Monday 15 August 2016

அருள்மிகு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோயில்.திருநீர்மலை

கோயம்பேட்டுல இருந்து மதுரவாயல் வழியா பெருங்களத்தூர் போற பை-பாஸ்ல மலைக்கு மேல ஒரு கோவில் இருக்கு. அந்த வழியா போகும்போது பஸ்சுல இருந்து பார்த்திருக்கேன். அதேப்போல சினிமாவுல நிறைய தரம் இந்த ஊர் பேரை கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இதுவரை கோவிலுக்கு போகும் வாய்ப்பு கிடைக்கலை.

அந்த இடம் “திருநீர்மலை” பொதுவா குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு மனசுல பதிஞ்சுட்டதால, இது ஒரு முருகன் கோவில்ன்னு இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனா, இது ஒரு பெருமாள்கோவில். இந்த கோவில் பல்லவரத்திலிருந்து 8 கி.மீ.துரத்துல இருக்கு. கோவிலுக்கு போறதுக்கு பல்லாவரத்தில் இருந்து நிறைய பஸ்கள் இருக்கு.
108 திருப்பதிகள்ல இதுவும்ஒண்ணு. மலை மேலயும், கீழேயும் ரெண்டு பெரியகோயில்கள் இருக்கு. ரெண்டு கோவில்களிலும் பெருமாள் நான்குநிலைகளில், மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாக் கருதப்படுது. சரி, நாம மலைஅடிவாரக் கோவிலை முதல்ல பார்க்கலாம்.

மலையடிவார கோவிலின் மூலவர் நீர்வண்ணப்பெருமாள் நின்றதிருக்கோலத்தில், தாமரைமலர் பீடத்தில் அபய ஹஸ்த முத்திரைகளுடன்மார்பில் சாளக்ராம மாலை புரள, ராஜ கம்பீரத்துடன் கிழக்கு நோக்கிஅருள்பாலிக்கிறார்/ அதனால, அவர் பேரு நின்றான் தாயார் அணிமாமலர்மங்கை, தனிக்கோவில் கொண்டு நாச்சியாரா எழுந்தருளியிருக்கிறார்.



ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை,திருமணக்கோலத்தில் தரிசிக்கனும்ன்னு ஆசை வந்ததாம். அவர், இத்தலம்வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தாராம். பெருமாள், அவருக்கு சீதா,லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சிதந்தாராம். அப்ப வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியேநிரந்தரமா இங்கு தங்கும்படி வேண்டினாராம். சுவாமியும்அதுப்படியே அருளினாராம்.

இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின்மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் ன்னும், தலத்திற்குதிருநீர்மலை ன்னும் பேர் வந்திச்சாம். நீல நிற மேனி உடையவர்என்பதால இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' ன்ற பேரும் உண்டு.ராமபிரானுக்கும் சன்னதி இருக்குது. இவரது சன்னதியில், சுவாமியைவணங்கியபடி வால்மீகி காட்சி தருகிறார்.


இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாக் காட்சி தருவதால், திருமணம் கைக்கூடும் தலமாகவும், பிரார்த்தனைத்தலமாகவும் விளங்குது.

இங்கே கோபுரம் ராமருக்கு கொடிமரம் நீர்வண்ணருக்கு கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே இருக்கு. வால்மீகிக்காக ராமராவும், நீர்வண்ணப்பெருமாளாவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால, இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகிறார்கள். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமா ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைந்துள்ளது.


ராமர் சன்னதிக்கு பக்கத்துல அனுமன் தொழுத நிலையில்அருள்பாலிக்கிறார். இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார்தாயாரை, "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார்.பொதுவா பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்புவைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும்,உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சிதருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடிஇறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்றுநாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார்.அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.


ஆண்டாளும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.  


மலை அடிவார கோவிலில் மூலவர் ரங்கநாதர் சன்னதியின் பின்புறம் இருந்துபார்க்கும் போது மலைக்கோவில் அழகாக காட்சி தருது. பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டிïர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் பாட்டுக்கள் பாடியுள்ளார்.


இத்தலங்களின் பெருமையை குறிப்பிடும் போது திருமங்கையாழ்வார் நான்குதிவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி,திருகுடந்தை , திருகோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன்கிடைக்கும்ன்னு சொல்லியிருக்கார். பூததாழ்வார் ஒரு படி மேலே போய் ஸ்ரீரங்கத்தை வணங்கிய பலனை கிடைக்கும்ன்னு சொல்லி இருக்கார்.


அவ்வுளவு சிறப்புமிக்க இந்த மலையடிவார கோவிலை தரிசனம் செய்து விட்டுஇபொழுது மலைமேல் இருக்கும் மூலவர் - (இருந்தான்) சாந்த நரஸிம்மன்,வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய காட்சியிலும். மூலவர் - (கிடந்தான்) ரங்கநாதன், மாணிக்கசயனம், தெற்கே நோக்கிய காட்சியிலும்.தாயார் - ரங்கநாயகி. (தனிக் கோவில் நாச்சியார்) . கிழக்கே நோக்கிய காட்சியிலும் மூலவர் - த்ரிவிக்ரமன் (நடந்தான்) , நின்ற திருக்கோலம், கிழக்கேகிழக்கு நோக்கிய காட்சியிலும் தரிசிக்கலாம்.


