Friday 27 April 2018

சுக்கிர யோகம் யாருக்கு ?

சுகபோகங்கள் அருள்வார் சுக்கிரன் ! 

சு
க்கிரனை ஆங்கிலத்தில் ‘வீனஸ்’ என அழைப்பார்கள். சூரியனுக்கு அருகில் புதனும் அதற்கடுத்து சுக்கிரனும் இருக்கின்றன. சுக்கிரனை ‘வெள்ளி’ என்றும் கூறுவார்கள். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக வானில் தோன்றும் கிரகம்தான் சுக்கிரன். நம் கிராமப்புறங்களில், ‘வெள்ளி முளைக்கும் வேளையில் வயலை நோக்கிப் புறப்பட்டான்’ என்று கூறுவார்களே, அந்த வெள்ளிதான் சுக்கிரன்.  

சூரியனிலிருந்து 6 கோடியே 70 லட்சம் மைல் தொலைவில் சுக்கிரன் இருக்கிறது. இந்தக் கிரகம் ஜோதிடக் கணக்குப்படி, 12 ராசிகளையும் சுற்றி வருவதற்குக் கிட்டத்தட்ட ஏழரை மாதங்கள்... அதாவது, 225 நாள்கள் ஆகும். இது, தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 23:30 மணி நேரமாகிறது.  

சுக்கிரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: வெள்ளி, கவி, பிருகு, பார்க்கவன், அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், நேத்திரன், சுகி, போகி மற்றும் மழைக்கோள். 

சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த அன்பர் அதிஅற்புதமான பலன்களை அனுபவிப்பார். அதேபோல், சுக்கிரயோக ஜாதகக்காரர்களும்  சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள். சரி! எல்லோருக்குமே சுக்கிரதசையைச் சந்திக்கும் வாய்ப்பும், சுக்கிரயோக வாழ்க்கையும் கிடைத்துவிடுமா என்றால், `இல்லை' என்றே சொல்ல வேண்டும். 

பூர்வ ஜன்ம பலாபலன்களுக்கு ஏற்பவே இப்பிறவிக்கான வாழ்க்கை அமைகிறது. அவ்வகையில், ஜாதகத்தில் சுக்கிர பலம் இல்லாதவர்கள், வாழ்வில் சுக்கிர திசையையே சந்திக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்? 

அவர்களுக்கு இறை வழிபாடு கைகொடுக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதற்கேற்ப, இப்பிறவியில் மேலும் பாவ காரியங்களுக்கு ஆளாகாமல், புண்ணியங்கள் சேரும்படியாக அறவழியில் வாழ வேண்டும். வழிபாடுகளால் தெய்வபலம் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தெய்வ அனுக்கிரகத்தால், பூர்வஜன்ம கர்மவினைகளுக்கான அசுப பலன்கள் படிப்படியாகக் குறையும்போது, சுபிட்ச பலன்களும் சுக்கிரயோக வாழ்வும் கைகூடி வரும்.
அதற்கான வழிபாடு களை, சுக்கிரனின் திருவருளைப் பெற்றுத் தரும் துதிப்பாடல்களைப் பற்றி அறியுமுன், அவரின் மகிமைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.  
சுக்கிர பகவானைத் தெரிந்துகொள்வோம் 

கு
ரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். நவகிரகங்களில் பூரண சுப கிரகம் குரு. குருவுக்கு நிகரான மிகுந்த அதிர்ஷ்டமுள்ள சுப கிரகம் சுக்கிரன். தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிரன். குரு, சுக்கிரன் இருவருக்குமே ஜோதிட சாஸ்திரத்தில்  தனித்தனி தன்மைகள் உண்டு. 

சுக்கிரன் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் அதிபதி. மாந்த்ரீக - தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர்.

சுக்கிரன் என்றாலே யோகம்தான். ‘வறிய நிலையில் இருப்பவரைக்கூட மாட மாளிகையில் தங்கவைத்து, மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கும்படியும், எந்த நேரமும் கையில் பணம் இருக்குமாறும் செய்வார். சேவை செய்ய ஆட்கள், சொகுசு வீடு, வாகனம், துயரப்படாத மனம்,  பெண்கள் ஆதரவு,  வைர-வைடூரிய ஆபரணங்கள் அணிதல், அரசனுக்கே உதவி செய்தல், ஊரே மெச்சும் அளவில் வாழ்தல் ஆகியவற்றுக்கு சுக்கிரனே காரகத்துவம் பெற்றவர்.  
சுக்கிரன், தனது சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருப்பார். தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம் மற்றும் கும்ப ராசிகளிலும், புதனின் ராசியான மிதுனத்திலும் நட்பு நிலையையும் கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். 

னக்குச் சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிகம் ராசிகளில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார்.
 
னக்கு நிகரான பலம் வாய்ந்த, அதே தருணத்தில் தனக்குப் பகை கிரகமான குருவின் ஆட்சி வீடுகளில் ஒன்றான தனுசு ராசியில் நட்பாகவும், மீன ராசியில் உச்சமாகவும் காணப் படுகிறார். எதிரியின் வீட்டில் உச்சம் பெறும் ஒரே கிரகம் என்ற சிறப்பும் சுக்கிரனுக்கு உண்டு. 

சுக்கிரன் பகை, நீசம் பெற்றிருக்கும் ஜாதகத்தில், குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்து, தன்னுடைய 5 அல்லது 9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் விலகுவதுடன், சுக்கிரன் தனக்கு உரிய சுப பலன்களைத் தந்துவிடுவார்.  

குரு, பகை ராசிகளான ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகளிலிருந்து, பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனை 5 அல்லது 9-ம் பார்வையால் பார்த்தால், சுக்கிரனால் 50 சதவீதப் பலன்கள் கிடைக்கும். 

னக்குச் சம ராசியான கும்பத்திலிருக்கும் குரு, 5,9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் 75 சதவீதப் பலன்களைத் தருவார்.

குரு நீச ராசியான மகரத்தில் நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். 

குரு-சுக்கிரன் இருவரும் 7- ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்ததுக் கொண்டால், இருவரும் எந்த ராசியில் எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். பொதுவாக குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்க்கும் வகையில் ஜாதகம் அமைந்த அன்பர்களுக்கு மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.     
சுக்கிரனுக்கு உரிய காரகத்துவங்கள்  

தானியம் - மொச்சை
அங்கம் - இந்திரியங்கள்
தத்துவம் - பெண்
வஸ்திரம் - வெண்பட்டு
வாகனம் - மாடு
மொழி - தெலுங்கு 
பஞ்சபூதம் - அப்பு - நீர்
திசை - தென்கிழக்கு
ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம்
தன்மை - ஸ்திரம்
ஆட்சி -  துலாம், ரிஷபம்
உச்சம் - மீனம்
நீசம் - கன்னி
நட்பு - மகரம், கும்பம்
பகை - கடகம், சிம்மம்
மூலத்திரிகோணம் - துலாம்
எண் - 6
சுக்கிர திசை - 20 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரங்கள் - பரணி, பூரம், பூராடம். 
பார்வை   - ஏழாம் பார்வை
மலர் - வெள்ளைத் தாமரை
நிறம் - வெண்மை
உலோகம் - வெள்ளி
ரத்தினம் - வைரம்
தூப தீபம் - லவங்கம்
சமித்து - அத்தி
சுவை - புளிப்பு
நாடி - சிலேத்துமம்
அதிதேவதை - லட்சுமி, இந்திரன், வருணன்
குணம் - ராட்சஸம் 
குருவும் சுக்கிரனும் சேர்க்கை பலன்கள் 

கு
ருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்றிருந்தால், சுப பலனைத் தருகிறார். 

குருவும் சுக்கிரனும் 5, 9, 11-ம் இடங்களில் நின்றிருந்தால் அவரவர்க்கு உரிய சுப பலனைத் தருவார்கள். 
குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8, 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்றிருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால், பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை. 

மற்ற கிரகங்களுடன்...

ருவருக்கு சுக்கிர தசை 20 ஆண்டுகள் நடைபெறும். இந்தச் சுக்கிர தசை ஒருவரின் இளமைப் பருவத்திலேயே வருவது மிகவும் சிறப்பானது. 

குறிப்பாக சனி தசையின் இறுதியில் பிறப்பவர்களுக்கும், புதன் தசையில் பிறப்ப வர்களுக்கும் சுக்கிர தசை இளமையிலேயே வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும். சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான்.  
சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். எந்த கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால், என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சுக்கிரன் - சூரியன்  

சு
க்கிரனுடன் சூரியனின் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலும், அந்த இடத்துக்கு குருவின் பார்வை இருந்தாலும், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். இப்படி சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபட்டால், நற்பலன்களைப் பெறலாம். 

சுக்கிரன் - சந்திரன் 

சு
க்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள், நிறைந்த கல்வியறிவும், புத்தி சாதுர்யமும் கொண்டவர்களாகத் திகழ்வர். சகல சுக செளகர்யங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்க மாட்டார்கள். சுக்கிரனுடன் தேய்பிறை சந்திரன் இருந்தால், திங்கள்கிழமைகளில் சிவபெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சுக்கிரன் - செவ்வாய் 

செ
வ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற ஜாதகர்கள், தோற்றப் பொலிவுடன் திகழ்வார்கள். தேக ஆரோக்கியமும், தைரியமும் மிகுந்தவர்களாக விளங்குவர். 
எதையும் சாமர்த்தி யமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றிபெறக் கூடியவர்கள்.  கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட. சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

சுக்கிரன் - புதன் 

சு
க்கிரன் புதனுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு இருந்தால், அந்த ஜாதகர்கள் அன்பும் பாசமும் நிறைந்தவர்களாகத் திகழ்வர். இவர்கள், மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பவர்கள் விஷ்ணுவை வழிபடுவதும், விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். 

சுக்கிரன் - குரு 

ந்த இரு கிரகங்களும் இணைந்திருக்கும் ஜாதகக் காரர்கள், ஒரு கருத்தை ஆதரித்தும் பேசுவார்கள்; அந்தக் கருத்தையே மறுத்தும் பேசுவார்கள். இரக்க மனம் கொண்ட இவர்களிடம் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தெய்வபலம் இவர்களுக்குத் துணை நிற்கும். சுக்கிரனுடன் குரு சேர்ந்திருப்பவர்கள் தட்சிணாமூர்த்தியையும், மகாலட்சுமியையும் வழிபட்டு நற்பலன் களைப் பெறலாம். 

சுக்கிரன் - சனி 

சு
க்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால், அந்த அன்பர்கள் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படுவர். இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. 

இவர்கள் உண்மையானவர் களாகவும், நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர் களாகவும் நடந்து கொள்வார்கள். இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற அன்பர்கள் ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலன்கள் கிட்டும்.

சுக்கிரன் - ராகு 

ந்தக் கிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணைவரிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். வீடு, நிலங்கள், மாடு- கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாதவர்கள், ராகுகாலத்தில் துர்கையை வழிபட்டு நலன் பெறலாம்.

சுக்கிரன் - கேது 

ஜா
தகத்தில் சுக்கிர பகவானும் கேது பகவானும் சேர்ந்திருக்கும் அமைப்பு, ஆன்மிகத்தில் ஈடுபாட்டையும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் ஆர்வத்தையும் தரும். இந்த அன்பர்கள் கவிஞர்களாகவும் ஆசிரியர் களாகவும் பெரும்புகழுடன் திகழ்வார்கள். 

இவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

பன்னிரு ராசிகளும் சுக்கிர பலனும் 

ஜா
தகத்தில் சுக்கிர யோகம் நிரம்பப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஏனெனில், வாழ்வில் சகல சுகபோகங்களும் அமைவதற்கு அருள்பாலிப்பவர் சுக்கிர பகவான். ஆகவே, ஜாதகத்தில் அவருடைய நிலையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இங்கே, 12 ராசிகளில் சுக்கிரன் இருக்கும்போது உண்டாகும் பலாபலன்கள் உங்களுக்காக! 
மேஷம்: மேஷ ராசியில் சுக்கிரன் இடம்பெற்றால், இல்லற வாழ்வில் சஞ்சலங்கள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல் அதிகமாக இருக்கும். குறைவான வசதி படைத்தவராக இருந்தாலும் அரசன் போன்ற ஆளுமைத்திறன் பெற்றிருப்பார்.
ரிஷபம்: புத்திக் கூர்மையுடன் செயல்படுபவர். நல்ல இல்லற வாழ்கை அமையப் பெறும். வறியவருக்கு உதவும் மனம் கொண்டவராக இருப்பார். வேலை செய்யும் நிறுவனத்தின் நன்மதிப்பை பெற்றிருப்பார்.
மிதுனம்: செல்வச் செழிப்பு வாய்க்கப்பெற்றவர். ஒரே நேரத்தில் பல தொழில் களில் வெற்றிகரமாக வேலை செய்யும் அளவுக்கு சாதுர்ய புத்தி கொண்டவராக இருப்பார். அயல்நாட்டுத் தொடர்பு மற்றும் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.  
கடகம்: செய்யும் செயலில் மிகுந்த கவனம் கொண்டவராகவும், பலவிதமான வழிகளில் வாழ்க்கை நடத்துபவராகவும் திகழ்வர்; நற்குணம் கொண்டவர்.
சிம்மம்:  அளவான குடும்பத்தோடு வளமான வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் நன்மைகள் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் இருக்கும். 
கன்னி: பரம்பரைத் தொழிலில் ஈடுபாடு இருக்காது. அலைபாயும் மனமும், வெளிநாடு செல்லும் ஆர்வமும் ஏற்படும். இல்லற வாழ்வில் சச்சரவுகள் நிலவும்.
துலாம்: பேரும் புகழும் பெற்றுத் திகழ்வர். விவசாயம், கால்நடை, தானியங்கள் தொடர்புடைய தொழில்கள் மூலம் செல்வம் உண்டாகும். அறிவாளிகளின் தொடர்பு நன்மை தரும். 
விருச்சிகம்: அலைச்சல் மிக்க வாழ்க்கையைக் கொண்டவர். அதிகமாகப் பேசுபவர். பிறரது செயல்களில் ஆர்வம் காட்டுபவர்; சண்டைகளைத் தூண்டிவிடுபவர். இவர்களில் பலர், பெரிய கடனாளியாகத் திகவர்.
தனுசு: எதிரிகளை வீழ்த்துவார். தன் குலத்துக்கு தலைவராகத் திகழ்வார். மிகவும் மதிக்கப்படுபவர். நல்ல கவிஞராகவும் திகழ்வார். அரசாங்கத்துக்குப் பிரியமானவராக விளங்குவார். குடும்பத்துடன் இன்பமாக வாழ்வார். 
மகரம்: மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப் பெற்றவர். எந்தத் துக்கத்தையும் தாங்கும் திறன் பெற்றவர். கபம் மற்றும் வாதம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவார். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிரச்னைகள் உண்டு.
கும்பம்: உணர்ச்சிவசப் படுபவர். அடிக்கடி நோய் வாய்ப்படுவார். தீய செயல்-பழக்கவழக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் உண்டு. சமுதாயத்தில், எப்போதும் எதிர்மறை சிந்தனை கொண்டவராகத் திகழ்வார்.
மீனம்: தன் வம்சத்திலேயே மிக முக்கிய நபராகத் திகழ்வார். இவர்களுக்கு, விவசாயம் மூலம் பெரும்பொருள் சேரும். எல்லாவற்றிலும் மேன்மை நிலையை அடைபவர். மீனத்தில் சுக்கிரன் வர்க்கோத்தமம் பெற்றால், இவர்களது சுயமரியாதைக்கு 
இழுக்கு நேரிடலாம்.

சுக்கிர யோகம் பெற எளிய வழிபாடுகள் 

ஜா
தகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றவர்கள், சகல லட்சணங்களுடன் அழகாக இருப்பார்கள். முகம் களை பொருந்தியதாக இருக்கும். சுக்கிரன் இந்திரியங்களுக்கும் அதிபதி என்பதால், இவரது ஆதிக்கத்துக்குத் தக்கபடியே ஒருவரது இல்லற வாழ்வும், வாழ்க்கைத்துணையும் அமையும்.  
சுக்கிரன் பூரண சுப கிரகம் என்பதால், அவர் அசுபர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரக்கூடாது. அப்படிச் சேர்ந்தால், அதற்கு உரிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும். 

சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் விலகும்.

குரு வழிபாடு, ஏழைகளுக்கு தானம் செய்தல், மகாலட்சுமி வழிபாடு ஆகியவற்றைச்செய்தால், சுக்கிரனால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் சுக்கிரன் பகை அல்லது நீசம் பெற்று திகழ்கிறார் எனில், அந்த ஜாதகக்காரர்கள் வெள்ளிக்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்ததும், பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் துதிப் பாடலைப் பாராயணம் செய்து பூஜித்து வந்தால், அவர்களின் வாழ்வு மேம்படும்.  

துதிப்பாடல்... 

சுக்கிர மூர்த்தி சுகமிக ஈவாய் 
வக்கிரமின்றி வரம் பல தருவாய் 
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே!


சுக்கிரனுக்கு உரிய மந்திரம்

ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் ஸ: 
சுக்ராய நம: 

 
சுக்கிர காயத்ரீ 

ஓம் ப்ருகுபுத்ராய வித்மஹே
ஸ்வேத வாகனாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்:


*** 
பரிகாரத் தலங்கள் 

சு
க்கிரனுக்கு உரிய ஸ்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. இந்தத் தலம், சூரியனார்கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கஞ்சனூரில் சிவபெருமான் குளிர் நிலவாகக் காட்சி தருகிறார்.  
மேலும் திருவரங்கம் சென்று ஸ்ரீரங்கநாத பெருமாளையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசித்து வழிபடுவதும் சுக்கிரனுக்கு உரிய சிறப்பான பரிகாரமாகும். 

பொதுவாக, சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, அவற்றின் பார்வை பட்டாலோ மோசமான பலன்கள் விளையும், இதைப் போக்குவதற்கு நவகிரக ஹோமத்தில் சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்யவேண்டும். இதற்குப் பெயர் ‘சுக்கிர சாந்தி’ என்று இருந்தாலும், நிஜத்தில் சுக்கிரனுக்கு மட்டும் சாந்தி செய்வதில்லை. எந்தப் பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே சாந்தி செய்வார்கள்.

பொதுவாக, சின்னப் பிரச்னைகளுக்கு சுக்கிர சாந்தி செய்வது இல்லை. தாள முடியாத அளவு உபத்திரவம் இருந்தால் மட்டுமே செய்கிறார்கள்.

சுக்கிர தசையில் சூரிய புக்தி இருந்தால், அது மோசமான பலன்களைத் தரும். தலை, வயிறு, கண் தொடர்பான நோய்கள் வரும். 

சுக்கிர தசையில் சந்திர புக்தி இருந்தால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. ஆனால், உடம்பு பாடாய்ப் படுத்தும். வாத, பித்த ரோகங்கள் வரும். அதேபோல், செவ்வாய் புக்தி இருந்தால், குடும்பத்தில் கலகம் விளையும். கேது புக்தி இருந்தாலும் உடல்நலம் கெடும். எதிர்பாராத வகைகளில் உபத்திரவம் நேரிடும்.

இதுபோன்ற பிரச்னை களிலிருந்து மீள்வதற்காக சாந்தி செய்வார்கள். 

சுக்கிர சாந்தியை வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் செய்யலாம். இரண்டும் இணைந்து வரும் நாளாக இருந்தால் ரொம்ப விசேஷம்.  

சுக்கிர சாந்தி செய்யும் போது, மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது. ‘நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகா லட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக் கிழமைகள் படித்து, மகா
லட்சுமியை வணங்கி வந்தால் சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.

சுக்கிரனே போற்றி!

ஸ்ரீ
ஸ்காந்த புராணத்தில் சுக்கிர பகவானின் மகிமையை விவரிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் உள்ளது. அதன் கருத்துகளை விளக்கும் போற்றிப் பாடல் இங்கே உங்களுக்காக!

இந்தத் துதிப்பாடலைப் பக்தியோடு படித்து, சுக்கிரபகவானை வழிபடுபவர்களுக்கு சுக்கிரயோகம் வாய்க்கும். நீண்ட ஆயுள், பொருள், சுகம், புத்திர சம்பத்து, லட்சுமிகடாட்சம் ஆகிய அனைத்தும் ஸித்திக்கும். 

வெண்மை நிறத்தவரே
வெளுப்பு வஸ்திரம் தரித்தவரே 
சுக்கிரனே போற்றி!

வெள்ளை ஆபரணங்களும்
வெண்கிரணங்களும்
கொண்டவரே சுக்கிரனே போற்றி!

பார்கவனே போற்றி
காவ்யனே போற்றி
கருணைக்கடலே போற்றி

ஞானத்தால் அறியத்தக்கவரே 
ஆத்ம சொரூபத்தை அறிந்தவரே
சுக்கிரனே போற்றி போற்றி! 

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

No comments:

Post a Comment