Monday 15 August 2016

கடலுக்குள் ஒரு சிவன் கோயில் !


 
குஜராத்தில் உள்ள நிஷ்களங்கேஷ்வர் சிவன் கோயில், முழுக்க முழுக்க ஆச்சர்யங்களும், பிரமிப்புகளும் கொண்டது. கோடை விடுமுறைக்காக வட மாநிலங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதது நிஷ்களங்கேஷ்வர் சிவன் கோயில்.

தமிழகத்தில் இல்லாத சிவன் கோயிலா குஜராத்தில் இருக்கிறது என கேட்கிறீர்களா? ஏன் அங்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஐந்து காரணங்கள் இங்கே...
 
 
 
* இந்த கோயில் அரபிக்கடலுக்குள் இருக்கிறது. கடலில் அலைகள் அதிகம் உள்ள நாட்களில் இங்கு ஒரு கொடியையும் மற்றும் ஒரு தூணை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அலைகள் குறைந்த நேரத்தில் கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால், 5 சுயம்பு லிங்கத்தை தரிசிக்கலாம்.

* தினம் தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரை நோக்கித் திரும்புகின்றனர்.

* போரில் வென்ற பாண்டவர்கள், சிவனை வழி பட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. நிஷ்களங்கேஷ்வர் என்றால் குற்றமற்றவன், தூய்மையானவன் என பல பொருள்கள் உண்டு. இந்த சிவனை வழிபட்டால் சுபிட்சம், சுகாதாரம் மற்றும் ஞானத்தை பெறலாம் என்பது நம்பிக்கை.
 
 
* இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடையாமல் உள்ளது. 2001 ம் ஆண்டு குஜராத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், இந்த கொடி மரம் அசையாமல் நின்றது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடிமரத்தின் உச்சியைத் தொடும்.

* அமாவாசை தினத்தன்று, கடலில் அலையின் சீற்றங்கள் குறைவாக இருக்கும். அன்று இக்கோயிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும். சாம்பல், பால், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு மக்கள் வழிபடுவார்கள்.

* இயற்கை சீற்றத்தை எதிர்த்து நிற்கும் இந்த அதிசய சிவாலயத்தை அனைவரும் தரிசித்து அருள் பெறலாம்.

அலையடிக்கும் ஆன்மிக அனுபவத்தை அனுபவிக்க தவறாதீர்கள்.

No comments:

Post a Comment