Sunday 12 February 2017

சைவ சித்தாந்தம் - நூல் ஆசிரியர் வரலாறு




மெய்கண்டார்

சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள். சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள். ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள். சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன. சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும். அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர், அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், கடைசியாக உமாபதி சிவம். மெய்கண்டாரின் காலம் கி.பி. 1223 

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர். சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும். இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார். அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை. ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார். கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது. 

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்” என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.” என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார். ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை; ஆனால் நீ எம் சீர்காழிப்பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்.” என்று அருளுகிறார். அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது. குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று. குழந்தைக்கு மூன்று வயதிருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கைலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார். அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வானவீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது. அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார். ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார். உடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் அக்குழந்தை பெரிய மஹானாக வரப்போவதும், இந்த மூன்றாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காததிருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம்கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு ஸ்பரிச, நயன தீக்ஷைகள் அளித்தார். 

சிவஞான உபதேசமும் செய்வித்தார். பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும். அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞான மார்க்கப் பெயரை மெய்கண்டார் என தீக்ஷõதிருநாமமாக மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார். அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார். சமய குரவர்களில் முதல்வரான சம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் மூன்றாம் வயதிலேயே குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார். இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் எழுதப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும். 

சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது. அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப்பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற ஒருநாள் அவரைக்காணச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திவிட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டுவிரலை நீட்டி அவரையே காட்டினார். தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி என்ற தீட்சாநாமமும் அளித்தார். ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர். அருள் நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்; சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார். மெய்கண்டார் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது. அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரியவருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்ரஹமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.

அருணந்தி சிவாச்சாரியார்


இவர், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவ சமயத்தை சேர்ந்தவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்

இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்

மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்:

 பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர், தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும், அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார், இடையே குறுக்கிட்டு, ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்துகொண்ட மெய்கண்டார், அவரை நோக்கி, "நீர் நிற்கும் நிலைதான் அது" எனக் கூற, அருணந்தியார் தனது தவறை உணர்ந்து, மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்

நூல்கள்:

மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்

காலம்:

இவர் வாழ்ந்த காலம் பற்றித் தெளிவு இல்லை. து. . கோபிநாதராயர் என்பவர் கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு, இவருடைய குருவான மெய்கண்ட தேவர் கி.பி. 1232 ஆம் ஆண்டின் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்ற கருத்தை முன்வைத்தார். எனினும், குறித்த கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளவர் சந்தான குரவரான மெய்கண்ட தேவர் தானா என்பதில் ஐயப்பாடு உள்ளது.



மறைஞானசம்பந்தர்


மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு தோன்றியது. மெய்கண்டாரின் மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது மாணவர் மறைஞானசம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் (கடலூர் மாவட்டம்) ஆவணி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த இவர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றார். சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். இவருடைய வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு. ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றிய உமாபதி சிவாச்சாரியார் என்பவர் பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அக்காலத்தில், கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை பல்லக்கில் கொண்டு சென்று வீட்டில் விடுவதும், பகலாக இருந்தாலும் தீவட்டி பிடித்துச் செல்வதும் வழக்கம்) உச்சிவேளை... வெயில் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகல் நேரத்தில், பல்லக்கின் முன்னே ஒருவன் தீவட்டி பிடித்துச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் மறைஞானசம்பந்தர். உமாபதியின் பல்லக்கையும், முன்னே தீவட்டியும் செல்வதைக் கண்ட அவர், பட்ட மரத்தில் பகல்குருடு போகுது பார் என்று அவருடைய காதில் படும்படி உரக்க சத்தமிட்டார்.உமாபதி சிவாச்சாரியாரின் காதுகளில் இது கேட்டது. கற்பூரத்தில் பற்றிய நெருப்பு எப்படி கொழுந்து விட்டு எரியுமோ, அதுபோல அவரது மனதில், இந்த வார்த்தைகள் ஞானக்னியாக பற்றிக் கொண்டது

சிவஜோதி அவருள் தனலாய் எழுந்தது. பல்லக்கிலிருந்து கீழே குதித்தார். மறைஞான சம்பந்தரிடம் ஓடினார், என்னை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள், என்று அவரது திருவடிகளில் பணிந்தார். மறைஞானசம்பந்தர், அவரிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. திண்ணையில் இருந்து எழுந்தார். அப்படியே நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவமும் விடுவதாக இல்லை. அவரைப் பின்தொடர்ந்தார். சுவாமி! என்னைத் தங்கள் சீடனாக ஏற்க மாட்டீர்களா! எனக்கெஞ்சினார்

ஓரிடத்தில் நெசவாளர்கள் தறியில் துணி நெய்து கொண்டிருந்தனர். துணி அழுத்தமாக இருப்பதற்கான கஞ்சி அவர்கள் அருகே இருந்தது. அதில், சிறிது தனக்கு தரும்படி சம்பந்தர் கைநீட்டினார். கஞ்சி சூடாக இருந்தது. எனவே, நெசவாளர்கள் அவரது கை சுட்டுவிடக்கூடாதே என்பதற்காக, கொஞ்சம் கொஞ்சமாக கையில் ஊற்றினர். மறை ஞானசம்பந்தர், அவர்களிடம், பயப்படாதீர்கள்! எனக்கு சுடாது. தாராளமாக ஊற்றுங்கள், என்றார். அவர்களும் ஊற்றவே, விரல் இடுக்கு வழியே கஞ்சி கசிந்து கீழே வழிந்தது. குருவாக ஏற்றுக் கொண்ட உமாபதி, சிந்திய கூழை குரு பிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் உமாபதிசிவாச்சாரியார், மறைஞானசம்பந்தரின் சீடரானார். உமாபதி சிவாச்சாரியாரோடு சந்தானக்குரவர் என்னும் மரபு முற்றுப்பெற்றது. சிந்தாந்த அட்டகம் என்னும் எட்டு நூல்களை எழுதினார். இதில் குருவின் மீது கொண்ட ஈடுபாட்டால் எழுதிய நூல் நெஞ்சுவிடு தூது என்பதாகும். சரி...உமாபதி சிவாச்சாரியாருக்கு ஞானத்தை ஏற்படுத்திய பட்டமரத்தில் பகல் குருடு போகுது பார் என்ற சொற்றொடரின் சூட்சுமம் தெரிய வேண்டாமா!பட்டமரத்தின் கட்டைகளால் செய்யப்பட்டது பல்லக்கு. அந்தப் பல்லக்கில் சென்றவர் உமாபதி. பகலில் தீவட்டி ஏந்திச் சென்றதால், அவர் குருடாகிறார். அதாவது, பல்லக்கு, பரிவாரம் ஆகிய வசதிகளெல்லாம் தற்காலிகமானவை. இவை இறைவனை அடைவதற்குரிய சாதனங்கள் அல்ல. அதாவது, இறைவன் அருகில் இருந்து பூஜை செய்தால் மட்டும் ஆண்டவனை அறிய முடியாது. நிஜமான பக்தி இருந்தால், இறைவனை பாமரன் கூட அடைய முடியும் என்பதே இதன் சூட்சுமம்.



உமாபதி சிவம்


தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் அறிவுத் திறனை உணர்ந்த சோழ மன்னன் அவருக்கு முத்துப்பல்லக்கு, நாகரா, பகலிலும் விளக்குடன் செல்லும் உரிமை போன்றவற்றை அளித்திருந்தான். ஒரு நாள் இவர் நடராஜரைத் தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது சைவ சித்தாந்ததில் ஊறியவரும், வேதாந்தியும் ஆன மெய்கண்டாரை அவர் சீடர்களுக்குப் பாடம் சொல்லும்போது காண நேர்ந்தது. உமாபதி சிவாசாரியார் தெருவைக் கடந்து செல்லுவதாயும் மெய்கண்டாரின் சீடர்கள் கூறினர். உடனேயே மெய்கண்டார் ,பட்ட கட்டையில் பகற்குருடன் போகிறான் பாருங்கள் என்று பரிகாசம் செய்தார். இதைக் கேட்ட உமாபதி சிவாசாரியாருக்கு உடனேயே தன் தவறு புரிந்து விவேகமும் அதீத ஞானமும் தோன்ற அங்கேயே மெய்கண்டாரின் காலில் விழுந்து அவரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டதாய்ச் சொன்னார்

ஒருநாள் தன் ஞானகுருவான மெய்கண்டாருடன் நெசவாளர் தெருவழியாக நடந்து செல்லுகையில் துணிக்குப் போடும் கஞ்சியை எடுத்துக் குடித்தார் மெய்கண்டார். அந்தக் கஞ்சியானது அவரின் தோள் வழியே வழிந்தது. வழிந்த கஞ்சியை ஒரு பிரசாதமாய்க் கருதித் தானும் பருகினார் உமாபதி சிவாசாரியார். இந்தத் தீவிரமான குருபக்தியைக் கண்டு ஒருபக்கம் வியந்தாலும், சிதம்பரம் தீக்ஷிதர்கள் அவரைத் தங்கள் குழுவில் இருந்து விலக்கி வைத்தனர். அன்றிலிருந்து தில்லைக்கு வெளியே கொற்றவன் குடி என்னும் இடத்திலே தங்கி இருந்து வந்தார் உமாபதி சிவாசாரியார்

13-
ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர், தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாய்க் கொண்ட இவர் தம் குருவிடம் சைவ நூல்களைப் பயின்றார். இவர் இயற்றிய பல நூல்களுள் உண்மை நெறி விளக்கம், வினா-வெண்பா, கொடிக்கவி ஆகியன மிக மிக முக்கியமானவை. கோயிற்புராணம் என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் சேக்கிழார் புராணம் என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், பௌஷ்கர ஆகமம் என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்

தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை, வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம். இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.


No comments:

Post a Comment