Tuesday 6 March 2018

சிவன் வடிவமைத்த காசி - 04

பாவம் போக்க, காசி வரை யாத்திரை போக வேண்டுமா ? 


Related image
வீட்டிலுள்ள குப்பையைக் கூட்டி தெரு வாசலிலேயே கொட்டிவிட்டால், வீடு சுத்தமாகி விட்டதுபோல் தெரிந்தாலும் வீட்டின் சுற்றுப்புறம் மாசடைந்து அது வீட்டின் தூய்மையைத் தானே கெடுக்கும் ? அதுபோல், மனத்தினுள் சேர்ந்துள்ள பாவச் சுமைகளை உள்ளூர் தீர்த்தத்திலேயே மூழ்கித் தொலைப்பதைவிட, தூர தேசம் சென்று புனித தீர்த்தத்தில் மூழ்கித் தொலைப்பதையே மனிதமனம் விரும்புகிறது.

தவறுக்கு வருந்தும் மனித மனத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு போய் ஓரிடத்தில் போட்டுவிட்டு அவன் மனம் ஓய வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டுதான் யாத்திரை என்பதை இந்துமதம் வாழ்வியல் கடமையாக வற்புறுத்துகிறது.

இந்து மதத்தில் மட்டுமல்லாது பிற மதங்களும் புனித யாத்திரையை வாழ்க்கைக் கடமைகளில் ஒன்றாக வற்புறுத்தியுள்ளன. முகமதியர்களுக்கு மெக்காவும், கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேமும், புத்த மதத்தினருக்கு புத்த கயாவும் யாத்திரைத் தலங்களாகக் கூறப்பட்டுள்ளன. இறைஉணர்வு என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவானதுதான்.

முதுமை அடைந்த மனிதன் இறப்புக்கு அஞ்சும் அதே வேளையில் இறப்புக்குப் பிறகும், தான் வாழ ஓர் உலகம் இருக்காதா என்று ஏங்குகிறான். இருக்கும் என்று நம்புகிறான். இல்லாவிடில், அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

உயிர்வாழும் ஆசையும், அது இனி இயலாது என்கிற உண்மையும் அவனைச் சஞ்சலப்படுத்துகிறது. மறுஉலகை அதுவரை நம்பாத அல்லது அதை ஒரு பொருட்டாக நினைக்காதவனுக்கும் கூட இறுதிக் காலத்தில் அல்லது இறுதி நாள்களில் அப்படி ஒரு மறுமை உலகின் மீது ஆசை துளிர்க்கிறது.

 போகிற கதிக்குப் புண்ணியம் தேட வேண்டும் என்ற நினைப்பு அவனை ஆன்மீக திசையில் திருப்பி, அமைதி தருகிறது. அவனுக்கு முக்தியும் மோட்சமும் தரும் சக்தி எதற்கு உண்டோ அதை அவன் மனம் நாடுகிறது.

 இவ்வாறு மனிதனின் அன்றாட வாழ்வோடு காசிக்கு ஏற்பட்டு விட்ட நெருக்கமே அதன் நிலைத்த பெருமைக்கும் நித்திய மகிமைக்கும் காரணமாயிற்று !

அந்த இடத்துக்கு என்ன சிறப்பு  ?

தமிழகத்தில் சில ஊர்களில் எழுப்பப் பட்டுள்ள சிவாலயங்களுக்குக்கூட 'காசி விஸ்வநாதர் கோயில்' என்றே பெயர் உண்டு. பல ஆலயங்களில் காசி விஸ்வநாதருக்கென்று தனிச் சன்னதிகள் அல்லது தனி சில லிங்கங்கள் உண்டு.

காசியில் இருக்கும் விஸ்வநாதருக்குத் தென் தமிழகத்தில் குற்றாலத்தை அடுத்த ஓர் தலத்தில் தனிப் பேராலயம் எழுப்பப் பட்டது. அதனால் இவ்வூருக்குத் ‘தென் காசி' என்றே பெயர் ஏற்பட்டது.

 வெள்ளையர் இங்கே வந்து காலூன்றிய பிறகே இந்தியா என்றொரு நாட்டை ஒருங்கிணைத்து உருவாக்கினார்கள் என்று இன்னமும் எழுதியும் பேசியும் வருகின்றனர், நம்மில் பலர், இது தவறு. ஆதிகாலத்திலிருந்தே பாரத மக்கள் ‘காசி-ராமேஸ்வரம்’ என்று வடக்கேயும் தெற்கையும் இணைத்து யாத்திரை மேற் கொண்டு இந்திய ஒருமைப்பாட்டை உரு வாக்கிவிட்டனர்.

தமிழகத்தில் குழந்தைகளுக்குக் காசி என்றும் விஸ்வநாதன் என்றும் பண்டைக் காலத்திலிருந்தே பெயர் வைக்கும் வழக் கம் இருந்து வருகிறது. தமிழ்க் காப்பியங்களிலும் வேறுபல இலக்கிய நூல்களிலும் காசியின் புகழ் பேசப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் காசியின் மகிமையைக் கூறுகிறது.

புராணங்கள் யாவும் காசியை ஏதேனும் ஒரு வகையில் போற்றி, கதை வடிவில் கூறியுள்ளன.

Image result for varanasi images

சிவபெருமான் இத்தலத்தை மறந்து செல்வதில்லை என்று அவரே கூறியிருப்பதாக மச்சபுராணம் கூறுகிறது. தனது திருவருளை அடையாளச் சின்னமாக்க, அவரே தனக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தாராம். அதுதான் உலகின் முதல் லிங்க வடிவம். அந்த லிங்கமே காசியில் இருக்கும் விஸ்வநாதர்.

காசி எல்லாத் தலங்களுக்கும் தலைமைச் சிறப்பைப் பெற இதுவே காரணம்.

'அவிமுக்தா க்ஷேத்திரம்' என்பது காசியின் புராணப் பெயர். 'அவிமுக்தா' என்பதற்கு பாவங்களிலிருந்து விடுபடுதல் என்பது பொருள். இத்தலத்தில் ஓடும் கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் அனைத்தும் நீரோடு போகும் என்பது வழி வழி நம்பிக்கை.

மனிதர்கள் என்ன, இறைவனாகிய அந்த சிவபெருமானே இந்த காசிக்கு வந்துதான் தனது பாவம் போக்கிக் கொண்டார்.

எப்படி ? 

பிரும்மாவுக்கு ஐந்து தலை. சிவபெருமான் கோபத்தில் பிரும்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். ஏன் ? 

சிவனின் அடி முடியைக் காணுவதில் விஷ்ணுவுக்கும் பிரும்மாவுக்கும் ஏற்பட்ட போட்டியில், சிவனின் தலை உச்சியை (முடியை)க் கண்டுவிட்டுத் திரும்பியதாகப் பிரும்மா பொய் சொன்னார்.

சிவனின் தலைமுடியில் இருந்து உதிர்ந்த தாழம்பூ மடல் ஒன்றும் பிரும்மாவுக்கு ஆதரவாக சிவனிடம் பொய் சாட்சி கூறியது.

அந்தக் கோபத்தால் பிரும்மாவின் தலையைக் கொய்தார் சிவன்.

அந்தணரைக் கொன்றால் அது பிரம்மஹத்திதோஷமாகும். வேதம் ஒதும் அந்தணராகிய பிரும்மாவின் தலையைக் கொய்த பாவம் சிவபெருமானைப் பின் தொடர்ந்தது. பிரும்மாவின் தலையை (கபாலத்தை) கையில் வைத்துக் கொண்டு- அது பாவத்தால் கையை விட்டும் விழாமல் போகவே - பைரவக் கோலத்துடன் எல்லாவிடங்களிலும் சுற்றினார்.

காசிமண்ணை அவர் மிதித்தபோது கபாலம் கீழே விழுந்தது. சிவனைத் தொடர்ந்த பாவமும் விடுபட்டது. அந்தக் கபாலம் விழுந்த பாப விமோசன இடமே காசியில் கபால மோட்சம் என்னும் இடமாக விளங்குகிறது.

இக்கதை கூறும் உண்மை என்ன ?

காசித் தலத்தின் பாவம் நீக்கும் உயர்வைக் குறிப்பதோடு, புண்ணியத் தலங்கள் யாவிலும் காசியே உயர்வானது, தலைமைக்குரியது என்பதையும் காட்டுகிறது.

இறைவனேயானாலும் பாவ, புண்ணியம் என்னும் சட்ட விதிக்குக் கட்டுப்பட்டவனே என்கிற நியதியையும் மறைமுகமாகச் சொல்கிறதல்லவா ? 

'காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது' என்ற பழமொழி. மக்களின் வாழ்வோடு இணைந்துவிட்டது. கருமம் தீர்ப்பதில் காசிக்கு உள்ள சக்தியையும் இது எதிர்மறையாக எடுத்துச் சொல்கிறது.

காசிக்கு இன்று வாரணாசி என்று பெயர். இது புத்தர் காலத்தில் மக்களின் பேச்சு மொழியாக வழக்கில் இருந்த பாலிமொழிச் சொல். வாரணாசி என்று வெள்ளைக்காரர்களுக்குச் சொல்லவரவில்லை. அதனால் பனாரஸ் என்றார்கள். கல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டே வெள்ளையர்கள் வட இந்தியாவை ஆட்சி செய்தனர்.

கல்கத்தா வங்காள தேசத்தைச் சேர்ந்தது. வங்காளிகள் 'வ' என்பதை 'ப' என்று வழங்கும் பழக்கமுள்ளவர்கள். ரவீந்திர நாத் என்பதை ரபீந்திரநாத் என்றே உச்சரிப்பார்கள். அதுபோல் தங்கள் மொழிவழக்கப்படி வாரணாசியைப் பாரணாசி என்றார்கள். அதைக்கேட்ட வெள்ளையர்கள் பாரணாசியைத் தங்கள் ஆங்கில உச்சரிப்புக்கு வசதியாக பனாரஸ் ஆக்கிவிட்டார்கள்.

வாரணாசி என்பதற்கு என்ன பொருள் ? 

இத்தலத்தின் வடக்கு எல்லையாக வருணா என்ற ஆறும் அசி என்ற தெற்கு எல்லை ஆறும் காசிக்கு இருபக்கமும் ஓடுவதால் இவ்விரண்டு ஆறுகளுக்கு உட்பட் டது என்ற பொருளில் வாரணாசி என்று பெயர் பெற்றது.

அசி என்பது வாளையும் வருணா என்பது கேடயத்தையும் உவமையாகக் குறித்து, இந்நகருக்குக் காவல் செய்வதாகக் கூறுவர்.

வாரயதி, நாசயதி என்னும் இருபெயர்கள் இணைந்து பாவம் நீக்குவது என்ற பொருள் தருவதால் வாரணாசி என்பது ஒரே சொல்தான் என்பாரும் உண்டு.

பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்னும் பிரிவினர் இங்கே கி.மு. 1400 வரையில் வாழ்ந்து வந்ததால் இத்தலம் ’காசி’ ஆயிற்றாம்.

பார்வதிதேவியார் தன் காதில் அணிந்திருந்த பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்ததால் அதன் பிரகாசத்தைக் குறிக்கும் ‘ஒளிமயமானது’ என்ற பொருளில் இத்தலம் காசி என்றாயிற்று என்றும் சொல்கிறார்கள்.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமான சிவலிங்கம் இங்கே தன் பிரகாசத்தை வீசச் செய்வதால் "காசி” ஆயிற்று என்பதும் ஒரு வழக்கு.

’காசி என்ற சொல்லைப் பிரித்துப் பொருள் அறிய வேண்டும். கா - தோள் சுமை. சி - பெண். உமையவளாகிய சக்தியைத் தோளில் சுமந்து கொண்டு சிவபெருமான் ஹரித்துவாரிலிருந்து இங்கே வந்து சேர்ந் ததால் இத்தலம் "காசி” எனப் பெயர் பெற்றது’ என்கிறார்கள். காசிக்கு 'ஆனந்தவனம்’ என்பது மற்றொரு பெயர்.

சிவம் பாணத்தையும் உமாமகேஸ்வரி ஆவுடையாரையும் குறித்து லிங்கமே ஆனந்தமய வடிவாக இருக்கிறது. குண்டலினி சக்தியை யோகத்தின் மூலம் தலையில் ஏற்றும்போது அமுதம் சுரக்கும் என்றும், தேவியே குண்டலினி என்றும், தலையில் உள்ளது சிவலிங்க பாணமென்றும் இரண்டும் இணைவதே யோகம் என்றும் அது ஆனந்த மயமானது என்றும் கூறக் காண்பதைக் கொண்டு இத்தலத்துக்கு 'ஆனந்தவனம்’ என்று பெயர் ஏற்பட்டக் காரணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்..

புராணங்களில் காசியை 'ருத்ரவாசம்’ என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

ருத்ரனாகிய சிவபெருமான் இவ்விடத்தே தங்கி அருளுவதால் இந்தப் பெயரால் குறிக்கப்படுகிறது. கைலாயத்தை விட காசியே இறைவனுக்கு விருப்பமான இடம் என்கிறது புராணம்.

இப்படி எல்லா தலங்களையும் போல காசிக்கும் பல திருப்பெயர்கள் இருந்தாலும் காசி என்பதே எல்லாருக்கும் தெரிந்ததாலும் குறிப்பிட எளிதானதும் சொல்லும்போதே ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் அமைந்த பெயராகும்.

Image result for varanasi images

காசியில் கங்கை வடக்கு நோக்கி ஓடுகிறது. மேற்குக் கரையில் தான் காசி இருக்கிறது. காலைச் சூரியனின் கிரணங் கள் கங்கையில் பட்டுத் தெறித்து இந்தத் தலம் முழுவதும் தனது பிரகாசத்தை வாரி இறைக்கிறது.

ஒரு கோயிலின் கிழக்கு வாயில் இவ்வுலக வாழ்வுக்கு அருளுவதென்றும், மேற்கு வாயில் மேல் உலக மறுமை வாழ்வுக்கு அருளுவதென்றும் குறிப்பர். முக்தித் தரும் சக்தி கொண்ட இத்தலமும் அந்த இலக் கணத்துக்கேற்ப கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்துக்கு உரிய திருப்பெயர்கள் ஐந்து. அவை:

1. காசி

2. ஆனந்தவனம்

3.ருத்ரவாசம் 

4. மகா மசானம் 

5. அவிமுக்தா. 

காசிக்கு ’மகா மசானம் (மகா மயானம்)’ என்ற பெயர் வந்தது ஏன் ? காசியின் தனிச்சிறப்பைக் குறிப்பதே இந்தப் பெயர்தான் என்று  சொன்னால் விந்தையாகத் தோன்றலாம். ஆனால் அதுவே உண்மை.

                                               - புனித பயணம் வ(ள)ரும்..

No comments:

Post a Comment