Saturday 31 December 2016

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு - திருத்துறைப்பூண்டி, திருவாரூர்


மூலவர் : அக்னீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி

தல விருட்சம் : வில்வம் மரம்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கீராளத்தூர்

ஊர் : திருக்கொள்ளிக்காடு

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே. - திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 115வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

கோயில் முன்புறவாயிலில் ராஜகோபுரமில்லை. மேலும் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரம் கிடையாது. பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன. விநாயகர், காசிவிசுவநாதரை வணங்கி வலம் முடித்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். மேற்கு பார்த்த சன்னதி. அக்கினி வழிபட்டதால், சிவலிங்கத்திருமேனி சற்று சிவப்பு நிறமாக இருக்கிறது.

குட்டையான சிறிய பாணம். சுவர் ஓரத்தில் நால்வர் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்னால் இடதுபுறம் அம்பாள் சன்னதி உள்ளது. சிறிய திருமேனி நின்ற திருக்கோலம். கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முதலிய திருமேனிகள் உள்ளன.

பிரார்த்தனை

சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

அக்னி பகவான் தன் சாபம் நீங்க இத்தலத்து ஈசனை வணங்கியதால் இறைவன் "அக்னீஸ்வரர்' எனப்படுகிறார். இங்கு மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பாகும். இத்தலத்திற்கு வன்னி, ஊமத்தை, கொன்றை என 3 தலவிருட்சங்கள் உள்ளன. இதில் வன்னிமரம் குபேர செல்வத்தையும், ஊமத்தை மனக்கவலையையும், கொன்றை குடும்ப ஒற்றுமையையும் தருகிறது. பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

நாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. எனவே மாறுபட்ட கோணத்தை விட்டு அனைத்து நவகிரகங்களும் "ப' வடிவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கலப்பை ஏந்திய சனி இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

நவகிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் தேவர் முதல் மனிதர் வரை சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே நினைத்து பயப்படுவர். இதனால் மனம் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார்.

சிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வங்களை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். நளச்சக்கரவர்த்தி தனக்கு சனிதோஷம் ஏற்பட்ட காரணத்தினால் நாடு, நகரம், மனைவி, மக்களை பிரிந்து மிகவும் துன்பத்திற்கு ஆளாகிறான்.

சனி தோஷம் விலகிய பின் இத்தலம் வந்து பொங்கு சனியை வணங்கி நலமடைந்ததாக வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment