Saturday 10 February 2018

சிவன் வடிவமைத்த காசி - 2

ஏன் காசி ? 

இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.

அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியைப் போற்றி வந்தனர்.

இதை மதம் சம்பந்தப்பட்ட இடமாக நினைப்பது மிகக் குறுகிய கண்ணோட்டம். இது மதம் சம்பந்தமட்ட இடமல்ல. ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கும் ஏக்கத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி, அதை நிறைவேற்றுவதற்காக, முறையான தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட சக்தி யந்திரம், இந்த காசி.

Related image

இன்றளவும் ஆன்மீக வாய்ப்பை அள்ளி வழங்கும் இடமாக அறியப்பட்டாலும், இசை, கலை, கல்வி, கைவினைப்பொருட்கள், பட்டு நெசவு என பல்வேறு துறைகளிலும் காசி புகழ் பெற்றிருக்கிறது. ஆயுர்வேதம் கூட காசியில்தான் எழுதப்பட்டது.

யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

இசையில் தலைசிறந்த பாடகர்களும், கணிதத்தில் புகழ்பெற்றவர்களும் வாழ்ந்த இடம் காசி. இந்தியாவின் தலைசிறந்த சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் உஸ்ஸாத் பிஸ்மிலாகான் போன்ற பெருமைக்குரிய கலைஞர்களை உலகுக்கு வழங்கியதும் காசியே.

ஆர்யபட்டா போல் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய மேதைகள் எல்லாம் இப்பகுதியிலிருந்து வந்தவர்கள்தான். இவர்கள் எல்லாம், உயிரோட்டம் நிறைந்திருந்த காசியின் கலாச்சாரத்தில் உருவானவர்கள்.

 காசி என்னும் கருவியால், இத்தனை புத்திசாலித்தனமும், திறனும் இங்கு தோன்றியது. இதன் மூலம், சாதாரணமாக ஒரு மனிதன் அணுகமுடியாத பரிமாணங்களை எல்லாம் இவ்விடத்தில் வாழ்பவர்களால் அணுக முடிந்தது. இவை அத்தனையும் பிரபஞ்சத்தை தர்க்கரீதியாக பார்த்து, உருவாக்கப்பட்டவை அல்ல.

இப்பிரபஞ்சத்தை, அது எப்படி இருக்கிறதோ அதை அவ்வாறே பார்த்தனர். இப்படி படைப்பின் தன்மையை, அது இருக்கும் நிலையிலேயே பார்ப்பவர்களின் புத்திசாலித்தனம், நம்பமுடியா அளவிற்கு பண்பட்டு முதிர்ச்சி அடைகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “இந்தியக் கணிதவியலின் துணை இன்றி, இன்றைய விஞ்ஞானம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”. இப்படிப்பட்ட கணிதம் தோன்றியது உயிரோட்டம் நிறைந்த காசியிலே, காசி எனும் மகத்தான யந்திரத்தின் துணையிலே !

சிவனின் ஏக்கம்: 

காசி நகரம் உருவானபின், அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒரு அரசனின் கையில் அந்நகரை ஒப்படைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கான நிபந்தனை, தேவர்களும், முக்கியமாக சிவனும் காசிக்கு வரக்கூடாது என்பது தானாம். சிவன் காசிக்கு வந்துவிட்டால், பிறகு எல்லோரும் அவரையே பின்பற்றுவர். அரசனிற்கு அப்புறம் என்ன மரியாதை இருக்கப் போகிறது ? இதற்கு ஒப்புதல் கொடுத்ததும், ஆட்சி கைமாறியது.

 சிவனும் கைலாயத்தில் இருந்தார். ஆனால் பார்வதியை மணந்தபின், பார்வதியால் கடுங்குளிர் தாங்க முடியாது என்பதால், மலையை விட்டு கீழிறங்க வேண்டிய கட்டாயம் சிவனிற்கு ஏற்பட்டது. தங்குவதற்கு சரியான இடம் தேடியவர், காசியைப் பார்த்ததும், அவருக்கு வேறு எங்கு தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லையாம். ஆனால் அவர் காசிக்குள் வருவதற்குத் தடை இருக்கிறதே !

அதனால் காசிக்குள் வருவதற்கு அவர் பல தந்திரங்களையும் கையாண்டு, ஒன்றும் பலிக்காமல், கடைசியாக காசி மன்னன் திவோதாசனுக்கு முக்தி ஆசை காட்டி, அவருக்கு முக்தி வழங்கி அதன் பின்னே தான் அவர் காசிக்குள் வரமுடிந்ததாம். உள்ளே வந்தவர், இனி காசியை விட்டுப் பிரியேன் என்று சொன்னாராம். அதனால் அங்கு ‘அவிமுக்தேஷ்வரா’ எனும் கோவிலும் உண்டு.

