Monday 7 May 2018

திருவையாறு !!

Image result for திருவையாறு ஐயாறப்பர் கோயில்

தஞ்சையிலிருந்து வடக்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருவையாறு.

காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து நதிகள் பாய்வதால் திருஐயாறு எனத் தலமும், ஐயாறப்பர் என மூர்த்தியும்  அழைக்கப்படுகின்றன.

‘‘ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே’’ என்ற அப்பர் வாக்கின்படி பஞ்ச கெளவியத்தால் (பசும்பால், தயிர், நெய்,  கோமூத்திரம், கோசாணம் இவற்றின் கலவை) அபிஷேகம் செய்யப்படுவதால் ஐயாறு எனப் பெயர் பெற்றது என்பர்.

ஐயாறப்பரும் (பஞ்சநதீஸ்வரர்) அறம் வளர்த்த  நாயகியும் (தர்ம சம்வர்த்தனி) குடிகொண்டிருக்கும் திருக்கோயிலை நோக்கிச் செல்கிறோம். சித்ரா பெளர்ணமியின் போது இங்கு நடக்கும் ஏழூர் (சப்தஸ்தானம்)  திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. யாகசாலை நிலத்தை உழுதபோது மக்கட்பேறு வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த சிலாத முனிவருக்கு நந்தி தேவரே  குழந்தையாகக் கிடைக்கப் பெற்றார்.

ஐந்து வித புனித நீரால் இறைவனே அக்குழந்தைக்கு அபிஷேகம் செய்தார். காவற் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்து ‘அதிகார நந்தி’ என்ற பட்டமும்  சூட்டினார். வியாக்ரபாதர் மகளுடன் திருமணமும் செய்து வைத்தார். இதன் அங்கமாகவே சித்திரை மாதத்தில் ஏழூர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

திருவையாறைச்  சுற்றியுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) ஆகிய  ஊர்க்கோயில்களோடு, திருவையாறையும் சேர்த்து சப்தஸ்தானத் திருக்கோயில்கள் என்று அழைக்கின்றனர். ‘சப்தஸ்தானத் திருப்புகழ்’ என்ற ஒரே பாடலில்  அருணகிரிநாதர், இவ்வேழு தலங்களையும் ஒரு சேரப் பாடியுள்ளார்.

‘‘திருவின் மாமரமார் பழனப்பதி
அயிலு சோறவையாளு துறைப்பதி
திசையில் நான்மறை தேடியமுற்குடி, 
விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி, நெய்ப்பதி
திருவையாறுடன் ஏழு திருப்பதி
பெருமாளே’’

பொருள்: லட்சுமிகரம் பொருந்திய, மாமரங்கள் நிறைந்த திருப்பழனம், உண்பதற்குரிய திருச்சோற்றுத்துறை, எல்லா திக்குகளிலும் வேதங்கள் ஈசனைத் தேடி  அடைந்த மூதூராகிய திருவேதிகுடி, அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றாகிய திருக்கண்டியூர் (பிரமனது சிரம் அரிந்த இடம்), தாமரையின் நாயகனாம் சூரியன்  பூசித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறுடன் ஆக ஏழு திருப்பதிகளிலும் வாழ்கின்ற பெருமாளே !

திருவையாற்றில் எம்பெருமான்  சித்திரா பெளர்ணமிக்கு அடுத்த விசாகத்தில் நந்தியம் பெருமானுடன் புறப்பட்டு ஏழூர்களுக்கும் செல்வார். ஏழூர் இறைவரும், உலாவரும் ஐயாறப்பரை எதிர்  கொண்டழைப்பதுடன் கண்ணாடிப் பல்லக்கில் ஊர்வலம் செல்வது காணவேண்டிய தொன்றாகும்.

ஏழூர் மக்களும் இதைத் தத்தம் வீட்டு விழாவாகவே எண்ணி, இறைவன் வரும் வழியைத் தோரணங்களால் அலங்கரித்து மரியாதை செய்வதைக் காணக் கண்  கோடி வேண்டும். வாரத்தின் ஏழு நாட்கள், ஏழு நிலைகளுடைய ஐயாறு ராஜகோபுரம், ஏழு நிறங்களுடைய வானவில், சப்த ரிஷிகள், சப்த மாதர்கள்,  சப்தஸ்வரங்களால் ஏழுலகை வென்ற தியாகப்பிரம்மம் என ஏழு எனும் எண் நம் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து நிற்கிறது.

சப்தரிஷிகளும் இத்தலங்களில் ஆசிரமங்கள் அமைத்து ஈசனைப் பூசித்தனர். அவர்கள்: கண்டியூர் - காஸ்யபர்; பூந்துருத்தி - கௌதமர்; சோற்றுத்துறை - ஆங்கிரசர்; பழனம் - குத்ஸர்; திருவேதிகுடி - அத்திரி; நெய்த்தானம் - பிருகு; ஐயாறு - வசிட்டர். 

ஐயாறப்பர், நந்தி - சுயம்பிரகாசை தம்பதியை அழைத்துக் கொண்டு, அவர்கள் முனிவர்களின் ஆசியைப் பெற வேண்டி இவ்வேழு ஆசிரமங்களுக்கும் சென்றார் என்பது புராணம். இதை ஏமூர் விழாவாக முதலில் கொண்டாடியவர் ராஜராஜ சோழனின் மனைவியான ஓலோகமாதேவி. ஆதலால் கோயிலிலுள்ள வடகயிலாயம் ஓலோக மாதேவீச்சரம் என்றும், சோமாஸ்கந்தர், ஓலோக மாவீதிவிடங்கர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

காவிரியின் வடகரைத்தலமான திருவையாறு சப்தஸ்தானங்களுள் முதன்மையானது. ‘ஐ’ என்றால் சுபம் என்று பொருள். மனிதனின் இறுதிக்காலத்தில் இது நெஞ்சில் தங்கி மூச்சை அடைக்கும்போது அஞ்சேல் என அபயம் தந்து அப்பன் ஆறுதலளிக்கிறான். இதையே ‘‘ஐயாறு வாயாறு பேசாமுன் ஐயாறு வாயால் அழை’’ என்பார் ஐயடிகள் காடவர் கோன்’’ என்று வித்தியாசமாக விளக்கம் அளிக்கிறார் தமிழ்ப்பேராசிரியர் சுவர்ண காளீஸ்வரன். சம்பந்தப்பெருமானது ஐயாறு பாடலும் இத்துடன் ஒத்து வருகிறது.

‘‘புலன் ஐந்து பொறி கலங்கி நெறி மயங்கி 
அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்தபோது அஞ்சேலென்று அருள் 
செய்வான் அமரும் கோயில்’’

பட்டினத்தடிகள் கூறுகிறார்:

‘‘மண்ணும் தணலாற, வானும் புகையாற,
எண்ணரிய தாயும் இளைப்பாற, பண்ணும் அயன்
கையாறவும், அடியேன் காலாறவும் கண் 
பார் ஐயா திவையாறா’’

பொருள்: இம்மண்ணுலகமும் எனது கணக்கற்ற உடல்களைச் சுட்டதால் ஏற்பட்ட வெம்மை தணியும்படியும், இந்த வானமும் என் உடம்புகளைச் சுடுவதால் எழுந்த புகை நீங்கித் தூய்மை உடையதாய் ஆகுமாறும், பல பிறவிகளில் என்னைப் பெற்ற தாய்மார்களும் இளைப்பாறும்படியும், எனக்கு எண்ணற்ற உடல்களைப் படைக்கின்ற நான்முகனும் தம் கைகளை இளைப்பாறுமாறும், அடியேனின் கால்கள் இளைப்பாறுமாறும் என்னைக் கடைக்கண் பார், ஐயா ! ஐயாறப்பனே !’’

திருவையாறு - கால் தேய நடந்து கயிலை சென்று கொண்டிருந்த அப்பரைத் தடுத்தாட்கொண்டு ஆடி அமாவாசையன்று ஈசன் கயிலைக் காட்சி தந்த திருத்தலம்; சுசரிதன் எனும் சிறுவனை யமனிடமிருந்து விடுவித்து ஜோதி சொரூபராய் அவனை ஆட்கொண்ட தலம்; (ஆட்கொண்டார் எனும் தனிச்சந்நதி உள்ளது. இவர் காலின் கீழே யமன் கண்கள் பிதுங்க, நா தொங்க, உடல் நடுங்கக் கிடக்கிறார்.) இறைவன் தந்த இரு நாழி நெல்லால் அம்பிகை 32 அறங்களை வளர்த்த திருத்தலம்;

தியாகப் பிரம்மத்தின் இசைக்கு மயங்கி ஸ்ரீராமன் அவருக்குத் தரிசனமளித்த இடம். சிலாத முனிவருக்குக் குழந்தையாக நந்திதேவரைத் தோன்றச் செய்து, வியாக்ரபாதரின் மகள் சுயம் பிரகாசையை (சுயஸாம்பிகை என்றும் கூறுவர்) திருமழபாடியில் திருமணம் செய்து வைத்தார் இத்தல நாயகனான ஐயாறப்பர்.

சேரமான் பெருமானும், சுந்தரரும் இங்கு வந்தபோது காவிரி பெருக்கெடுத்து ஓட, ‘‘பரவும் பரிசொன்றறியேன் பண்டே உம்மைப் பயிலாதேன்’’ என்று துவங்கி சுந்தரர் பதிகம் பாட, ஈசன் வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச் செய்தார்.

எதிர்க்கரையிலிருந்த விநாயகர் ஓலம் ஓலம் என்று அபாயக்குரல் கொடுத்ததால் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கோயிலினுள் நுழைந்ததும் இடப்புறம் உள்ள மயில் மண்டபத்தை வணங்கிவிட்டு நிமிர்ந்தால் எதிரே நூற்றுக்கால் மண்டபம். உள்ளே ஞான தண்டபாணி கோயில் அமைந்திருக்கிறது. பூஜை வேளையில் மட்டுமே சந்நதி திறக்கப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் பிருத்வி லிங்கமான ஐயாறப்பரைத் தரிசிக்கிலாம்.

கருவறையை ஒட்டிய முதல் பிராகாரத்தில் அறுபத்து மூவரையும், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம்.குருவின் மேல் நோக்கிய வலது கையில் கபாலம். கீழ் நோக்கிய வலது கை சின் முத்திரை காட்டுகிறது. மேல் நோக்கிய இடக்கையில் சூலம், கீழ் நோக்கிய இடக்கையில் சிவஞான போதம், திருவடியின் கீழ் ஆமை.

உ.வே.சாமிநாத அய்யர், இவரை சுரகுரு தட்சிணாமூர்த்தி எனக் குறிப்பிடுகிறார். ஆனால், கோயிலில் ஹரிகுரு தட்சிணாமூர்த்தி என்று எழுதப்பட்டுள்ளது. (திருவீழிமிழலையில் கண்மலர் கொண்டு அர்ச்சித்து சக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இங்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்ற புராண குறிப்பும் உள்ளது. அதனாலும் ‘ஹரி குரு’ என்றழைக்கப்படுகிறார் போலும் !) ஞான குருவைத் தரிசித்துத் தொடர்ந்து கருவறையைச் சுற்றிவர இயலாதபடி வழி அடைக்கப்பட்டுள்ளது. இறைவனின் சடை கருவறைக்குப் பின்னும் விரிந்து கிடப்பதாக ஐதீகம்.

அதனால் அதை மிதித்துவிடக் கூடாது என்பதற்காக, சுற்றி வர பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை.

சந்நதியைவிட்டு வெளியில் வரும்போது நந்தியெம்பெருமானையும், சுயஸம்பிகையையும் தரிசிக்கலாம்.

அடுத்த பிராகாரத்தில் அமைந்திருக்கிறது ஜெப்பேசர் மண்டபம். இறைவனால் இப்பெயர் சூட்டப்பட்ட நந்தி அமர்ந்து ஜபம் செய்த மண்டபம். இதுவே முத்தி மண்டபம் எனப்படுகிறது. நாகப்பட்டினம், காசி தவிர திருவையாறில் மட்டுமே முத்தி மண்டபம் உள்ளது. தியாகராஜ சுவாமிகளும் இங்கு அமர்ந்து பஞ்ச நதீஸ்வரர் மீது 4 கீர்த்தனைகளும், இறைவி தர்மசம்வர்த்தினி மீது 8 கீர்த்தனைகளும் பாடியுள்ளார்.

நான்காம் பிராகாரத்தில் வலம் வரும்போது தென்புறம் அப்பர் திருக்கயிலை காட்சி கண்ட வைபவத்தை நினைவூட்டும் ஒரு கற்கோயிலைக் காணலாம். இது தென்கயிலாயம் எனப்படுகிறது. கோயில் கோபுர வாயில் அவருக்குக் கயிலை மலையாகக் காட்சி தர, மனமுருகி,

‘‘மாதர் பிறைக் கண்ணியான மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியா தன கண்டேன்’’ - எனப் பாடி நெகிழ்ந்திருக்கிறார் அப்பர் சுவாமிகள்.

கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் சந்நதிகள் உள்ளன. திருவோடு மரம் என்று ஒரு மரம் உள்ளது. இறைவன் சந்நதிக்குப் பின்புறமுள்ள கோஷ்டத்தில் உமையை வலப்பாகம் கொண்டு விளங்குகிறார் அர்த்தநாரீஸ்வரர்.

மூன்றாம் பிராகார மதிற்சுவரின் கோடியில் நின்று ‘ஐயாறா’ என்று உரக்கக் கூவினால் ஏழு முறை எதிரொலிக்குமாம்.

திருவையாறு கோயிலிலுள்ள முருகன், தனுசு சுப்ரமண்யன் எனப்படுகிறான். மயில், சுவாமியின் வலப்புறத்திலுள்ளது.

ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட முருகன் கிழக்கு நோக்கி தேவியருடன் நிற்கிறான். முருகன் கையில் வில் இருப்பது பற்றி ‘சுப்ரமண்ய பராக்ரமம்’ எனும் நூல் விவரிக்கிறது. வனவாசம் முடிந்து திரும்ப வருவேன் என்று சொல்லிச் சென்ற ஸ்ரீராமன், யுகங்களாகியும் திரும்பவில்லையே என்று ராமனின் பிரிவாற்றாமையால் குகன் மிகவும் துயருற்றிருந்தான். வள்ளி - தெய்வயானையரை, சீதா - லட்சுமணனாகவும், தன்னை ஸ்ரீராமராகவும் (கோதண்டராமன்) உருமாற்றி, குகன் கனவிலே தோன்றிய சுப்ரமண்யப் பெருமான் நடந்தவையனைத்தையும் நாடகமாக நடத்திக் காட்டினான். அது கண்டு குகன் மிகவும் சாந்தமடைந்தானாம்.

‘‘சுந்தரச் சிலை இராமன் தோற்றமும் காட்டி,  ஞான 
முந்திய பிரமானந்த சித்தியும் கொடுத்து வேத 
மந்திர குக சுவாமி என்னவும் வாய்ந்த பேர்
ஆனந்த நாயகனென்று ஓது நாமமே குமரன் பெற்றான்’’ - என வரும் செய்யுளால் இதை அறியலாம்.

கோயிலை வலம் வந்து, பர்வதவர்த்தினி, ராமநாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், ஜுரஹரேஸ்வரர், சண்டிகேசர், பிராணதார்த்திஹரர் ஆகியோரைத் தரிசித்து, ஆடல் வல்லானையும், சப்தஸ்தான லிங்கங்களையும் ஒரே இடத்தில் தொழுகிறோம். (மற்ற ஆறு இடங்களிலும் இதே போன்று சப்தஸ்தான லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)

தனிச்சந்நதியில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினியைத் தரிசிக்க, கோயிலுக்கு வெளியே போகும் வழியிலுள்ள விக்ரம சோழ கோபுரத்தருகே வர வேண்டும். மேற்புறம் காணப்படும் அலங்கார வளைவு வழியே தர்மசம்வர்த்தினியைத் தரிசிக்கச் செல்லலாம். தமிழில் அறம் வளர்த்த நாயகி என்று பெயர். இறைவன் அளித்த இருநாழி நெல்லால் முப்பத்திரண்டு அறம் வளர்த்த காரணத்தினால் அம்பிகைக்கு இப்பெயர்.

தெருவிலிருந்து நேரடியாகவும் அம்பிகை சந்நதிக்குள் வரலாம். நவராத்திரி மண்டபம், நந்தி மண்டபம் கடந்து விசாலமான உட்பிராகாரத்தை அடைகிறோம். திரிபுரசுந்தரி, சரபேஸ்வரர், முருகன், விநாயகர் ஆகியோரை வணங்கி அம்பாள் சந்நதிக்கு நேரே நின்று மெய்ம்மறக்கிறோம்.

கருணை கனிந்த நோக்குடன் நம்மைப் பார்த்து புன்முறுவல் பூக்கும் அன்னையின் தத்ரூப உருவத்தை பிரமிப்புடன் கண்டு வியக்கிறோம். அம்பிகையின் கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. ஆம், இங்கு அம்பிகை விஷ்ணுரூபிணியாக இருக்கிறாள் ! இடக் கீழ்க்கரத்தைத் தொடையில் ஊன்றி விஷ்ணுவைப் போலவே நிற்கும் அழகும், நளினமும், கம்பீரமும் கலந்த திருவுருவம் !

பொதுவாக வெள்ளிக்கிழமையன்று பஞ்சநதீஸ்வரர் சந்நதிக்கு அருகில் ஒரு நிலைக்கண்ணாடி முன் மகாலட்சுமிக்கு அலங்காரங்கள் நடக்கும் என்றும், அவர் விஷ்ணு ரூபிணியாக நிற்கும் தர்மசம்வர்த்தனியைத் தொழ வருகிறார் என்று சொல்லுகிறார்கள்.

இரவு இருவருக்கும் ஒன்றாக தீபாராதனை நடத்தப்படுகிறது. எனவேதான் அப்பர் பெருமான் பாடுகிறார், ‘அரியல்லால் தேவியில்லை, ஐயன் ஐயாறனார்க்கே’ என்று !

காஞ்சி காமாட்சி, நாகை நீலாதாட்சி, ஐயாறு தர்மசம்வர்த்தினி இம்முவர் பேரில் மட்டுமே சங்கீத மும்மூர்த்திகளும் கீர்த்தனை இயற்றியுள்ளனர். கல்வெட்டுகளில், முற்காலத்தில் அன்னை, திருக்காம கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்றும், உலகுடை நாச்சியார் என்றும் குறிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ‘புவனமுழுதுடையான் வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாறு’ என்றும் இத்தலம் அழைக்கப்பட்டதாம் !

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

No comments:

Post a Comment