Friday 16 September 2016

மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா?


மனைவி என்ற சொல்லுக்கு இல்லத்தலைவி என்று பொருள். இதையே தாரம் என்றும் சொல்வார்கள். தாரம் என்றால் உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது. இதனால் தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தாரம் என்பர். தாரம் என்பவள் தன் இல்லத்திலுள்ள எல்லாரையும் அரவணைத்து, எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வாளோ, அதுபோல் ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும்.

அதனால் தான் மந்திரம் ஓதும் போது, ஓம் நமோ நாராயணாய, ஓம் முருகா, ஓம் நமசிவாய, ஓம் சக்தி என்று ஓம் என்பதை சேர்த்துச் சொல்கிறோம். ஓம் என்பதை பிரணவம் என்பர். பிரணவம் என்றால் என்றும் புதியது எனப் பொருள்.

ஆம்.. கடவுளுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. அதாவது முதலும் இல்லை, முடிவும் இல்லை. இன்னும் எளிமையாய் சொன்னால் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. அவர் எப்போதும் புதியவராகவே இருப்பார். அதுபோல், ஓம் என்னும் மந்திரத்தை ஒலிப்பவனும் பிறவாநிலைக்கு செல்வான். அதன்பின் அவனது ஆத்மாவும் இளமை, முதுமை என்ற சிக்கலுக்குள் எல்லாம் மாட்டாமல் பிறப்பற்றதாக இறைவனோடு கலந்துஇருக்கும். என்றும் புதிதாக இருக்கும்.

இப்போது புரிகிறதா! மனைவி என்பதை விட தாரம் என்பது மிக உயர்ந்த வார்த்தை. 

No comments:

Post a Comment