Tuesday 6 March 2018

சிறுதானிய உணவுகள் - 2


ன்றைய தலைமுறையினர் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது.

சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும்பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. பாரம்பர்ய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


குதிரைவாலி கிச்சடி

தேவையானவை:

 குதிரைவாலி அரிசி - ஒரு கப்
 காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 4 (இரண்டாகக் கீறவும்)
 இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
 நெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 பட்டை, லவங்கம் - 2
 பிரியாணி இலை - 2
 மராத்தி மொக்கு - ஒன்று
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

கம்பு - பருப்பு சோறு
தேவையானவை:

 கம்பு - ஒரு கப்
 துவரம்பருப்பு - அரை கப்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

 கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

வரகு - அன்னாசிப்பழக் குழைச்சல்

தேவையானவை:

 வரகு அரிசி – ஒரு கப்
 அன்னாசிப்பழம் - 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)
 அன்னாசிப்பழத் துண்டுகள் - அரை கப்
 வெல்லம் – அரை கப்
 சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - 2 டீஸ்பூன்

செய்முறை:

குக்கரில் வரகு அரிசியுடன் அன்னாசிப் பழச்சாறு, சர்க்கரை சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அதை கடாயில் சேர்த்து அதனுடன் சுக்குத்தூள், வேகவைத்த சாதம், அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: மெதுவடையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தினை - தேங்காய்ப்பால் புலாவ்

தேவையானவை:

 தினை அரிசி - ஒரு கப்
 தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தண்ணீர் - ஒரு கப்
 பச்சைப் பட்டாணி - அரை கப்
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
 எண்ணெய் - 4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 பட்டை - 2
 சோம்பு - கால் டீஸ்பூன்
 பிரியாணி இலை - ஒன்று
 ஏலக்காய் - ஒன்று

செய்முறை:

தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். 

தினை-தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

குறிப்பு:

அகலமான பாத்திரத்திலும் செய்யலாம். எளிதில் வெந்துவிடும். சாதமும் உதிரியாக இருக்கும்.

சாமை - நெல்லிக்காய்ப் புட்டு

தேவையானவை:

 வடித்த சாமை சாதம் - ஒரு கப்
 நெல்லிக்காய் (சீவியது) - ஒரு கப்
 வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

 பொட்டுக்கடலை - கால் கப்
 கசகசா - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 4
 கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன்
 தனியா - 2  டீஸ்பூன்

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக வறுத்து, அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வடித்த சாமை சாதத்தில் துருவிய நெல்லிக்காய், வறுத்து அரைத்த பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு சாதத்தைச் சேர்த்து மெதுவாகக் கிளறி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால், சாமை - நெல்லிக்காய் புட்டு தயார்.

சோளம் - ஜவ்வரிசி மசாலா புலாவ்

தேவையானவை:

 ஜவ்வரிசி - ஒரு கப்
 வறுத்த வேர்க்கடலைப் பொடி - அரை கப்
 வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன் (தோல் நீக்கவும்)
 பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
 வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
 சீரகம் - கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, உலரவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு வேர்க்கடலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், ஸ்வீட் கார்ன் முத்துகள், ஜவ்வரிசி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

ஸ்நோ ஸ்வீட் போளி

தேவையானவை:

 பனிவரகு மாவு - ஒரு கப்
 கோதுமை மாவு, வெல்லம் - தலா அரை கப்
 எண்ணெய் - தேவையான அளவு

பூரணம் செய்ய:


 நெய் - கால் கப்
 தேங்காய்த் துருவல் - ஒரு கப்
 பொடித்த வெல்லம் - அரை கப்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:

வெல்லத்துடன் அரை கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அதனுடன் பனிவரகு மாவு, கோதுமை மாவு சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அந்த மாவை எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும்.
வாயகன்ற பாத்திரத்தில் பூரணம் செய்ய கொடுத்துள்ள வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். 

வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்விட்டு கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக்கவும். திரட்டிய சப்பாத்தியின் நடுவே பூரண உருண்டைகளை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் வட்டமாகப் போளி போல தேய்க்கவும். எண்ணெய்விட்டு, சப்பாத்திக்கல்லைக் காயவைத்து போளிகளைப் போட்டு சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். 

குறிப்பு:


வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பூரி போல பொரித்தும் எடுக்கலாம்.

வரகு - மிளகு கிச்சடி

தேவையானவை:

 வரகு அரிசி - ஒரு கப்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - சிறிதளவு
 மிளகு - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது)
 தோல் நீக்கிய பூண்டு - 5 பற்கள்
 கடுகு – கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வரகு அரிசியைப் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடித்த மிளகு, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது வரகு அரிசியைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து சிறிதளவு எண்ணெய்விட்டு மீண்டும் மூடி, வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.

ராகி சேமியா மசாலா கிச்சடி

தேவையானவை:

 ராகி சேமியா - ஒரு பாக்கெட்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு விழுது -   கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
 கேரட், பீன்ஸ், பட்டாணி -   தலா கால் கப்
 சோம்பு - கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ராகி சேமியாவுடன் மூழ்கும் அளவு வெந்நீர்விட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி மூடிபோட்டு, மிதமான தீயில் வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து ராகி சேமியாவைச் சேர்த்து லேசாகக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் மூடிவைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து தீயை அதிகப்படுத்தி, சிறிதளவு எண்ணெய்விட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

சாமை - பூண்டு மசியல் சாதம்

தேவையானவை:

 சாமை சாதம் - ஒரு கப்
 தோல் நீக்கிய பூண்டு - 20 பற்கள்
 காய்ந்த மிளகாய் - 4
 புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - கால் கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். ஆறிய பிறகு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான சாமை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அப்பளத்துடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment