீன்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சிவப்பு ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோயா, ராஜ்மாவை  ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுக்கவும். இதனுடன், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு,  முக்கால் கப் செலரி கீரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து வடிகட்டவும். இதைச் சூடாக்கி ஒரு கொதிவிடவும். மீதமுள்ள செலரி இலைகளைத் தூவி, சுக்குத்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

லெட்டூஸ் பொரியல்

தேவையானவை: லெட்டூஸ் இலை - 10 (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும். பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: பருப்புகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து, குழையாமல் வேகவிட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment