Tuesday 6 March 2018

சிவன் வடிவமைத்த காசி - 08

Image result for கங்கை

சப்த ரிஷிகளையும் வணங்கி, பூஜித்து, அவர்கள் அனுமதியுடன் கங்கையை தன்னுடன் வரும்படி வேண்டினான். இப்போது கங்கை முன்னே செல்ல, அவள் செல்ல விரும்பிய வழியில் ரதத்தைச் செலுத்தினான் பகீரதன்.

Related image

இன்றைய அலஹாபாத் பகுதிக்கு வரும்போது, யமுனையையும் சரஸ்வதியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திரிவேணி சங்கமமாகி, அங்கிருந்து தொடர்ந்து புண்ணிய க்ஷேத்திரமான காசி மண்ணை நனைத்து, சிவபூஜை செய்து தன் பயணத்தைத் தொடங்கினாள் கங்கை.

இன்றைய பீகாரின் மத்தியப் பகுதியைத் தாண்டும்போது, கங்கா தேவி தன் ஓட்டத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கினாள். பீகாரிலுள்ள பாகல்பூர் என்ற ஊருக்கு அருகில், சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் தென்கிழக்காக ஓடிக் கொண்டிருந்த கங்கை திடீரென திசை திரும்பி, மீண்டும் இமயத்தை நோக்கி வடக்கு திசையாக ஓட ஆரம்பித்தாள். இதனால் உத்தரவாகினி என்ற பெயர் பெற்றாள்.

Image result for கங்கை

( பொதுவாக நதிகள், தோன்றிய திசையில் திரும்பி ஓடுவதும், புண்ணிய திசையாகிய வடக்கு நோக்கிப் போவதும் ஆறுகளின் புனிதத்தை உணர்த்தும் இடங்கள். இவ்விதமே, தமிழ்நாட்டில் மேற்கிலிருந்து ஓடிவரும் காவேரி தஞ்சை மாவட்டம் குத்தாலம் - ஆடுதுறைக்கு இடையே ஓர் இடத்தில் மீண்டும் மேற்கு நோக்கியே திரும்பும் அந்த இடம் புனிதத் தலமாகப் போற்றி வணங்கப்படுகிறது.)

அப்போதும் பகீரதன் தன் முயற்சியில் தளராமல், சிவபெருமானையும் கங்கையும் பிரார்த்தித்து, தான் பெற்ற வரத்தின்படி வங்கக்கடல் வரை வரும்படி கங்கையை அழைத்தான். அப்போது சிவ பெருமான் தோன்றி, எல்லா யுகங்களிலும் கங்கை உத்தரவாகினியாகத் திரும்பிய இடத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பரிசுத்தமான கங்கையை பூஜித்து, காவடிகளில் சுமந்து செல்வார்கள்.

அவர்கள் பல காத தூரம் நடந்து சென்று, தேவ்கர் எனும் இடத்திலுள்ள சுயம்பு லிங்கமான வைத்தியநாதருக்கு அந்த நீரை அபிஷேகம் செய்து, புண்ணியம் பெறுவார்கள் என்று கங்கைக்கு ஒரு வரமளித்தார்.

 Related image

ச்ராவண மாதத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் இன்றும் சுல்தான்கஞ்ச் என்ற இடத்திலிருந்து காவடிகளில் கங்கையைச் சுமந்துகொண்டு, சுமார் 110 கி.மீட்டர் கால்நடையாகச் சென்று, அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, பக்தி பரவசமான காட்சி. தேவ்கர் வைத்தியநாதர் ஆலயம் ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட்டு, பகீரதன் விருப்பப்படி மீண்டும் தென்கிழக்குத் திசையில் ஓடி, வங்கக் கடலில் சங்கமமானாள் புனித கங்கை. பூமி குளிர்ந்தது. பகீரதன் மூதாதையர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்தான் !

பல பெயர்களை இடம் தோறும் பெற்றாலும் நூறு கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறாள் கங்கை. எல்லா ஆறுகளும் என் குழந்தைகளே என்று கூறுவது போல் நூறாகப் பிரிந்து காட்டினாள் போலும்.

வங்கத்திலும் பாயும் இந்த நூறு கிளைகளில் ஒரு கிளையில் கங்காசாகர் என்ற இடம் உள்ளது. சிறு தீவு போன்ற இடம். இந்த கங்கா சாகரில்தான் கபில முனிவர் ஆசிரமம் இருந்தது. இங்கே அவரது சிலை ஒன்று உள்ளது. அக்கோயிலில் இடதுபுறம் விசாலாட்சியும் வலதுபுறமும் அனுமனும் உள்ளனர். இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆரூரில் பிறக்க முக்தி, அண்ணாமலையை நினைக்க முக்தி, ஆனைக்காவில் வாழ முக்தி, ஐயன் நடமிடும் தில்லையைத் தரிசிக்க முக்தி என்னும் சொற்றொடரில் காசியில் இறக்க முக்தி என்னும் பெருமைக்கு, கங்கையும் ஒரு காரணமாக விளங்குகிறது.

வெள்ளப் பெருக்கைப் புனிதமாகக் கொண்டாடுவது மரபு என்பதால்தானே தமிழ் மக்களும் காவிரியில் ஆடிப் பெருக்கைக் கொண்டாடுகிறார்கள். அதற்கும் ஒருநாளைக் குறிப்பிட்டு ஆடி மாதம் பதினெட்டாம் நாள் பதினெட்டாம் பெருக்கு என ஒரு பண்டிகையையே வைத்துள்ளனர்.

காசியின் கரை கங்கைக் கரைக்கு மேலே ஐம்பது முதல் எழுபது அடி உயரம் வரை . இயல்பாகவே அமைந்துள்ளது. காசியின் உள்நகரம் கரையை விடப் பள்ளமாகச் சரிந்து செல்கிறது.

காசியின் தென்பகுதியான அசி சங்கமம் மண் துறையிலான, உயரம் குறைந்த இடமாகும்.

வருணா சங்கமமோ சிறிது உயர்ந்து சென்று முடிகிறது.

Related image

இதனால் கிழக்கு உயர்ந்து மேற்கில் சரிந்தும் வடக்கு உயர்ந்து தெற்கு சரிந்துமாக இந்தப் புனிதத் தலம் விளங்குகிறது.

கங்கையில் வெள்ளம் எதிர்பாராதவிதமாகப் பெருக்கெடுக்கும் போது, தண்ணீர் காசி நகருக்குள் புகுந்து விடுவதும் உண்டு. 1948-ஆம் ஆண்டிலும் 78-ஆம் ஆண்டிலும் இப்படி நிகழ்ந்து உள்ளது.

முற்காலத்தில், ஊருக்குள் இப்படி வெள்ளம் புகுந்துவிட்டால் அதற்கு வடிகாலாக ஓர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அசி சங்கமம் தொடங்கி கங்கைக்கு மேற்கே ஊரின் தாழ்வு மையப்பகுதியில் இருந்த பல குண்டங்களிலும் கங்கை வெள்ளம் புகுந்து மற்றொரு கங்கையாகவே மாறி அந்த வெள்ளம் திரும்பவும் வருணாவில் வடிந்து கங்கையோடு கலக்கும்.

சீன யாத்ரிகர்களான பாகியான், யுவான் சுவாங் ஆகியோர் இந்தியப் பயணம் வந்தபோது காசியில் பல ஏரிகளும் குளங்களும் இருந்ததைக் கண்டு தங்கள் பயண நூல்களில் அவை பற்றி விவரித்து எழுதியுள்ளனர்.

புராண காலம் முதலாக வருணையில் குளிப்பது சிறப்பாகக் கருதப்பட்டது. கங்கை, விஸ்வநாதர் வாழும் காசியை முழுவதுமாகத் தழுவி வருணையில் கலப்பது ஒரு திருமணக் காட்சியாகவே போற்றப்படுகிறது.

Related image

 கங்கையை அன்னையாக அழைப்பதே மரபு.

வட இந்திய நகரங்களில் குழந்தை பிறந்ததும் முதலில் கங்கை நீரால் குளிப்பாட்டுகிறார்கள்.


மணத்தால், நிறத்தால், குணத்தால் கங்கைக்கு இணையான நதி உலகில் வேறொன்றில்லை.

காசியில் ஓடும் கங்கையில் 64 படித்துறைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். அனைத்தும் மண் துறைகளே. சில துறைகளுக்கு பெயர் தான் உண்டு. அவை இருப்பதற்கான அடையாளமில்லை.

ஐந்து துறைகளே பக்தர்களால் போற்றி நீராடப்படுபவை.

இரண்டு துறைகள் மயானத் துறைகள்.

மிக உயரிய படிக்கட்டுகளும், துறை மீது கோயில்கள், மடங்கள், மயானங்கள், மரங் கள் ஆகியவை கொண்ட அமைப்புடன் விளங்கும் இதுபோன்ற படித்துறைகள் வேறு நதிகளில் எங்கும் இருக்க முடியாது. அதனாலேயே கங்கை பக்தர்களிடம் தனி ஈர்ப்பைப் பெற்றுத் திகழ்கிறது.

