Thursday 26 January 2017

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் - (கர்நாடகா)


மூலவர்: மூகாம்பிகை

தீர்த்தம்: அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு

பழமை: 2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: கொல்லாபுரம்

ஊர்: கொல்லூர்

பாடியவர்– ஆதி சங்கரர்

🅱 திருவிழா:🅱
 
👉🏾 பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது.

 👉🏾 நவராத்திரி, தீபாவளி. கொல்லூர் அன்னை மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன.

👉🏾 ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா, மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன.

👉🏾 சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.
 
🅱 தல சிறப்பு:🅱

🍄 பேரருள் புரிந்து, புவனங்களைஎல்லாம் காக்கும் அன்னை பராசக்தி தேவி, திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் ஒன்று, கொல்லூர்.  இத்தலம் அமைப்பில் ஸ்ரீ சக்கரத்தை ஒத்துள்ளது.

🌵 கொல்லூர் என்னும் இத் தலத்துக்குக் " கோபுரம் " என்னும் பொருள் உண்டு. பழங்காலத்தில், இத் திருத்தலம் "மகாரண்ணியபுரம்"  என்னும் திருப்பெயரால் அழைக்கப்பட்டது.
 
🌵 ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார்.

🌿 அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

🌷 இங்கு அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

🌵 லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அரூப வடிவில் அருள் பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

👉🏾 இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது.

👉🏾 பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும்.

👉🏾 அம்மனின் சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.
 
🅱 திறக்கும் நேரம்:🅱
 
  காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
🅱 பொது தகவல்:🅱
 
🌷 கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர், பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.

🌷 சௌபர்ணிகை ஆற்றின் நீர்த்துறையின் கரையில் விநாயகர் கோயில் உள்ளது. இந்த ஆற்றில் நீராடி, விநாயகரை வழிபட்டுத் தான் அம்பிகை கோயிலுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில், ஒரு காளி கோயில்  உள்ளது. இந்தக் காளி கோயிலினுள்ளே, ஆறு அடி உயரமுள்ள புற்று காணப்படுகின்றது. இக் காளி தேவியையும் வணங்கி, கீழ்த் திசையை நோக்கிச் சென்றால், அன்னை மூகாம்பிகை திருக்கோயிலின் மேற்கு வாசலை அடையலாம்.

🍄 மேற்கு கோபுர வாசல் எப்போதும் மூடப்பட்டிருக்கும். இந்தக் கோபுர வாசலின்  வழியாகவே, ஆதி சங்கரர் முதன் முதலில் திருக்கோயிலுக்குள் நுழைந்து  அம்பிகையைத் தரிசனம் செய்து, தியானம் செய்தார். இந்தப் புனிதத்துவத்தைக்  காக்கவே இந்த வாசல் எப்போதும் மூடப்பட்டிருப்பதாக ஐதீகம்.

🌷 இக் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்றால், முன் மாடம் அமைந்துள்ளது. அதைக் கடந்து சென்றால், கம்பீரமாக நின்று அருள் புரியும் வீரபத்திரரைத் தரிசிக்கலாம்.

🍄 கோயிலின் தெற்குப் பிராகாரத்தில்,பத்துத் திருக்கரங்களுடன் விநாயகப் பெருமான் மூஞ்சூறு வாகனத்தின் மீது காட்சி தருவதைப் பார்க்கலாம். தென் கிழக்குப் பகுதியில்,  இரண்டு நாக உருவில் சுப்பிரமணியர், தென் மேற்கு மூலையில்,சந்திர மௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பஞ்சமுக கணபதி முதலிய பல சந்நிதிகள் காணப்படுகிறன.

🍁 திருக்கோயிலின் கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை தேவி தனது இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, அருள் பொங்கக் காட்சியளிக்கின்றாள்.

🌵 இக் கோயிற் கருவறையின் விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டுப் பிரகாசமாகக் காட்சியளிக்கிறது.

🌵 கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை திரு உருவச் சிலையின்  முன்னே காணப்படும் சுயம்பு லிங்கமாகிய ஜோதிர்லிங்கம், சக்தியும், சிவனும்  இணைந்திருப்பதை உணர்த்துவது போல், ஒரு தங்க ரேகையால் இரு பிரிவுகளாகப்  பிரிக்கப்பட்டிருக்கின்றது. இது போன்ற சுயம்பு லிங்கத்தை உலகில் வேறு எத்தலத்திலும் காண முடியாது. உச்சி வேளையின் போது, சூரியனின் ஒளிக் கதிரைக் கண்ணாடி மூலமாகப் பிரதிபலிக்கச் செய்து, அந்த ஒளி லிங்கத்தின் மேல் விழ வைக்கும்போது, பக்தர்கள் அந்தத் தங்க ரேகை பளிச்சிடுவதைப் பார்த்துப்  பரவசமடைகின்றார்கள்.
 
🅱 பிரார்த்தனை:🅱
 
👉🏾 மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
🅱 நேர்த்திக்கடன்:🅱
 
🌵 அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம்.
 
🅱 தலபெருமை:🅱
 
🍄 அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள்.

🌷 ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

🍄 நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

🍁 ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார்.

🌿 சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.

🅱 சகலநோய் நிவாரணி:🅱

♻ ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்ற போது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

🍄 இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.

🅱 குடஜாத்ரி மலை:🅱

 🍁 கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.

🅱 மாசி மகா தேர்த்திருவிழா வைபவம்:🅱

🌷 ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாகவும், மிகவும் விமரிசையாகவும் நடைபெறும். அன்னையின் புன்னகை பூத்துக்குலுங்கும் எழில் வதனமும், புவனத்தை ஈர்க்கும் வைர மூக்குத்தியும், அனைவரின் கவனத்தைக் கவரும் தங்கக் கிரீடமும், தாமரைத் திருவடிகளும், அருள் சுரக்கும் அழகிய நேத்திரங்களும், சிம்மத்திவ் மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூகாம்பிகையின் திருக்கோலத்தை காணக் கண்கோடி வேண்டும். திருத்தேர்விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள், மலைவாசிகள் கலந்து கொண்டு அம்பிகையின் அருளைப் பெறுகிறார்கள்.

🌷 பரசுராமரால் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ஏழு முக்தி ஸ்தலங்களில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்று.

🍁 இங்கு மூகாம்பிகை அம்மன் பத்மாசன தோற்றத்தில் காட்சி தருவது விசேஷம்..

🌵 சங்கொடு சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணுவைப் போல் ஜொலிப்புடன் ஸ்ரீசக்ர பீடத்தின் மேல் அமர்ந்து, ராஜபரிபாலனம் செய்து  இடர் களைந்து , கொடிய நோயையும் நீக்கும் வல்லமை கொண்டவள் அன்னை கொல்லூர் மூகாம்பிகை..!

🅱 ஆதிசங்கரருக்கு அருள்:🅱

🌷 ஆதிசங்கரர் 788ல் அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், இன்று கேரளா பகுதியாக உள்ள காலடி என்ற இடத்தில் சிவகுரு – ஆயாம்பாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். கோவிந்த பாகவதரின் சீடராக தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். உபநீஷங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த ஞானியவர். இந்து மதத்தை மென்மேலும் உயிர்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணு அவதாரம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதி வைத்தவர். இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர். கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.

🍁 அவர் பயணம் மேற்கொள்ளும் போது கர்நாடகாவின் கொடச்சேரி மலையின் மீது தியானம் மேற்கொள்கிறார். தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும் போது அம்பாளை தினம் தினம் வணங்க வேண்டும், தங்களது உருவத்தை நான் கேரளா காலடியில் பிரஷ்டை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கேட்கிறார். அம்பாளுக்கே இருப்பிடம் விட்டு போக மனசில்லை. இருந்தும் பக்தன் கேட்டுவிட்டான். கேட்டதை வழங்குவதே அம்பாளின் நிலை. அதனால் மூகாம்பிகையம்மன் பதிலுக்கு அவரிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறார். அதாவது, நீங்கள் என் உருவத்தை கொண்டு செல்லுங்கள். ஆனால் நீங்கள் சென்று சேரும் இடம் வரை திரும்பி பார்க்ககூடாது. அப்படி திரும்பினாள் அந்த இடத்திலேயே என்னை பிரஷ்டை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆதிசங்கரரும் அதை ஏற்று அமபாளின் உருவம் கொண்ட சிலையுடன் கொடச்சேரி மலையில் இருந்து அம்பாளை கைகாளால் தாங்கிக்கொண்டு பக்தியுடன் இறங்கி வருகிறார். மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தை கேட்டு ஆதிசங்கரர் திரும்பி பார்க்கிறார். திரும்பி பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்தயிடத்திலேயே அம்பாளை பிரஷ்டை செய்கிறார். அந்தயிடம் கொல்லப்புறா என்கிற கொல்லூராகும்.

🌷 ஆதிசங்கரரால் பிரஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது. அழகும், அமைதியும் கொண்டயிடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம்மது. பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகம்மாக காட்சியளிக்கிறாள்.

🅱 சவுபர்னிக்கா:🅱

🍄 கோயிலுக்கு மேற்கே காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரி சந்நதிக்கு இடையே சவுபார்னிக்கா ஆறு ஓடுகிறது. கருடன் தனது தாயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க இங்கு வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என கேட்டபோது அம்பாள் ஆசிர்வாதி நீரோடையை உருவாக்கி தந்தார். அதன்படி இந்த ஆறு கொடச்சாத்தரி மலை உச்சியில் இரண்டு கனவாய் வழியாக உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் உள்ள கொல்லூர் வந்து செல்கிறது எனக் கூறப்படுகிறது. கொல்லூர் வழியில் இந்த ஆறு வரும்போது இதன் பெயர் சம்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் 64  வகை மூலிகை தாவரங்கள் கலந்த நீர் இந்த ஓடையில் வருகின்றன. இதில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வற்றாமல் அவ்வாறில் நீர் ஓடுகிறது.

🍄 தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோயில் உள் பிரகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது.

🌵 வெள்ளிக்கிழமை தோறும் கோயில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் கருவரையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

🌻 இரவு சந்நிதானம் அடைபடுவதற்கு முன் அம்பாள் கோயில் உள்ளே தங்க ரதத்தில் பிரகார வலா வருகிறாள். தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை.

🍁 தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🅱 மூகாம்பிகை என அம்பிகை பெயர் பெற்றது எப்படி ?🅱

👉🏾 முன்னொரு காலத்தில் கம்ஹாசுரன் என்கிற அரக்கன் ஒருவன் இருந் தான். குடிமக்களுக்கும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்த அவன், சிவனை நோக்கிக் கடும் தவமிருந்தான். சாகாவரம் வேண்டி அவன் தவம் இருப்பதை அறிந்த பராசக்தி, அவன் வரம் பெறுவதற்கு முன்பே, அவனை (மூகன்) ஊமையாக்கி விட்டாள். இதனால் அவன் ‘மூகாசுரன்’ என்று அழைக்கப்பட்டான். இந்த அசுரனை வதம் செய்ததால் அம்பிகை, ‘மூகாம்பிகை’ எனப் போற்றப்படுகிறாள்.
 
🅱 தல வரலாறு:🅱
 
குடசாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனியாக உருவாகி, பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. அந்தக் காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். ஒரு முறை இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். (கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப் பட்டு பின்னர் கொல்லூர் ஆனதாகத் தகவல்!)

கோல மகரிஷியின் தவத்தை மெச்சிய பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி, ‘‘பக்தா, வேண்டும் வரம் கேள்!’’ என்றார்.

‘‘ஈசனே, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். உலகில் மாதம் மும்மாரி பொழிய வேண்டும். பயிர்களும் உயிர்களும் செழிக்க வேண்டும். எல்லோரும் நிறைந்த ஆயுளுடனும், தேக சுகத்துடனும் வாழ வேண்டும். இவற்றைத் தவிர, எனக்கு வேறு எதுவும் வேண்டாம்!’’ என்று பதிலளித்தார் மகரிஷி.

ஈசன் மனம் மகிழ்ந்து, ‘‘கோல மகரிஷியே... இதோ, இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா!’’ என்று அருளினார்.

ஈசன் அருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி இறைவனிடம், ‘‘ஈசனே! சக்தி தேவி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது?’’ என்று வருத்தத்துடன் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள ஸ்வர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதி, அறுபத்துநான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதி, செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப் பார்கள். வலப் புறம் பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன்!’’ என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியவாறு ஸ்வர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை, கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.

இந்த நிலையில் மூகாசுரன், கோல மகரிஷி வாழும் இந்தத் தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அசுரர் குழாமுடன் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு வசிக்கும் அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந் தான். பாதிக்கப்பட்டவர்கள், கோல மகரிஷியிடம் சென்று கண்ணீருடன் முறையிட்டனர். அனைவரையும் சாந்தப்படுத்திய அவர், மூகாசுரனை சம்ஹரிக்க வேண்டி அம்பாளை நோக்கிக் கடும் தவம் இருந்தார்.

அம்பாள், கோல மகரிஷியின் முன் தோன்றினாள். முனிவரின் முறையீட்டைத் தொடர்ந்து கோபக் கனலைக் கண்களில் தேக்கி, கையிலே திரிசூலம் ஏந்தி, தேவ கணங்களில் திறமை வாய்ந்த வீரபத்ரனைப் படைத் தளபதி யாக்கி மூகாசுரனோடு போர் புரிந் தாள் அம்பிகை. முடிவில் அசுரன் மடிந்தான். மூகாசுரன் மடிந்த பகுதி, கொல்லூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ‘மாரண ஹட்ட’ என்னும் இடமாகும்.

இந்து தர்மம் செழிக்க ஆதிசங்கரர், சக்தி வழிபாட்டைச் சொல்லும் ‘சாக்தம்’ உள்ளிட்ட ஆறு வகை வழிபாடுகளை வழிப்படுத்தினார். பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட அவர், கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம், ‘‘ஸ்வாமி, தங்க ரேகை மின்னும் லிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால், மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே!’’ என்று முறையிட்டனர்.

ஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அம்பாள் அவருக்குப் பிரத்தியட்சமானாள். பத்மாசனத்தில் வீற்று, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரண டையத் தூண்ட, மற்றது வரமருளி வாழ்த்தும் கோலத்தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை, தேர்ந்த ஸ்தபதியிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி, அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது.

ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால், மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீமூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் பிரத்தியட்சமான பிறகு, அவர் இயற்றியது தான் ‘சௌந்தர்ய லஹரி’ (சௌந்தர்யம்-அழகு; லஹரி- அலைகள்).

மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த பீடம், அம்பாள் படைத் தளபதியாக நியமித்த வீரபத்திரர் சந்நிதி ஆகியவற்றையும் காணலாம். அம்பாளுக்கு நடக்கும் எல்லா பூஜையும் வீரபத்திரருக்கும் உண்டு. அன்னை மூகாம்பிகைக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. ஆரத்தி, புஷ்பாஞ்சலி மட்டுமே உண்டு. ‘‘இது ஸித்தி க்ஷேத்திரம் ஆகும்.

No comments:

Post a Comment