Monday 30 January 2017

அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை - திருவாரூர்


மூலவர் : வண்டுறைநாதர், பிரமரேசுவரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வேனெடுங்கண்ணி, பிரகதாம்பாள்

தல விருட்சம் : வில்வ மரம்

தீர்த்தம் : பிரம்மபுரீச தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவெண்டுறை, வண்டுதுறை

ஊர் : திருவண்டுதுறை

பாடியவர்கள்: சம்பந்தர்

தேவாரப்பதிகம்

காலனை யோருதையில் லுயிர் வீடுசெய் வார்கழலான் பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன் மாலை மதியொடு நீரரவம் புனைவார் சடையான் வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 112வது தலம்.

திருவிழா:

வருடப்பிறப்பு, விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.


தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 176 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த சன்னதி. அம்மன் தெற்கு பார்த்த சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் சுற்றுப்பகுதியில் விநாயகர், முருகன், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனிபகவான், சூரியன், சந்திரன், பிட்சாடனர், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் ஆகியன அமைந்துள்ளன.


பிரார்த்தனை

செய்யும் தொழில்களில் தடங்கல் ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்து தீர்வு காண்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

பிருங்கிமுனிவர் வண்டு உருவில் வழிபாடு செய்ததால் இத்தலம் "திருவண்டுதுறை' ஆனது. இப்போதும் கூட சிவன் சன்னதியில் வண்டு ஒலி கேட்கிறது என்கிறார்கள். திருமால் இத்தல சிவனை பூஜித்து சிவபூஜையின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டினார். பிரம்மா தன் படைப்புத்தொழிலில் தடை ஏற்பட்ட போது இங்கு வழிபாடு செய்து தடை நீங்க பெற்றார். துருவ மன்னன், அங்கவன், அரிச்சந்திரன், முசுகுந்த சோழனின் மகன் தியாகசோழன் ஆகியோரும் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.


நங்கை எனும் பெண்முனிவருக்கு இத்தலத்தின் மண்ணெல்லாம் சிவலிங்கங்களாக தோன்ற, அதன் மேல் கால் வைக்க கூடாது என்பதால் வடதிசை நோக்கி நின்று வணங்கினாராம். இதன் காரணமாக இங்கு நடுமண்டபத்தில் உள்ள நந்தி வடதிசையை பார்ப்பதாக ஐதீகம்.


தல வரலாறு:

பிருங்கி முனிவர் என்பவர் சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த பார்வதி, அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள ரத்தம், சதை ஆகியவற்றை நீங்க செய்தார். உடல் தள்ளாடிய நிலையிலும் முனிவர் சிவனை தொடர்ந்து வழிபாடு செய்தார். சிவன் முனிவருக்கு அருள்புரிந்தார். இதனால் பார்வதி, சிவனை வழிபட்டு அவரது இடது பாகம் பெற்றார்.


சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதை உணராத முனிவர், வண்டு உருவம் எடுத்து, அர்த்தநாரீஸ்வர திருமேனியில் ஒரு பாதியை துளைத்து கொண்டு சிவனை மட்டும் வணங்கினார். கோபமடைந்த பார்வதி பிருங்கி முனிவரை வண்டு உருவாகவே இருக்கும் படி சாபமிட்டார்.


மனம் வருந்திய முனிவர் சாப விமோசனம் வேண்டினார். மனமிறங்கிய பார்வதி, ""சக்தியின்றி சிவமில்லை. சிவனின்றி சக்தியில்லை, திருவண்டுதுறைத் தலத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெறுக'' என அருள்புரிந்தார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment