Saturday 31 December 2016

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் , நன்னிலம் - திருவாரூர்


மூலவர் : ஐராவதீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வண்டமர் பூங்குழலி , சுகந்தகுந்தளாம்பிகை

தல விருட்சம் : பாரிஜாதம், தற்போது இல்லை

தீர்த்தம் : வாஞ்சியாறு, மற்றொன்றாகிய சூரிய தீர்த்தம் கோயிலின் முன் உள்ளது.

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கோட்டாறு

ஊர் : திருக்கொட்டாரம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய் கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைக ளன்னஞ் சேர்ந் தழகாய் குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே என்று எழுவார்கள் நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே. - திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 53வது தலம்.

திருவிழா:

ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம்

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 116 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் ""ராசராசப் பாண்டி நாட்டு உத்தமச் சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்'' என்று குறிக்கப்படுகிறது. இக்கோயிலைக் கட்டுவித்தவன் ""சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க சோழ கேரள ராசன்'' ஆவான் (காலம் கி.பி.1253), கல்வெட்டில் இறைவனின் பெயர், ""இராசேந்திர சோழீசுவரமுடைய மகாதேவர்'' என்று காணப்படுகின்றது.

பிரார்த்தனை

திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

கோடு - கரை . வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு எனப்பட்டது. வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப்பெயர். அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுபக முனிவர், முருகன், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரிய, சந்திரர், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன.

முன்மண்டபத்திற்கு அருகில் குமார புவனேஸ்வரர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் உள்ளது. அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம். ஞானசம்பந்தரின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவர் மிகச் சிறியவர். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம்.

தல வரலாறு:

ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை. வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறை வனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது.

துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். அவர் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடற்புராண வரலாறு. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.

சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட "சுபர்' தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங்கி மூலவர் சன்னதியில் தேன்கூடு இருந்து வருகிறது'', தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடுகட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் - சுபமக ரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்றத்தில் உள்ளது.

முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுகமகரிஷியும் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment