Monday 30 January 2017

அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை - நாகப்பட்டினம்


மூலவர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை

தல விருட்சம் : கொன்றை

தீர்த்தம் : கோயிலின் முன் உள்ள தீர்த்தக்குளம். இக்குளத்தில் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகமம்/பூஜை : ருத்ர வியாமளா தந்திர ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருச்சாத்தமங்கை, கோயிற்றிருச்சாத்தமங்கை

ஊர் : சீயாத்தமங்கை

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்

வெந்த வெண்ணீறு பூசி விடையேறிய வேதகீதன் பந்தணவும் விரலாள் உடனாவதும் பாங்கதுவே சந்தமா றங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை அந்தமாய் ஆதியாகி அயவந்தி அமர்ந்தவனே. - திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 81வது தலம்.

திருவிழா:

ஆவணி மூல விழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

தல சிறப்பு:

மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.திருநீலநக்க நாயனார் அவதார தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 144 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

மேற்கு நோக்கிய திருக்கோயில். சுவாமி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கியே உள்ளன. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில் நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது,


விசாலமான உள் இடம், வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில்) சப்தமாதர்கள், பைரவர், நவகிரகங்கள், மாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் முதலிய சன்னதிகள் உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும் போது, வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சன்னதிகள் உள்ளன.

அடுத்து திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது. சோமஸ்கந்தர், மகாகணபதி சன்னதிகளைத் தரிசித்துப் படிகளேறி உட் சென்றால் வலதுபுரம் உள்ள நீலநக்கர், அவருடைய மனைவி, நடனசுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராசசபை உள்ளது. அம்பலக்கூத்தர், அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார்.

(சோழர் காலக்) கல்வெட்டில் இத்தலத்து இறைவன் ' அயவந்தி உடையார் என்று குறிக்கப்பட்டுள்ளார். திரிபுவனச்சக்கரத்தில், குலோத்துங்க சோழர், இராசராசதேவர் காலத்தியவை.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

திருநீலநக்க நாயானரின் அவதாரத் தலம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, லிங்கோற்பவர், பிரம்ம, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார்.

ருத்ர வியாமளா தந்திர' ஆகம முறைப்படி நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆவணி மூலவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 1945ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருமருகல், திருநள்ளாறு முதலிய திருமுறைத் தலங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது திருநீலநக்கர் வரவேற்று அவருடைய நட்பைப் பெற்றதும் இத்தலமேயாகும்.

தல வரலாறு:

திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி இலிங்கத்தின் மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப் பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச்செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோவிலில் கவலையுடன் இருந்தார்.

அன்று இரவு வீட்டில் நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி அவர் மனைவியர் ஊதின இடத்தை தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளம் இருப்பதைக் காட்டி அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமை வாய்ந்த தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment