Monday 7 May 2018

சூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம் !

ட்டடக் கலையில் உலக அதிசயங்களுக்கு இணையானது, புராணப் பெருமைகள் மிகுந்தது, தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம், தக்கன் பேறுபெற்றதும் சிபிச் சக்ரவர்த்தி முக்திபெற்றதுமான திருத்தலம், இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாள்கள் ஒருசேர வழிபடும் அபூர்வ க்ஷேத்திரம், சோழமன்னனின் குறுநாட்டுத் தலைநகரம், சோழ மன்னனின் காதலி பரவை நங்கை வாழ்ந்த ஊர், கண்கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்... ஆகிய பல சிறப்புகளுடன் திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் அமைந்துள்ள புறவார்ப் பனங்காட்டீசர் திருக்கோயில். சென்னைக்குத் தெற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.   

ராஜேந்திர சோழ வளநாட்டின் துணைக் கோட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது பனையூர். இதன்  உட்பகுதி நாடான புரையூர் நாட்டின் பரவை புரமாக விளங்கியதே இன்றைய பனையபுரம். பிற்காலச் சோழர் காலத்தில் தனியூராக விளங்கியது. பல ஊர்களின் தலைமை ஊருக்கு தனியூர் என்ற பெயர் உண்டு. இங்குள்ள சிவன் கோயில் நடுநாட்டின்  20-வது பாடல் பெற்ற தலமாகும். இது நடுநாட்டு சூரியத்தலம் என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜேந்திர சோழன் போற்றிய க்ஷேத்திரம்!

இவ்வூரில் வாழ்ந்த நாட்டியப் பேரொளி பரவை நங்கையின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார் முதலாம் ராஜேந்திர சோழன். அவளின் பெயரால் பல அறக்கொடைகளையும், தான தர்மங்களையும்  வழங்கியிருக்கிறார் ராஜேந்திரன். ஓர் அரசிக்கு இணையாக அவளை மதித்துப் போற்றியிருக்கிறார் சோழப் பேரரசர். இதற்கு ஆதாரமாகக் கோயிலின் தென்புறச் சுவரில்  இரண்டாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1052-கி.பி.1065) ஆறாவது ஆட்சி ஆண்டில்  செதுக்கப்பட்ட கல்வெட்டு விளங்குகிறது. 

இந்தக் கல்வெட்டின் மூலம், ராஜேந்திரன் மற்றும் பரவை நங்கை ஆகிய இருவரின் சிலைகள் இருந்ததாகவும், அவற்றுக்கு விளக்கேற்றவும், நைவேத்தியம் செய்யவும் வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும்  அறிய முடிகிறது. ஆனால், கலைநயம் கொண்ட இச்சிலைகளின் இருப்பிடம் அறியப் படவில்லை.  
இந்தக் கல்வெட்டில்  இவ்வூர்  பரவைபுரம் எனக் காணப்படுகிறது.  பரவையாரைப் பற்றிய குறிப்பு திருவாரூர் தியாகராஜர் கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பரவையாரின் பெயரில் ஓர் ஊரை உருவாக்கி ஆலயம் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. ஆக, பரவைபுரம் என்பதே  பனையபுரமாக மருவியிருக்க வாய்ப்புண்டு.  அந்நாளில் பரவையாரின் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், சித்திரை மாதத்தில் ஜோதி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டது.
 
புறவார் என்ற சொல்லை புறவு + ஆர்  எனப் பிரித்துப் பொருள் கொண்டால்,  புறா நிறைவுற்ற இடம் என அறிய முடிகிறது. புறாவின் உயிரைக் காக்க, தன் தசையை அரிந்துகொடுத்து,   தன் உயிரையும்  மாய்க்கத் துணிந்த சிபிச்சக்ரவர்த்தியை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் என்கிறது புராணம். கோயிலின் ராஜகோபுரத்தின் எதிரே உள்ள வாகன மண்டபத்துக்குள் உள்ள  நடுவரிசைத் தூணில் இக்காட்சி புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளதைக் காணலாம். 

சூரியனும் தட்சனும் பேறுபெற்ற திருத்தலம் 

தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு பற்களை இழந்து தன் பலத்தையும் இழந்த சூரியபகவான், இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு சாபமும் பாவமும் நீங்கிப் பழைய நிலையை அடைந்ததாக தல புராணம் சொல்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாள்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.  

அதேபோல், தனது பழி பாவம் தீர தட்சன் வழிபட்ட சிவத் தலங்களில் ஒன்றாகவும் பனையபுரம் திகழ்கிறது. இதற்குச் சான்றாக  ராஜகோபுரத்தின் உள்ளே  வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தட்சன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

சரித்திரத்தில் பனையபுரம்...

இங்கே கல்வெட்டுகள் பல காணப்பட்டாலும் அரசு மரபினரால் நிர்மாணிக்கப்பட்டவை 16 மட்டுமே. இவற்றில், முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), 2-ம் ராஜேந்திரன் (கி.பி.1058), உடையார் ஆதிராஜேந்திர தேவன் (கி.பி. 1070), முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1118), முதலாம் ஜடவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1265), மூன்றாம் விக்கிரபாண்டியன்(கி.பி.1288)  ஆகியோரது குறிப்பிடத்தக்கவையாகும். 

இவற்றின் நகல்கள் மைசூர் தலைமைக்  கல்வெட்டாளர் அலுவலகத்தில் இன்றும் உள்ளது. மூலக் கல்வெட்டுகள், கோயில் புரனமைப்பின்போது  இடம்மாறி  மறைந்து விட்டனவாம். 

சோழப் பேரரசின்போது இதன் நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்து வந்தது. அதேபோல, மூன்றாம் விக்கிரம பாண்டியன் காலத்திலும் (கி.பி. 1288) மேலும் புத்துயிர் பெற்றதாம்.  
இவ்வாலய நிர்வாகத்தை  திருவொண்ணாழி சபையோம் என்ற குழு கண்காணித்து வந்ததை  இரண்டாம் ராஜேந்திரசோழன் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது அதேபோல், இவ்வாலய நிர்வாகத்தை நகரத்தார் கண் காணித்ததையும், கோயில் காப்பாளர் களாக சிவபிராமணர்கள்  நிர்வகித்த தகவலை யும் அறியமுடிகிறது.

முகலாயர் ஆட்சிக்காலத்திலும், கி.பி.17-ம் நூற்றாண்டிலும், பொருளாதார நெருக்கடியினால் இக்கோயிலின் செல்வச் சிறப்பு குறைந்தது. அதன்பின், இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலைத் தன் பொறுப்பில் எடுத்தபோது நிலைமை மேம் பட்டது. ஆண்டுதோறும் சூரிய பூஜையும், அதன்பின் வரும் பிரம்மோற்சவமும்  ஊர்ப் பெரியவர்கள் மற்றும் பக்ககத்து ஊர் மக்களின் ஆதரவோடு  சிறப்பாக  நடைபெற்று வருகிறது. 

சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகப் பெரிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது. அதேபோல்,  பசிப்பிணி போக்கும் வகையில்  சிவனடியார்கள் மற்றும் சிவபிராமணர்களுக்கு  நாள்தோறும்  உணவளித்து வந்தது.  இக்கோயிலில் கல்வி போதிக்கும் சிறுவர் பள்ளி இயங்கிவந்ததையும்  மூன்று தண்ணீர்ப் பந்தல்கள் இருந்ததையும் அறிய முடிகிறது.

அம்மையும் அப்பனும்! 

இக்கோயில் 73 சென்ட் நிலப்பரப்பளவில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில், கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தவை. இதற்குச் சான்றாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா,  துர்க்கை  இன்றும் காட்சி  தருகின்றனர். 

ராஜகோபுரம் அறுபது அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து  நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகரக் காலத்தவை ஆகும். 

கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாகக் காட்சி தருகின்றார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்து,  நம்மை ஈர்க்கின்றது.  திருஞான சம்பந்தர்,  புறவார் பனங்காட்டீசன் என அழைத்தாலும்,  கல்வெட்டுகளில்  கண்ணமர்ந்த நாயனார் என்றும்,  பரவை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றும், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  
சிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பிகைக்குத் தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இறைவி பெயர் மெய்யாம்பிகை.  இவளுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை  என்ற பெயர்களும் வழக்கில் உண்டு.  

கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டும்  நான்குகரங்களுடன், எழிலான கோலத்தில் அன்னை  காட்சி தருகின்றாள். பூரண அலங்காரத்தில்  இவளின் திருவுருவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல. 

இது தவிர, கொடிமரம் அருகே  பல்லவர் கால கற்பலகை விநாயகர், விநாயகர், வள்ளி- தெய்வயானை யுடன் ஆறுமுகம் சந்நிதிகள், 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம்,  ராஜ கோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின்  கோலம் ஆகியன அமைந்துள்ளன. மேலும், இவற்றிற்கெல்லாம்  மகுடமாக,  இது சூரியத் தலமாக விளங்குவதால்  சிவனின் சந்நிதி வளாகத்துக்குள், தனித்து காட்சி தரும் சூரிய பகவானைத் தரிசிப்பது சிறப்பு.

இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய்ச் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாள்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பதை இன்றும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த அன்னையாக இவள் திகழ்கிறாள். 

ஆதவன் வழிபடும் அற்புதம்! 


ஆண்டுதோறும் சித்திரை மாதம்  முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாள்கள் சூரிய உதயத்தின்போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், நீண்டு வளர்ந்துள்ள ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் இவற்றை எல்லாம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் பனங்காட்டீசனின் சிரசின் மீது பட்டு வணங்குகிறது. இதன்பின் அது மெல்லக் கீழிறங்கி, சிவனின் பாதத்தினை அடைகிறது. 

பாதத்தைத் தொடும் அதே வேளையில், சற்றுத் தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை  அம்மனின் சிரசின் மீதும்  ஒளிக் கதிர்கள் விழுகின்றன. 

பின்பு அது மெள்ள கீழிறங்கி அன்னையின் பாதத்தினை அடைவ துடன், அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகிறது. 

இப்படித் தொடர்ந்து ஏழு நாள்கள் ஆண்டு தோறும் நிகழ்கின்றது. சிவனுக்கு  சக்தி அடக்கம் என்ற தத்துவத்தை இது உணர்த்தும் விதமாக அமைந் துள்ளது.

சூரியன் தன் ஒளிக் கதிர்களால்   நிகழ்த்திவரும்  இத்தகு அரிய நிகழ்ச்சி  இக்கோயிலின் தனிச் சிறப்பு ஆகும்.   இறைவனையும் இறைவியையும்  சூரியன் வழிபட்டு வணங்குவதாக ஐதீகம். பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது சூரியபூஜை. வானவியல் சாஸ்திரத்துக்கு ஏற்ற படி, குறிப்பிட்ட நாள்களில் சூரியக்கதிர்கள் உள்ளே விழும்படி அமைக்கப்பட்ட கட்டடக் கலையைத்தான் உலக அதிசயம்  என்று அழைக்கிறோம்.  

 ஏப்ரல் 14 முதல் 20-ம்தேதி வரை  சூரிய பூஜை நிகழும். இதைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சூரிய உதயத்துக்கு முன்பே ஆலயத்துக்குள் இருக்க வேண்டும். நாமும் பனையபுரத்துக்குச் சென்று, அகிலநாயகனை ஆதவன் வழிபடும் அபூர்வக் காட்சியைத் தரிசித்து வருவோம்; அத்தலத்தில் உறையும் சிவனருளால் சிந்தை மகிழ வரங்கள் பெற்று மகிழ்வோம்.

அர்ச்சனை செய்யும்போது... 

அனுதினமும் இறை நாமங்களை மனதுக்குள் உச்சரித்து, பூக்களால் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து பூஜிப்பது, அற்புதமான பலன்களைத் தரும் எளிய வழிபாடு ஆகும்.

அவ்வாறு பூக்களால் அர்ச்சிக்கும்போது அவற்றின் இதழ்கள் மேற்புறமாகவும், காம்பு பாகம் கீழ்நோக்கி இருக்கும்படியும் சமர்ப்பித்து அர்ச்சனை செய்யவேண்டும். 

அதேபோல் அன்றலர்ந்த மலர்களையே அர்ச்சனைக்கும் பூஜைக்கும் பயன்படுத்தவேண்டும். வில்வம், துளசி, தாமரை ஆகியவற்றுக்கு நிர்மால்யம் கிடையாது. மீண்டும் பயன்படுத்தலாம்.


பக்தர்கள் கவனத்துக்கு...

இறைவன்: ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன் 

இறைவி: ஸ்ரீமெய்யாம்பிகை

தீர்த்தம்: 
பத்ம தீர்த்தம் 

ஸ்தல விருட்சம்:  

தலமரங்களாக...   ஆண்பனை  உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காட்சி தருவது, வியப்பான ஒன்றாகும்.  

பெண் பனையி லிருந்து விழும் பழத்தை உண்பவர் களுக்கு  மகப்பேறு கிடைக்கும் என்பது  நம்பிக்கை. பனை மரங்கள் நிறைந்த பூமியாக இத்தலம் திகழ்ந்ததால், பனையபுரம் என அழைக் கப்பட்டதென கூறுவோரும் உண்டு.

எப்படிச் செல்வது ?: 

விழுப்புரம் மாவட் டம், விழுப்புரம் வட்டத்தில் அமைந் துள்ளது இவ்வூர். விழுப்புரத்திலிருந்து  வட கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலை வில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர்,  விழுப்புரம் - வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில்  அமைந்துள்ளது. விழுப்புரத் திலிருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன. 

விக்கிரவாண்டி சுங்கச்சாலையை அடுத்து இடதுபுறம் செல்லும் விக்கிர வாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலையின் முதல் ஊராக பனையபுரம் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தின் அருகிலுள்ள தரிசிக்க வேண்டிய இடங்கள்: 

இவ்வூரின் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற வக்கிர காளி அம்மன் ஆலயமும், அருகே தொல்லி யல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும், மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான திருவாமாத்தூரும், வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார மடமும் அமைந்துள்ளன. 

No comments:

Post a Comment