Sunday 16 October 2016

பெரியாண்டவர் ஆலயம், திருநிலை



ஆலய வரலாறு ...

மனிதனாக வந்து மக்களை காக்கும் மகேசன்


பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, வானாந்திர மரங்களாலும், மலைகலாலும் சூழப்பட்ட, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார்.



சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.



அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.

உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன.

ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்.

மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.

மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்து, பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். நந்தி பகவானூம் மனிதவடிவில் தோன்றி சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம்.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.

ஆலய அமைப்பு...

வெண்பனி மேகங்கள் விளையாட்டாய் மோதி விளையாடும் மலைகளும், குன்றுகளும் சூழ அடர்ந்த வனங்கள் நிறைந்தும், பூத்துக் குலுங்கும் சோலைகளும், துள்ளி விளையாடும் புள்ளி மான்களும், புள்ளினங்களின் இசையும், நீர் நிறைந்த வயல்வெளியும், விளைந்த நெல்மணிகள் காற்றில் ஒலிக்கும் சங்கீத ஒசையும் இயற்கை அன்னை இயல்பாக அமர்ந்து வசீகரிக்கும் மாட்சிமை பொருந்திய எழில் நிறைந்த திருநிலை கிராமத்தில் வெட்டவெளியில் குடிகொண்டிருக்கும் இறைவன் ஆலயம் வடபுறம் குளக்கரையும், தென்புறம் ஏரிக்கரையும் கொண்டு கிழக்குமுகம் வாசல் கொண்டு அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இடதுபுறம் பாலவிநாயகரும், வலதுபுறம் பாலமுருகப் பெருமானும் அருட்காட்சி தருகின்றனர்.

மூன்று நிலை கோபுரம்
மூவேழு உலகை வலம் வந்த வண்ணம், மூ இலை வேல் கையனாம், முக்கண்ணனாம், மூவருள் முதல்வனாம் மும்மலம் அழிப்பவனாம், இவ்வாறாக மூன்று நிலை கொண்டு உயர்ந்து நிற்கும் சிவபெருமான் குடியிருக்கும் இவ்வாலயம் மூன்று நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது.

விநாயகர், முருகர்

நுழைவு வாயிலின் இடதுபுறம் தலவிநாயகர் காட்சி தருகிறார். அவரைக் காணுகையில் நம் தடைகள் தகர்ந்து போகின்றன.

நுழைவு வாயிலின் வலதுபுறம் ஆறுமுகமாம், பன்னிரெண்டு கைகளாம், மயில் மீதமர்ந்த வேலவனாம், வேண்டுதல் செய்தால் கைமேல் பலன்தரும் பாலகனாம் முருகப் பெருமான் அமர்ந்து அருளாசி வழங்கி அன்பர்களுக்கு மூவேழு வலம் வந்த நாயகனைக் காண வழிவிடுகின்றார்.

16 கால் மண்டபம்

16 கால் மண்டப நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்தால் நேரே வீபூதி விநாயகரை தரிசனம் செய்யலாம். இவரை விபூதி கொண்டு நாமே அபிஷேகம் செய்தால் செல்வம், கல்வி, அறிவு பெறலாம். இது வேறு எங்கும் காணாத இவ்வாலயத்தின் சிறப்பம்சம். மண்டபத்தின் உள்ளே ஈசன் மனிதனாக உலகை வலம்வந்து ஒரு நிலையில் திருநிலையாய் நின்ற அற்புத கோலமும், அவரை ஒரு நிலையில் ஆட்கொண்ட அங்காளபரமேஸ்வரி ஈசனை வணங்கி நிற்கும் காட்சியும், இவர்கள் இருவரையும் திருமூலரும், இராமலிங்க அடிகளாரும் வணங்கி நிற்பதையும் காணலாம்.

இரண்டாம் நிலை

தங்கமுலாம் பூசிய தகட்டால் வேயப்பட்ட இரண்டாம் நிலை வாயிலின் இடதுபுறம் சித்திபுத்தி விநாயகரும், வலதுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். நுழைவு வாயில் மேற்புறம் ரிஷப வாகனத்தில் சக்தியுடன் அமர்ந்து எம்பெருமான் அருளும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

பெரியாண்டவர் தோற்றத்துடன் காட்சி

சுயம்பு லிங்கத்தின் மேற்புறம் மனித உருவில் உலகை வலம் வந்த, மானிடம் காக்க வந்த முதற் கடவுளாக, அருள் தருவதில் முன்னிற்கும் மூர்த்தியாக, பக்தர்களைக் காத்திட ஒருநிலையாய் திருநிலையில் நின்று பெரியாண்டவராக அமர்ந்து காட்சி தருகின்றார்.

அங்காள பரமேஸ்வரி

சுயம்புவின் வலதுபுறம் உலகை வலம் வந்த சிவபெருமானை ஒருநிலையில் சூலாயுதத்தால் நிறுத்திய, அகங்காரம் நீக்கி அன்புதனை புகுத்திடும் அன்னையாக, அடியவர்களின் துயரை விரைவில் நீக்கிடும் வடிவாம்பிகையாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்பு பொங்க அருட்காட்சி தருகின்றார். அங்காள பரமேஸ்வரிக்கு நேர் எதிர்திசையில் சிவனும் சக்தியும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் உருவில் அமர்ந்து காடசி தருகின்றனர்.

மற்ற மூர்த்திகள்


ஆலயத்தில் தட்சினாமூர்த்தி கோபுரத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளார். பைரவர் கோபுரத்தின் வட திசையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். சிவனும் சக்தியும் கால் பதித்து ஓருசேர நின்ற இவ்விடத்தில் சிவபாதமும், சக்தி பாதமும் தனித்தனியாக காட்சி தருவது தரிசிப்பவர் பாவத்தை போக்கவல்ல கண்கொள்ளா காட்சியாகும்.

சிவகணங்கள்




நின்ற நிலையில் நந்தி


சுயம்பு லிங்கத்தைச் சுற்றி செவ்வக வடிவில் 21 சிவகணங்கள் இறைவனை வணங்கி நின்று காட்சி தரும் கோலம் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும். மேலும் சிவன் மனித ரூபத்தில் உலகை பெரியாண்டவராக அவதாரம் எடுத்து வலம் வந்தபோது, நந்தி பகவானும் அவ்வாறே கோலம் கொண்டு வலம் வந்து இறைவனின் முன்னால் மனித ரூபத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அரிய காட்சியை இங்கு காண முடியும்.

நாகாத்தம்மன் சன்னதி

ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த குளத்திற்கு செல்லும் வழியில் முன்னால் தனி சன்னதி கொண்டு விநாயகர், முருகர் இருபுறமும் இருக்க நாகாத்தம்மன் கிழக்கு நோக்கு அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

சித்தாமிர்த தீர்த்தம்

ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் சகலமும் கிட்டும் என்பது இறை அன்பர்களின் நம்பிக்கை.


பெரியாண்டவர் ஆலயம் புகைப்படங்கள் * Periyandavar Temple Photos

அர்த்தநாரீஸ்வரர், திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
அர்த்தநாரீஸ்வரர்
திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
Ardhanareeswarar, Periyandavar Temple
மனித உருவில் நந்தி, திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
மனித உருவில் நந்தி
திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
Nadhi in human form in Periyandavar temple
சுதை வடிவில் பெரியாண்டவர்
சுதை வடிவில் பெரியாண்டவர்
Stucco image of Periyandavar
அங்காள பரமேஸ்வரி, திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
அங்காள பரமேஸ்வரி, திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
Angaala Parameswari, Periyandavar Temple

ஈசன் பாதம், திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
ஈசன் பாதம், திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
Foot prints of Lord Siva in Periyandavar Temple
சிவனும், சக்தியும் 
திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
சிவனும், சக்தியும்
திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
Stucco images of Lord Siva and His consort Sakthi
சிவனும், சக்தியும்
திருநிலையில் ஒருநிலையாய் நின்ற சிவனும்
அவரை வணங்கும் பார்வதியும்
Goddess Parvathi worshipping Lord Shiva
who is in Human form

No comments:

Post a Comment