இது தோயாத்ரிமலை செல்லும் நுழைவு வாயில். இந்த இடம் பழைய காலத்தில் காண்டவ வனம் என அழைக்கப்பட்டதாம். இந்த வாசல் காண்டவ வனத்தின் தோயாத்ரி வனவாசல் என்று குறிப்பிடப்படும். தோயம்ன்னா "பால்' ன்னு அர்த்தமாம். இந்த அலங்கார வளைவின் உள்புறம் அழகாக கலை நயத்துடன் செதுக்கப்பட்டிருக்கு.


இந்த அலங்கார வளைவைக் கடந்து 250 படிகளை ஏறிச் போனால், மலைக்கோயிலை அடையலாம்.


மலையேறும் பாதையில் வாயு மைந்தன் அனுமன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அவருக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கி விட்டுதோயாத்ரிமலை படிகளை ஏறனும்.


ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர்,மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம்நோக்கி போகும்போது..., அவர்களுக்கு பெருமாளின்சயனக்கோலம் அவர்கள் கண்களை விட்டு அகலவே இல்லையாம். மீண்டும்ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்கவேண்டுமென ஆசைப்பட்டிருக்காங்க. எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்ததிருக்கோலத்தைக் காட்டனும்ன்னு உருக்கமா பெருமாளைவேண்டிக்கிட்டாங்களாம். அப்ப சுவாமி "போக சயனத்தில்' ரங்கநாதராகஇங்குள்ள மலையில் காட்சி கொடுத்தாராம். இவரே இங்கு மலைக்கோயில்மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும்இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறைகார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுது.


கீழ்ப்படத்தில் காணப்படுவது கல்கி மண்டபம். இத்தலத்து பெருமாளை தரிசிக்கதிருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர்நிறைந்திருந்ததாம். அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்கமுடியலையாம். ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச்செல்வதென முடிவெடுத்திருக்கிறார். கோயில் எதிரேயுள்ள மற்றொருமலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை.ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமா இருந்ததிருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியைதரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்றகோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயனகோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்குகோலங்கள் காட்டியருளினாராம். இந்த நால்வரையும் இத்தலத்தில்தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும்,ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும்அருள் புரிகின்றனர்.


ஈரடியால் மூவுலகும் நடந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது எனகேட்பது போல திரிவிக்கிரம அவதார நிலையில் நடந்த வராகவும் இங்கு காட்சிதருகிறார்.

இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு,உக்கிரமா இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே,சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பாலரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர்.மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்க்கு. இவருக்கு பின்புறம்நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கைஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை.இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில்நரசிம்மரை தரிசிக்கலாம்.


கொடிமரத்தின் முன்பு கருடாழ்வார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் அவருக்கு நேரே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆதிசேஷனின் குடையின் கீழ் சயன கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராய் அருள்பாலிக்கிறார்.அவருடைய தொப்புள் கொடியிலிருந்து பிரம்மாவும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் நாம் இங்கு தரிசிக்கலாம்

 

கோவில் கொடிமரம் அழகாக காட்சியளிகிறது வைகானச ஆகம விதிப்படி இருவேளை பூஜை நடக்கிறது.



மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ளநீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்குது.வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார்.இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும்,உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்குது.அப்ப. இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவைசாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கைதிருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர்,ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்குது.


பொதுவா எல்லா கோயில்களிலும் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனா, இக்கோயிலில்ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாதரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரியஉதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில்எழுந்தருளி , மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதயவேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாகதீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாககருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம்,சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.


தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது.இவை, "ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்' எனப்படும். இதில் திருநீர்மலையும்ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களானசாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிறதலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமிதோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்குது.


ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல, குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமா வாழ..,  குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, திருமணத்தடைகள் நீங்க திருநீர் மலைக்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும். அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.  


ஒரு வழியாக மலைமேல் உள்ள பெருமாளையும், பால நரசிம்மரையும், ரங்கநாதரையும் தரிசித்து விட்டு மலைமேல் இருந்து இறங்கி தீர்த்த குளத்திற்கு போலாம்.


இந்த திருக்குளம் 3 ஏக்கர் பரப்பளவில் ,நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகியதெப்பக்குளம் இது. கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள்சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இங்கு குளம் ஒன்று, ஆனால், இதில் கலந்திருக்கும் தீர்த்தம் நான்கு. இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில்(குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் எனநான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன.

சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள்,வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் இங்கு தீர்த்தவாரிவிழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்தநிகழ்ச்சியை, "முக்கோட்டி துவாதசி' ன்னு சொல்றாங்க.

இக்கோவிலில் காலை 8 முதல் 12 மணிவரையிலும், மாலை 4 முதல் 7.30மணிவரையிலும் பெருமாளை தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment