Friday 4 May 2018

வாழ்க நலமுடன் - சீனியர் சிட்டிசன்களுக்குச் சிறப்பான கையேடு


“வயதான காலத்தில் மனம் கனிய வேண்டும் என்பார்கள். முடிந்தளவு அடுத்தவருக்கு உதவுவது, நன்மை செய்வது, எதையும் பரந்த மனதுடன் அணுகுவது போன்ற நற்செயல்களால் நிச்சயம் முதுமை இளமையாகும். குறிப்பாக, ஓய்வுக்காலம் உற்சாகத்துக்கானது என்பதை உணர்ந்து வாழ்க்கையை ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்க வேண்டும்” என்கிறார் முதியோர் நல மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராஜன். 

முதுமையில் நோய் வரும் முன் எப்படி காத்துக் கொள்வது, உணவுமுறை, உடற்பயிற்சி வழிமுறைகள் என்னென்ன? எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார் டாக்டர் வி.எஸ். நடராஜன்.

`ரிட்டயர்மென்ட்’ என்னும் `பணி ஓய்வு’, நாம் செய்யும் வேலைக்குத்தானே தவிர, நம் வாழ்க்கைக்கு அல்ல. இதை ஓய்வுபெறும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. எத்தனை வயதானாலும் அவர்கள் உழைத்துக்கொண்டேயிருப்பார்கள்.
ஓய்வு பெற்றுவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு துவண்டுவிட வேண்டாம். இத்தனை நாள் குடும்பத்துக்காக உழைத்துக் களைத்த நீங்கள், இனி உங்களுக்காக வாழுங்கள்; உங்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்யுங்கள். கோடை விடுமுறை பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருமோ அதேபோல, இந்த ஓய்வு நாள்கள் உங்களுக்கு உற்சாகம் தரும் என்பதை மனதுக்குள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
ஓய்வுக்காலம் என்பது திடீரென்று வரப் போவதில்லை. அதனால் இதுகுறித்து ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடுங்கள். குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு தேவைப்படும் பொருளாதார வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். பொருளாதாரரீதியாக நீங்கள் வலிமையாக இருந்துவிட்டாலே, மனரீதியாக உங்களுக்கு ஒரு தைரியம் வந்துவிடும். நோய் வந்த பிறகு அதற்கான தீர்வைத் தேடுவதைவிட, வரும் முன்னர் காத்துக்கொள்வதே நல்லது. 
60 வயதில் ஒருவருக்கு நோய்களுக்கான அறிகுறிகள் பெரிதாக வெளிப்படாது. ஆனால், ஏதோ ஒரு சூழலில் கண்களில் பிரச்னை ஏற்படும்போது மருத்துவரிடம் செல்லவேண்டியிருக்கும். அப்போது செய்யப்படும் பரிசோதனையில் சர்க்கரைநோய் இருப்பது தெரியவரும். அதாவது, உங்களின் கண்களைப் பாதித்ததற்கு சர்க்கரைநோயே காரணம் என்பது அதன் பிறகே தெரியவரும். அதனால், ஓய்வுபெறும் வயதில் இருப்பவர்கள் முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையில் என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம். அதன் பிறகு, உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி, குறிப்பிட்ட உடல் பிரச்னைகளுக்கான பரிசோதனைகளை மட்டும் சரியான இடைவெளியில் செய்துகொள்ளலாம்.
ஓய்வுபெறும் வயதிலிருக்கும் பெண்கள், மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம். குடும்பத்தில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல, கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயைக் கண்டறியும் `பாப் ஸ்மியர்’ (Pap Smear) பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. 

ஆண்களுக்கு வயதானதும் சிறுநீர் அதிகமாக வெளியேறும். எனவே, அவர்கள் `புரோஸ்டேட்’ புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும், `பி.எஸ்.ஏ’ (PSA) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
உணவுமுறை

60 வயதுக்கு மேல், உணவுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இந்த வயதில் உடலில் புரதச்சத்துக் குறையும் என்பதால், எல்லா வகைப் பருப்புகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சோயா பீன்ஸ், முட்டையின் வெள்ளைக்கரு, காளான், சிறுதானியங்கள் போன்றவை முதியவர்களுக்கான சிறந்த உணவுகள். சிறுதானியங்களில் நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளதால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அவற்றைச் சாப்பிடுவது நல்லது.

