Tuesday 2 August 2016

திவ்வியமாய் தரிசனம் தரும் தென்னாங்கூர் ஸ்ரீபாண்டுரங்கர் !!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில், காஞ்சிபுரம்வந்தவாசி சாலையில் அமைந்து உள்ளது தென்னாங்கூர். காஞ்சிபுரத்தில் இருந்து 34 கி.மீ தூரத்தில், வந்தவாசிக்கு முன்பாக உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் அனைத்து பேருந்துகளும் தென்னாங்கூர் வழியாகவே செல்லும். சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாகவும் வரலாம். உத்திரமேரூரில் இருந்து 21 கி.மீ துரத்தில் உள்ளது இந்தத் தலம்.



இங்கு உள்ள ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கர் ஆலயம் நம்மை அப்படியே ஈர்த்துக்கொள்ளும். அத்தனை அழகு! பூரி ஜகந்நாதர் ஆலயம் போன்று கட்டப்பட்ட கோபுரம், நம்மை வியக்கச் செய்யும்!


ஆதிசங்கரரின் ஆம்நாய மடங்களில் ஒன்றான ஜோதிர் மட பரம்பரையில் ஆறாவது பீடாதிபதியாக விளங்கிய ஸத்குரு ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகளின் சீடரான ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள், தன் குருஜியின் பெயரில் ஸ்ரீஞானானந்த கிரி பீடத்தையும், இந்தக் கோயிலையும், தான் பிறந்த ஊரான தென்னாங்கூரில் கட்டினார். இந்தக் கோயில் கும்பாபிஷேகம்

1996ல் நடைபெற்றது. கோயிலின் சிறப்பு, வடக்கும் தெற்கும் சேர்ந்த கட்டடக் கலையே.


இந்தியாவின் நான்கு நாதர்கள் (அதாவது சுயம்பு மூர்த்திகள்) பிரசித்திப் பெற்றவர்கள்; தெற்கே டோடாத்திரிநாத், வடக்கே பத்ரிநாத், மேற்கே பண்டரிநாத், கிழக்கே ஜெகந்நாத் என்பார்கள். நேர்க்கோட்டில் அமைந்துள்ள இந்தத் தலங்களைச் சுற்றி வந்தாலே, மகா புண்ணியம் என்பது ஐதீகம்! தவிர, 1008 சிவ ஸ்தலங்கள், 108 வைணவ ஸ்தலங்களை தரிசித்த புண்ணியமும் வந்துசேரும்.


இங்கு, மாதந்தோறும் உற்ஸவம் நடைபெறுகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு தங்கத் தேரில் பவனி வரும் விட்டலனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தமிழகத்தின் 19 தங்கத் தேர்களில், இது உயரமானது என்று சொல்கிறார்கள்.


கோயில் மூலவர் ஸ்ரீபாண்டுரங்கர் ஸ்ரீருக்மாயியுடன் தினமும் ஒவ்வோர் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீராமர், ஸ்ரீலக்ஷ்மிநாராயணன், கோவர்த்தன கிரி, சயன அலங்காரம், காளிங்க நர்த்தனம் போன்ற அலங்காரங்களில் காட்சி தரும் ஸ்ரீபாண்டுரங்கனை தரிசித்தால், நம் பாவமெல்லாம் பறந்தோடும்! ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்யப்படும் திருப்பதி வேங்கடாசலபதி அலங்காரம், ஏழுமலையானை கண்முன் நிறுத்துகிறது!


புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் வெள்ளித் தேரில் உற்ஸவம் நடைபெறும். அப்போது கருட சேவையைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

மீனாட்சி அம்பிகை பிறந்த ஊர் தென்னாங்கூர் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. எனவே, ஸ்ரீமீனாட்சி அம்மைக்கும் இங்கு சந்நிதி இருப்பது, விசேஷம்!

No comments:

Post a Comment