Thursday 8 March 2018

ஆரோக்கிய ரெசிப்பி !


``உணவோ, சீதோஷ்ணமோ ஒப்புக்கொள்ளாவிட்டால் பெரும்பாலானவர்களின் வயிறும், உடலும் சட்டென்று `அப்செட்’டாகிவிடும். தொண்டைக்கு இதமாகவும், வயிற்றுக்குப் பதமாகவும், எளிதில் ஜீரணமாகக்கூடிய ஆரோக்கியமான சில உணவு வகைகளைப் பார்த்துப் பார்த்து தயாரித்து வழங்கும் ஆரோக்கிய சமையல் ரெசிப்பிகள் இங்கே இடம்பெறுகின்றன.

தக்காளி  சேவை

தேவையானவை: ரெடிமேட் சேவை - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், வெங்காயம், தக்காளி தலா - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: ரெடிமேட் சேவையுடன் மூழ்கும் அளவு தண்ணீர், கால் டீஸ்பூன் எண்ணெய்விட்டு வேகவிட்டு வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத் தூள், மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில் வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு தொக்குப் பதத்துக்கு கிளறி இறக்கவும். இதனுடன் சேவையைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

ராகி கேரட் இட்லி

தேவையானவை: ராகி மாவு, புழுங்கல் அரிசி ரவை - தலா அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - கால் டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை -  சிறிதளவு, உப்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புழுங்கல் அரிசி ரவையைக் களைந்து சல்லடையில் வடிகட்டவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம்  சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நன்கு பொங்கப் பொங்க அரைத்து எடுக்க வும். இதனுடன் உப்பு, அரிசி ரவை, ராகி மாவு சேர்த்துக் கலந்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.  பிறகு கேரட் துருவல், பச்சை மிளகாய், கொத்த மல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இட்லித் தட்டில் மாவை ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

இதற்கு தயிர், தக்காளி சட்னி நல்ல காம்பினேஷன்.

பால் சாதம்

தேவையானவை: குழைவாக வடித்த பச்சரிசி சாதம் - அரை கப், சர்க்கரை - அரை டீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: குழை வாக வடித்த சாதத்தில் சர்க்கரை, நெய், பால் சேர்த்துக் கலந்து, பிசைந்து பரிமாறவும்.

வாணலி ஊத்தப்பம்

தேவையானவை: தோசை மாவு - 2 கப், துருவிய வெள்ளரிக் காய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: குழிவான வாணலியைக் காயவிட்டு சிறிதளவு எண்ணெயைப் பரவலாக ஊற்றவும். இரண்டு கரண்டி மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றி, மேலே வெள்ளரித் துருவல் தூவி, மூடிபோட்டு வேகவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.  

இதற்கு வெங்காயச் சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.

நட்ஸ் ஆப்பம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப்,  வறுத்துப் பொடித்த முந்திரி, பாதாம், வேர்க்கடலை கலவை - 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், இளநீர் – அரை கப், சமையல் சோடா, சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், இளநீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும்.  இதுவே ஆப்ப மாவு.  இந்த மாவை இரவு முழுவதும் புளிக்கவிடவும்.  மறுநாள் மாவுடன் சமையல் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஆப்பச் சட்டியைக் காயவிட்டு மாவை ஆப்பமாக சுழற்றி ஊற்றி, மேலே சிறிதளவு பொடித்த நட்ஸைப் பரவலாகத் தூவி, மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும்.   

இதை தேங்காய்ப்பால் அல்லது சாஸுடன் பரிமாறவும்.

இனிப்பு தேங்காய் சேவை

தேவையானவை: ரெடிமேட் சேவை - ஒரு கப் (வேகவைத்து, நீரை வடித்து, உதிரியாக்கியது), நெய் - 2 டீஸ்பூன்,  எண்ணெய் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை – சிறிதளவு, தேங்காய்த் துருவல், பொடித்த சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை: ரெடிமேட் சேவையுடன் மூழ்கும் அளவு தண்ணீர், கால் டீஸ்பூன் எண்ணெய்விட்டு வேகவிட்டு வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி,  திராட்சை, தேங்காய் துருவல்  சேர்த்து வதக்கி இறக்கவும்.  இதனுடன் சேவை, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக  துருவிய வெல்லம் சேர்க்கலாம்.

இளம் தோசை

தேவையானவை: புழுங்கலரிசி, பச்சரிசி - தலா  ஒரு கப், வெந்தயம் -  கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  - கால் கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு,  புளிக்காத மோர் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் மோர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு மாவை தோசைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய்விட்டு, வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவை அரைத்த உடனே தோசைகளாக ஊற்றலாம்.

மிக்ஸட் வெஜ் சாலட் வித் க்ரீம்

தேவையானவை: வெள்ளரிக்காய், கேரட் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு – ஒன்று, வேகவைத்த பட்டாணி - 25 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – தேவையான அளவு, மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வேகவைத்த பட்டாணி நறுக்கிய கேரட், வெள்ளரி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மேலே ஃப்ரெஷ் க்ரீமைப் பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

நியூட்ரி வெஜ் ரைஸ்

தேவையானவை: கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், நூல்கோல் கலவை (தோல் சீவி, பொடியாக நறுக்கியது) - ஒரு கப், வடித்த சாதம் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிக் கலவை, உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வெந்த பிறகு சாதம், கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.