முதியவர்களுக்கு தாகம் எடுப்பது குறைந்துவிடும். ஆனால், வழக்கம்போல் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். போதிய அளவு தண்ணீர் இல்லாமல் போவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதயநோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கிழங்கு வகைகள் மற்றும் எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. அரிசி உணவை ஒருவேளை மட்டும் உட்கொள்வது நல்லது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உப்பு பரம எதிரி. எனவே, சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். `உலக சுகாதார நிறுவனம்’ (WHO - World Health Organization), `ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு கிராம் மட்டுமே உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்’ என்று பரிந்துரைக்கிறது. எனவே, அப்பளம், ஊறுகாய் போன்ற உப்பு அதிகமுள்ள உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி

தினமும் 40 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.காலை நேரத்தில் காபி அல்லது டீ குடித்துவிட்டு, நடைப்பயிற்சி செய்யலாம்.

தினமும் நடப்பதால் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரை, கொலஸ்ட்ராலின் அளவு குறையும். உடல் எடை கட்டுக்குள் வரும். மலச்சிக்கல் ஏற்படாது. நன்றாகத் தூக்கம் வரும். எலும்புகளின் அடர்த்தியும் அதிகமாகும். நடைப்பயிற்சி மட்டுமல்லாமல், சேரில் உட்கார்ந்தபடி இடது, வலது, கீழே, மேலே எனக் கழுத்தை அசைக்க வேண்டும். தோள்களைச் சுழற்றுவது, குனிந்து நிமிர்வது போன்ற எளிமையான உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.
சூரிய ஒளி படாமல் வீட்டிலேயே இருப்பதால், வயதானவர்களுக்கு வைட்டமின் டி, எட்டு, ஒன்பது, பத்து என்ற அளவிலேயே இருக்கும் (சரியான அளவு முப்பதுக்கு மேல் இருக்க வேண்டும்). சூரிய ஒளி நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் டி உற்பத்தியாகும். 

வைட்டமின் டி உதவியால்தான் எலும்புகள் கால்சியத்தை உட்கிரகித்துக் கொள்கின்றன. வைட்டமின் டி இல்லாமல்போனால், கால்சியம் சத்துக்கான மாத்திரைகளை எவ்வளவு சாப்பிட்டாலும் எலும்புகளால் கால்சியத்தைக் கிரகித்துக்கொள்ள முடியாது. எனவே, தினமும் காலை ஏழு முதல் ஏழரை மணிவரை, சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
தடுப்பூசிகளைத் தவற விடாதீர்கள்

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாத்தா பாட்டிக்கும் தடுப்பூசி முக்கியம். 60 வயதுக்குப் பிறகு முதுமை மட்டுமல்லாமல், நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகள், போதிய சத்துணவு இல்லாமல் போவது போன்றவற்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே, கட்டாயம் நிமோனியா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

நிமோனியா என்பது ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த நோய் எளிதில் தொற்றிக்கொள்ளும். பொது இடங்களில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அவரிடமிருந்து மிகச் சுலபமாக வயதானவர்களை இந்த நோய் தொற்றிக்கொள்ளும். நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் இந்தத் தொற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.
வைரஸ் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வருடமும் `இன்ஃப்ளூயன்சா வைரஸ்’(Influenza Virus) தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் இந்த ஊசியைப் போட்டுக்கொண்டால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சி!

`முதுமையின் எதிரி தனிமை’ என்பதால் தனியாக இருக்காதீர்கள். ஏதாவது பகுதிநேர வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த ஓர் அமைப்பில் சேர்ந்து செயல்படுங்கள். நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா என்று மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
பேரப்பிள்ளைகளுடன் சிரிப்பும் விளையாட்டுமாக வாழ்க்கையைக் கொண்டு செல்வது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமல்ல, முதுமையில் கிடைக்கும் தனிமையை அனுபவிக்கவும் பழகிக்கொள்ளுங்கள். 

தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில், உங்களின் பழைய நினைவுகளை அசைபோடுங்கள். தியானம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை நிபுணர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு முறைப்படி செய்யலாம்.

`வயதானதும் மனம் கனிய வேண்டும்’ என்பதற்கேற்ப மற்றவருக்கு நன்மை செய்து மகிழுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை, சேவையை மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பரந்த மனதுடன் பிறரை அணுகுங்கள். மனதில் நல்லவை நிறையும்போது, முதுமையிலும் நீங்கள் இளமையாக உணர்வீர்கள்.
உங்கள் நிதி வசதியை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே உயில் எழுதி வைத்துவிடுங்கள். அப்போதுதான் தேவையற்ற குழப்பங்கள், சச்சரவுகளைத் தவிர்க்கலாம். அதேபோல, 50 வயதிலிருந்தே ஓய்வுக்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக குறிப்பிட்ட அளவு பணத்தை மாதந்தோறும் சேமிக்கத் தொடங்குங்கள். இதுபோன்ற சேமிப்பு உங்கள் ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கடக்க உதவும்.

60 வயதுக்கு மேல் யாருக்கு என்ன நோய் வேண்டுமானாலும் வரலாம் என்பதால், கணவன், மனைவி இருவருமே மறக்காமல் `ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ எடுத்துவிடுங்கள். அப்போதுதான், திடீரென உடல்நிலை சரியில்லாமல்போகும்போது, இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும்.
வயதான காலத்தில் வீடு, மனை, இடம் வாங்க முதலீடு செய்யாமல் சுலபமாக மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கியில் பணத்தைச் சேமியுங்கள். அப்போதுதான் கணவன், மனைவி இருவரில் யாருக்காவது ஒரு பிரச்னை என்றால் மற்றவர் தடுமாறாமல் கையிலிருக்கும் பணத்தைக்கொண்டு சமாளிக்க முடியும். அதேநேரத்தில் அளவாகப் பணம் வைத்துக்கொள்ளுங்கள். அதிகப் பணமும் நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் சொந்தக் கால்களில் நிற்கப் பழகுங்கள். உங்களால் முடியும்பட்சத்தில் உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். ஆண்கள்... தண்ணீர், உணவு என்று ஒவ்வொன்றுக்கும் மனைவியை ஏவல் செய்யாதீர்கள். உங்களைப்போலவே அவருக்கும் வயதாகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 

மனைவி என்பவள் உங்களுடைய தோழியே தவிர, அவர் உங்களின் வேலையாள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதுபோல தாமரை இலை மேல் தண்ணீர்போல இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். அதீத ஒட்டுதலோ, பிரிவோ வேண்டாம். குறிப்பாக, மரண பயம் வேண்டவே வேண்டாம். அது உங்கள் மன நிம்மதியை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ளுங்கள்.
கடந்த காலம் என்பது உடைந்துபோன பானை
எதிர்காலம் என்பது மதில்மேல் பூனை
நிகழ்காலம் மட்டுமே நிஜம்!


அதனால் நிகழ்காலத்தைக் கொண்டாடுங்கள்.ஹேப்பி ரிட்டயர்மென்ட் டேஸ்!

நாற்பது வயதைக் கடந்துவிட்டால், இனிமேல் வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மனோபாவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டுவிடும். அதிலும் வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால், வாழ்வின் கடைசி கட்டத்துக்கே வந்துவிட்டது போன்ற உணர்வும் ஏற்படும். உண்மையில், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் நாள்கள் அற்புதமானவை. அவற்றைக் கொண்டாடி மகிழ வேண்டும், ரசிக்க வேண்டும், புதிதாகப் பிறந்ததுபோலத் துள்ளித் திரியவேண்டும்.

ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் அனுபவிக்க ஆலோசனைகளை வழங்குகிறார் குடும்ப நல மருத்துவர் மற்றும் சர்க்கரைநோய் நிபுணர் எஸ்.மீனா.

ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யலாம்? 

பணி ஓய்வுக்குப் பிறகு எந்த ஊரில் அல்லது எந்த இடத்தில் வசிக்கப் போகிறோம் என்பதை வேலையிலிருக்கும்போதே திட்டமிடுங்கள். ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு அங்கிருந்து உங்கள் வாழ்க்கையின் செகண்ட் இன்னிங்ஸை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்.
பணி ஓய்வு பெற்றவர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்குவது, இதுவரை வந்துகொண்டிருந்த சம்பளம் இனிமேல் கிடைக்காது என்பதே. அதுமட்டுமல்ல, `வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்க என்னால் முடியவே முடியாது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் மாற்று வழி ஒன்று இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த பகுதி நேர வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள். இதன் மூலம் பணமும் கிடைக்கும், பிஸியாகவும் இருப்பீர்கள்.

நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். வாட்ஸ்அப்பில் `ரிட்டயர்மென்ட் குரூப்’ ஒன்றைத் தொடங்கி, உங்களின் நண்பர்களை அதில் ஒன்றிணையுங்கள். கடி ஜோக்ஸ், நகைச்சுவைகள், தன்னம்பிக்கைச் செய்திகள், வீடியோக்கள், அரசியல், ஆன்மிகம் என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். அவற்றைப் பார்த்து, படித்து, ரசித்து மகிழுங்கள்.
வெறும் வாட்ஸ்அப் பகிர்வுகளோடு நின்றுவிடாமல், அவ்வப்போது எல்லோரும் நேரில் சந்தித்துப் பேசுங்கள். பிரபலமான நகைச்சுவை வசனங்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு, உங்கள் நண்பர்களைக் கலாயுங்கள். உங்களின் முதல் காதல், முதல் மழை, முதல் முத்தம் என்று எல்லாவற்றையும் ரீவைண்டு செய்து பேசுங்கள். முடிந்தால் ஹோட்டல், பிக்னிக், ஆன்மிகப் பயணம் என்று வாழ்க்கையை அனுபவியுங்கள்.
வயதாகிவிட்டால் எல்லோரும் ஆன்மிகவழியில் சென்றுவிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், ஆன்மிகத்தில் விருப்பமுள்ளவர்கள் ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு, நிறைய பக்திச் சேனல்களைப் பார்க்கலாம். பஜனைகளில் கலந்துகொண்டு லயிக்கலாம். ஆலயங்களில் `க்யூ’வை ஒழுங்குபடுத்துவது, பிரசாதம் வழங்குவது என்று உங்களால் முடிந்த சேவைகளைச் செய்யலாம். 

பைபிள், குர் ஆன், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற ஆன்மிகப் புனித நூல்களில் உங்களுக்குப் புலமையிருந்தால், அவை குறித்த வகுப்புகளை எடுக்கலாம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தரும் சீரியல்களைப் பார்க்காதீர்கள். அதற்குப் பதிலாக உங்கள் பேரப்பிள்ளைகளுடன் ஜாலியாக நேரத்தைச் செலவிடுங்கள்.
`கதை சொல்லிகள்’ அருகிக்கொண்டிருக்கும் காலமிது. அதனால், உங்கள் பேரப்பிள்ளைகளுக்காக நீங்கள் கதை சொல்லிகளாக அவதாரமெடுங்கள். நீங்கள் கதை சொல்வதில் தேர்ந்தவராக இருந்தால், வாட்ஸ்அப் மூலம் கதைகளை மற்றவர்களுக்கு அனுப்பலாம். ஒருவேளை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் உங்கள் கதைகள் அதிகமாகப் பகிரப்பட்டால், அதையே உங்கள் முழுநேர வேலையாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்த உங்களுக்கு இப்போது எக்கச்சக்கமாக நேரம் கிடைக்கும். கீ போர்டு, பியானோ, வாய்ப்பாட்டு, ஓவியம், யோகா, கம்ப்யூட்டர், தையல், ஃபேஷன் டிசைனிங் என்று உங்களுக்குப் பிடித்த ஒரு பயிற்சியில் சேருங்கள். புதிய சூழல் உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளும். மேலும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதால் நீங்கள் இளமையாக உணர்வீர்கள்.
கூடுதலாகப் புத்தக வாசிப்பையும் கையில் எடுங்கள். முடிந்தால் கிண்டில் (Kindle - மின்னூல் வாசிப்புக் கருவி) ஒன்றை வாங்குங்கள். உங்கள் மகன் அல்லது மகளிடம் உங்களுக்குப் பிடித்தப் புத்தகங்களை, டவுண்லோடு செய்துதரச் சொல்லுங்கள். அதன் பிறகு ஜெயகாந்தன், கிரேஸி மோகன், சுந்தர ராமசாமி எனப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளும் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிவிடும்.
உங்களுக்கு அருகிலிருக்கும் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள். குழந்தையோடு குழந்தையாக நீங்களும் குதூகலியுங்கள். டோரா புஜ்ஜி, ஸ்பைடர்மேன், சோட்டா பீம் என்று அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு கார்ட்டூன்களைப் பாருங்கள். உங்கள் மனம் முழுவதும் குழந்தைத்தன்மை வியாபிக்க ஆரம்பிப்பதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகான வாழ்க்கையை `கடைசிக் காலம்’ என்பதுபோல் நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வதற்குக் கிடைத்த பொன்னான நேரம் என்று நினைத்து மகிழுங்கள். குறிப்பாக, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் உங்கள் காதல் வாழ்க்கையை மறுபடியும் தொடங்குங்கள். கைகோத்தபடிக் கடற்கரையில் நடப்பது, ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து மணிக்கணக்கில் பேசுவது, ஒருவருக்காக மற்றவர் சின்னச் சின்ன ஆச்சர்யப் பரிசுகளைக் கொடுப்பது என்று உங்கள் ரொமான்ஸ் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு ஆரோக்கியம் பேணுவது எப்படி?

`நான் இதுவரை ஹாஸ்பிடல் பக்கமே போனதில்லை. எனக்கு எதுவும் வராது’ என்று அலட்சியமாக இருக்காதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வருடத்துக்கு ஒருமுறையோ முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும், சர்க்கரை நோயாளிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்னைகள் இருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். சர்க்கரை நோயாளிகளுக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகமுள்ளதால், வருடத்துக்கு ஒருமுறை `எக்கோ டெஸ்ட்’ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அதுமட்டுமல்ல, உங்களது உடல் பிரச்னைகள் குறித்து முதலில் நீங்கள் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வெளியே எங்கு சென்றாலும், உங்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் மற்றும் நீங்கள் வழக்கமாகச் சந்திக்கும் மருத்துவரின் பெயர், அவரது தொலைபேசி எண் போன்றவற்றை ஓர் அட்டையில் எழுதி உங்கள் சட்டைப் பையிலோ அல்லது கழுத்திலோ ஐ.டி கார்டுபோலத் தொங்கவிட்டுக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடாமல், வெறும் வயிறோடு எங்கும் செல்ல வேண்டாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் ஒரு மாத்திரை உட்கொள்வார்கள். சிலர், அரை மணி நேரம் கழித்துத்தானே சாப்பிட வேண்டும்... அதற்குள் இந்த வேலையை முடித்துவிடலாம் என்று வெளியே சென்றுவிடுவார்கள். ஆனால், அந்த வேலை முடிய தாமதமானால், வெறும் வயிற்றில் மாத்திரை உட்கொண்டதன் விளைவாக, உடலில் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்டுவிடும். மாத்திரை மற்றும் உணவை முறையாக உட்கொண்ட பிறகு வெளியே செல்வது நல்லது.
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் வெளியே எங்கு சென்றாலும் கையில் பிஸ்கட், சாக்லேட், கடலைமிட்டாய் என எதையாவது எடுத்துச் செல்லவேண்டியது அவசியம். அப்போதுதான், உடலில் சர்க்கரை அளவு குறைந்து, கைகால் நடுக்கம், படபடப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனடியாகக் கையில் வைத்திருக்கும் இனிப்பைச் சாப்பிட்டு மயக்கத்தைத் தவிர்க்கலாம்.
அதேபோல, சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கையில் சர்க்கரை அளவைக் கண்டறிய உதவும் `குளூக்கோ மீட்டரை’ வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் உடல்நிலையில் ஏதாவது அசௌகர்யம் இருந்தால், சட்டென்று குளுக்கோ மீட்டர் மூலம் சர்க்கரை அளவைப் பார்த்துக்கொள்ள முடியும். அதன் பிறகு, தேவையென்றால் மருத்துவரைச் சந்திக்கலாம். 

கணவன், மனைவி மட்டுமோ அல்லது தனியாகவோ வாழவேண்டிய சூழலில் இருந்தால், அக்கம்பக்கத்தினரிடம் நட்பாகப் பழகுவது நல்லது. முடிந்தால், தினமும் ஒருமுறையாவது அவர்களை நேரில் சந்தித்துப் பேசி அளவளாவுங்கள். அப்போதுதான், நீங்கள் ஒருநாள் அவர்களைச் சந்திக்காமல் விட்டால்கூட, `தினமும் வருவாங்களே... இன்னிக்கு ஏன் வரலை?’ என்ற உங்கள் மேலுள்ள அக்கறையுடன் வீட்டுக்கு வந்து என்ன காரணமென்று விசாரிப்பார்கள்.
அதேபோல, வீட்டில் தனியாக வசிக்கும் ஓய்வு பெற்றவர்கள், அவசரமென்றால் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்களை, ஓர் அட்டையில் பெரிய எழுத்துகளில் எழுதி வீட்டின் ஹாலில் மாட்டிவைக்க வேண்டும். அப்போதுதான் உதவிக்கு வரும் நபர்கள், அந்த அட்டையைப் பார்த்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள்.
வீட்டில் நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் வீட்டின் ஸ்பேர் சாவியை மிகவும் நம்பகமான பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் கொடுத்து வைப்பது நல்லது. அப்போதுதான், இரவு நேரத்தில் உங்களுக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனால், நீங்கள் போன் மூலமாகத் தகவல் கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரர் ஸ்பேர் சாவி மூலம் உங்கள் வீட்டின் கதவைத் திறந்து, உங்களுக்கு உதவ எளிதாக இருக்கும்.

தள்ளாடும் வயது இல்லை என்றாலும், கொஞ்சம் கவனமுடன் செயல்பட்டால் பிரச்னைகளில்லாமல் வாழலாம். உதாரணமாக, உங்கள் வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட்டின் தரை வழுவழுப்பாக இல்லாமல், சொரசொரப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதனால், பாத்ரூமில் வழுக்கி விழும் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
எந்த மாதிரியான உணவுமுறைகள் நல்லவை?

`மூன்று வேளை உணவு’ என்ற வழக்கம் இந்த வயதுக்குச் சரிவராது. உணவை ஐந்து வேளையாக பிரித்துச் சாப்பிடுங்கள். காலை 9 மணிக்குள் டிபன்;

11 மணிக்கு மோர், சாலட், சுண்டல்; மதியம் காய்கறி, கீரைகளுடன் கூடிய உணவு; மாலையில் தேநீர் மற்றும் க்ரீம் இல்லாத பிஸ்கட்; இரவு உணவு என்று ஐந்துவேளையாக பிரித்துச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, இரவு உணவை ஏழரை மணிக்குள் முடித்துவிடுவது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் எந்த உணவைச் சாப்பிடுவது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். கோதுமைச் சப்பாத்தி, சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு என்ற பொதுக் கருத்து இருக்கிறது. ஆனால், கோதுமை வட இந்தியர்களுக்கான உணவு. அவர்களது சீதோஷ்ணத்துக்கு அவர்கள் கோதுமை சாப்பிட்டால் அது எளிதில் செரிமானமாகும். ஆனால், நம் ஊருக்கு கோதுமை சரிப்பட்டு வராது. 

சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், அளவு குறைவாக இருக்க வேண்டும். சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள், கீரைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். தோசை, அடை, உப்புமா போன்ற எந்த உணவையும் திணறத் திணறச் சாப்பிட வேண்டாம். சற்று குறைவாகச் சாப்பிடுவதே நல்லது. அதேபோல, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.
தினமும் ஒரு சிறிய டீஸ்பூன் அளவு நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ரீஃபைண்டு எண்ணெயில் சமைப்பதற்குப் பதிலாக, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயில் சமைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதாகச் சொல்லிக்கொண்டு சிலர் எண்ணெய் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பார்கள். அதேநேரத்தில் நம் உடல் மூட்டுகள் சுலபமாக இயங்க எண்ணெய் அத்தியாவசியம் என்பதால், எண்ணெயை அளவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராக அருந்துவது சிரமமென்றால், இளநீர், பழச்சாறு, மோர் குடிப்பது நல்லது.

சிறுநீரகப் பிரச்னை, இதயம் சுருங்கி விரிவதில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர் அனுமதிக்கும் அளவில் தண்ணீரை அருந்தலாம்.

உடல் உறுதிக்கு என்ன செய்ய வேண்டும்?

*
 தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை கட்டாயம் நடக்க வேண்டும்.

*
 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்யலாம்.

*
 யோகாவை முறையாகக் கற்றுக்கொண்டு, தினசரி செய்து வரலாம். குறிப்பாக, மூச்சுப் பயிற்சி மிகவும் நல்லது.

ஓய்வு பெறும் வயதில்தான் `ஆர்த்ரைடிஸ்’(Arthritis) எனப்படும் மூட்டுவலிப் பிரச்னை அதிகமாக உண்டாகும். அதனால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல, மூட்டுவலிப் பிரச்னை உள்ளவர்கள் இந்தியன் டாய்லெட்டைப் பயன்படுத்தினால், மூட்டுவலி அதிகமாகும். எனவே, வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவது நல்லது. மூட்டுவலி இல்லையென்றாலும்கூட, 60 வயதுக்கு மேல், இந்தியன் டாய்லெட்டைத் தவிர்ப்பது மூட்டுகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

No comments:

Post a Comment