இக்கதைகள் அனைத்தும் காசியில் வாழ ஒவ்வொருவரும் எவ்வளவு ஏங்குவர் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டது.

கண்ணுக்குப் புலப்படுகிற(திரிஸ்யம்) இந்த பிரபஞ்சமானது உண்டாவதற்கு முன்னதாகவே அவிமுக்தமாகிய காசி க்ஷேத்திரம் உண்டாகிவிட்டது. அந்தக் காசியின் பிரபாவம் காசி கண்டம் முதலிய நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

பிரமதேவர் சிவ கட்டளையை ஏற்று உலக படைப்பைத் தொடங்கினார். சராசரரூபமாகப் படைக்கப்பட்ட அண்டம் முழுவதும் சிவபெருமானுடைய சுத்த தேஜஸே வியாபித்தது அது முதல் படைப்பானது கிரமமாக நிகழலாயிற்று. இவ்விதம் படைக்கப்பட்ட பிரமாண்டத்தின் பரிமாணம் ஐம்பது கோடி யோசனை விஸ்தீரணம் என்று முனிவர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜலத்திலிருந்த அந்தப் பிரமாண்டமானது ஜலத்தின் மீது கப்பல் போலவும் தயிரின் மேல் ஏடுபோலவும் அஷ்டதிக்கு கஜங்களால் தாங்கப்பட்டு நிலைத்து நின்றது அந்தப் பிரமாண்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நடுவில் உள்ளது. மத்தியலோகம் என்றும் மற்ற இரண்டு பாகங்களும் ஊர்த்துவலோகம் அதோலோகம், என்றும் சொல்லப்பட்டன.

 மத்தியலோகம் பூலோகம் என்றும் அதோலோகம் அதலம், விதலம், சுதலம், தராதலம், ரஸாதலம், மஹாதலம், பாதலம், என்றும் சொல்லப்பட்டன. பூலோகத்தின் மேலேயுள்ள ஊர்த்துவலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம், மஹாலோகம் ஜனலோகம் தபோலோகம், சத்திய லோகம் என்றும் சொல்லப்பட்டன.

 பாதாள லோகங்கள் ஏழும் ஒன்றின் கீழ் ஒன்றாகவும் சுவர்க்கலோகங்கள் ஒன்றின் மேல் ஒன்றுமாக முறையே விளங்கும்.

தங்கள் புண்ணியங்களுக்கேற்ப ஸ்வர்க்க லோகங்களிலும் பாவஞ் செய்தவர்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப அதோலோகங்களிலும் வசிப்பார்கள் இந்த பூலோகத்தில் ஏழு கடல்களும் ஏழு தீவுகள் மேருமுதலான குலபர்வதங்களும் கங்கை முதலான புண்ணிய நதிகளும் விசித்தரமான பல புண்ணிய வனங்களும் இருக்கின்றன. இதுவே படைப்புக் கிரமம்.

மற்ற புண்ணிய க்ஷேத்திரங்களில் எல்லாம் சாரூப்ய (இறைவனுருப் பெறும்) முக்தியும், காசியில் மட்டுமே சாயுஜ்யம்(இறைவனோடு ஒன்றிப்பு) என்னும் உத்தம முக்தியும் பெறப்படும்.

பஞ்சக்குரோச பரிமாணமுடையதும் கோடி பிரமஹத்திகளைப் போக்கடிப்பதுமான இந்த காசி க்ஷே த்திரம் கதியில்லாதவர்களுக்கெல்லாம் கதியாக அமைந்திருக்கிறது. தேவர்களும் காசிமாநகரிலே மடிய விரும்புவார்கள்.

Related image

பிரம்ம, விஷ்ணுக்கள், சித்த வித்யாதரர் முனிவர், மனிதர்கள் முதலான யாவரும் விரும்பி வணங்கத்தக்கதே காசித்தலமாகும் அதன் சிறப்பை நூறு ஆண்டுகள் சொன்னாலும் சொல்ல முடியாது.

இச்சையால் சகுணரும் சுயமாக நிர்க்குணராயுமுள்ள சிவபெருமான் ஒருசமயம் இந்த காசிக்கு வந்து பாவங்களைப் பரிகரிக்கத்தக்க தன் ஸ்வரூபமான அவிமுக்த லிங்கத்தை யாவருக்கும் காண்பித்து அந்த அவிமுக்த மகாத்மியத்தைச் சொன்னார். அதனை விவரமாகச் சொல்ல இயலாது. பிரம்மனே அநேக கோடி வருஷங்கள் சொல்வதானாலும் சொல்லி முடியாது.

அவிமுக்த க்ஷேத்திர அதிபதி பார்வதிதேவி சமேதராக வந்த சிவபெருமானை தரிசித்து அநேகம் ஸ்தோத்திரங்களுடன் நமஸ்காரஞ் செய்து எம் பெருமானே ! நான் உன் அடிமை என்னிடம் தயை வைக்கவேண்டும் உலகிற்கு நலம் செய்யும் காரணமாகத் தாங்கள் இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்து சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி கண்களில் ஆனந்த பாஷ்பம் சொரிய தேவதேவரே ! இந்த நகரத்தை ராஜதானியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எக்காரணத்தாலும் எக்காலத்திலும் இந்த நகரத்தை நீங்காது இருந்து எங்களுக்குத் தரிசனம் அளித்து எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும். இத்தலத்தில் இறங்கும் எல்லாப் பிராணிகளையும் முக்தியடையச் செய்ய வேண்டும் ! என்று பிரார்த்தித்தான்.

அதற்கிணங்கச் சாம்பமூர்த்தி தன் பரிவாரங்களுடன் லோகோபகார நிமித்தமாக அங்கேயே கோயில் கொண்டருளினார். அவர் தம் பிரம்ம கபாலத்தை அந்தக் காசியில் பிரதிஷ்டை செய்ய வந்தவராதலின், அவ்வரசனின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் கருதி வந்தபடியே அவ்விடத்தில் வசித்திருக்க உடன்பட்டார்.

 சிவபெருமானிடத்தில் பிரம்ம கபாலம் எப்படி வந்தது ? 

சூதமுனிவரின் குருநாதரான வியாச மகரிஷி எனக்கு இந்த விஷயத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

பூர்வத்தில் ஒரு காலத்தில் சிவபெருமான் உலகக்ஷேமங்களை விசாரிக்கத் திருவுள்ளம் கொண்டார். எனவே, அவர் சகல உலகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டு பிரமலோகத்தையடைய, பிரம்ம தேவர் அவரை எதிர் கொண்டு வரவேற்று அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் பூஜித்து தம்முடைய நான்கு திருமுகங்களாலும் துதித்தார்.

அப்போது அவரது ஐந்தாவதாகிய ஒருமுகம் சிவபெருமானை குறை கூற அதைக் கேட்ட சிவபெருமான் பிரம்மனுடைய நான்கு முகங்களும் துதித்ததற்காக மகிழ்ந்து ஐந்தாவது முகம் செய்த தூஷணைக்கு விசனமடைந்து, ஆஹா! இந்த துஷ்டமுகத்தை நிவர்த்திக்க வேண்டும் என்று பாம்பு கடித்த விரலை அறுத்தெறிவதால் அந்த விஷவேகம் தீர்ந்து விடுவது போல், முழுவதும் நற்குணமுடைய பிரம்மதேவனது ஐந்தாவது முகம் மட்டுமே தீச்செயல் புரிந்ததால் அம்முகத்தை நீக்குவதால் அவன் முற்றிலும் நற்குணம் உடையவனாவான் என்று கருதி பிரமதேவனின் நலனுக்காகவே அதை அகற்றத் தீர்மானித்து, தம் நெற்றி விழியில் அக்னிச் சுவாலை தோன்ற பிரமனை நெருங்கி, அவனது ஐந்தாவது சிரத்தைத் தம் திருவிரலின் நகத்தால் கொய்தார்.

அந்தப் பிரம்ம சிரமானது சிவபெருமானைப் பின் தொடர்ந்தது. அவர் காசியையடைந்த போது அது அவரை விட்டுவிலகியது இந்த இரண்டு காரணங்களினால் சிவபெருமான் காசியில் அமர்ந்தார்.

சர்வலோகங்களுக்கும் பிதாமகனான பிரம்மதேவர் உலகத் தலைவரான சிவபெருமான் தம் இருக்கைக்கு வந்ததைக் கண்டு அவரை உபசரித்தார் என்றீர்கள் பிரமனோ மகாசாந்த சீலர் அப்படியிருந்தும் அவர் தமது நான்கு வாயினாலும் துதித்து ஐந்தாவதான ஒரு வாயினால் மட்டும் சிவபெருமானைத் தூஷிக்கக் காரணம் என்ன ?

                                                             - புனித பயணம் வ(ள)ரும்..

No comments:

Post a Comment