Sunday 25 December 2016

அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர் - ( தஞ்சாவூர் )

மூலவர் : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சவுந்தரநாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : 8 தீர்த்தங்கள் உண்டு. அதில் ஜடாயு தீர்த்தம் முக்கியமானது.

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பண்டாரவாடை திருவியலூர்

ஊர் : திருவிசநல்லூர்

பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்

தேவாரப்பதிகம்

செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் பெய்மின்பலி யெனநின்றிசை பகர்வாரர் இடமாம் உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட வுரைமேல் விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர் வியலூரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 43வது தலம்.

திருவிழா:

சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி பூஜை சிறப்பானது. ஐப்பசி கடைசி நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு. காவிரியில் தீர்த்தவாரி. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம். திருக்கார்த்திகை. கார்த்திகை சோமவாரம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 43 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில் இது.

பிரார்த்தனை

இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

இத்தலம் நான்கு யுகம் கண்டு தலமாக புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர், திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர், துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர், கலியுகத்தில் சிவயோகிநாதர் என இறைவன் வணங்கப்படுகிறார். திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது.

சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும், இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும், அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.

சதுர்கால பைரவர்: இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர். ஞானகால பைரவர் அருகில் தெட்சிணாமூர்த்தியும், சொர்ணாகர்ஷன பைரவர் அருகில் மகாலட்சுமியும், உன்மத்த பைரவர் அருகில் பாலசனியும் உள்ளனர். யோக பைரவர் அருகில் உத்திரகைலாய லிங்கம் இருக்கிறது. இவர்களை அஷ்டமி திதியில் வழிபடுவது சிறப்பு.

இங்கேயும் ஒரு கங்கை: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்து கொண்டிருக்கும் போது, பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் கேட்க, கங்கையில் குளிக்க வேண்டும் என்றார்கள். இவர் இத்தல இறைவனை வேண்ட, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கைநீர் பெருக்கெடுத்தது.

தல வரலாறு:

படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப்பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன.

ஒரு காலத்தில், ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம்,""அழைப்பது யார்?''என கேட்க, நந்தி திரும்பி பார்த்தது. (இத்தலத்தில் நந்திசிலை திரும்பிப்பார்த்த நிலையிலேயே உள்ளது) அவன் அப்படி அழைத்தது "பிரதோஷ தினம்' ஆகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது.

அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. விஞ்ஞானம் அடிப்படையில்: சூரிய கடிகாரம்: கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment