Monday 15 August 2016

சங்கடங்களை தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் !!

தல வரலாறு :

பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.



பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.





இங்கு இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில் மிக்க பொலிவுடன் விளங்குகிறது. ஆகம நெறிப்படி அருமையாக பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில் திருப்பணியை கூர்ந்து நோக்குவோமானால் நான்கு முறையாக திருப்பணி நடந்திருக்கின்றமை நன்கு புலனாகும்.



முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து சமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.


இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பத்தி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறபத்தியில் தென்பால் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் விளங்கும் கற்பக விநாயகர் திருக்கோலம் அர்த்த சித்திரம் ஆக வடக்கு நோக்கி விளங்கக் காண்போம். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் பெருந்தெய்வமான கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.





அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்.

அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியிற் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்தமைத்த பெரியதொரு மஹாலிங்கம் பொழிந்தினிது துலங்கக் காண்போம். இந்த மூர்த்தி தன் திருவீசர் என்று விளங்கும் திருவீங்கைக்குடி மஹாதேவர் .



அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் திருவுண்ணாழியின் வடபுற வெளிச்சுவரில் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.


இக்குடைவரைக் கோயிலுக்குள் சுவர்களிலும் தூண்களிலும் காணப்பெறுகின்ற கல்வெட்டுகள் நமக்கு ஓரளவு செய்திகளைத்தான் புலப்படுத்துகின்றன என்றாலும் அவற்றில் இருந்து மிக முக்கியமான செய்திகளும் சில கிடைக்கின்றன.


முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அதனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி பிடிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.

மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை "கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி" என்றே குறிப்பிட வேண்டும்.



பிள்ளையாரின் சிறப்பு

1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.


2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.


3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.


4. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.


5. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.


6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.


7.ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.



திருவிழாக்கள்
பிள்ளையார்பட்டியில் நிகழும் திருவிழாக்கள் முதலியவற்றை பார்க்கலாம்,

சங்கடஹர சதுர்த்தி

ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி சுக்ல சதுர்த்தியிலும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார், திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும் உமாதேவி சமேத சந்திரசேகரப்பெருமானும் திருவீதி பவனிவர பிள்ளையார் திருச்சன்னதியிலும் மருதங்குடி நாயனார் திருச்சன்னதியிலும் சொக்கப்பனை கொளுத்தப்பெறும்.

மார்கழி திருவாதிரை

மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார், அன்று சிவகாம சுந்தரி ஊடலை நீக்க நடராஜப் பெருமான் கைக்கொள்ளும் உபாயங்கள் மிகவும் சுவையுடையன, ஊடல் நீக்கத்தின் பொருட்டாய் எழுதிக கொடுக்கும் பிடிகாடு வினோதமாய் இருப்பினும் அதன் அடிப்படை நோக்கம் பெரிதும் மகிழ்ந்து பாராட்டத்தக்கதாகும்

விநாயக சதுர்த்தி

ஆண்டு தோறும் ஆவணித்திங்களில் வரும் விநாயக சதுர்த்தியே இக்கோயிலின் பெருந்திருநாள் ஆகும், இது பத்து நாள் விநாயகர் சதுர்த்திக்கு ஒன்பது நாள் முன்னதாகவே காப்புக்கட்டி கொடியேற்றம் செய்து திருநாள் தொடங்கப்பெறும், இரண்டாம் திருநாளில் இருந்து எட்டாம் திருநாளில் வரை காலை விழாவில் விநாயகர் வேள்ளி கேடகத்தில் உலா வருவார்


பூஜைகளின் நேரம்


1. திருவந்தல் - காலை மணி- 6.00 முதல் 06.30 வரை


2. காலசந்தி - காலை மணி- 08.30 முதல் 09.30 வரை


3. உச்சிகாலம் முற்பகல் மணி - 11.30 முதல் - 12.00 வரை


4. சாயரட்சை மாலை மணி - 05.00 முதல் 06.30 வரை


5. ஆர்தசாமம் இரவு மணி- 07.45 முதல் 08.30 வரை


கோயில் திறந்திருக்கும் நேரங்கள்



காலை மணி - 6.00 முதல் மதியம் 01.00 வரை

மாலை மணி - 04.00 முதல் இரவு 08.30 வரை

கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் கோயில் நடை காலை 6.00 மணி முதல் இரவு 08.30 வரை திறந்திருக்கும். மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சியின் பொது அதிகாலை மணி - 04.00 முதல் இரவு 08.30. வரை திறந்திருக்கும் தைபூசம் வரை கோயில் காலை முதல் இரவு வரை திறந்திருக்கும்

No comments:

Post a Comment