Thursday 18 August 2016

விநாயகர் அலங்காரங்கள் மற்றும் பலன்கள்





விநாயகர் உருவம் பொதுவாகப் பதினாறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வடிவத்தினை வழிபடும் போதும் அதற்கென தனிப்பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். விநாயகரின் பதினாறு வடிவ அலங்காரங்களும் அதை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் கீழே தரப்பட்டிருக்கின்றன.

1. பாலகணபதி:

மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர்.

பலன்: இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

2. தருண கணபதி:

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர்.

பலன்:இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

3. பக்த கணபதி:

தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர்.

பலன்:இவரை வழிபடுவதால் இறை வழிபாடு பரப்புரை நன்கு அமையும்.

4. வீர கணபதி:

தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் உருவத்தை உடையவர்.

பலன்:இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

5. சக்தி கணபதி:

பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர்.

பலன்:இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

6. துவிஜ கணபதி:

இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர்.

பலன்:இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

7. சித்தி கணபதி:
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவராகவும் காணப்படுகிறார். இவரை பிங்கள கணபதி என்கிற பெயரில் அழைக்கின்றனர்.

பலன்:இவரை வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

8. உச்சிஷ்ட கணபதி:
வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தி கருநீல வண்ணமேனியுடையவராக இருப்பார்.

பலன்:இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, புதிய பதவிகளைப் பெறலாம்.

9. விக்னராஜ கணபதி:

சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர்.

பலன்:இவரை வழிபடுவதால் விவசாயம் பெருகும்.

10. க்ஷிப்ர கணபதி:

கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடையவராக இருப்பவர். இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார்.

பலன்:இவரை வழிபடுவதால் கல்வி சிறக்கும்.

11. ஹேரம்ப கணபதி:
அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். குறிப்பாக, நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார்.

பலன்:இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் போன்றவற்றில் புகழ் பெறலாம்.

12. லட்சுமி கணபதி:


பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்கக் கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர்.

பலன்:இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

13. மகா கணபதி:

பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர்.

பலன்:இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14. புவனேச கணபதி:

விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருபவர்.

பலன்: இவரை வழிபடுவதால் வழக்கு, பிரச்சனைகளில் வெற்றி கிடைக்கும்.

15. நிருத்த கணபதி:

மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் நிருத்த கணபதியாகக் காட்சி தருபவர்.

பலன்:இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெற முடியும்.

16. ஊர்த்துவ கணபதி:

பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருப்பவர்.

பலன்:இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

No comments:

Post a Comment