புண்ணிய நதிகளில் குறிப்பிட்ட நாளில் ஏராளமானோர் கூடுவது இந்தியாவில் வழக்கம்தான். எனினும் நாள்தோறும் இப்படி ஆயிரக்கணக்கில் மக்கள் ஓரிடத்தில் கூடி நீராடும் காட்சி வேறெங்கும் காண முடியாதது. அதனாலேயே காசி - யின் படித்துறைகள் தலைமைத் தன்மை பெறுகின்றன.

மலர் மாலைகள், ஈமச்சடங்குப் பொருள் கள், பிணங்கள் எல்லாம் பேதாபேதமின்றி கங்கையில் கலந்து செல்கின்றன. காண்போர் திகைப்பதில்லை. வெறுப்பதில்லை. மாறாக வணங்குகிறார்கள்; வழியனுப்புகிறார்கள்.

Image result for கங்கை

மண்துறைகளாக இருந்ததை மன்னர் காலத்தில் படித்துறைகளாக அமைத்தனர்.வீரசிவாஜி நிறைய துறைகளை அமைத்தார்.

அசி சங்கமத் துறை காசியின் தென்கோடி யில் அமைந்துள்ளது. இது மண்துறையாகவே இன்னும் வைக்கப்பட்டுள்ளது.

அசி, தசாசுவமேதா, மணிகர்ணிகா, பஞ்சகங்கா, வருணா சங்கமம் என்னும் ஐந்து துறைகளே சமய நம்பிக்கை சடங்குகளுக்கு உரியன.

இவற்றில் அசி சங்கமத் துறையில்தான் முதலில் முழுகுவார்கள். சங்கமேஸ்வரர் கோயில் இத்தலத்துக்கு சிறப்புத் தருவதாகும். தங்கள் முன்னோர்களுக்கு கடன் இடுவோர் (சேத்திரப் பிண்டம்) இந்த ஐந்து துறைகளுக்கே செல்வது வழக்கம்.

சிலர் ஒவ்வொரு துறைக்கும் நடந்தே சென்று முழுகுகிறார்கள்.

சற்று வசதி படைத்தவர்கள் அசி முதல் தொடங்கி படகில் புரோகிதரையும் அழைத்துக்கொண்டு ஐந்து துறைக்கும் சென்று முழுகி வருவார்கள்.

தமிழில் கட்டம் என்பதை இந்தியில் காட் என்கிறார்கள். அசி கட்டம் அசி காட். துளசி கட்டம் துளசி காட்.

Image result for varanasi tourism

 64 கட்டங்களில் அசி, துளசி, சேட்சிங், ரிவா, ஆனந்தமயி, அரிச்சந்திரா, விஜய நகரா, அனுமான், ஆதிமணிகர்ணிகா, கேதார், செளதி, க்ஷேமேச்வர், மானஸரோவர், நாரதா, பாண்டியா, துர்பங்கா, முன்ஷி, அகல்யாபாய், சீதளா, தசாசுவமேதா, மீர், மணிகர்ணிகா, பஞ்சகங்கா, துர்க்கா, பிருட்மா, திரிலோசன், நயா, பிரகலாதா, ராக்கட், வருணா சங்கமம் ஆகியன மேற் சொன்ன 64 கட்டங்களிலும் பார்க்கத்தக்கன.

அசியை அடுத்து பக்தர்களால் நீராடப்படுவதில் துளசி காட் முக்கியமானது. இதில் இராமாயணம் பாடிய துளசிதாசர் இல்லம் இருக்கிறது. கங்கையில் நீராடிக் கவிபாடி முக்தி பெற்ற இவர், தன் காலைக் கடன் கழிப்பதற்குக் கூட, காசியை விடுத்து படகில் ஏறி கங்கைக்கு அப்பால் செல்வது வழக்கமாம். காசியின் புனிதத் தன்மைக் கருதியே அவ்விதம் செய்தார்.

துளசித்துறையில் ஆனந்தமயி என்ற பெண்துறவி வாழ்ந்து வந்தார். அவர் பெருமை நாளடைவில் பரவவே, மக்கள் அவர் பெயரால் ஆனந்தமயி துறை என்று அழைக்கப்போக துளசித் துறைக்கு அதுவே மறுபெயராகியது. இங்கு இன்றும் இவரது ஆசிரமம் உள்ளது.

இன்று சிவாலா காட் என்று அழைக்கப்படும் துறை கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சேத்சிங் என்பவரின் பெயரால்தான் முன்பு வழங்கப்பட்டது. இத்துறையின் மேலே சேத்சிங் மகாராஜாவின் அரண்மனைக் கூடம் உள்ளது.

அரிச்சந்திரன் சுடுகாட்டுப் பணி மேற்கொண்டதைக் காசி வரலாறு கூறும். அதை நினைவுபடுத்துவதே அரிச்சந்திரா கட்டம். இங்கு ஒரு சுடுகாடு உண்டு. தான் இறந்தபிறகு இந்த அரிசந்திரா காட்டில் தான் எரிக்க வேண்டும் என்று விரும்புவோரும் உண்டு. இத்துறையை ஆதிமணிகர்ணிகா என்றும் குறிப்பிடுவர். இதுதவிர, கேதார் கட்டத்துக்கு முன்பும் ஓர் ஆதிமணிகர்ணிகா துறை உண்டு.

 இப்போதும் பரபரப்பாக இருக்கும்துறை அனுமன் கட்டம். இதுவே தமிழர்கள் நிறைந்த பகுதி. அனுமன் கோயிலை ஒட்டிய துறை என்பதால் அனுமன் காட் என்றாயிற்று. காமகோடீஸ்வரர் ஆலயம் அனுமன் காட் பகுதியில் கரைக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது.

சிறப்புக்குரிய கேதார் காட்’டில் தமிழரும் வங்காளிகளும் அதிகமாக வாழ்கின்றனர். இங்குள்ள கேதார் நாதர் கோயில் நம்மூர் திருப்பனந்தாள் மடத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் அழகிய துறையாகும்.

Image result for varanasi tourism

சலவைத் தொழிலாளர் மிகுந்த பகுதி மானஸரோவர் துறை. இங்கு அமரேஸ்வரர் கோயில் உள்ளது.

நாரதர் காட் என்பது நாரதரின் பெயரைக் கொண்டு விளங்குவது.

செளம்சதிகாட் என்ற துறையில் 64 யோகியர் கோயில் உள்ளது. செங்குத்தான் படிகள் கொண்ட துறை.

தசாசுவமேதா கட்டம் என்பது பக்தர்கள் இரண்டாவதாக நீராடும் கட்டம். பத்து அசுவமேத (தச அசுவமேதம்) யாகங்களைப் பிரம்மா செய்தார். காசி மன்னர்களும் கூட அசுவமேத யாகம் செய்துள்ளனர். இதன் நினைவாக உள்ளதே தசாசுவமேத கட்டம்.

இந்தத் துறையே காசியைப் பலரும் அறியும்படிக் காணக்கிடைக்கும் படங்களிலும் ஓவியங்களிலும் காணப்படும் துறையாகும்.

இந்த அடையாளத் துறையே மிகுந்த கூட்டம் உள்ளது. காரணம், இதில் மூழ்கியவுடன் காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கு வசதியாக எளிதில் கோயிலை அடைவதற்கேற்ப ஒழுங்கான சாலையும், கோயில் அருகாமையிலும் அமைந்துள்ளது.

பண்டாக்கள் எனப்படும் புரோகிதர்கள் தாழங்குடையின் கீழ் அமர்ந்து, பலருக்கும் சடங்கு இயற்றும் காட்சி இங்கேயே அதிகம்.

மற்ற துறைகளிலும் உண்டு எனினும் இங்கே ஜனநெருக்கடி மிகுதி. காசியின் தீர்த்தச் சிறப்பை இக்காலத்தில் விளக்கும் துறை இதுவே.

மையப்பகுதியில் இருக்கும் மணிகர்ணிகாவை விட இங்கே மக்கள் அதிகமாகக் கூடுகின்றனர். இங்கே சீதளாதேவிக் கோயில் உள்ளது.

அடுத்தது மான் மந்திர் கட்டம். தொன்மையான கட்டடங்கள் பல உள்ள, இந்தத் துறையின் உச்சியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் போது அமைக்கப்பட்ட வான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்குள்ள சோமேசர் ஆலயத்தைச் சந்திரனே அமைத்ததாக ஐதீகம்.

தர்ம கூபம் துறையில் எமதர்மனுக்குக் கோயில் உள்ளது. காசியில் இறந்தவர்களுக்கு எமவேதனை இல்லை என்பதால் எமன் இங்கே வணங்கப்படுகிறான்.

காசியிலேயே இன்னொரு மினி விஸ்வநாதர் கோயிலை யார் கட்டினார்கள் ? வேறு யார் ? நாம்தான். காந்தியடிகள் இயக்கம் காரணமாகத் தீண்டப்படாதோர், தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் செய்து விஸ்வநாதரைத் தீண்டியதால் சாந்நித்யம் குறைந்துவிட்டதாகக் கூறி, காசியில் சிலர் உண்டு பண்ணிய புதிய விஸ்வநாதர் கோயில்தான் இது. ஆனால் விஸ்வநாதரோ தனது பழைய கோயிலில் தான் மகிழ்வோடு இருக்கிறார் என்பதற்கு இந்தப் புதிய கோயிலை யாரும் கண்டு கொள்ளாததே சான்று.

                                                     - புனித பயணம் ()ரும்..


No comments:

Post a Comment