மல்டி தால் ரைஸ்

தேவையானவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு -  தலா 50 கிராம், வடித்த சாதம் - ஒரு கப், சிறிய எலுமிச்சைப்பழம் - பாதியளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு -  ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைவாக வேகவைத்து எடுக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, சாதத்துடன் கலக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.

பழுப்பரிசி நெய் சாதம்

தேவையானவை: பழுப்பரிசி(பிரவுன் ரைஸ் - டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், நெய் - 2 டீஸ்பூன், வெங்காயம் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்), பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, சீரகம், உப்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: பழுப்பரிசியைச் சாதமாக வடிக்கவும்.  வாணலியில் நெய்விட்டு சீரகம், பட்டை, லவங்கம் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வடித்த சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

காய்கறி உப்பு புட்டு

தேவையானவை: புட்டு மாவு - ஒரு கப், கேரட், முள்ளங்கி - தலா ஒன்று (தோல் சீவி, துருவவும்), குடமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கவும்), நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், முள்ளங்கி, குடமிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். புட்டு மாவுடன் உப்பு, தேவையான அளவு சுடுநீர் விட்டுப் பிசிறவும். கிண்ணத்தில் நெய் தடவி, சிறிதளவு பிசிறிய மாவு, காய்கறிக் கலவை என மாற்றி மாற்றி போட்டு மூடி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். உதிர்த்துப் பரிமாறவும்.

பிரெட் ஜாம் டோஸ்ட்

தேவையானவை: ஸ்வீட் பிரெட் ஸ்லைஸ் - 6, மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இரண்டு பிரெட் ஸ்லைஸ்களை எடுத்து, அவற்றின் மீது சிறிதளவு ஜாமை பரவலாக தடவி மூடவும். தவாவில் நெய்விட்டு, பிரெட் ஸ்லைஸ்களை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் அப்படியே செய்துகொள்ளவும். உள்ளே ஜாம் மிருதுவாகவும், மேலே மொறுமொறு என்றும் இருக்கும்.  

குறிப்பு: சிறிதளவு பாலை டோஸ்ட் மீது தெளித்தும் சாப்பிடலாம்.

டொமேட்டோ சூப்

தேவையானவை: பெங்களூரு தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்), பட்டை – சிறிய துண்டு, லவங்கம், பூண்டு - தலா 2.

வொயிட் சாஸ் செய்ய: வெண்ணெய் - 2 டீஸ்பூன், கார்ன்  கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன், காய்ச்சிய பால் - அரை கப்.
அலங்கரிக்க: மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, சர்க்கரை - அரை டீஸ்பூன், பொரித்த பிரெட் துண்டுகள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெள்ளைத் துணியில் பட்டை, லவங்கம், பூண்டு சேர்த்து சிறிய மூட்டையாகக் கட்டவும். குக்கரில் தக்காளியுடன் ஒரு கப் தண்ணீர், மசாலா மூட்டை சேர்த்து மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறிய பின் மசாலா மூட்டையை பிழிந்துவிட்டு, தூக்கி எறிந்துவிடவும். தக்காளியைத் தண்ணீருடன் மிக்ஸியில் சேர்த்து, நைஸாக அரைத்து வடிகட்டவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, கார்ன் ஃப்ளார் சேர்த்து வறுக்கவும்.  இதனுடன் பால் சேர்த்து, கெட்டியான பிறகு இறக்கவும். இதுவே வொயிட் சாஸ். தக்காளி சாற்றுடன் வொயிட் சாஸ் சேர்த்து நன்கு கலந்து சூப் கப்பில் ஊற்றவும். மேலே உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை, பொரித்த பிரெட் துண்டுகள் சேர்த்து அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

கப் ஆஃப் எனர்ஜி ஃப்ரூட்ஸ்

தேவையானவை: விரும்பிய பழக்கலவை - ஒரு கப், க்ளூக்கோஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு, கறுப்பு உப்பு - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: பழங்களுடன் க்ளூக்கோஸ், உப்பு, கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: க்ளூக்கோஸுக்குப் பதிலாக ஒரு கரண்டி தயிர் சேர்த்தும் செய்யலாம்.

காராமணி குழைவு சுண்டல்

தேவையானவை: வெள்ளைக் காராமணி - 100 கிராம், வெல்லம் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல், நெய் -  தலா ஒரு டீஸ்பூன், உப்பு -  ஒரு  சிட்டிகை.
செய்முறை: வெள்ளைக் காராமணியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் குழைய வேகவிட்டு, வடியவைத்து, நன்கு மசிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். இதனுடன் தேங்காய்த் துருவல், மசித்த காராமணி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

பார்லி பயறு கஞ்சி

தேவையானவை: பார்லி - 2 டேபிள்ஸ்பூன், வேகவைத்த பச்சைப் பயறு - ஒரு டீஸ்பூன்,  பனங்கற்கண்டு - 3 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 100 மில்லி.
செய்முறை: பார்லியை வேகவைத்து, நீரை வடிகட்டவும். வேகவைத்த பச்சைப் பயறை சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைக்கவும். பார்லி தண்ணீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கரைத்து வடிகட்டவும்.  இதனுடன் அரைத்த பயறு, பால் சேர்த்து லேசாக சூடாக்கிப் பருகலாம்.

ஓட்ஸ் உப்புக் கஞ்சி

தேவையானவை: ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், கடைந்த புளிப்பில்லாத மோர் - அரை கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறி தளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய்விட்டு கடுகு, பெருங் காயத்தூள், மிளகாய் தாளிக்கவும். இதனுடன் ஓட்ஸ் சேர்த்து வறுத்து, அரை கப் தண்ணீர்விட்டு வேகவிட்டு இறக்கவும். ஆறிய பின் உப்பு, 
மோர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஓட்ஸ் தேங்காய்ப்பால் கஞ்சி

தேவையானவை: ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 100 மில்லி, சர்க்கரை (அ) வெல்லம் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, ஓட்ஸ் சேர்த்து வறுத்து, கால் கப் தண்ணீர்விட்டு வேகவிடவும். இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கரைத்து இறக்கவும். இறுதியாக தேங் காய்ப்பால் விட்டு, ஏலக்காய்த்துள் சேர்த்துக் கலந்து பருகலாம்.

கடலைப்பருப்பு தாளிப்பு

தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,  கடுகு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சிறிய எலுமிச்சைப் பழம் -  பாதியளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் வேகவைத்து எடுத்து தண்ணீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் கடலைப்பருப்பு, உப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, மாலை நேர டிபனாகப் பரிமாறலாம்.

குறிப்பு: எலுமிச்சைச் சாற்றுக்குப் பதிலாக சிறிதளவு ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) சேர்க்கலாம்.

அவசர அவல் கஞ்சி

தேவையானவை: தட்டை அவல் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், காய்ச்சிய பால் - அரை கப்.
செய்முறை: அவலைக் கழுவி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால், நெய், சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பன் தோசை

தேவையானவை: பச்சரிசி, கெட்டி அவல் - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: பச்சரிசியுடன் அவல், உளுத்தம்பருப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கிரைண்டரில் இட்லி மாவு பதத்துக்குக் கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்து 3 மணி நேரம் புளிக்கவிடவும். இதனுடன் சமையல் சோடா சேர்த்துக் கரைக்க வும். தோசைக்கல்லைக் காயவிட்டு, மாவைக் கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சத்துமாவு கஞ்சி

தேவையானவை: சத்து மாவு - கால் கப், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நெய் - அரை டீஸ்பூன், கிள்ளிய மோர் மிளகாய் – சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: சத்து மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு கரைத்து கொதிக்கவிட்டு, வெந்த பிறகு இறக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, கஞ்சியில் கலந்து பருகலாம்.

கோதுமை நொய் தயிர் கஞ்சி

தேவையானவை: கோதுமை நொய் - 50 கிராம், கெட்டித் தயிர் - கால் கப், சீரகம், உப்பு  - தலா அரை டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),  தோல் சீவி, துருவிய இஞ்சி,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: இரண்டு கப் தண்ணீரு டன் உப்பு, சீரகம், கோதுமை நொய் சேர்த்து நன்கு வேகவிடவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். வேகவைத்த கோதுமை நொய்யுடன் தயிர், பெருங் காயத்தூள், தாளித்த பொருள்கள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கோதுமை மாவு மோர்க்களி

தேவையானவை: கோதுமை மாவு - கால் கப், லேசாக புளித்த மோர் - ஒரு கப், தண்ணீர் - அரை கப், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் -  ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, மோர், தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் கரைத்த கோதுமை மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறவும். கலவை வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

அவல் தாளிப்பு

தேவையானவை: தட்டை அவல் - 100 கிராம், கடைந்த தயிர் - ஒரு கப், உப்பு - அரை டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் - சிறிதளவு.
செய்முறை: அவலைக் களைந்து உப்பு,  தயிர் சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் தாளிக்க கொடுத் துள்ள பொருள்களைச் சேர்த்து  தாளித்து அவலுடன் கலந்து பரிமாறவும்.

சம்பா கோதுமை ரைஸ்

தேவையானவை: சம்பா கோதுமை (பெரியதாக உடைத்தது. டிபார்ட்மென்ட் கடைகளில் கிடக்கும்)  -  200 கிராம், நெய் - கால் டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் நெய்விட்டு சூடாக்கி 400 மில்லி தண்ணீர்விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் உடைத்த சம்பா கோதுமையைச் சேர்த்துக் கிளறி உதிர் உதிராக வேகவிட்டு இறக்கவும்.

இதனுடன் சாம்பார், துவையல், ரசம், தயிர், மோர் ஏதாவது ஒன்று சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment