Monday 15 August 2016

கார்த்திகை விரதமும் கந்தன் கருணையும்....நாரதர் பெற்ற நல்ல பேறு!


கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான கந்தப் பெருமானுக்கு திதிகளில்-சஷ்டி திதி, கிழமைகளில்-வெள்ளிக்கிழமை, நட்சத்திரங்களில்-கார்த்திகை என விரதங்கள் உண்டு. இவற்றில் எல்லாக் கார்த்திகையும் விசேஷம்தான் என்றாலும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகையும், உத்தராயனம் தொடங்கும் தை மாதத்தில் வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.

இந்த இரண்டிலும், மழைக்காலம் தொடங்கும் மாதமான ஆடி மாதத்துக்கு கார்த்திகையே, தமிழ்நாட்டின் தனிப்பெருங்கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் சிறப்புடையது.

கார்த்திகை விரதம் வந்த வரலாறு...

சூரபதுமன் முதலான அசுரர்களைத் தண்டிக்கவும், தேவர்களைக் காத்து அருளவும் கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்ட முருகப் பெருமான், ஆறு குழந்தைகளாக உருமாறித் திருவிளையாடல் செய்து கொண்டிருந்தார்.

அந்த ஆறு குழந்தைகளுக்கும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்த்தனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவபெருமான், ''கந்தனாகிய இவனுக்கு நீங்கள் பாலூட்டிப் போற்றியதால் கார்த்திகைப் பெண்களே! இனிமேல் இவன் கார்த்திகேயன் எனப்படுவான்" என்றார்.


கந்தன் தனை நீர் போற்றிய
கடனால் இவன் உங்கள்
மைந்தன் எனும் பெயராகுக (கந்த புராணம்)
அத்துடன், ''கார்த்திகை விரதம் இருப்பவர்களின் குறைகளை எல்லாம் நீக்கி, நல்வாழ்வு அளித்து, முடிவில் முக்தியும் அளிப்பேன்!" என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களிடம் கூறினார். இதையும் கந்த புராணம் கூறுகிறது....
நுந்தம் பகலிடை இன்னவன்
நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப்
பரந்தனை நல்குவம் என்றான்


விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகளே கார்த்திகை விரதத்திற்கும் பொருந்தும். விரத நாளன்று முருகப் பெருமானை பூஜை செய்து வழிபட வேண்டும். கந்த புராணம் படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும். திருப்புகழ், சுப்பிரமணிய புஜங்கம் முதலான முருகன் துதிப்பாடல்களைப் பாட வேண்டும்.
கார்த்திகை விரதம் இருந்து பலன் பெற்றவர்களில் சிலர்...
கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்த நாரதர், சப்தரிஷிகள் எனப்போற்றப்படும் ஏழு முனிவர்களையும்விட உயர்ந்த நிலையையும் சிறப்பையும் பெற்றார். கார்த்திகை விரதத்தைக் கடைபிடித்த பிரம்மசாரி ஒருவர், அரசகுல முதல்வனாகப் பிறந்து உலகம் முழுவதையும் ஆளும் பாக்கியம் பெற்றார். கார்த்திகை விரதத்தை நோற்ற ஓர் அந்தணர், தான் விரும்பிய எல்லா விதமான நலன்களையும் பெற்று, மறுபிறவியில் திரிசங்கு சக்ரவர்த்தியாகப் பிறந்து, பல விதமான பேறுகளைப் பெற்றார்.

இத்தகைய நன்னாளில் நாமும் விரதமிருந்து எம்பெருமான் முருகனை வழிபட்டு வேண்டியதைப் பெறுவோம் !

No comments:

Post a Comment